இந்தியத் தேர்தலில் பா.ஜ.க.வின் பெரு வெற்றி உணர்த்துவதென்ன?

பாரதீய ஜனதா கட்சியினரே நம்ப முடியாத அளவிற்கு அவர்களுக்கு வெற்றிகள் குவிந்துள்ளன. அறுதிப் பெரும்பான்மையையும் தாண்டி 282 இடங்களைப் பெற்றுள்ளனர். கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளாகிய சிவ சேனா, தெலுகு தேசம், பிஜு ஜனதா தளம் முதலியனவும் தத்தம் பங்கிற்கு அதிக பட்ச இடங்களைக் குவித்துள்ளன. இது இவர்களுக்கு வரலாறு காணாத வெற்றி. இதற்கு முன் அவர்கள் பெற முடிந்த அதிக பட்ச இடங்கள் 198 தான் (1998 / 99). அது மட்டுமின்றி இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் அவர்களால் இம்முறை கால் பதிக்க முடிந்துள்ளது. இதன் மூலம் உண்மையான ஒரு ‘தேசிய’க் கட்சியாகவும் இம்முறை அவர்கள் தம்மை நிலை நிறுத்திக் கொண்டுள்ளனர். இந்தி பேசும் மாநிலங்கள் என்கிற எல்லையையும் தாண்டி அஸ்ஸாம் முதலான வட கிழக்கு மாநிலத்திலும் முதன் முதலில் வலுவாகக் கால் பதித்துள்ளனர். இமாசல பிரதேசம் தொடங்கி கர்நாடகம் வரையிலும் பரவலாகப் பா.ஜ.கவின் வெற்றி அமைந்துள்ளது.

அது மட்டுமின்றி சகல தரப்பு மக்களையும் உள்ளடக்குவதாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது. குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், தலித்கள் ஆகியோரைக் குறி வைத்து அவர்கள் இம்முறை வேலை செய்தனர். மோடி ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர் என்கிற அடையாளத்தை அழுத்தம் கொடுத்து முன்னிறுத்தினர். அவரும் தான் பிற்படுத்தப்பட்டவன் எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டார். அப்படிச் சொல்வதால் முற்படுத்தப்பட்ட சாதியினரின் வாக்குகள் தமக்கு வராமற் போய்விடுமோ என்கிற அச்சம் அவருக்கும் இல்லை, அவருடைய கட்சிக்கும் இல்லை. ஏனெனில் தங்களின் கட்சி அது எனவும் தங்களின் நலனை அது விட்டுக்கொடுக்காது எனவும் உறுதியான நம்பிக்கை இங்குள்ள உயர் சாதியினருக்கு பா.ஜ.க மீது எப்போதும் உண்டு.

ஆக புவியியல் அடிப்படையிலும் சாதி, மொழி, இன அடிப்படையிலும் பரவலான ஆதரவுடன் பா.ஜ.கவின் வெற்றி இன்று அமைந்துள்ளது.

காங்கிரஸ் மட்டுமின்றி அதன் கூட்டணிக் கட்சிகளும் படு தோல்வி அடைந்துள்ளன. தமிழகம் உட்படப் பல மாநிலங்களில் அவர்களின் இருப்பே இல்லாமற் போய்விட்டது. கங்கிரஸ் மட்டுமல்ல இடதுசாரிகளும் அடித்த புயலில் அடையாளம் தெரியாமல் தூக்கி எறியப்பட்டுள்ளனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த நாடாளுமன்றத்தில் ஒரே ஒருஉறுப்பினர்தான். அகில இந்தியக் கட்சி என்கிற தகுதியை அது ஏற்கனவே இழந்தாயிற்று, வாக்கு எந்திரத்தில் யாருக்குமே வாக்களிக்க விரும்பவில்லை (நோடா) என்கிற பொத்தானை எழுத்தியவர்களின் எண்னிக்கையைக் காட்டிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதைச் சுட்டிக்காட்டிக் கிண்டலடிக்கிறது ஒரு ஆங்கில நாளிதழ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று தன் அகில இந்தியக் கட்சி என்கிற தகுதியை இழக்கும் நிலையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. வெறும் 9 இடங்களை மட்டுமே அவர்களால் பெற முடிந்துள்ளது. மே.வங்கத்தில் அவர்களுக்கும் இரண்டு உறுப்பினர்கள்தான், பா.ஜ.கவிற்கும் இரண்டு உறுப்பினர்கள்தான். முக்கிய மூன்று மாநிலக் கட்சிகள் அதிக வெற்றிகளைக் குவித்துள்ளன. அ.தி.மு.க, திருனாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் முதலியன இதில் அடக்கம். ஆந்திரம் உடைந்து உருவான இரு மாநிலங்களிலும் கூட மாநிலக் கட்சிகளே முதன்மை பெற்றுள்ளன.

இந்தத் தேர்தல் முடிவுகளின் ஊடாக மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு உயரும்; டெல்லியில் அதிகாரத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக அவர்களே இருப்பர் என ஆருடம் சொல்லியவர்களும் ஏமார்ந்து போயுள்ளனர். இதில் மிகவும் ஏமார்ந்து போனவர் ஜெயலலிதாதான். வரலாறு காணாத வெற்றியை அவர் குவித்துள்ள போதும் அந்த மகிழ்ச்சியை அவரால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லை. டெல்லியில் தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டு, 40 சீட்களுடன் தான் பிரதமர் ஆவது என்கிற கனவை அவர் வெளிப்படையாக முன்வைத்து வந்தவர்தான். தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் “பாரதப் பிரதமர்” என்றே அவரது கட்சிக்காரர்கள அவரை விளம்பரப் படுத்தினர். அவர் அதைக் கண்டித்ததில்லை. இன்று அந்தக் கனவு பொய்த்துப் போய்விட்ட ஏமாற்றம் அவர் முகத்தில் தெரிகிறது.

ஆனாலும் வாக்கு வீதத்தைப் பொறுத்த மட்டில் பா.ஜ.க காங்கிரஸ் இரண்டும் சேர்ந்து (31 + 19.3) மொத்தம் 50 சத வாக்குகளைத்தான் பெற்றுள்ளன. இடதுசாரிகள் ஒரு நாலு சதம் எனக் கொண்டால் மீதம் 46 சத வாக்குகளை மாநிலக் கட்சிகள்தான் பெற்றுள்ளன, ஆனால் இந்தியத் தேர்தல் முறையில் (First Past the Post System) வாக்கு வீதமும் வெற்றி வீதமும் ஒன்றாக இருப்பதில்லை. 3.3 சத வாக்குகளைப் பெற்ற அ.தி.மு.க 37 தொகுதிகளில் வென்றுள்ளது. ஆனால் அதே அளவு வாக்கு வீதம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்குக் கிடைத்துள்ளது வெறும் 9 உறுப்பினர்கள்தான். 31 சத வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க 278 இடங்களையும் 19.3 சத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் வெறும் 44 இடங்களைப் பெற்றிருப்பதும் கூட இந்தத் தேர்தல் முறையின் அபத்தந்தான். அதனால்தான் தேர்தல் சீர்திருத்தத்தை வேண்டுவோர் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் என்கிற கோரிக்கையைத் முன்வைக்கின்றனர்.

பா.ஜ.கவின் இந்த வெற்றிக்குப் பின்னால் கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களும் இருந்தது ஊரறிந்த இரகசியம். ஒரு கணிப்பின் படி மோடியை முன்நிறுத்தி பா.ஜ.க இம்முறை செய்த செலவு 500 கோடி ரூபாய். ஒபாமா சென்ற தேர்தலில் செலவிட்ட மொத்த தொகையே 600 கோடிதான்.

ஆனாலும் இப்படித்தான் பா.ஜ.கவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது என நான் சொல்ல மாட்டேன். மக்கள் விரும்பித்தான் பா.ஜ.கவையும் மோடியையும் தேர்ந்தெடுத்துள்ளனர். காங்கிரஸ் மீது கடுமையான ஒரு வெறுப்பை ஊடகங்கள் வெற்றிகரமாகக் கட்டமைத்திருந்தன. ஊழல், செயலின்மை, உறுதியற்ற தன்மை, பொருளாதாரச் சரிவு எல்லாவற்றிற்கும் காங்கிரஸ் ஆட்சியே காரணம் என மக்கள் நம்பும் நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் சில முக்கிய நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது, மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் சில புதிய சட்டங்கள் இயற்றப்பட்டது என்பதெல்லாம் மக்களின் கவனத்தில் ஏறவில்லை.

காங்கிரசை வெறுக்க உண்மையில் வேறு பல நியாயமான அடிப்படைகள் இருந்தன. அயலுறவில் அமெரிக்க இஸ்ரேல் ஆதரவை மேற்கொண்டது, பொருளாதாரத்தைத் திறந்து விட்டது…இப்படி நிறையச் சொல்லலாம். ஆனால் காங்கிரஸ் இதற்காக வெறுக்கப்படவோ தோற்கடிக்கப்படவோ இல்லை. இந்த அம்சங்களில் காங்கிரசை விடத் தீவிரமான அணுகல்முறைகளை உடைய பா.ஜ.கவைத்தான் இன்று மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் மக்கள் உற்சாகமாகப் பங்கு பெற்றனர், 63.8 சத வாக்குப் பதிவு என்பது வரலாறு காணாத ஒன்று. இந்த முறை வாக்களித்த 550 மில்லியன் பேர்களில் 100 மில்லியன் பேர் புதிய தலைமுறையினர். உலகமயச் சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள். “வளர்ச்சி” என்கிற முழக்கத்தை அவர்கள் மனப்பூர்வமாகக் கொண்டாடினர். அவர்களுக்குப் பாசிசம் அல்லது கம்யூனிசம் என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. குஜராத் 2002 என்பதெல்லாம், அதில் மோடியின் பங்கு என்பதெல்லாம் அவர்களது கவனத்தில் படியாத ஒன்று.

அப்புறம் உலக மயச் சூழலில் ஊதிப் பெருத்துள்ள மத்திய தர வர்க்கம். இதனுடைய ஆதரவும் பா.ஜ.க அரசியலுக்குத்தான், இந்து நாளிதழின் வித்யா சுப்பிரமணியம் இந்தி பேசும் மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பலரையும் சந்தித்து அவர்களின் மனநிலையை எழுதியிருந்தார், வித்யா சந்தித்தவர்களில் ஒருவர் ராம் அஷ்ரேய். மோடியை அவர் ஆதரிப்பதற்குச் சொல்லும் காரணம் நடுத்தர வர்க்கத்தின் மனநிலைக்கு ஒரு எடுத்துக்காட்டாய் உள்ளது.

“எல்லையில் நமது படை வீரர்களின் தலைகள் துண்டிக்கப்படுகின்றன. நாட்டைப் பாதுகாக்கத் தக்க வலிமையான பிரதமர் நமக்கு வேண்டும்…”

அவர் எதைச் சொல்கிறார் என்பதை விளக்க வேண்டியதில்லை. கடந்த சில ஆண்டுகளில் எல்லையில் பாக் மற்றும் சீன இராணுவங்களின் அத்துமீறல்கள் குறித்த பிரச்சினையைச் சொல்கிறார்.

இந்தப் பிரச்சினைகளை நான் அதே காலகட்டத்தில் மிக விரிவாக ஆராய்ந்து இதே பக்கங்களில் எழுதியுள்ளேன். இந்தப் பிரச்சினையில் பொறுமையாகவும், அயலுறவு நெறிமுறைகளின்படியும், அற அடிப்படையிலும், இரு நாட்டு மக்களின் நலன்களின் நோக்கிலும் மிகச் சரியாக நடந்து கொண்டது காங்கிரஸ் அரசு. குறிப்பாகப் பாதுகாப்பு அமைச்சர் ஆன்டனியின் பண்பான அணுகல்முறையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஆனால் அது நமது பலவீனத்தின் அடையாளம்; இந்திய அரசு “உறுதியான” ஒரு நிலையை எடுத்திருக்க வேண்டும் என்பது பா.ஜ.க வின் அன்றைய நிலைபாடு. அந்த நிலைப்பாடும் மத்திய தர வர்க்கத்தின் மனநிலையும் ஒத்துப்போவது கவனிக்கத்தக்கது.

ஆக உறுதியான, வளர்ச்சியை முன்நிறுத்தக்கூடிய ஒரு அரசை பா.ஜ.கவும் மோடியும் சாதிப்பர் என்கிற நம்பிக்கையோடு மக்கள் விருப்பபூர்வமாக இந்தத் தேர்வைச் செய்துள்ளனர் என்பதுதான் உண்மை. தேர்தலில் மக்களின் உற்சாகமான பங்கேற்பும் இதை உறுதி செய்கிறது.

இந்தத் தேர்வைச் செய்த எல்லோரும் பா.ஜ.கவின் இந்துத்துவ அரசியலையோ, திட்டங்களையோ, தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்படும் இந்த அம்சங்களையோ ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. தொடக்கத்தில் ஒரளவு எல்லோரையும் அனுசரித்துப் போகிறவர் போலப் பேசிய மோடியும், பா.ஜ.கவும் போகப் போக வெளிப்படையான இந்துத்துவ அரசியலைப் பேசினர். ராமனின் பெயரால் சூளுறைத்தனர்.

அவர்களுக்கு வாக்களித்த மக்களைப் பொறுத்த மட்டில், இந்துத்துவக் கருத்துக்களுக்காக மோடியை ஆதரிக்காதவர்களும் கூட, அவரது பிந்தைய தீவிரமான இந்துத்துவச் சொல்லாடல்களுக்காகக் கவலைப்படாதவர்களாகவும் அவர்கள் உள்ளதுதான் பிரச்சினை.

மோடியையும் காங்கிரசையும் இன்று ஆதரித்து வாக்களித்துள்ளவர்கள் 30 சதம்பேர். ஆதரவு சக்திகளையும் சேர்த்துக் கொண்டால் 40 சதம் பேர். ஆனால் இதே அளவும் இதை விட அதிகமாகவும் மோடியையும் பாஜக அரசியலையும் ஏற்காதவர்களும் உளர். குறிப்பாக 180 மில்லியன் முஸ்லிம்களில் 99 சதம் பேர் மோடியை எக்காரணம் கொண்டும் ஏற்காதவர்கள். இந்த மக்கள் தொகை பல நாடுகளின் மொத்த மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம். இவர்கள் மனத்தில் இன்றொரு அச்சமும் பாதுகாப்பின்மையும் ஏற்பட்டுள்ளதே உண்மை. இத்தகைய அச்சம் ஒரு ஜனநாயக ஆளுகைக்குப் பொருந்தாத ஒன்று.

இதைப் புதிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் பா.ஜ.கவை வெளியிலிருந்து ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இது குறித்துக் கவலைப் படுவதாக இல்லை. இப்போதே அவர்கள் தங்களின் ‘அஜெண்டா”வை முன்வைக்கத் தொடங்கி விட்டனர்.

இறுதியாகத் தமிழகச் சூழல் குறித்து ஒரு சொல்.மோடி அலை வீசாத இரு மாநிலங்களில் தமிழகம் ஒன்று. மற்றது கேரளம். இங்கே அந்தக் கூட்டணியின் சார்பாக வென்றவர்கள் இருவரும் மோடி அலை இல்லவிட்டாலும் இங்கு வெல்லக் கூடியவர்களே. கன்னியாகுமரி மாவட்டம் மதரீதியில் பிளவு பட்ட ஒரு மாநிலம், இங்கு இந்துக்களும் கிறிஸ்தவர்களும் கிட்டத்தட்ட சம அளவினர். தற்போது வெற்றி பெர்ற பா.ஜ.க வேட்பாளர் ஏற்கனவே இங்கு வெற்றி பெற்றவர். தருமபுரியில் வென்ற அன்புமணியைப் பொருத்த மட்டில் அப்பட்டமான சாதி அரசியலின் வெற்றி அது.

மோடி மற்றும் பா.ஜ.க ஆட்சியில் தமிழ் ஈழம் மலரும் என்றெல்லாம வாக்களித்த வைகோ இன்று படு தோல்வி அடைந்துள்ளார். இந்தத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட முக்கிய கட்சிகள் 12ல் தம் தேர்தல் அறிக்கையில் ஈழப் பிரச்சினை குறித்து வாய்திறக்காதவை இரண்டே இரண்டு கட்சிகள்தான். அவை பா.ஜ.கவும் ஆம் ஆத்மியும். ஈழப் பிரச்சினைக்காகத்தான் பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்தேன் எனச் சொல்லிய வைகோவிற்கு இது கடை வரையில் தரும சங்கடந்தான். ஆம் ஆத்மி கட்சி இங்கு படு தோல்வி அடந்துள்ளது. இந்திய அளவிலும் அது 4 இடங்களில் மட்டுமே வெற்றியடைந்துள்ளது.

ஈழப் போராட்டத்தை முழுமையாகத் தொடக்கம் முதல் ஆதரித்து வந்த நெடுமாறன் அவர்கள் இந்தத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. ஈழப் பிரச்சினையில் காங்கிரசுக்கும் பா.ஜ,கவிற்கும் அணுகல் முறைகளில் பெரிய வேறுபாடுகள் ஏதும் இருக்கப்போவதில்லை.

தேவை நமது தேர்தல் முறையில் உடனடி மாற்றம்

இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒரு முறை நமது தேர்தல் முறையின் பொருத்தம் குறித்த அய்யத்தை எழுப்பியுள்ளது. ஜனநாயக ஆட்சி முறை என்பதைச் சுருக்கமாக. “சிறுபான்மையினர் தமது கருத்துக்களைப் பேசவும் பரப்பவும் உரிமை அளிக்கப்பட்ட பெரும்பான்மையின் ஆட்சி” எனலாம். வாக்களர்கள் அளிக்கும் வாக்குகளின் எண்ணிக்கையில் ஆட்சி அமைக்கப்படும் ஜனநாயக முறைகளில் இந்தப் ‘பெரும்பான்மை’ என்பது எதைக் குறிக்கிறது?

குறைந்த பட்சம் அது இரண்டு அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும். 1. ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பெறும் வாக்குகளின் எண்ணிக்கை பதிவான வாக்குகளில் குறைந்தபட்சம் 50 சதத்தைத் தாண்டி இருக்க வேண்டும். 2. மாநிலத்தை அல்லது நாட்டை ஆளும் வாய்ப்புப் பெறும் கட்சி ஒட்டு மொத்தமாகப் பதிவான வாக்குகளில் 50 சதத்தைத் தாண்டி இருக்க வேண்டும்.

இது மட்டுமல்ல, ஒரு ஜனநாயக ஆட்சியில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்கள் முக்கியமானவை. அவற்றில் சகல மக்கள் பிரிவினர்க்கும் உரிய பங்களிப்பு இருக்க வேண்டும். குறிப்பாக தலித்கள், முஸ்லிம்கள் முதலான அதிகாரப்படுத்தப்படாத மக்கள் தொகுதிகள் உள்ள நமது நாட்டில் இது முக்கியம். இதுவும் கூட தற்போதுள்ள தனித் தொகுதி அடிப்படையில் இருந்தால் பயனில்லை என டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டது கவனத்துக்குரியது. நடைமுறையில் உள்ள முறையில் எண்ணிக்கையில் தலித்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருந்த போதிலும் பிற கட்சிகளை நம்பியவர்களாகவே அவர்கள் இருப்பர். சுயேச்சையான அதிகாரமுடையவர்களாக இருக்க இயலாது என்றார் அவர். எந்த ஓரிடத்திலும் எண்ணிக்கையில் செறிந்திராத தலித்கள், முஸ்லிம்கள் முதலானோர் அவர்கள் மட்டுமே வாக்களிக்கக் கூடிய தனி வாக்காளர் தொகுதிகள் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி முறை குறித்த இந்தப் புரிதலோடு நாம் இந்திய ஜனநாயகம் செயல்பட்டு வரும் முறையை ஆராய்வோம். இந்தத் தேர்தலில் மட்டுமின்றி எந்தத் தேர்தல்களிலுமே வெற்றி பெறும் வாக்காளர்களில் 80 முதல் 90 சதம் வரை 30 லிருந்து 49 சத வாக்குகளுக்குள் பெற்று வெற்றி பெற்றவர்களாக வே உள்ளனர். தனது தொகுதிகளில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 50 சதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அதேபோல காங்கிரசானாலும் சரி, பா.ஜ.க ஆனாலும் சரி, அல்லது மாநில அளவில் தி.மு.க, அ.தி.மு.க அல்லது பகுஜன் சமாஜ் கட்சி , சமாஜ்வாதி கட்சி எதுவாக இருந்தாலும் ஆட்சி அமைக்கும் கட்சிகள் பெரும்பாலும் 30 லிருந்து 40 சத வாக்குகளை மட்டுமே பெற்று ஆட்சி அமைக்கின்றன. 50 சதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்ரு ஆட்சி அமைப்பது விதி விலக்காகவே உள்ளது.

இப்போது 16 வது மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பார்ப்போம். இம்முறை பா.ஜ.க அறுதிப் பெரும்பான்மை (282) பெற்று ஆட்சி அமைத்துள்ளது. எனினும் இக் கட்சி பெற்றுள்ள வாக்கு வீதம் வெறும் 31 சதம் தான். மொத்தமுள்ள 583 இடங்களில் 31 சதம் என்பது 169 இடங்கள் மட்டுமே. ஆக அது கூடுதலாக 113 இடங்களைப் ‘பெரும்பான்மை போனஸ்’ (Majority Bonus) ஆகப் பெற்று மிகவும் வசதியான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. சென்ற முறை (2009) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் இவ்வாறே வெறும் 37.13 சத வாக்குகளுடன் (262 இடங்கள்) ஆட்சி அமைத்தது.
மாறாக எதிர்க் கட்சிகள் தாம் பெற்ற வாக்கு வீதங்களுக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் உரிய பிரதிநிதித்துவம் பெறுவதில்லை. இம்முறை காங்கிரஸ் 19.31 சத வாக்குகளைப் பெற்றிருந்தும் அது பெற்றுள்ள இடங்கள் வெறும் 44. அதற்கு எதிர்க் கட்சி நிலையையும் தர இயலாது என்கிறது இன்றைய பா.ஜ.க அரசு. உண்மையில் காங்கிரஸ், அது பெற்றுள்ள வாக்கு வீதத்தின்படி 105 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும்.
சிறிய கட்சிகளின் நிலை இன்னும் மோசம். 4.14 சத வாக்குகளைப் பெற்றுள்ள பகுஜன் சமாஜ் கட்சி ஓரிடத்திக் கூடப் பெற இயலவில்லை. ஆனால் அதே நேரத்தில் அதைவிடக் குறைந்த வாக்கு வீதம் (3.27) பெற்ற அ.தி.மு.க நாடாளுமன்றத்தில் 38 இடங்களைப் பெற்ருள்ளது.

தி.மு.க சென்ற முறை 1.83 சத வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தில் 19 எம்.பிக்களைக் கொண்டிருந்தது. இம்முறை அது 1.74 சத வாக்குகளைப் பெற்றிருந்தும் ஒரு இடங்களைக் கூடப் பெற இய்லவில்லை. இத்தனைக்கும் அது சென்ற தேர்தலுடன் ஒப்பிடும்போது இழந்த வாக்கு வீதம் வெறும் 0.09 சதம் மட்டுமே. ஆனால் இழந்த இடங்களோ 19. அதே நேரத்தில் வெறும் 0.1 சத வாக்குகளைப் பெற்ற அசாம் கண பரிஷத் குவித்துள்ள இடங்களோ 12. சி.பி.எம் கட்சி 3.25 சத வாக்குகள் பெற்றிருந்தும் 9 இடங்களை மட்டுமே பெற முடிந்துள்ளது. ஆனால் அதனுடைய பரம எதிரியான திருனாமுல் காங்கிரஸ், அதை விட வெறும் 0.59 சத வாக்குகள் கூடப் (3.84%) பெற்று 34 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். சற்றும் அறிவுக்கும் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் பொருந்தாத வகையில் வாக்கு வீதங்களுக்கும் பெறுகிற பிரதிநிதித்துவத்திற்கும் இடையிலான உறவு அமைந்துள்ளது கவலைக்குரியதாகிறது.

2.

நமது தேர்தல் முறையில் உள்ள அடிப்படைக் கோளாரின் விளைவு இது. போட்டியிடும் வேட்பாளர்களில் ஒரு வாக்கையேனும் கூடப் பெறுகிற ஒருவர் வெற்றி பெறும் இந்த முறையை First Past the Post System (FPTP) என்பார்கள். அதாவது வெற்றி பெறுபவர் 50 சதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்று “முழுமையான பெரும்பான்மை”யை (Absolute Majority) பெற வெண்டும் என்பதில்லை. போட்டி இடுபவர்களில் அதிக வாக்குகள் பெறுதல் என்கிற “எளிய பெரும்பான்மை” (Simple Majority) இருந்தால் போதுமானது. “வெற்றி பெற்றவர்கள் எல்லாவற்றையும் அள்ளிக் கொள்ளும்” (Winner Takes All) முறை இது.
ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகிலுள்ள ஜனநாயக நாடுகள் எல்லாவற்றிலும் இதே முறைதான் கடை பிடிக்கப்படுகின்றது என்பதல்ல. குறைந்த பட்சம் பத்து (Mixed Member Proportional System, Closed List Proportional System, Open List Proportional System, Semi Proportional System, single Transferable Vote, Mixed Member Parallel System, Winner Takes All / Instant Run Off, Winner Takes All / Run Off, Winner Takes All, Block Vote..) தேர்தல் முறைகளேனும் நடைமுறையில் உள்ளன. எல்லாவற்றையும் விளக்க இங்கு இடமில்லை.
இவற்றில் நமது தேர்தல் முறை வெற்றி பெற்றவர்கள் எல்லாவற்றையும் சுருட்டிக் கொள்ளும் FPTP முறையில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதைச் சற்று முன் பார்த்தோம். எனினும் இதனை ஆதரிப்போர் முன் வைக்கும் வாதங்களையும் பார்த்து விடுவோம்.

1. இது ஒரு எளிதான முறை. யாராவது பிடித்த வாக்காளருக்கு வாக்களித்து அதிக வாக்குகளைப் பெற்றவரை வெற்றி பெற்றவராக அறிவிப்பது எளிமையானது. ‘ஒற்றை மாற்று முறை’ முதலானவற்றில் நமது முன்னுரிமைகளை 1,2,3.4 எனப் பதிவிட்டு முதலில் முதல் முன்னுரிமையை, பின் அடுத்த முன்னுரிமை என எண்ணி வெற்றி பெற்றவரைக் காண்பது முதலானவை சிக்கலானது.

2. குறிப்பிட்ட தொகுதிக்கான பிரதிநிதி இவர் என அடையாளங் காட்டப்படுவதால் அவர் அதற்குப் பொறுப்பாக இருப்பார். இதனால் தொகுதிப் பிரச்சினைகள் கவனிக்கப்படும் என்பது தவிர, கட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் யாரோ ஒரு பெருந்தலைவர் என்பது தவிர பகுதி வாரியாகத் தலைமைகள் விரிவாக்கப்படும்.

3. கூட்டணி ஆட்சிக் குழப்பங்கள் இதில் தவிர்க்கப்படும். அதாவது வாக்கு விகிதத்தைக் காட்டிலும் கூடுதலாக ‘போனஸ்’ இடங்களைக் வெற்றி பெறும் கட்சி பெறுவதால் நிலையான ஒரு கட்சி ஆட்சி ஏற்படும், அதாவது இந்தத் தேர்தலில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை கடைபிடிக்கப்பட்டிருந்தால் பா.ஜ.க வெறும் 169 இடங்களை மட்டுமே பெற்று கூட்டணி ஆட்சிக்குத் தள்ளப்பட்டிருக்கும். அதேபோல வலிமையான எதிர்க்கட்சிகளும் இதன் மூலம் உருவாக வாய்ப்புண்டு.

4. மாநில அளவிலான கட்சிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க இது வழி வகுக்கிறது. இந்தத் தேர்தலில் திருனாமுல் மற்றும் அ.தி.மு.க போன்ற கட்சிகள் இவ்வாறு பயனடைந்துள்ளதைக் காணலாம்.

5. தீவிரமான கொள்கைகளுடன் போட்டியிடும் கட்சிகள், அவை ஏதேனும் குறிப்பிட்ட பகுதிகளில் செறிந்து இருக்காத பட்சத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு இதில் தவிர்க்கப்படும்.
கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக நாம் இந்தத் தேர்தல் முறையைக் கண்டு வருகிறோம். மேலே குறிப்பிடப்படும் சிறப்பு அம்சங்கள் எதுவும் உரிய பயனளிக்கவில்லை என்பதுதான் உண்மை. தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் யாரும் அப்படி ஒன்றும் தொகுதிகளுக்குப் பொறுப்பானவர்களாக இருப்பதில்லை. அதிக வாக்கு வீதங்களைப் பெறும் கட்சி ‘போனஸ்’ இடங்களைப் பெறுவது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாகக் கேலிக் கூத்தாக்குவது குறித்து விரிவாக மேலே பார்த்தோம். வெறும் 30 சத வாக்குகளின் அடிப்படையில் உருவாகும் நிலையான ஆட்சியை ஜனநாயக நெறிமுறையாக எப்படிக் கொள்ள இயலும்? எதிர்க் கட்சிகளும் ‘போனஸ்’ இடங்களைப் பெற்று வலிமையாக விளங்க இயலும் என்பதும் அபத்தம். இந்தத் தேர்தலில் சுமார் 20 சத வாக்குகளைப் பெற்றும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகக் கூடத் தகுதி பெறாதது குறிப்பிடத் தக்கது.
மாநில அளவிலான கட்சிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பது வரவேற்கத் தக்கதுதான் எனினும் அதை ஒரு சிறப்பு அம்சமாகக் கொள்ள இயலாது. இடதுசாரிகள் முதலான தேசிய அளவிலான கட்சிகள் ஒரே அளவு வாக்கு வீதம் பெற்றிருந்தபோதும் அதே அளவும், சில நேரங்களில் அதை விடக் குறைவாகவும் வாக்குகளைப் பெறும் மாநிலக் கட்சிகள் அதிக இடங்களை அள்ளிக் கொண்டு போவதை எப்படி நியாயப் படுத்த முடியும்? தவிரவும் இம்முறையால் ஒரு மாநிலக் கட்சி பயன்பெறும் போது இன்னொரு மாநிலக் கட்சி இழப்புகளை எதிர் கொள்ள நேர்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எடுத்டுக் காட்டாக இம்முறை அ.தி.மு.க இங்கு பெரும் பயனடைந்துள்ளது. ஆனால் தி.மு.கவுக்கு உரிய இடங்கள் கிடைக்கவில்லை.
ஒரு இடத்தில் செறிவாக இல்லாத கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற இயலாமையை ஒரு சிறப்பு அம்சமாகக் கொள்ள இயலாது. தலித்கள், முஸ்லிம்கள் முதலான இவ்வாறு இரே தொகுதியில் செறிவாக இல்லாமல் பரந்து வாழ்வதாலேயே அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் உரிய இடங்களைப் பெற இயலாமல் போவது குறிப்பிடத் தக்கது.

3.

விகிதாசாரத் தேர்தல் முறையிலும் பல விதங்கள் உண்டு. வெறுமனே கட்சிகளின் சின்னங்களில் வாக்களித்து அந்த அடிப்படையில் கட்சிகளுக்கு இத்தனை இடங்கள் எனப் பிரித்துக் கொடுத்து, அக் கட்சிகள் அதற்குரிய வேட்பாளர்களைத் தேர்வு செய்தல் என்பதாக இதை எளிமைப் படுத்திப் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. ‘மூடிய பட்டியல்’ முறியில்தான் யார் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதைக் கட்சி மட்டுமே முடிவு செய்யும். திறந்த பட்டியல் முறைகளில் கட்சி வெளியிடும் பட்டியலில் யாருக்கு முன்னுரிமை அளிபக்க வேண்டும் என்பதை வாக்காளர்களும் தீர்மானிக்க இயலும்.
குறிப்பிட்ட தொகுதிகளுக்கான குறிப்பிட்ட பிரதிநிதி என்கிற பலனை ‘அரை விகிதாசார முறை’ யின் மூலம் கிட்ட முடியும். எடுத்துக்காட்டாக இந்தியாவில் இன்று 543 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் இரண்டிரண்டு தொகுதிகளை ஒன்றாக்கி 272 தொகுதிகளாக்கலாம். ஒவ்வொரு வேட்பாளரும் இரண்டு பிரதிநிதிகளைத் தேர்வு செய்யலாம். ஆக மொத்தம் 544 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிருந்தவாரே இருப்பர். இவர்களில் 272 பேர் வழக்கம் போல தொகுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப் படுவர். இன்னொரு 272 பேர் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் கட்சிப் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர்.
நடந்து முடிந்த 16வது மக்களவைத் தேர்தலில் இம்முறை கடைபிடிக்கப்பட்டிருந்தால் முடிவுகள் எப்படி இருந்திருக்கும். சுமாராகச் சொல்வதானால் பா.ஜ.கவிற்கு நேரடித் தேர்தலின் மூலம் 141 உறுப்பினர்களும் கட்சிக்குக் கிடைத்த வாக்கு வீதத்தின்படி 81 உறுப்பினர்களும் என மொத்தம் 222 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருப்பர். காங்கிரசுக்கு 77 உறுப்பினர்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 11 உறுப்பினர்களும், அ.தி.மு.கவிற்கு 28 உறுப்பினர்களும், சி.பி.எம்முக்கு 17 உறுப்பினர்களும் கிடைத்திருப்பர். இது ஒரு மிகச் சுமாரான மதிப்பீடு இன்றைய முறையில் கிடைத்த வாக்குகளை வைத்துக் கணக்கிடப்பட்டது என்பதை நினைவிற் கொள்க. அரை விகிதாச்சார முறை அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் பதிவாகிற வாக்குகள் இதே முறையில் அமைந்திருக்காது. எனினும் இந்தச் சுமாரான கண்க்கீடே இப்போதுள்ள முறையைக் காட்டிலும் இந்த அரை விகிதாச்சார முறை மேலும் ஜனநாயகத் தன்மை உடையதாக உள்ளதை உறுதிப்படுத்துகிறது. இந்த முறையில் கட்சிகளுக்கு வாக்களிப்பது தவிர, வாக்காளர்களை நேரடியாகத் தேர்வு செய்தலையும் கூட FPTP முறையில் இல்லாமல் ஒற்றை மாற்றீட்டு முறையில் அமைத்து 50 சதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றவர்கள் மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவித்தால் இன்னும் சிறந்த முறையில் பிரதிநிதித்துவம் அமையும்.

4. 

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையே எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும் என்பதல்ல. இதிலும் பல குறைபாடுகள் உண்டு. முக்கியமாக இது சாதி முதலான அடையாளங்களின் அடிப்படையில் கட்சிகள் உருவாவதை ஊக்குவிக்கும் என்பது ஒரு குறைபாடு. ஓரிடத்தில் செறிவாக இல்லாதபோதும், நாடு முழுவதிலும் பெறுகிற வாக்கு வீதத்தின் அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர் என்பதால் சாதி முதலான அடிப்படை அமைப்புகள் உருவாகும் என்பது உண்மையே. ஆனால் இன்றைய முறையிலும் கூடத்தான் சாதி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் மறக்கக் கூடாது. அதே நேரத்தில் இப்படி ஓரிடத்தில் செறிவாக இல்லாத சில பிரிவினர் (எ.கா முஸ்லிம்கள்) உரிய பிரதிநிதித்துவம் பெறுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

சிறிய கட்சிகள் அதிக அளவில் பயனடைவது மற்றும் அந்த அடிப்படையில் கூட்டணி அரசுகளில் பேரம் பேசுவது ஆகியவற்றைத் தடுக்க ஜெர்மனி முதலான நாடுகளில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் மூலம் நாடாளுமன்றத்தில் இடம் பெற குறைந்த பட்ச வாக்கு வீதம் (Cuy off Value) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இது 5 சதம், அதாவது 5 சதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்ற கட்சிகளுக்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும். எடுத்துக் காட்டாக குறைந்த பட்ச அனுமதி அளவு ஜெர்மனியில் உள்ளது போல இங்கிருந்தால் அ.தி.மு.க விகிதாசார முறையில் நாடாளுமன்றத்தில் இடம் பெற இயலாது. ஆனால் தொகுதிகளில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இடம் பெறுவர்.

எனினும் இந்தியா போன்ற விரிந்த ஒரு நாட்டில் ஏராளமான கட்சிகள் இருக்கத்தான் செய்யும். இங்கு இது போன்ற குறைந்த பட்ச அனுமதி அளவு எந்த அளவிற்கு ஏற்புடையது என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். எடுத்துக் காட்டாக இந்தத் தேர்தலில் நாம் 5 சதம் என அனுமதி அளவை நிர்ணயித்திருந்தால் பா.ஜ.க, காங்கிரஸ் இரண்டும் மட்டுமே இந்தப் பலனைப் பெறும். மூன்று சதம் என்றால் கூடுதலாக பகுஜன் சமாஜ், திருனாமுல், சமாஜ்வாதி, அ.தி.மு.க, சி.பி.எம் கட்சிகளும் இடம் பெறும்.. அனுமதி அளவு 2 சதம் என்றால் கூடுதலாக தெலுகு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் இடம் பெறும்.
எந்தப் பிற நாட்டு மாதிரியையும் நாம் அப்படியே கடைபிடிக்க வேண்டியதில்லை. கடைபிடிக்கவும் இயலாது. நமது நாட்டிற்கான தனிப்பட்ட பிரச்சினைகள் உண்டு. இட ஒதுக்கீடு அதில் ஒன்று. விகிதாசாரப் பிரதிநிதித்துவம் ஓரளவு அதைத் தீர்க்கும் எனினும் நேபாளத்தில் உள்ளவாறு ஒவ்வொரு கட்சியும் குறிப்பிட்ட அளவில் பட்டியல் பிரிவினர் சிறுபான்மையோர், பெண்கள் ஆகியோருக்குத் தம் பட்டியல்களில் இடமளிக்க வேண்டும் என்பதை இங்கும் கட்டாயமாக்கலாம்.

ஒன்று நிச்சயம். இன்றைய தேர்தல் முறை அவசியம் மாற்றப்பட வேண்டும். நமது நாட்டுக்கு உரிய வகையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை கொண்டுவரப்பட வேண்டும். அது இன்றைய முறையைக் காட்டிலும் இன்னும் விசாலமானதாக் இருக்கும். வெறும் எளிய பெரும்பான்மை போதும் என்கிறபோது ஒவ்வொரு கட்சியும், வேட்பாளரும் பரந்த அளவில் எல்லாத் தரப்பின் ஆதரவையும் தேடுவது என்பதைக் காட்டிலும் தனக்கு எதிரான ஓட்டுக்களைப் பிரிப்பது என்பதிலேயே கருத்தைச் செலவிட நேர்கிறது. சாதி ஓட்டுக்களைப் பிரிப்பதற்காக வேண்டுமென்றே அதே சாதியைச் சேர்ந்த போட்டி வேட்பாளரை நிறுத்துவது, அல்லது தன் தொகுதியில் உள்ள ஏதேனும் ஒரு குழுவினரின் ஆதரவைப் பெற்றால் தேவையான எளிய பெரும்பான்மை கிடைத்துவிடும் என்பதற்காக நியாயமற்ற கோரிக்கைகளை ஏற்பது என்பதெல்லாம் நீங்கும். கட்சிகளும் வேட்பாளர்களும் பரந்த அளவில் எல்லாத் தரப்பினரின் ஆதரவையும் தேடும் நிலையும் ஏற்படும்.

இந்த மண்ணுக்கேற்ற ஒரு விகிதாசார முறையை நோக்கிய தேசிய விவாதம் ஒன்று உடனடித் தேவையாக உள்ளது. அரசியல் கட்சிகள் தங்களுக்குத் தோல்வி நேர்கிற போது மட்டும் இதைப் பேசாமல் இது குறித்த பொதுக் கருத்து ஒன்றை உருவாக்கும் முயற்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைகள் ஓர் அலசல்

[தேர்தல் கண்காணிப்புக் குழுவுக்கென 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு ஒப்பீட்டு ரீதியில் அலசி எழுதப்பட்ட அறிக்கை. இதன் முதற் பகுதியில் முக்கிய பிரச்சினைகள் மீது தமிழகத்தில் போட்டியிட்ட முக்கிய கட்சிகள் என்ன சொல்கின்றன என்பது குறித்த அட்டவணை முன்வைக்கப்படுகிறது. இரண்டாம் பகுதி. அறிக்கைகள் குறித்த ஒப்பீட்டு ஆய்வு]

அ. 2014 நாடாளுமன்றத் தேர்தல் : குறிப்பான சில பிரச்சினைகளில் கட்சி அறிக்கைகள் சொல்வதென்ன?

(சி.பி.ஐ : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி; சி.பி.எம் : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட்; ம.தி.மு.க: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்; தி.மு.க: திராவிட முன்னேற்றக் கழகம்; அ.இ.அ.தி.மு.க: அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்; இ.தே.கா: இந்திய தேசிய காங்கிரஸ்; பா.ஜ.க: பாரதிய ஜனதா கட்சி; வி.சி.க: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி; பா.ம.க: பாட்டாளி மக்கள் கட்சி; ஆம் ஆத்மி: ஆம் ஆத்மி கட்சி; எஸ்.டி.பி.ஐ: சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இன்டியா)

விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை : சி.பி.ஐ, சி.பி.எம், ம.தி.மு.க, ஆம் ஆத்மி, பா.ம.க, எஸ்.டி.பி.ஐ,

பெண்கள் 33 சத இட ஒதுக்கீடு: சி.பி.ஐ, சி.பி.எம், தி.மு.க, அ..இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, இ.தே.கா, பா.ஜ.க, ஆம் ஆத்மி, வி.சி.க, எஸ்.டி.பி.ஐ (பட்டியல் சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையோர் இனப் பெண்கள் பயனடையும் வகையில் ஒதுக்கீடு),

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றல்: சி.பி.ஐ, தி.மு.க, வி.சி.க,

ஈழம் பொது வாக்கெடுப்பு/பன்னாட்டு விசாரணை : தி.மு.க, ம.தி.மு.க, எஸ்.டி.பி.ஐ,

தனி ஈழம்தான் தீர்வு: ம.தி.மு.க, வி.சி.க, பா.ம.க,

ஒன்றுபட்ட இலங்கையில் அதிகாரப் பகிர்வு/சுயேச்சையான விசாரணை: சி.பி.எம், இ.தே.கா,

கச்சத் தீவு மீட்பு : தி.மு.க, அ..இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, வி.சி.க, பா.ம.க, எஸ்.டி.பி.ஐ

ஈழப் பிரச்சினையில் மவுனம் : பா.ஜ.க, ஆம் ஆத்மி,

தனியார் துறையில் இட ஒதுக்கீடு : சி.பி.ஐ, சி.பி.எம், தி.மு.க, வி.சி.க, பா.ம.க,

உள் ஒதுக்கீடு வழங்கல்: சி.பி.எம், தி.மு.க, இ.தே.கா (ஆராய ஆணையங்கள் அமைத்தல்),

தலித் கிறிஸ்தவ, முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு : சி.பி.ஐ, சி.பி.எம், தி.மு.க, அ..இ.அ.தி.மு.க, வி.சி.க, ம.தி.மு.க (கிறிஸ்தவர்களுக்கு),

ரங்கநாத் மிஸ்ரா ஆணையப் பரிந்துரை நிறைவேற்றம் : சி.பி.ஐ, சி.பி.எம், தி.மு.க, வி.சி.க, எஸ்.டி,பி,அய்,

பொது சிவில் சட்டம் நிறைவேற்றல் : பா.ஜ.க,

பொது சிவில் சட்டம் தேவையில்லை : ம.தி.மு.க, பா.ம.க, தி.மு.க,

அண்டை நாடுகளுடன் அமைதி / பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம்: சி.பி.ஐ, சி.பி.எம், தி.மு.க, இ.தே.கா, வி.சி.க, எஸ்.டி,பி,அய்,

அண்டை நாடுகளிடம் நம் வலிமையை நிலைநிறுத்தல்: அ.இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, பா.ஜ.க, ஆம் ஆத்மி,

அணு கொள்கை மவுனம் : சி.பி.ஐ, தி.மு.க, அ.இ.அ.தி.மு.க,

அணு வல்லமையை அதிகரித்தல்: பா.ஜ.க,

வெளிநாட்டு இறக்குமதி இல்லாத அணு உலை ஆதரவு : சி.பி.எம்; பா.ஜ.க;

அணு உலைகளை மூடல் : ம.தி.மு.க, பா.ம.க, எஸ்.டி,பி,அய்,

தனியார் துறை ஊக்குவிப்பு /அந்நிய முதலீடு : இ.தே.கா, பா.ஜ.க, ஆம் ஆத்மி,

தமிழ் மொழி ஆட்சி மற்றும் உயர்நீதி மன்ற மொழி : சி.பி.ஐ, தி.மு.க. அ..இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, வி.சி.க, பா.ம.க, எஸ்.டி,பி,அய் (உயர் நீதிமன்ற மொழி),

மீனவர் பிரச்சினையில் மவுனம் : ஆம் ஆத்மி, பா.ம.க, இ.தே.கா,

ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஒழிப்பு: சி.பி.ஐ, சி.பி.எம், ஆம் ஆத்மி,

இலக்குகளுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி : இ.தே.கா,

வெளிநாட்டு மூலதனம் மற்றும் பெரு முதலாளியம் சாராத பொருளாதார வளர்ச்சி : சி.பி.ஐ, சி.பி.எம்,

புதிய ஓய்வூதியத் திட்ட ஒழிப்பு : சி.பி.எம்,

புதிய ஓய்வூதியத் திட்ட நிறைவேற்றம்: ம.தி.மு.க,

மதவாத எதிர்ப்புக்கு அழுத்தம்: சி.பி.அய், சி.பி.எம், வி.சி.க, எஸ்.டி,பி,அய்,

மதவாத எதிர்ப்பிற்கு அதிக முக்கியத்துவமின்மை: ம.தி.மு.க, பா.ஜ.க, அ.இ.அ.தி.மு.க,

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு எதிர்ப்பு : சி.பி.ஐ, தி.மு.க, அ..இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க,

தமிழகம் சார்ந்த குறிப்பான திட்டங்களின்மை : சி.பி.ஐ, சி.பி.எம், இ.தே.கா, பா.ஜ.க, ஆம் ஆத்மி,

விவசாய விளை பொருட்களுக்கு 50 சத லாபத்துடன் விலை நிர்ணயம்: சி.பி.எம், பா.ஜ.க, ஆம் ஆத்மி, பா.ம.க,

விவசாய விளை பொருட்களுக்கு விலை அதிகரிப்பு : இ.தே.கா, தி.மு.க, எஸ்.டி,பி,அய் (குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம்),

விவசாயம் அரசே நேரடி கொள்முதல்: சி.பி.ஐ, தி.மு.க,

நதி நீர் இணைப்பு : சி.பி.ஐ, தி.மு.க, அ..இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, பா.ஜ.க (சாத்தியமான இடங்களில்),

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கீடு : தி.மு.க, பா.ம.க,

லோக் ஆயுக்தா /லோக் பால் / ஊழல் ஒழிப்புச் சட்டம் : சி.பி.ஐ, இ.தே.கா, ஆம் ஆத்மி, எஸ்.டி,பி,அய்,

கருப்புப்பண மீட்பு : சி.பி.அய், சி.பி.எம், அ..இ.அ.தி.மு.க, இ.தே.கா, பா.ஜ.க, ஆம் ஆத்மி,

ஏழாவது ஊதியக் குழு நிறைவேற்றம் : அ..இ.அ.தி.மு.க, ம.தி.மு.க,

மரண தண்டனை ரத்து : தி.மு.க, ம.தி.மு.க, சி.பி.எம்,

பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போரை விடுதலை செய்தல் : எஸ்.டி.பி.ஐ,

பூரண மது விலக்கு: ம.தி.மு.க, பா.ம.க, எஸ்.டி,பி,அய்,

வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தை நிறைவேற்றல்/வலிமைப்படுத்தல் : சி.பி.எம், இ.தே.கா,

வன்கொடுமைச் சட்டத்தை நீர்க்கச் செய்தல்: பா.ம.க,

புதுச்சேரியைத் தனி மாநிலமாக்கல் : ம.தி.மு.க, தி.மு.க, பா,ம.க,

சிறுபான்மையினர் மீது பொய்வழக்குகளுக்கு இழப்பீடு/ அதிகாரிகளுக்கு தண்டனை : சி.பி.அய், சி.பி.எம், ஆம் ஆத்மி, எஸ்.டி,பி,அய்,

மதக்கலவர தடுப்பு மசோதா நிறைவேற்றம்: சி.பி.ஐ, சி.பி.எம், இ.தே.கா, வி.சி.க,

புலம் பெயர் மக்கள் பாதுகாப்பிற்காக இனவெறி எதிர்ப்புச் சட்டம்: சி.பி.எம், எஸ்.டி,பி,அய்,

கறுப்புச் சட்டங்கள் மறு பரிசீலனை : ஆம் ஆத்மி (AFPSA வில் மாற்றங்கள்), தி.மு.க (UAPA வில் 2012 ல் கொண்டு வந்த மாற்றங்களை நீக்குதல்; பா.ம.க (அனைத்துத் தடுப்புக் காவல் சட்டங்களையும் எதிர்த்தல்); சி.பி.எம் (UAPA வில் உள்ள சில கொடூரமான பிரிவுகளை நீக்குதல், மற்றும் AFPSA சட்டம் முழுமையாக நீக்கம்), எஸ்.டி,பி,அய் (AFPSA, UAPA முழுமையாக நீக்கம்), சி.பி.ஐ (UAPA சட்டம் உட்பட அனைத்துச் சட்டங்களும் நீக்கம்),

மாநிலப் பட்டியலில் கல்வி: வி.சி.க, தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க,

குறிப்பு 1: தேர்தல் அறிக்கைகளில் கண்டபடி இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு அம்சத்தில் ஒரு கட்சியின் கொள்கை எதுவாக இருந்தபோதும் 2014 தேர்தல் அறிக்கையில் அந்த அம்சம் இல்லாவிய்ட்டல் அது இங்கே கணக்கில் கொள்ளப்படவில்லை.

குறிப்பு 2: தமிழகத்தில் போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகளின் அறிக்கைகள் மட்டும் இங்கே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. தே.தி.மு.க, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியன தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டதாகத் தெரியவில்லை.

ஆ. கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் : ஓர் ஒப்பீட்டு அலசல்

2014 நாடாளுமன்றத் தேர்தல் : கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் ஒரு அலசல்

தேர்தல் அறிக்கையை வெளியிடுகிற கட்சிகள் எல்லாம் அந்த அறிக்கைகளுக்கு எந்த அளவிற்கு உண்மையாக இருக்கின்றன, எந்த அளவிற்கு இவற்றை நிறைவேற்ற சித்தம் கொண்டுள்ளன என்கிற நியாயமான கேள்விகள் மற்றும் ஐயங்களின் அடிப்படையில் தேர்தல் அறிக்கைகளின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. கட்சிகளின் நோக்கங்கள், குறிக்கோள்கள் என்கிற அளவிற்கு இவற்றை மதிக்க வேண்டாம் என்ற போதிலும் கட்சிகளின் விருப்பங்கள் (intensions) என்கிற அளவிலேனும் இவற்றுக்குரிய இடத்தை நாம் அளிக்க வேண்டும் அந்த வகையில் கட்சிகளின் அணுகல்முறைகளைப் புரிந்துகொள்வதற்கும், கூட்டணி அரசியல் போன்றவற்றிற்காகக் கட்சிகள் என்னென்ன அம்சங்களில் சமரசமாகிறார்கள் என்பதற்கும், எந்த அளவிற்கு இவர்கள் ஆளுகை குறித்து சீரியசாக இருக்கிறார்கள், எந்த அளவிற்கு வெறும் உணர்ச்சி அரசியலையே இறுதிக் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர் என்பதையெல்லாம் புரிந்துகொள்வதற்கும் இந்தத் தேர்தல் அறிக்கைகள் நமக்கு முக்கிய தடயங்களாக அமைகின்றன.

அந்த வகையில் இங்கே தமிழகத்தில் போட்டியிடுகிற பதினோரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மூன்று நிலைகளில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1) இந்த அறிக்கைகள் விவசாயம், தொழில், மருத்துவம், கல்வி, அயல் உறவு, ஈழப்பிரச்சினை முதலான முக்கிய பிரச்சினைகளில் முதன்மையாக என்ன கருத்துக்களை முன்வைக்கின்றன என்பதும், இவை தவிர அவை சிறப்பாக வேறெதையெல்லாம் உயர்த்திப் பிடிக்கின்றன என்பதையும் முதலில் தொகுத்துள்ளோம். 2) என்ன மாதிரியான பிரச்சினைகளை முன்வைத்து கட்சிகள் இந்தத் தேர்தலைச் சந்திக்கின்றன என்கிற அடிப்படையில் முக்கிய சில பிரச்சினைகளில் கட்சிகளின் நிலைபாட்டை ஒரு அட்டவணை ஆக்கியுள்ளோம். 3) மூன்றாவதாக இந்த இரண்டின் தொடர்ச்சியாக கட்சிகளின் சில கவனிக்க வேண்டிய போக்குகளை இந்தக் கட்டுரையின் மூலம் தொகுத்துள்ளோம்.

ஒன்றை மனதில் கொள்வது அவசியம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு திட்டம் (programme) உண்டு. இந்தத் திட்டத்திற்கும், தேர்தல் அறிக்கைக்கும் என்ன வேறுபாடு?

கட்சித் திட்டம் என்பது அக்கட்சியின் அடிப்படை நோக்கங்களையும், இறுதிக் குறிக்கோளையும் வரையறுப்பது. தேர்தல் அறிக்கை என்பது இந்த அடிப்படைத் திட்டத்திற்கு முரணாகாமல் அடுத்த ஐந்தாண்டுகளில் தாங்கள் என்னென்னவற்றை சாத்தியமாக்கவோ அல்லது சாத்தியமாவதற்காகப் போராடப் போவதாகவோ வாக்குறுதி அளித்து, அந்த அடிப்படையில் வாக்காளர்களைத் தமக்கு வாக்களிக்குமாறு வேண்டுவது. இந்த வகையில் தேர்தல் அறிக்கைகள் என்பன திட்டங்களைக் காட்டிலும் தூலத் (concrete) தன்மை உடையனவாக இருக்க வேண்டும். தேவையற்ற வாயளப்புகளைக் (rhetoric) குறைத்து குறிப்பாகவும் தூலமாகவும் அடுத்த ஐந்தாண்டுகளில் தாம் செய்யப்போகிறவற்றைக் குறிப்பாகச் சொல்பவை நல்ல அறிக்கைகளாக அமையும். நமது நாட்டு அரசியல், குறிப்பாகத் தமிழக அரசியல் வாயளப்புகளுக்குப் பெயர் போனது. இந்த அறிக்கைகளிலும் அது பிரதிபலிக்கிறது.

பெரும்பாலான அறிக்கைகளில் வாயளப்புகள் அதிகமாகவும், தூலமான திட்டங்கள் குறைவாகவும் உள்ளன. சில நேரங்களில் கட்சிகள் எந்தப் பிரச்சினையை மையமாக எடுத்துக் கொண்டுள்ளனவோ அந்த அம்சத்தில் தூலமாகவும் பிறவற்றில் சிரத்தை இல்லாமல், எதையேனும் சொல்ல வேண்டும் என்கிற அளவிலும் இருப்பதை வாசிப்போர் புரிந்துகொள்ள இயலும். தவிரவும் சில கட்சிகள் தாங்கள் ஏதோ முற்போக்காகவும், இங்கு மேலெழும் அனைத்துக் கோரிக்கைகளுடனும் தாங்கள் உடன்படுவதாகவும் காட்டிக் கொள்வதற்காக எந்தக் குறிப்பான திட்டமும் தூலமான நடைமுறையும் இல்லாமல் அந்தக் கோரிக்கைகளுக்காகப் போராடுகிற இயக்கங்களைக் காட்டிலும் தீவிரமான முழக்கங்களை அறிக்கையில் வைப்பதையும் காண முடிகிறது.

கூடுமானவரை கட்சிகளின் இந்த வாயளப்புகளிலிருந்து தூலமான திட்டங்களைப் பொறுக்கி எடுத்து இந்தத் தொகுப்புகள் மூன்றும் உருவாக்கப்பட்டுள்ளன.

கட்சிகளின் அடிப்படைத் திட்டங்கள் அனைத்தையும் தேர்தல் அறிக்கையாக்க இயலாது என்பதைச் சொன்னோம். இந்த ஆய்வுகளும் கட்சிகளின் இந்த அடிப்படைத் திட்டங்களுக்குள் செல்லாமல் இந்த அறிக்கைகளில் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. சென்ற தேர்தல்களில் என்னென்ன வாக்குறுதிகள் வைக்கப்பட்டன, அவற்றிலிருந்து இந்த அறிக்கை எந்த அளவிற்கு மாறுபட்டுள்ளது அல்லது பழைய அறிக்கைகளையே மேலோட்டமாகச் சில மாற்றங்களைச் செய்து தயாரிக்கப்பட்டுள்ளனவா என்கிற கேள்வி மிக முக்கியமானதாயினும் இந்த ஆய்வுகளில் அதை எங்களால் செய்ய இயலவில்லை.

இனி ஒரு அகன்ற பார்வையில் இந்த அறிக்கைகளில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்களாக எங்களுக்குப் படுபவை:

1. மாநிலக் கட்சிகளுக்கும் இந்திய அளவிலான கட்சிகளுக்கும் வேறுபாடுகள் பெரிய அளவில் உள்ளன; தி.மு.க. அ.தி.முக. ம.தி.மு.க, பா.ம.க, வி.சி.க ஆகிய மாநிலக் கட்சிகள், அமையப்போகும் மத்திய அரசின் ஊடாக தமிழகத்தில் நிறைவேற்றப்படக்கூடிய வளர்ச்சித் திட்டங்களுக்கு மிக அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன என்றால் இ.தே.கா, பா.ஜ.க, இடதுசாரிக் கட்சிகள், ஆம் ஆத்மி முதலான இந்திய அளவுக் கட்சிகள் தமிழக அளவிலான வளர்ச்சித்திட்டங்கள் குறித்து எதையும் பேசுவதில்லை. வறுமை ஒழிப்பு அல்லது உணவுப் பாதுகாப்புச் சட்டம் முதலியவற்றை நாங்கள் சொல்வதன் மூலம் எல்லா மாநில மக்களின் நலனையும் பேசிவிடுகிறோமே, பிறகு தனியாக மாநிலங்கள் பற்றிப் பேச வேண்டுமா என இந்திய அளவுக் கட்சிகள் கேட்பதில் பொருளில்லை. விண்கல ஏவுதளம், தமிழகத்தில் புதிய துறைமுகங்கள், வெளிநாடுகளுக்கு அதிகம் சென்று பணி செய்யக்கூடிய நிலை உள்ளபோது அங்குள்ள தூதரகங்களில் தமிழர்கள் நியமிக்கப்படுதல், மின்சாரம் பற்றாக்குறை உள்ள மாநிலமாக உள்ளதால் மின்திட்டங்களை உருவாக்குதல், வெளி மாநிலங்களிலிருந்து இங்கு மின்சாரம் கொண்டு வருவதற்கான் வழி முறைகளை மேம்படுத்தல், விவசாய நீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலமாக இருப்பதால் அதற்குரிய திட்டங்களை மொழிதல், காவிரி நதி நீர் ஆணையம் முதலியன உருவாக்கப் பெறுதலில் ஏற்படும் தாமதங்கள் முதலிய பிரச்சினைகள் மாநில அளவில் முக்கியமானவை. இவற்றை முன் குறிப்பிட்ட மாநில அளவுக் கட்சிகள்தான் கவனம் கொடுத்துப் பேசியுள்ளன.

இந்தியா ஒரு “தேச அரசு’ (Nation State) அல்ல, மாறாக இது ஒரு ‘மாநிலங்களின் அரசு’ (State Nation) எனக் கூறுவது உண்டு. முற்றிலும் வேறுபட்ட பல்வேறு பிரச்சினைகளை ஏந்தியுள்ள எண்ணற்ற பல மாநிலங்கள், மொழிகள் உள்ள இந்தத் துணைக்கண்டத்தில் மாநில அளவிலான வளர்ச்சித்திட்டங்கள் குறித்து விரிவாகப் பேச இயலாதபோதும் முக்கியமான மாநிலத்தேவை குறித்தும் (எ.கா ; தமிழகத்தில் பாசன நீர் மற்றும் மின் தேவைப் பிரச்சினைகள்), மேலெழுந்துள்ள முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் தூலமாக அகில இந்தியக் கட்சிகள் பேச வேண்டும். அப்படி இல்லாதிருப்பது பெருங் குறை.

இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட இந்திய அளவுக் கட்சிகள் மாநில அளவுத் திட்டங்கள், நதி நீர்ப் பிரச்சினைகள் ஆகியவற்றில் காட்டும் மௌனத்திற்கான காரணங்களில் ஒன்று அவற்றிற்கு சில முக்கிய மாநில அளவிலான பிரச்சினைகளில் கட்சிக்குள் பொதுக் கருத்து இல்லாதது. காவிரி அல்லது முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் அகில இந்தியக் கட்சிகள் ஒவ்வொன்றும் மாநில அளவில் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளன. இந்நிலை தொடர்வது அகில இந்தியக் கட்சிகள் மாநில மக்களிடமிருந்து அந்நியப்படவே வழிவகுக்கும். இது தொலை நோக்கில் நல்லதல்ல.

காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி குறித்து மேலோட்டமாக பாஜ.க சில கருத்துக்களைக் கூறியுள்ளது. பிற மாநிலங்கள் குறித்து இத்தகைய அக்கறையை அது வெளிப்படுத்தாமல் இவ்விரு பகுதிகளை மட்டும் அது பேசுவது, இங்கு நடைபெறும் போராட்டங்கள், தங்களுக்கு அங்கு பிடிப்பில்லாமல் இருப்பது ஆகிய அடிப்படைகளிலிருந்தே எழுந்துள்ளது.

மாநில அளவு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மட்டுமின்றி மாநில அளவில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய மீதேன் வாயு எடுக்கும் திட்டம் முதலியவை குறித்தும் மாநில அளவுக் கட்சிகளே வாய் திறந்துள்ளன. காவிரி டெல்டா விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளிகள் மத்தியில் செல்வாக்குடன் உள்ள இடதுசாரிக் கட்சிகள் தம் அறிக்கையில் மீதேன் திட்டம் குறித்துக் கருத்துரைக்காதது குறிப்பிடத் தக்கது. கிழக்குக் கடற்கரையோரம் குறிப்பாக நாகைப் பகுதியில் ஏராளமான தனியார் அனல் மின் திட்டங்கள் வருவதை பா.ம.க மட்டுமே கண்டித்துள்ளது. சென்ற ஆண்டுகளில் இங்கு நடைபெற்று உலகின் கவனத்தை ஈர்த்த முக்கிய போராட்டம் கூடங்குளம். அணு உலைகளை மூடுவது குறித்து பா.ம.க, ம.தி.மு.க, எஸ்.டி.பி.அய் ஆகிய கட்சிகள் மட்டுமே பேசியுள்ளன. கூடங்குளம் போராட்டத் தலைவர்கள் மூவரை இந்தத் தேர்தலில் தன் வேட்பாளர்களாகக் களம் இறக்கியுள்ள அகில இந்தியக் கட்சியான ஆம் ஆத்மி இது குறித்துக் காட்டும் மௌனம் குறிப்பிடத் தக்கது.

2. மாநிலக் கட்சிகள் மாநில அளவிலான பிரச்சினைகளைப் பேசுவது வரவேற்கத்தக்கதுதான் எனினும் ம.தி.மு.க போன்ற கட்சிகள், தமிழக மக்களின் பிரதான பிரச்சினைகள் இவை மட்டுமே எனக் கருதத்தக்க அளவிற்கு இவற்றை முன்நிலைப்படுத்துவதோடு அண்டை மாநிலங்களுடனான முரண்பாடே பிரதானமானது என்கிற அளவிற்குக் கொண்டு செல்கின்றன. அ.தி.மு.கவைப் பொருத்த மாட்டில் மத்திய காங்கிரஸ் அரசின் மீது அனைத்துக் குற்றங்களையும் சுமத்துவதற்கு மாநிலப் பிரச்சினைகளை அது ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. ஒருவேளை அ.தி.மு.கவுடன் ஒத்துச் செல்லும் ஒரு மத்திய அரசு உருவானால் அது இதையெல்லாம் பேசுமா என்கிற அய்யம் நமக்கு ஏற்படுகிறது.

மாநிலக் கட்சிகளின் இன்னொரு சிக்கல்அவை இந்திய அளவிலான பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமை. மாநில அளவில் அதிகாரப் பரவல் முறையாக நிறைவேற்றப்படாத, அதிக அளவில் அதிகாரங்கள் மைய அரசில் குவிந்து கிடக்கக் கூடியஒரு நாட்டில் அயலுறவு, பொருளாதாரம், அந்நிய முதலீடு, ஆளுகைச் சீர்திருத்தங்கள், வகுப்புவாதம். உள் நாட்டுப் போராட்டங்கள், வறுமை ஒழிப்பு, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட புதிய சட்டங்கள் இயற்றல் முதலானவை மிக முக்கியமாக உள்ளன. மக்களின் அன்றாட வாழ்வை நிர்ணயிக்கும் இவை குறித்து மிகவும் மேலோட்டமான பார்வைகளையே மாநிலக் கட்சிகள் முன்வைக்கின்றன. ஏதாவது சொல்லவேண்டும் என்பதற்காகச் சொல்வதாகவும் சிலவற்றில் கருத்தே இல்லாதவையாகவும் இருப்பது வருந்தத்தக்கது. எடுத்துக்காட்டாகப் பா.ம.க அயலுறவு குறித்து எந்தக் கருத்தையும் கூறவில்லை. அ.தி.மு.கவைப் பொருத்தமட்டில்மிக முக்கியமான இரு அடிப்படைத் துறைகளான கல்வி மற்றும் மருத்துவம் குறித்து ஏதும் குறிப்பாகச் சொல்லவில்லை. பல அம்சங்களில் அ.தி.மு.க அறிக்கை ஜெயா ஆட்சியில் மாநில அளவில் நிறைவேற்றப்பட்ட நலத் திட்டங்களை மத்திய அளவிலும் நிறைவேற்றில் போதுமானது என்பதோடு நிறுத்திக்கொள்கிறது.

மேற்குறிப்பிட்ட இந்திய அளவிலான பிரச்சினைகளில் அகில இந்தியக் கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை விரிவாக முன்வைக்கின்றன. அந்நிய முதலீடு, பெருந்தொழில் வளர்ச்சி ஆகியவற்றை காங்கிரஸ், பா,ஜ,க, முதலியான வரவேற்கின்றன, ஆம் ஆத்மியைப் பொருத்தமட்டில் ஊழலற்ற முதலாளியம் தனியார்துறை முதலியவற்றை வரவேற்கிறது. இடதுசாரிக் கட்சிகள் ஒரு மாற்றுப் பொருளாதார, தொழிற் கொள்கையை முன்வைக்கின்றன. ஆளுகை, நிதி ஒழுங்கு, மாநில உரிமைகள், இயற்ற வேண்டிய புதிய சட்டங்கள் ஆகியவை குறித்து ஒரு சுருக்கமான மாற்றுத் திட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி அளிக்கிறது. அதேபோல விவசாயிகள், தொழிலாளிகள், மீனவர்கள் எனத் தனித்தனியாக அவர்களின் பிரச்சினைகளையும் அதற்கான தீர்வாக அது கருதுவதையும் முன்வைக்கிறது.

காங்கிரஸைப் பொருத்தவரை தனது “உரிமை அடிப்படையிலான வளர்ச்சி” என்கிற அணுகல்முறையை ஏற்கனவே அது நிறைவேற்றியுள்ள துறைகளைத் தவிர பிற முக்கிய துறைகளுக்கும் விரிவுபடுத்துவது குறித்துப் பேசுகிறது. சமூக நீதி, கல்வி, மருத்துவம் ஆகியன குறித்தும் தூலமான திட்டங்களை வைக்கிறது. எனினும் அதனுடைய பல ஊழல்களுக்கும் காரணமான தாராளமயமாக்கலையும், “தனியார் பொதுத்துறை ஒத்துழைப்பு” போன்ற எல்லாவற்றிலும் தனியார்களைப் புகுத்துவதையும் எந்த விமர்சனமும் இன்றி இந்த அறிக்கையிலும் தொடர்கிறது.

பா,ஜ.கவும் இதையெல்லாம் பேசியபோதிலும் அதுவும் பெருந்தொழில் வளர்ச்சி, அந்நிய மூலதனம் ஆகியவற்றில் காங்கிரசிடமிருந்து பெரிய அளவில் வேறுபடவில்லை. தவிரவும் அதனிடம் துலமான திட்டங்களைக் காட்டிலும், “ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத்”, “சமாஜிக் நியாய்” மற்றும் “சமாஜிக் சம்ராசட்டா”, திறன் வரைபடம் உருவாக்குதல் என்பதுபோன்ற வாயளப்புகள் அதிகமாக உள்ளன. வரிச் சீர்திருத்தம், தொழில் தொடங்கலில் உள்ள சிவப்பு நாடா முறையை ஒழித்தல் ஆகியவற்றை அது முதன்மைப்படுத்துகிறது. திட்டப்பெயர்களிலும் முழக்கங்களிலும் அதிக அளவில் சமஸ்கிருதம் பயன்படுத்தப்படுகிறது.

பா.ஜகவிடம் காணக்கூடிய இன்னொரு அம்சம் அது தன்னை மிக நவீனமான தொழில் நுட்பங்களை நடைமுறைப்படுத்தத் துடிப்பதாகவும், அதே நேரத்தில் பாரம்பரியத்தை இம்மியும் விட்டுக்கொடுக்காததாகவும் காட்டிக் கொள்வது. “செல் போன்களின் உதவியோடு e மருத்துவ சேவை, பாரம்பரிய மருத்துவ முறை யோகா முதலிவற்றை ஊக்குவித்தல்” என்பது போன்ற வாசகங்களை அறிக்கை முழுவதும் ஆங்காங்கு காணலாம்.

3. காங்கிரஸ், பா.ஜ.க இரண்டுக்குமான ஒரு மாற்றாக இன்று உருப்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியைப் பொருத்த மட்டில் ஊழல் ஒழிப்பு, அதிகாரப் பரவலை கிராம அளவிற்குக் கொண்டு வருதல் முதலியன அதன் பிரதான அணுகல் முறைகளாக உள்ளன. அந்த வகையில் அதிகாரங்களைக் கீழிறக்குவது தொடர்பான அவர்களின் வாக்குறுதிகள் கவர்ச்சிகரமாக உள்ளன. “சுயராஜ்யச் சட்டம்” ஒன்றை இயற்றி எல்லாவிதமான பிறப்பு, இறப்பு சாதிச் சான்றுகள் முதலியவற்றை வழங்கும் அதிகாரத்தை மட்டுமின்றி கிராம அளவில் செயல்படும் பள்ளி, மருத்துவமனை, காவல் நிலையம் ஆகியவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது முதல் கிராம வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டவுடன் ஒப்பந்தக் காரர்களுக்கு நிதி அளிப்பதற்கான ஒப்புதலை அளிக்கும் அதிகாரம் வரை கிராம சபைகளுக்கு அளிப்பதை அது தனது அடிப்படை அணுகல் முறையாக முன்வைக்கிறது. தல அளவில் பாடத்திட்டம் உருவாக்கும் அதிகாரம் கூட அதற்கு இருக்குமாம். பல முக்கிய துறைகளில் சட்டம் இயற்றுவதற்குக் கூட கிராம சபைகளின் ஒப்புதல் தேவை என்கிற நிலை போகப் போக உருவாக்கப்படுமாம். காவல் நிலையங்களில் காமரா பொருத்தி நடவடிக்கைகளைக் கண்காணித்தல், போலீஸ் காவல் என்பதையே நீக்கிவிட்டு நீதிமன்றக் காவலை மட்டுமே அனுமதிப்பது என்கிற காவல்துறை சீர்திருத்தங்கள் இதுவரை எந்தக் கட்சியும் முன்வைக்காத திட்டங்கள். போலீஸ் காவல் என்பதை 15 நாட்களிலிருந்து 30 நாட்கள் என்கிற அளவிற்கு பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் அரசுகள் கொண்டு சென்றுள்ள நிலையில் ஆம் ஆத்மி அதிரடியாக போலீஸ் காவலே தேவையில்லை எனக் கூறுகிறது.

எனினும் இங்கொன்றைக் கவலையுடன் கருத வேண்டி உள்ளது நமது அரசியல் நிர்ணய அவையில் பஞ்சாயத்து ராஜ் முறையைச் சட்டமாக்க காந்தியவாதிகள் முயன்றபோது அதற்கு டாக்டர் அம்பேத்கர் ஒப்புதல் அளிக்க வில்லை. இறுதியில் அது அடிப்படை உரிமையாக இல்லாமல் வழிகாட்டு நெறிமுறைகளில் ஒன்றாக மட்டும் வைக்கப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் மூலமாக கிராமங்களுக்கு அதிகாரம் அளிப்பதை அம்பேத்கர் அவ்வளவு பிடிவாதமாக எதிர்த்ததற்குக் காரணம் நமது கிராமங்கள் சாதி ஆதிக்க அலகுகளாக இருப்பதுதான், இன்று வரை அந்நிலையில் மாற்றமில்லை, கிராமங்களுக்கு இப்படி அதிகாரங்களை வழங்குவதென்பது அங்குள்ள ஆதிக்க சக்திகளின் கைகளிடம் அதிகாரம் குவிவதற்கே வழிவகுக்கும். இது அப்பகுதிகளில் உள்ள தலித்கள் மற்றும் அந்தப் பகுதிகளில் யார் சிறுபான்மையராக உள்ளனரோ அவர்களுக்கு எதிராக முடியும். இதற்கொரு காப்பாக கிராம சபைகளில் முடிவுகள் எடுக்கும்போது ஒவ்வொரு பிரிவினரிலும் 50 சதக் ‘கோரம்’ இருக்க வேண்டும் என்கிறது ஆம் ஆத்மி அறிக்கை. இது ஒரு முழுமையான பாதுகாப்பாக அமையாது. இப்படியான ‘கோரம்’ குறித்த கணக்குக் காட்டுவது ஆதிக்க சாதியினருக்குக் கடினமான விஷயமல்ல. தலித் பிரிவினருக்கென ஒடுக்கப்பட்ட கிராமங்களில் தேர்தலை நடத்தவிடாமல் பார்ப்பதிலும், நடந்தாலும் அதிகாரத்தைத் தம் கையில் வைத்துக் கொள்வதிலும் வல்லவர்கள் நம் கிராமத்தவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஆம் ஆத்மி இத்தகைய சுயராஜ்யச் சட்டம் தவிர பிற அம்சங்களில் அதிக சிரத்தை காட்டவில்லை. அயலுறவு என்றால் “அமெரிக்காவுடன் அர்த்தமுள்ள உரையாடலைத் தொடரும் அதே நேரத்தில் சிறிய நாடுகளின் கூட்டமைப்புகளிலும் இந்தியா செயல்படும்” இந்திய சீன உறவு என்றால் “எல்லைப் பிரச்சினையில் கறாராக நடந்து கொள்ளும் அதே நேரத்தில் அதனுடன் வணிக உறவைத் தொடர்தல்” என்பதுபோல ஒருவகை வாயளப்புகளாகவே அறிக்கை முடிந்து விடுகிறது.

கைகளால் மலம் நீக்கித் தூய்மை செய்யும் தொழிலை (manual scavenging) ஒழிப்பதை கட்சிகள் பலவும் தங்கள் வாகுறுதிகளில் ஒன்றாக்கியுள்ளன. ஆம் ஆத்மியோ தீயணைப்புப் படையினருக்கு உள்ளதுபோன்ற பாதுகாப்புக் கவசங்கள், முகமூடி, இன்சூரன்ஸ் பாதுகாப்பு ஆகியவை அவர்களுக்கு வழங்கப்படும் என்கிறது.

4. எஸ்.டி.பி.அய் ஒரு அகில இந்தியக் கட்சி. குறிப்பாக கேரளம், கர்நாடகம் முதலான அண்டை மாநிலங்களில் ஓரளவு ஆதரவு உள்ள கட்சி. அது தன் அறிக்கையில் தமிழகப் பிரச்சினைகளைத் தீவிரமாகப் பேசியுள்ள ம.தி.முக முதலான கட்சிகளின் அளவுக்குத் தீவிரமாகத் தமிழகப் பிரச்சினைகளைப் பேசியுள்ளது. ஒரு இந்திய அளவிலான கட்சி இப்படி மாநிலப் பிரச்சினைகளில் அக்கறை காட்டுவது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் அப்படியான அக்கறை பிற மாநிலப் பிரச்சினைகளில் இல்லாதது நமக்கு வியப்பளிக்கிறது. அப்படியானால் இது தமிழகத்திற்கெனத் தனியே உருவாக்கப்பட்ட அறிக்கை என்பதுபோல் ஆகிறது. காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் கோரிக்கை சரியானது என்றால் இக்கட்சியின் கர்நாடகம் மற்றும் கேரள மாநிலக் குழுக்களின் கருத்தும் அதுதானா என்கிற கேள்வி எழுகிறது. அப்படி இல்லாதபோது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட அறிக்கைகளை வைப்பது என்பது அரசியல் அறமல்ல. ஒரு இந்திய அளவிலான கட்சி, நாடாளுமன்றத் தேர்தல்களில் இப்படி மாநிலத்திற்கொரு தேர்தல் அறிக்கையை வைக்க இயலாது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட அதன் ஆங்கில அறிக்கையில் இல்லாத சில அம்சங்களை, குறிப்பாகத் தமிழகம் சார்ந்த சில திட்டங்களைக் கூடுதலாகச் சேர்த்துள்ளது. இது மாநில அளவில் எடுக்கப்பட்ட முடிவா இல்லை அகில இந்திய ஒப்புதலுடன் செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை.

5. பாக், சீனா முதலான அண்டை நாடுகளுடனான உறவைப் பொருத்தமட்டில் பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியம் அளித்து போரைத் தவிர்த்தலே இரு நாட்டு மக்களுக்கும் நல்லது என்பதே இடதுசாரிகள், காங்கிரஸ், தி.மு.க முதலான கட்சிகளின் அணுகல் முறையாக இருந்து வந்துள்ளது. இன்றைய அறிக்கைகளிலும் அதுவே தொடர்கிறது. இதற்கு மாற்றாக அண்டை நாடுகளிடம், குறிப்பாக பாக் மற்றும் சீனாவுடன் கறாராக நடந்து கொள்வது, பேச்சு வார்த்தைகளைக் காட்டிலும் நம் இராணுவ வல்லமையைப் பெருக்கி அதன் மூலம் பிரச்சினைகளை எதிர்கொள்வது என்பன பா.ஜ.கவின் அணுகல் முறையாக இருந்து வந்துள்ளது. இந்த அறிக்கைகளிலும் சி.பி.ஐ, சி.பி.எம், தி.மு.க, இ.தே.கா, வி.சி.க முதலான கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கின்றன. அதே நேரத்தில் பா.ஜ.க, அ.இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, ஆம் ஆத்மி, ஆகிய கட்சிகள் பேச்சு வார்த்தைகளைக் காட்டிலும் இராணுவ வல்லமைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. பா.ஜ.கவுடன் நெருக்கமாகும் புள்ளிகளை இவ்வாறு அ.தி.முக, ம.தி.மு.க ஆகிய இரு திராவிடக் கட்சிகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

6. தமிழக அரசியலில் கடந்த ஆண்டுகளில் மேலுக்கு வந்த பிரச்சினைகளில் ஈழம் முக்கியமானது. இரண்டு கட்சிகளைத் தவிர பிற கட்சிகள் அனைத்தும் இது குறித்துத் தம் கருத்தைத் தெரிவித்துள்ளன. ஈழப் பிரச்சினையில் மௌனம் காக்கும் கட்சிகள் பா.ஜ.கவும் ஆம் ஆத்மியும் மட்டுமே. ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு, பன்னாட்டு விசாரணை ஆகியவற்றை தி.மு.க, ம.தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, வி.சி.க, எஸ்.டி.பி.அய் ஆகிய கட்சிகள் முன்வைக்கின்றன. ஒன்றுபட்ட இலங்கையில் தமிழ்ப்பகுதிகளுக்கு அதிகாரப் பரவல், சுயேச்சையான மனித உரிமை மீறல் விசாரணை ஆகியவற்றை காங்கிரசும் சி.பி.எம்மும் முன்வைக்கின்றன. ஈழ ஆதரவுப் போராட்டங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இணையாகப் பங்கேற்ற சி.பி.அய் கட்சி ‘ஈழம்’ என்கிற சொல்லைப் பயன்படுத்தாமல் “இலங்கை வாழ் தமிழர்களுக்கு” முழு மனித, அரசியல் உரிமைகளை அவர்களின் கருத்தறிந்து வழங்குதல் என்பதாகத் தன் அணுகல் முறையை வைக்கிறது. இந்தக் ‘கருத்தறிந்து’ என்கிற சொல்லும் கூட அதன் ஆங்கில வடிவத்தில் இல்லை.

கச்சத் தீவை மீட்பது எனபதை ஐந்து மாநிலக்கட்சிகள் மட்டுமே முன்வைக்கின்றன இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ், ஆம் ஆத்மி, பா.ஜ.க ஆகிய இந்திய அளவிலான கட்சிகள் தம் அறிக்கைகளில் கச்சத் தீவு குறித்து ஒன்றும் பேசவில்லை. சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என சி.பி.ஐ, தி.மு.க, வி.சி.க ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே தெளிவாகக் கூறியுள்ளன. ஆம் ஆத்மி வழக்கம்போல இதிலும் மௌனம்தான். ம.தி.மு.க மாற்றுப் பாதையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்பதாகக் கூறி நழுவுகிறது. பா.ஜ.க பாதுகாப்பு, கலாச்சாரப் பாரம்பரியம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இது குறித்து முடிவெடுக்குமாம். காங்கிரஸ், அ.தி.மு.க, எஸ்.டி பி.அய் ஆகியனவும் சேது சமுத்திரம் குறித்து ஒன்றும் பேசவில்லை.

7. பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவது என்கிற இந்துத்துவக் கொள்கையை பா.ஜ.க தன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ள அதே நேரத்தில் அதன் கூட்டணிக் கட்சிகளான பா.ம.க, ம.தி.மு.க இரண்டும் அது தேவையில்லை எனக் கூறுகின்றன. தி.மு.க எப்போதும்போல இதை எதிர்த்துள்ளது.

8. சிறுபான்மையினரைப் பொறுத்தமட்டில் சச்சார் குழு அறிக்கையைக் காட்டிலும் ரங்கநாத் மிஸ்ரா ஆணையமே இட ஒதுக்கீடு முதலான திட்டங்களை மிகத் தெளிவாகப் பரிந்துரைத்துள்ளது. இந்த அறிக்கையை பா.ஜ.க தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகிறது. சி.பி.அய், சி.பி.எம், தி.மு.க, வி.சி.க, எஸ்.டி.பி.அய் ஆகிய கட்சிகள் மட்டுமே ரங்கநாத் மிஸ்ரா ஆணையப் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் எனத் தெளிவாகக் கூறுகின்றன. சிறுபான்மையினர் மீது போடப்படும் பொய் வழக்குகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், பொய்வழக்கு போட்ட அதிகாரிகளைத் தண்டித்தல் ஆகியவற்றை சி.பி.அய், சி.பி.எம், ஆம் ஆத்மி, எஸ்.டி.பி.அய் ஆகிய கட்சிகள் மட்டுமே வலியுறுத்துகின்றன. மதக் கலவரத் தடுப்பு மசோதாவை நிறைவேற்றுதல் என்கிற இன்னொரு முக்கியமான சிறுபான்மையினரின் கோரிக்கைக்கு சி.பி.அய், சி.பி.எம், காங்கிரஸ், வி.சி..க, எஸ்.டி.பி.அய் இவை மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளன.

9. தலித்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது, திருத்தங்கள் மேற்கொண்டு வலிமையாக்குவது ஆகியவற்றை சி.பி.எம், காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. கருப்புச் சட்டங்களை மறு பரிசீலனை செய்வது என்பதையும் ஆம் ஆத்மி (AFPSA), தி.மு.க (UAPA), பா.ம.க (அனைத்து தடுப்புக் காவல் சட்டங்கள்), சி.பி.எம் (UAPA) எஸ்.டி.பி.அய், சி.பி.அய் ஆகியவை முன்வைத்துள்ளன.

10. பூரண மதுவிலக்கை ம.தி.மு.க, பா.ம.க, எஸ்.டி.பி.அய் ஆகிய கட்சிகள் முன்வைத்துள்ளன.

11. பா.ஜ.க தன் இந்துத்துவக் கொள்கைகளான அணு வல்லமையைப் பெருக்குவது, அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது. கங்கை நீரைத் தூய்மை செய்வது, பொது சிவில் சட்டம் நிறைவேற்றுவது பசுப் பாதுகாப்பு, காஷ்மீருக்குச் சிறப்பு உரிமைகளை வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்குவது ஆகியவற்றை தன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

12. பா.ம.க அதன் சிறப்புக் கோரிக்கைகளான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் திருத்தி நீர்க்கச் செய்வது, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது, காதலித்துப் பின் ஏமாற்றப்படாமல் பெண்களைப் பாதுகாப்பது முதலியவற்றை வெளிப்படையாகத் தன் அறிக்கையில் முன்வைத்துள்ளது. சிறிய மாநிலங்கள் அமைப்பதை ஆதரித்தல் என்பதும் அதன் திட்டங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை இரண்டாகப் பிரித்து வன்னியர்கள் அதிகமாக உள்ள வட தமிழகத்தைத் தனி மாநிலமாக மாற்றுவது என்கிற அதன் நீண்ட காலக் கோரிக்கையை மனதில் கொண்டு இந்த அறிவிப்பு முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கோரிக்கை பா.ஜ.கவின் சிறிய அளவிலான மாநிலங்கள் என்கிற இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப் போவது குறிப்பிடத் தக்கது. குண்டர் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்கிற அவர்களின் கோரிக்கையும் கூட ஜெயா ஆட்சியில் ஜெ.குரு போன்ற தம் கட்சியினர் பெரிய அளவில் இச் சட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளதை மனதிற் கொண்டு இருக்கலாம்.

13. வி.சி.க, பா.ம.க முதலான அடித்தள மக்களின் கட்சிகள் இட ஒதுக்கீடு குறித்து விரிவாகப் பேசுகின்றன. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளும் தி.முகபோன்ற திராவிட மரபில் வந்தக் கட்சிகளும் இட ஒதுக்கீடு குறித்துத் தூலமாகப் பலவற்றைச் சொல்கின்றன. பழங்குடி மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பா.ஜ.க விரிவாகப் பேசுகிறது. அரசியல் சட்டத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களை ஏற்பதாக ஆம் ஆத்மியும் கூறுகிறது.

14. முஸ்லிம்களை முக்கிய ஆதரவு சக்தியாகக் கொண்டு இன்று உருவாகியுள்ள எஸ்.டி.பி.அய் கட்சி இந்திய அளவில் முஸ்லிம்கள் இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை மிகத் துல்லியமாகத் தொகுத்துள்ளதோடு, அதற்கான மாற்றுத் திட்டங்களையும் தூலமாக முன்வைக்கிறது, ரங்கநாத் மிஸ்ரா ஆணையப் பரிந்துரைகள் நிறைவேற்றம், மதக் கலவரத் தடுப்புச் சட்டம் இயற்றுதல், பொய் வழக்குகளால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு, அரசு வேலை முதலியன, பொய் வழக்கு தொடர்ந்த அதிகாரிகளுக்குத் தண்டனை, இந்திய அளவில் வழிபாட்டுத் தலங்களின் நிலை 1947 ஆகஸ்ட் 15 அன்று இருந்த நிலையில் தொடர்வது, 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைக் கைதிகளை விடுதலை செய்வது, உருது மொழி வளர்ச்சி என அனைத்து அம்சங்களையும் எஸ்.டி.பி.அய் தொகுத்துள்ளது,

15. கட்சிகளுக்கிடையே சில முக்கிய அம்சங்களில் கருத்தொருமிப்பு உள்ளது. சட்ட மற்றும் நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 33 சத ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள், மலம் சுமந்து அகற்றும் பணியை ஒழித்தல் முதலியன இவற்றில் சில. இங்கு ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டகட்சி அறிக்கைகளில் பெண்கள் ஒதுக்கீடு குறித்து எதுவும் பேசாதது பா.ம.க அறிக்கை மட்டுமே. வடக்கே சமாஜ்வாதி கட்சி முதலியன இதிலும் சாதி வாரி ஒதுக்கீடு என்கிற கோரிக்கையை எழுப்பி இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றன. இந்ந்நிலையில் தேர்தல் அறிக்கைகள் மூலமாக இப்போது உருவாகியுள்ள கருத்தொருமிப்பைப் பயன்படுத்தி 16வது நாடாளுமன்றம் பெண்களுக்கான் ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள், Manual Scavenging ஐ ஒழிப்பது தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிகள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும். தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்த வேண்டுமென்பதிலும் காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க. அ,தி.மு.க தவிர பிற கட்சிகள் மத்தியில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்கு ஆதரவு உள்ளது. இது குறித்து தேசிய அளவில் விவாதம் ஒன்றை உருவாக்கி அனைத்துக் கட்சிகளுக்கும் பெற்ற வாக்கு வீதங்களுக்கு ஏற்ப உரிய பிரதிநிதித்துவம் பெற வழி செய்ய வேண்டும்;

மதவேறுபாடில்லாமல் இடஒதுக்கீடு, குறிப்பாக தலித் கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்களுக்கு பிற தலித்களுக்கு வழங்குவதைப்போல ஒதுக்கீடு வழங்குவது என்பதிலும் இடதுசாரிக் கட்சிகள், திராவிடக் கட்சிகள் மற்றும் தலித் கட்சிகளுக்கிடையே கருத்தொருமிப்பு உள்ளது. பா.ஜ.க ஒன்றே இதனைக் கடுமையாக எதிர்க்கக் கூடிய ஒன்று. ரங்கநாத் மிஸ்ரா ஆணையமும் இதை அழுத்தமாகப் பரிந்துரைத்துள்ளது. 16வது நாடாளுமன்றம் இதை எவ்வாறு எதிர்கொள்ள போகிறது என்பதைப் பார்ப்போம். தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பதையும் இடதுசாரிக் கட்சிகள், அடித்தள சாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தி.மு.க முதலியன வலியுறுத்துகின்றன. கார்பொரேட் மற்றும் தனியார் மயமாக்கலை ஆதரிக்கும் கட்சிகள் இது குறித்துப் பேசவில்லை. சி.பி.எம் கூட தனியார் துறை இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சாதிகளை உள்ளடக்கவில்லை.

விவசாய விளைபொருட்களுக்கு குடும்ப உழைப்பையும் ஒரு முதலீடாகச் சேர்த்துக் கணக்கிட்டு 50 சத லாபம் வருமாறு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்வது என்பதிலும் பெரும்பாலான கட்சிகளுக்கிடையே கருத்தொருமிப்பு உள்ளது. 16 வது நாடாளுமன்றம் செயல்படுத்த வேண்டிய ஒரு உடனடியான முக்கிய சட்ட நடவடிக்கை இது.

ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு, ஒப்பந்த முறையை ஒழிப்பது உட்பட உரிய சட்டப் பாதுகாப்புகளை உருவாக்குவது, ஓய்வூதியத் திட்டம் முதலியன குறித்தும் முக்கிய கட்சிகள் பலவும் பேசியுள்ளன. ஆம் ஆத்மி கட்சி ஆண்டு முழுவதும் வேலை தர இயலாத துறைகளில் மட்டும் ஒப்பந்தத் தொழிலாளிகள் முறையை அனுமதிக்கலாம் என்கிறது. மீனவர்கள் நலன் குறித்து ஆம் ஆத்மி தவிர பிற கட்சிகள் தூலமான பரிந்துரைகள் சிலவற்றை முன் வைக்கின்றன.

ஊழல் ஒழிப்பு குறித்து திராவிடக் கட்சிகள், வி.சி.க தவிர பிற அனைத்தும் தூலமான சில சட்ட உருவாக்கங்களை முன்வைத்துள்ளன. 16ம் நாடாளுமன்றத்தின் முன்னுள்ள முக்கிய பணிகளில் ஒன்று இது, கல்வி, மருத்துவம் ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவது, அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு முதலிய திட்டங்களும் பெரும்பாலான கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன. தொழில், பொருளாதாரம் தொடர்பான திட்டங்கள் கட்சிகளின் கொள்கைகளுக்குத் தக வேறுபடுகின்றன. இது குறித்துப் பொதுக் கருத்து உருவாக வாய்ப்பில்லை. எனினும் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களைப் பாதுகாப்பது குறித்த ஒரு கருத்தொற்றுமை உள்ளது.

உள்நாட்டுப் போராட்டங்கள், குறிப்பாக மாஓயிஸ்ட்களையும், வடகிழக்கு மற்றும் காஷ்மீர் மாநிலப் போராட்டங்கங்களையும் ஒடுக்குவது குறித்து எல்லாக் கட்சிகளும் பேசியபோதும், இந்த விடயத்தில் மத்திய மாநில அரசுகளிடையே ஒருங்கிணைப்பு வேண்டும் என்றெல்லாம் கூறியபோதும் ‘சல்வாஜூடும்’ போன்ற சட்டவிரோதப் படைகளை அரசாங்கமே செயல்படுத்துவதை எந்தக் கட்சியும் கண்டிக்கவில்லை போராடும் .இந்த மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிராகப் பயன்படுத்தப்படும் கருப்புச் சட்டங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என சி.பி.எம், ஆம் ஆத்மி, தி.மு.க ஆகிய கட்சிகள் மட்டுமே கூறியுள்ளன.

மத அடிப்படையில் திட்டங்களை வைத்து மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியை பா.ஜ.க மட்டுமே செய்துள்ளது.

பிற மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்து சென்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டுப் பிழைக்கும் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டத் திருத்தம் குறித்து சி.பி.அய், சி.பி.எம் கட்சிகள் மட்டுமே பேசுகின்றன.

ஜனநாயகம் என்பது விரும்பிய கட்சிகளுக்கு வாக்களித்து ஆட்சியைத் தேர்வு செய்வதோடு முடிந்து விடுவது அல்ல. ஆட்சியாளர்கள் மக்களுக்கு எதிராகத் திரும்பும்போது அதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடுவதும், தங்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதும் சேர்த்துத்தான் ஜனநாயகம், அதற்கான உரிமைகளையும் உள்ளடக்கியதுதான் ஜனநாயகம். ஜனநாயகம் வெற்றிகரமாகச் செயல்பட வேண்டுமானால் மக்கள் அதற்குத் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள் வழிமாறும்போதும் வாக்குறுதிகளைத் தவறும்போதும் அதைத் தட்டிக் கேட்கும், தேவையானால் வீதியில் இறங்கிப் போராடும் தகுதியுடையவர்களாக இருப்போம்.

மல்லிப்பட்டனம் தேர்தல் கலவரத்தை முன்வைத்து…

நான் அங்கு போகவில்லை. நாளிதழ்களில் வாசித்ததுதான். நண்பர் ஃபிர்தவுஸ் ராஜகுமாரன் எழுதியிருந்த முகநூல் பதிவையும் பார்த்தேன். வாக்கு சேகரிப்பிற்காக வந்திருந்த பா.ஜ.க வேட்பாளர் கருப்பு என்கிற முருகானந்தத்தைத் தம் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என முஸ்லிம்கள் தடுத்ததாகவும், அதை மீறி கருப்பு குழுவினர் நுழைந்த போது கலவரம் மூண்டதாகவும் அறிகிறோம்.

தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க யாரும் வரத்தான் செய்வார்கள். எங்கள் பகுதிக்கு வரவேண்டாம் என முஸ்லிம்கள் தடுத்திருக்கத் தேவை இல்லை என ஃபிர்தௌஸ் கூறி இருந்தார். உண்மைதான். நமக்குப் பிடிக்காதவர் ஆனபோதிலும் வாக்கு சேகரிக்க வருபவர்களிடம் ஒரு புன்னகையை உதிர்த்து அனுப்புவதே பண்பாடு என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க இயலாது.

எனினும் முழுமையாக அன்று என்ன நடந்தது எனத் தெரியவில்லை.

மல்லிப்பட்டினம் கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி அமைந்துள்ள ஒரு ஊர். கிழக்குக் கடற்கரையில் பரவலாக முஸ்லிம்கள் வசிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகளும் இப்பகுதியில்தான் அதிகம்.

தற்போது கலவரம் நடந்த இப்பகுதியில் தீவிரமாகச் செயல்படும் இந்துத்துவ அமைப்புகளில் முக்கியமானவர் இந்தக் கருப்பு.

முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் முதலான பகுதிகளில் கடந்த இருபது ஆண்டுகளாக மதக் கலவரங்கள் நடை பெற்று வருகின்றன. மதக் கலவரங்கள் எனச் சொல்வதைக் காட்டிலும் முஸ்லிம்கள், அவர்களது கடைகள், இதர சொத்துக்கள் தாக்கப்படுவது அவ்வப்போது தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த தாக்குதலில் முத்துப்பேட்டை கடைவீதியில் இருந்த ஒரு மரவாடி, சைக்கிள் ஸ்பேர் பார்ட் ஷாப் உள்ளிட்ட பல கடைகள் எரிக்கப்பட்டு, தாக்கப்பட்டன. முஸ்லிம்களுக்குச் சொந்தமான தென்னை மற்றும் வாழைத் தோப்புகளில் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. முத்துப்பேட்டையில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு அந்தக் கலவரத்தின்போது ஏற்பட்ட சொத்திழப்பு அபோதே ஒரு கோடி ரூபாய் என எங்கள் உண்மை அறியும் குழு மதிப்பிட்டது.

அப்போது நான் தஞ்சையில் இருந்தேன். சில ஆண்டுகளுக்குப் பின் ஒருநாள் காலையில் நாகை சாலையில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தேன். எதிரே வந்த ஒருவர் வணக்கம் சொன்னார். அடையாளம் தெரியவில்லை. பின் அவரே சொன்னார். சற்று முன் குறிப்பிட்டேனே அந்தக் கலவரத்தில் முழுமையாக எரிக்கப்பட்ட சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ் ஷாப்காரர். அந்த ஊரை விட்டே தான் இடம் பெயர்ந்து விட்டதாகவும். தற்போது தஞ்சையில் ஒரு கடையைத் தொடங்கி இருப்பதாகவும் கூறினார்.

முத்துப்பேட்டை முஸ்லிம்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதம் வந்தாலே அச்சம் தோன்றி விடும். அபோதுதான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் அங்கு வினாயகர் ஊர்வலம் நடத்துவார்கள். வினாயகர் சிலையைத் தூக்கிக் கொண்டு சந்தைப்பேட்டை முஸ்லிம் தெரு வழியாக ஊர்வலம் வருவார்கள். அந்த முஸ்லிம் தெரு மிகக் குறுகலானது. வினாயகர் ஊர்வலத்தினர் என்னென்ன முழக்கங்களை இடுவார்கள், எதையெல்லாம் செய்வார்கள் என்பதை நான் விளக்கமாகச் சொல்ல வேண்டியதில்லை. முஸ்லிம் இளைஞர்கள் கொதிப்படைவார்கள். குறிப்பாகப் பெண்கள் தொடர்பான இழிவுப் பேச்சுக்கள் வரும்போது இவர்கள் தரப்பிலிருந்து ஏதாவது எதிர்வினைகள் வரும். பிறகு கலவரம்தான்,

ஆறேழு ஆண்டுகளுக்கு முன் அப்படி ஒரு பெருங்கலவரத்திற்குப் பின் நாங்கள் அங்கு சென்றிருந்தோம். எங்களுடைய முக்கிய பரிந்துரை ஊர்வலப் பாதையை மாற்ற வேண்டும் என்பது. முத்துப்பேட்டையைச் சுற்றி இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. நாகூருக்குப் பிறகு மத வேறுபாடுகள் இல்லாமல் பெரிய அளவில் மக்கள் புனிதப் பயணம் வருகிற தர்ஹா ஒன்றும் அங்குள்ளது. விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க அந்தக் குறுகிய முஸ்லிம் தெருக்கள் வழியாக ஊர்வலம் போக அவசியமே இல்லை. வம்புக்காக்கத்தான் அத்தனையும்.

இந்த வம்புகள் அனைத்தின் நாயகரும் கருப்பு என்கிற முருகானந்தம் தான்.

தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் கடும் ‘டென்ஷன்’தான். இடையில் ஊர்வலப் பாதையை மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தை முஸ்லிம்கள் அணுகினர். இந்திய தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த நண்பர் முகமது சிப்லி அந்த வழக்கைத் தொடுத்திருந்தார். எங்கள் அறிக்கையும் அதில் ஒரு முக்கிய ஆவணமாக முன்வைக்கப்பட்டது. நீதிமன்றமும் மாற்றுப் பாதை ஒன்றைச் சுட்டிக்காட்டி ஆணையிட்டது.

அந்த ஆண்டில் நாங்கள் மீண்டும் ஊர்வலத்தன்று அங்கு சென்றோம். முத்துப்பேட்டைக்கு நாங்கள் செல்வது இது மூன்றாம் முறை. கடைவீதியில், பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள சி.பி.அய் கட்சியின் அலுவலக மாடியில் நின்றவாறு வெறி கலந்த முழக்கங்களுடன் சென்று கொண்டிருந்த ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு ஆத்திரம்கொண்ட நிலையில்தான் ஊர்வலம் சென்றுகொண்டிருந்தது. நீதிமன்ற ஆணை முழுமையாகக் கடைபிடிக்கப்படாமல்தான் ஊர்வலம் நடந்தது. சில கல்வீச்சுக்கள் அப்போதும் நடக்கத்தான் செய்தன. ஊர்வலம் முடிந்தவுடன் கல்வீச்சுகளால் தாக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் வீடுகளைச் சென்று பார்த்தோம்.

கடந்த சில ஆண்டுகளாக அங்கு பெரிய சம்பவங்கள் ஏதும் இல்லை. கருப்புவிற்கு பா.ஜ.க வில் ஏதோ முக்கிய பதவியெல்லாம் கொடுத்துள்ளனர். அவர் இப்போது அதிகம் சென்னையில்தான் இருப்பதாகவும், ஊர்ப்பக்கம் பெரிதாக வருவதில்லை எனவும், அதனால் கலவரங்களும் கொஞ்சம் குறைந்துள்ளதாகவும் முத்துப்பேட்டையைச் சேந்த ஒருவர் குறிப்பிட்டார். நான்கூட ஒருமுறை அவரை சென்னையில் ஒரு தொலைக்காட்ட்சி விவாதத்தில் சந்தித்தேன்.

இந்தியாவில் நடைபெறும் மதக் கலவரங்களில் ஓரம்சத்தை நாம் கவனிக்க வேண்டும். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமான மோதல் எனப் பொத்தாம் பொதுவாக அவரற்றைச் சொல்லிவிட இயலாது. இந்துக்களிலும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் முக்கிய பங்கேற்கும் வன்முறையாகவும் அவை உள்ளன. இந்தக் ‘குறிப்பிட்ட சாதி’ என்பது ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொன்றாக இருக்கலாம். முசாபர்நகரில் சமீபத்தில் நடந்த கலவரம் வெறுமனே ஒரு இந்து முஸ்லிம் கலவரம் மட்டுமல்ல; அது ஒரு ஜாட் – முஸ்லிம் கலவரமும் கூட.

இப்படி கலவரத்தில் ஒரு குறிப்பிட்ட சாதி முக்கிய பங்கு வகிக்கும் போது அங்குள்ள பல்வேறு அரசியல் கட்சிகளிலும் தலைமையில் இருப்பவர்களும் கூட அந்தப் பெரும்பான்மைச் சாதியைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பர். எனவே அவர்கள் வேவ்வேறு எதிர் எதிர் கட்சிகளில் இருந்தபோதும், முஸ்லிம்களைத் தாக்கிய தீவிரக் கும்பலில் அவர்கள் நேரடியாகப் பங்கு கொள்ளாதபோதும், அவர்களுக்கு ஆதரவாகவே செயல் படுகின்றனர்.

முத்துப் பேட்டையிலும் அதைக் கண்டோம்.

கருப்பு என்கிற முருகானந்தத்தின் மீது அப்பகுதி முஸ்லிம்களுக்கு ஒரு அச்சம் உள்ளது. அவர் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளதாக வேட்பு மனுவிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார். மல்லிப்பட்டினம் முஸ்லிம்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனஅவருக்கு நிச்சயம் தெரியும். அவருடைய நோக்கம் வாக்கு சேகரிப்பதும் அல்ல. எப்படியோ இன்று நடைபெற்றுள்ள சம்பவம் இரு சமூகங்களையும் எதிர் எதிராக நிறுத்த உதவி செய்துள்ளது. இந்துத்துவ சக்திகள் விரும்புவது அதுதான். அப்படி இம்முரண் கூர்மைப் படும்போதுதான் பா.ஜ.க அதிக இடங்களைத் தேர்தல்களில் கைப்பற்ற முடிந்திருக்கிறது. இதுவரை பா.ஜ.க அதிக இடங்களை வென்ற, ஆட்சி அமைத்த தேர்தல்கள் (92 / 96 / 98) எல்லாவற்றிலும் அது உ.பியில் 50 இடங்களுக்கு மேல் பெற்றிருந்தது. அந்த நேரத்தில்தான் இந்து /முஸ்லிம் polarisation னும் அங்கு உச்சமாக இருந்தது. 2000க்குப் பின் அந்த அளவிற்கு இந்துக்களையும் முலிம்களையும் எதிர் எதிராக நிற்க வைக்க இந்துத்துவ சக்திகளால் முடியவில்லை. சிறையிலிருந்து விடுதலை ஆன அமித் ஷாவை மோடி உ.பி மாநிலத் ‘தேர்தல் பணிக்கு’ என அனுப்பி வைத்ததே இந்த நோக்கத்திற்காகத்தான் எனவும், முசாபர் நகர் கல்வரம் இந்த நோக்கிலேயே கட்டமைக்கப்பட்டது எனவும் ஒரு ‘தியரி’ உண்டு.

கருப்பின் நோக்கம் எதுவானாலும் வாக்கு சேகரிக்க வந்தவர் என்கிற வகையில் அவரை அனுமத்தித்திருக்கலாம், முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட பதட்டத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதை அவர்கள் இப்படி வெளிப்படுத்தி இருக்க வேண்டியதில்லை. காவல்துறையை அணுகி, பெருங் கூட்டம், முழக்கங்கள் இல்லாமல் வாக்கு கேட்க வேண்டும் எனவும், அதிக அளவில் காவல்துறையினர் கூட வரவேண்டும் எனவும் கோரி இருக்கலாம்.

அப்பாவிகள் பலரும் கைது செய்யபட்டுள்ளதாக முஸ்லிம்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இது காவல்துறை வழக்கமாகச் செய்வதுதான். உண்மையில் இப்படியான ஒரு பிரச்சினையைக் காவல்துறை எதிர்நோக்கி இன்னும் அதிகப் பாதுக்காப்பை அங்கு உறுதி செய்திருந்தால் இந்தச் சம்பவமே அன்று தடுக்கப் பட்டிருக்கலாம்.