பல சமயங்கள் ஒரு சேரச் செழித்திருந்த தமிழ் மண்

          நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்  25                                                    

பல்வேறு சமய, தத்துவச் சிந்தனைகள் செழித்திருந்த தமிழ் மண்

வைதீகம், ஆசீவகம், பௌத்தம், சாங்கியம், பூதவாதம் எனப் பல நெறிகளும், செழித்திருந்த காலம் மட்டுமல்ல, அவற்றுக்கிடையே ஆரோக்கியமான விவாதமும் நடந்து கொண்டிருந்த காலம் அது. சேரமன்னன் செங்குட்டுவன் வடக்கே படையுடன் சென்று, கங்கையைக் கடந்து, கனக விசயர் முதலான வடபுல மன்னர்களை வென்று, அவர்தம் தலைகளில், இமய மலையிலிருந்து பெயர்த்தெடுத்த கற்களைச் சுமக்கச்  செய்து கொண்டு வந்தான் எனவும், அவற்றைக் கொண்டே  கண்ணகிக்குக் கோவில் கட்டினான் என்றும் நம்பிக்கைகள் உருவான காலத்தில் எழுந்த காவியம் மணிமேகலை. இக்காதையின் இறுதி வரிகள் இதற்குச் சான்றாக அமைகின்றன.

செங்குட்டுவனை, ” பூக்காத வஞ்சியில் பூத்த வஞ்சி  மலர்களைச்சூடிய விரர்கள் வலம் வரும் சேர நாட்டுச் செங்கோல் வேந்தன்” எனக் கூறும் சாத்தனார், அந்த வீரர்கள் தாம் செல்லும் நாட்டை எல்லாம் சேரநாடாக ஆக்கும் வல்லமை பெற்றவர்கள் என்கிறார். திருமுடியில் வாகை சூடிய அச்சேரனின் வஞ்சியில் எடுக்கப்பட்ட கண்ணகிப் படிமத்தை வணங்கி ஆசிபெற்ற மணிமேகலை, முன் அத்தியாயத்தில் கண்ணகி அவளுக்குச் சொன்னபடியே  ஆணுருவில் வஞ்சி மாநகருக்குள்  நுழைகிறாள். பௌத்தம் முன்னிறுத்தும் நான்கு பேருண்மைகளையும் புரிந்தேற்கும் வண்னம் இத்தருணத்தில் அவளுக்குத் “திருந்திய நல் ஏதுக்கள் முதிர்ந்திருந்தன” என நிறைவுறுகிறது  முந்திய காதை.

புத்தர் உறைத்துச் சென்ற நான்கு பேருண்மைகள் என்பன என்ன?

(i) வாழ்வின் அடிப்படையாக ‘துக்கம்’ தான் உள்ளது (ii) ‘ஆசை’ யும் பற்றுமே எல்லா துக்கங்களுக்கும் அடிப்படை (iii) தன்னை மையமாகக் கொண்ட நோக்கு, ஆசை அதன் விளைவான துக்கம் எல்லாம் நீக்கப்படக் கூடியவையே. (iv) மனம், வாக்கு, காயம் ஆகியவற்றின் அடிப்படியிலான எண்வழிப்பாதை (அஷ்டாங்க மார்க்கம்) மூலம் ‘சரியான வாழ்வை’ வாழும் யாரும் துக்கத்தை வெல்ல முடியும் – என்கிற இப்பேருண்மைகளை உணர்ந்தேற்கும் நிலையை மணிமேகலை எனும் கணிகைக் குலத்தில் பிறந்த ஒரு இளம்பெண் வந்தடைதலையும், அதனூடாக அவள் பெறும் அனுபவங்களையும் சொல்வதுதான் மணிமேகலைக் காவியம் என்பதை நாமும் உணர்ந்து கொள்கிறோம்.

இனி நாம் காணப்போகும் மணிமேகலையின் இறுதி நான்கு அத்தியாயங்களும் அன்று இந்தியத் துணைக்கண்டத்திலும் தமிழகத்திலும் முகிழ்த்திருந்த முக்கிய பல சமயங்களின் கருத்தாக்கங்களையும், அவற்றில் பௌத்த சிந்தனைகள் எவ்வாறு மேம்பட்டு நிற்கின்றன என நிறுவுபவையாகவும் அமைகின்றன.

இப்போது நாம் காணப் போகும் “சமயக் கணக்கர்- தம் திறம் கேட்ட காதை’ யில் மணிமேகலை ஆணுருக்கொண்டு புறச்சமயக் கணக்கர் பலரையும் கண்டு அவர்தம் மதக் கோட்பாடுகள் அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக் கொள்கிறாள். யாருடனும் வாதிடுவதில்லை. இறுதியாகச் சந்திக்கும் பூதவாதிக்கு மட்டும் மறுமொழி சொல்வாள். இதனூடாக இந்தியத் துணைக்கண்டத்தில் அன்று செழித்திருந்த பல்வேறு மத நெறிகளின் அடிப்படைகளையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.

‘சமயக் கணக்கர்’ என்பதில் உள்ள ‘கணக்கு’ எனும் சொல் ‘தத்துவம்’ அல்லது ‘மெய்யியல்’ எனும் பொருளில் இங்கு பயன்படுத்தப்படுகிறது. கணக்கர் என்பதை ‘தத்துவ விற்பன்னர்’ அல்லது ‘சமயவாதி’ அல்லது ‘சமய நெறியை ஆய்ந்துரைப்போர்’ எனப் பொருள் கொள்ளலாம். ‘அளவை’ என்பது தர்க்கம் (logic).

அ. அளவை வாதி

மணிமேகலை முதலில் சந்திப்பது வைதிக நெறியைச் சேர்ந்த ‘அளவை வாதி’ யை. வைதிக வாதி என்பது வேதங்களை ஏற்றவர், அதனடியாக அணுகுபவர் எனப் பொருள்படும். அவனிடம் ‘நின் கடைப்பிடி இயம்பு’ எனக் கூறி அவன் கடைபிடிக்கும் தத்துவத்தைக் கூறுமாறு மணிமேகலை கேட்டவுடன் அவன் தொடங்குவான்.

வேத வியாசன், கிருத கோடி, சைமினி (ஜைமினி) முனிவன் ஆகியோர் முறையே பத்து, எட்டு, ஆறு என்கிற எண்ணிக்கைகளில் தமது அளவைகளை அவரவர்களுக்கு ஏற்ற வகையில் எடுத்துரைத்துள்ளனர். இவர்களில் சைமினி ‘.மீமாம்சை’யை எழுதியவர்.

அடுத்து பிரமாணம் என்பது எந்த அடிப்படை அல்லது ஆதாரம், அல்லது கொள்கையினடியாக ஒன்றை ஏற்றல் என்பது. அப்படியான பத்து பிரமாணங்களை அவன் பட்டியலிடுவான். அவை:

1.கண்ணால் கண்ட காட்சி,

  1. கருதுதல் (சிந்தனையில் மதிப்பிடல் அல்லது அனுமானத்திலிருந்து அனுமேயத்தை உய்த்தறிதல்),
  2. உவமம் (ஒப்புமையின் அடிப்படையில் முடிவுக்கு வருதல்),
  3. ஆகமம் (நூற் பிரமாணம் அல்லது நூலறிவு),
  4. அருத்தா பத்தி (ஆயர் குடியிருப்பு என்றால் அது கங்கையின் அருகில் இருக்கும் என ஒன்றிலிருந்து இன்னொன்றை அறிதல்),
  5. இயல்பு (ஒன்றின் தன்மை அறிந்து முடிவு கோடல். யானை மேல் இருப்பவன் கீழே கிடக்கும் ஏதொன்றையும் எடுத்துத் தருமாறு கேட்கும்போது அங்குசத்தை எடுத்துத் தருதல்),
  6. ஐதீகம் ( உலகுரை அல்லது வழி வழி வந்த கருத்து அல்லது நம்பிக்கை,)

8, அபாவம் (இன்மை – அதாவது குதிரைக்கு கொம்பு இல்லை என உணர்ந்தறிதல். ஒன்றைச் சொல்லும்போதே அது உறுதியாக அப்படியல்ல என முடிவுக்கு வருதல்),

  1. மீட்சி ஒழிவறிவு (இராமன் வென்றான் எனில் இராவணன் தோற்றான் எனப் பொருள் கோடல்),
  2. எய்தியுண்டாம் நெறி (சம்பவத்தால் அறிதல், அதாவது ஒரு பொருளுக்கு அருகிலுள்ள இரும்பு சுழல்வதைக் கண்டு அதைக் காந்தம் என அறிதல்)

அத்தொடு நிறுத்தவில்லை அந்த வைதிகவாதை. அடுத்து ‘பிரமாண ஆபாசங்கள்’ என என எட்டு அளவைக் குற்றங்களைப் பட்டியலிடுவான். அவை:

  1. சுட்டுணர்வு : ஏதொன்றின் தோற்ற உண்மையை மட்டும் கண்டு பிறவற்றை ஆராயாது ஏற்றல் (நிருவிகற்ப காட்சி).
  2. திரியக்கோடல் : காணும் ஒன்றைத் திரித்துணர்தல். எதிரொளிக்கிறது என்பதாலேயே இப்பியை சிப்பி எனக் கொள்ளுதல் (விபரீதக் காட்சி)
  3. ஐயம் : எதையும் உறுதிப்படுத்தாமல் ஐயமுற்று நிற்பது.
  4. தேராது தெளிதல் : ஆராயமற் முடிவெடுத்தல். ‘தேரான் தெளிவும், தெளிந்தார்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்’ – குறள்.
  5. கண்டுணராமை : கண்ணால் கண்டும் உணராமை. புலியைக் கண்டும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயலாமல் நிற்றல்.
  6. இல்வழக்கு : முயற் கொம்பு என்பதுபோல இல்லாத ஒன்றை வெறும் சொற்பொருளிலிருந்து கற்பித்துக் கொள்ளல்.
  7. உணர்ந்ததை உணர்தல்: குளிருக்கு நெருப்பருகே அமர்தல் ஆறுதல் அளிக்கும் என அறிந்தும் அதனை மீண்டும் சோதித்து அறிய முனைதல்.
  8. நினைப்பு : ஒருவர் சொல்வதை காரண ஆய்வின்றி அப்படியே ஏற்றுக் கொள்ளுதல்.

ஆ. சைவவாதி

அடுத்து  ஈசன் (சிவன்) ஒருவனையே இறைவன் எனக் கொள்ளும் ஒரு சைவனைச் சந்தித்து அவன் வணங்கும் தெய்வம் குறித்து  உசாவுகிறாள் மணிமேகலை.

ஞாயிறு திங்கள், இயமானன் (‘நான்மறையோனுமகத்து இயமான்பட’- மாணிக்கவாசகர்) மற்றும் மண், நீர், தீ, காற்று, வான் எனும் ஐம்பூதங்கள் என எட்டினையும் தன் உடம்பாகவும் தான் உயிராகவும் கொண்டுத் தனக்கு ஒப்பாரும், மிக்காரும் இல்லாமல் யாவற்ரையும் படைத்துத் திருவிளையாடல் புரிபவனே எம் இறைவன் எனப் பதிலுறுக்கிறான் அவன்.

இ. பிரமவாதி

இந்தப் பேருலகெல்லாம் பிரமதேவன் இட்ட முட்டை என முடித்துக்கொள்கிறான் இவன். பிரமவாதம் என்பது வைதிக அறுவகை நெறிக்குள் அடங்காது. புராணங்களில் மட்டுமே காணப்படுவது. இங்கு கூறப்படும் கருத்து மனுதருமத்தில் (1-9) காணப்படுவது.

ஈ. வைணவ வாதி

நீலவண்ணக் கடவுளின் புராணத்தை ஓதும் வைணவன் ‘நாராயணனே காப்பு’ என முடித்துக்கொண்டான்.

உ. வேத வாதி

‘கற்பமே’ (வேதங்களின் ஆறங்கங்கள்). கைகள், சந்தமே (ஒலி நயம்) கால்கள், எண்களே கண்கள் (எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்), தெளிவான விளக்கம் அளிக்கும் நிருத்தமே (பாவம் / அபிநயம்) செவியாகவும், சிக்கையே (சிட்சை) மூக்காகவும், இவற்றோடு சொல் இலக்கணமே முகமாகவும் கொண்டு எந்தச் சார்பும் இன்றித் தான்தோன்றியாக வெளிப்பட்ட வேத புருடர்க்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை. அவ்வேத வாக்குகளே எம் சமய நெறியாகும் என விளக்கினான் வேதவாதி.

‘மெய்த் திறம் (மெய்யான திறன்) அல்லது உலக வழக்கு எனக் கூறப்படும் எதிலும் இவ் வைதிகர் கூறுவன பொருந்தாது என எண்ணியவாறு தம் காலத்திய இன்னொரு முக்கிய சமயப் பிரிவான மற்கலியின் ஆசீவக நெறியறிந்த ஒரு முதியோனை அணுகினாள் மணிமேகலை.

ஊ. ஆசீவக வாதி

ஆசீவகர் கொள்கையச் சற்று விரிவாகவே பேசுகிறார் சாத்தனார். எல்லை இல்லாத பொருள்களில் எங்கும் எப்போதும் அகலாது பின்னிக் கிடந்து புலப்படுபவனும், எல்லையில்லாத அறிவினை உடையவனுமாகிய அவனே எங்கள் இறைவன். அவன் (மற்கலி) உரைத்த நூற்பொருட்கள் ஐந்து வகையாம். அவை திடம் தரும் உயிர், மற்றும் நிலம், நீர், தீ, காற்று எனும்  நால்வகை அணுவகைகள். அவ்வணுக்கள் நுண்மையானவை ஆனாலும் அவை தம்மை உற்றும், கண்டும் உணர்ந்திடுமாறு ஒன்றோடொன்று கூடுதலும் பிரிதலும் செய்யும். மலை, மரம், உடம்பு எனத் திரளவும் செய்யும். வெவ்வேறாகிப் பிரியவும் செய்யும். அவ்வாறு திரளவும், பிரியவும் செய்யும் வகையினை ஆராய்ந்தறிவதே உயிர் எனப்படும். ஆசீவகத்தின் அணுக் கொள்கையின்படி உயிரும் ஒரு அணுவே. அது உற்றும் கண்டும் உணர்ந்திடும் வகையில் கூடவும் செய்யும் பிரியவும் செய்யும். “ஒன்றாய், வேறாய், உடனாய்” எனும் ஆசீவகத்தின் ஒருமைவாதக் கோட்பாடு இங்கே குறிக்கப்படுகிறது. ஆசீவக நெறியை மறுக்கும் நீலகேசியிலும் (659 – 729) ஆசிவகத்தின் அணுக் கொள்கை இவ்வாறு விளக்கப்படுவதைக் காணலாம்.

ஆசீவகவாதி தொடர்கிறான்: நில அணுக்கள் வன்மையானதாக அமையும். நீரணுவானது வீழ்ந்தும், குளிர்ச்சியும் சுவையும் உடையதாகவும் இருக்கும்.. ‘இழின்’ எனும் ஒலியோடு வீழ்ந்து நிலத்தின் ஆழத்தே உறிந்து கொள்ளப்படும். தீ அணுவோ எரிவதும் மேல்நோக்கி எழுவதுமான பண்புகளைக் கொண்டிருக்கும்.. காற்றணுவோ குறுக்கிட்டு (விலங்கி) அசையும் பண்பு கொண்டிருக்கும்..

நிலம், நீர், தீ, காற்று எனும் இந்நான்கும் ஆதியில்லாத அநாதியான பரமாணுக்கள். பிரிதல், பின் கூடுதல் எம்கிற வேறு இயல்புகளை எய்தும் விகாரமுடையவை. ஆனால் இதனால் இவை கேடுற்றுச் சிதைந்தழிவதும் இல்லை. புதிதாய் ஓரணு தோன்றி இன்னொன்றுக்குள் புகுவதும் இல்லை. அநாதியான நீரணுக்கள் நிலவணுக்களாகத் திரிவதும் இல்லை. ஓரணு ஈரணுக்களாய்ப் பிரிவதும் இல்லை. தவிரவும் நெல் அவலாய் பரந்துபடுவதுபோல போல இவை விரிவதும் இல்லை. உலாவுவதும், தாழ்வதும், உயர்வதும் உண்டு. நில அணுக்களால் அமைந்த மலை, பின் சிதைந்து மணலாகிப் பிறவற்றோடு கூடலாம். பலவாகக் கூடியிருப்பன பின் பிரிந்துத் பின் பழைய அணுத்தன்மை உடையதாக மாறவும் கூடும். மரமாய்ச் செறிந்துள்ள அணுக்கள் திண்மையாய்ச் செறிந்து வேறேதேனும் ஆகலாம். மூங்கிலும் மர அணுக்கள் ஆனபோதிலும் அவை மூங்கிலாய் உருப்பெறும்போது உள்ளே துளைகொண்ட  தன்மையதாகவும் ஆகலாம். வித்தாகி மீண்டும் முளைக்கவும் ஆகலாம். தேயாத முழுநிலவைப்போல வட்டமான செழித்த நிலப்பரப்பாகவும் ஆகலாம்..

இந்த அணுக்கள் நிலம் நீர் முதலான பஞ்சபூதங்களாய் உருப்பெரும்போது இந்த நால்வகை அணுக்களும் அவையவைக்கு உரிய அளவிலேயே இருக்க வேண்டும். அவற்றில் எதுவும் குறையவோ கூடவோ கூடாது.. ஒன்று, முக்கால், அரை, கால், பங்கு என அவை வேறுபடும். எடுத்துக்காட்டாக நிலமாகிய பூதம் உருப்பெறும்போது அதில் நில அணு ஒன்று அமைந்தால் நீரணு முக்கால், நெருப்பு அரை, காற்று கால் எனும் அளவுகளில் பங்கு பெரும். இவற்றில் எது மிகுந்துள்ளதோ அதனால் அது பெயர் பெறும்.. இப்படியான வீதத்தில் அணுக்கள் செறிந்து அமையும் போதுதான் அவை நிலம் அல்லது நீர் என்பது போலப் பண்பு கொண்டிருக்கும். அதாவது நிலமாய் உறுதி பெறுதல் அல்லது நீராய் பள்ளம் நோக்கி ஓடுதல், நெருப்பாய்ச் சுடுதல், காற்றாய் வீசுதல் முதலான தொழில்களை அடைந்திடும்.

தெய்வ, ஞானக் கண்களை உடையோர் ஒவ்வோர் அணுவையும் கண்டறிவர். ஏனையோர் பூதமாய்த் திரண்டு நிற்பவற்றின் உண்மைகளை அறியார். கரும் பிறப்பு,, கருநீலப் பிறப்பு, பசும் பிறப்பு, செம் பிறப்பு, பொன்பிறப்பு, வெண் பிறப்பு என மக்கள் இவ் அறுவகைப் பிறப்பிலும் பிறந்து இறுதியாக அதி வெண்மையான பிறப்பில் பிறந்து வீடுபேறடைவர். தாம் துன்பமுற்று அழிந்து படுவதை விரும்பாதோர் வீடுபேற்றிற்கு உரியதான அதிவெண்பிறப்பில் பிறப்பதற்கு உரியோர் ஆவர். இதுவே ‘செம்போக்கு’ எனும் நன்னெறியாகும். இந்நெறியில் தவருற்றுத் துன்புற்றால் அதுவே ‘மண்டல’ நெறி என அறிதல் வேண்டும்.

ஆசீவகத்தின் பார்வையில் வீடுபேற்றுக்கான வழி இப்படியாக அறுவகைப் பிறப்புகளிலும் பிறந்து படிப்படியாக உயர வேண்டும் என்றாகிறது. இவ்வாறு பல்வகைப் பிறப்புகளுக்கும் நிறங்கூறுவது என்பது சீவக சிந்தாமணி முதலான சமணக் காப்பியங்களிலும் காணப்படுவதை வேங்கடசாமி நாட்டார் சுட்டிக் காட்டுகிறார். பெரியாழ்வாரும் வீடுபேற்றுக்குரியவர்களை ‘வெள்ளுயுர்’ எனக் குறிப்பிடுவதையும் சுட்டிக் காட்டுகிறார்.

இறுதியாக அந்த ஆசீவகன், “நற்பேறுகளைப் பெறுதலும், பெற்றவற்றை இழத்தலும், இடையூறுகள் நேர்தலும், பொருந்தும் இடத்தை அடைதலும், இன்பத்தையும் துன்பத்தையும் அடைதலும், பொருந்திய இடத்திலிருந்து நீங்கலும், பிறத்தலும், சாதலும் கரு உயிர்த்தபோதே உயிருடன் கலந்து விடும். இந்த இன்பமும், துன்பமும் ஆகிய இவையும் அணுவெனப்படும்.. முன்னுள்ள ஊழே பின் நல்லது கெட்டதற்குக் காரணமாகிறது. இதுதான் மற்கலி கோசகர் தன் நூலில் உரைத்துள்ளவையாம்” எனத்தன் ஆசிவக நெறியை மணிமேகலைக்கு உரைத்தான்.

கிட்டத்தட்ட இந்த அத்தியாயம் மணிமேகலைக் காப்பியத்தின் மொழியாக்கமாகவே அமைந்துள்ளது. சாத்தனாரின் காலத்தில் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வளமான தத்துவ விவாதங்கள் குறித்த சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள இது உதவும். சாங்கியம், பூதவாதம் முதலான மேலும் சில முக்கிய போக்குகளையும் அவற்றின் மீதான கருத்துக்களையும் தொடர்வோம்.

(அடுத்து நிகண்ட வாதம் சாங்கியம், வைசேடிகம், பூதவாதம் ஆகிய நெறியாளர்களின் கருத்துக்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.)

 

 

 

 

 

 

மணிமேகலை : துறவுக்குரிய ஏதுக்கள் முகிழத் தொடங்குகின்றன

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 9 

(தீராநதி, அக் 2017)

ஒரு மகா காப்பியத்திற்குரிய அத்தனை அணிகலன்களும், அழகுகளும் அமைய படைக்கப்பட்டுள்ள மணிமேகலை இன்னொரு பக்கம் அது எவ்வாறு முழுமையாக ஒரு பவுத்த மரபில் ஆக்கப்பட்ட படைப்பாக அமைகிறது என்பதைப் பார்த்துக் கொண்டுள்ளோம். மணிமேகலையின் கதை அமைப்பு மிகவும் சிக்கலானது. கோவலன் – மாதவி ஆகியோரின் ஒரே மகளான மணிமேகலை எவ்வாறு ஒரு பவுத்தத் துறவியாக மலர்கிறாள் என்பதை மையக் கருவாகக் கொண்ட கதை அமைப்பு, அத்தோடு ஒரு பதினாறு உட் கதைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கதைகளின் ஊடாக வாழ்வின் உண்மைகளையும், தத்துவங்களையும் விளக்கும் ஒரு மரபு இங்கு உண்டு. புத்தஜாதகக் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள் முதலியன சில எடுத்துக்காட்டுகள். மகாபாரதத்திலும் நாம் இதைக் காண இயலும். மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெறும் இந்தப் பதினாறு உட்கதைகளும் காப்பியத்தின் மையக் கதை ஓட்டத்திற்குக் குறைவு ஏற்படுத்தாமல் பவுத்த அறங்களை விளக்கும் பாங்கு இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

பவுத்தம் அது தோன்றிய காலத்திலிருந்து வைதீகத் தத்துவங்களையும் கோட்பாடுகளையும் எதிர் கொண்டு இயங்க வேண்டியதாக இருந்தது. புத்தருக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தமிழ் மண்ணில் மணிமேகலை உருவானபோது இந்திய அளவில் இந்த விவாதங்கள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன. வைதீகத்திற்கு ஒரு வலுவான மாற்றாக எல்லா அம்சங்களிலும் பவுத்தம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருந்த காலம் அது. காஞ்சிபுரம் அந்த வகையில் ஒரு முக்கியமான மையமாக அமைந்தது. பவுத்தம் வைதீகத்தை எதிர்கொண்டு மட்டுமல்ல தனக்குள்ளும் பல விவாதங்களை நிகழ்த்திக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருந்த காலம் அது. இந்தப் பின்னணியில் அமைந்த மணிமேகலை சிக்கலான பவுத்த தத்துவக் கோட்பாடுகளையும் தன் கதை ஓட்டத்தின் ஊடாகவே, காப்பிய நெறிக்கும் அழகுக்கும் சிறிதும் பங்கம் ஏற்படாமல் சொல்லிச் செல்லும் திறன் வியக்கத் தக்க ஒன்று.

மையக் கதை, பவுத்த சீலங்களை விளக்கும் பதினாறு உட்கதைகள், பவுத்தத்தின் சில தத்துவக் கோட்பாடுகள் என இந்த முன்றும் இணைந்து பொருந்தி அமையப்பட்ட ஒரு அழகிய ஆபரணமாக மணிமேகலை தமிழ் இலக்கிய மரபில் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. இந்த மூன்று கூறுகளும் காப்பிய அழகைச் சிதைக்காமல் முரணின்றிப் பின்னப்பட்டுள்ளதுதான் மணிமேகலைக் காப்பியத்தின் தனிச் சிறப்பு.

இந்தியத் தத்துவ மரபில் ஏதேனும் ஒரு பொதுவான கூறு உண்டெனில் அது ‘கர்ம’க் கோட்பாடுதான். பல்வேறு நுணுக்கமான வேறுபாடுகளுடன் இந்தியத் தத்துவங்கள் அனைத்தும் கர்ம வினைகளுக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் பிறந்து இந்தப் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடப்பதை வலியுறுத்துகின்றன. பிராமண மரபிற்கு எதிராக அமைந்த பவுத்தம், சமணம், ஆஜீவகம் முதலான சிரமண மரபுகளைப் பொருத்த மட்டில் துறவு என்பது இந்தப் போக்கில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மணிமேகலைக் காப்பியத்தின் இன்னொரு பெயர் ‘மணிமேகலை துறவு’ என்பது நினைவிற்குரியது. கணிகையர் குலத்தில் பிறந்த ஒரு இளம் பெண், பிறவியால் தொழிலும், வாழ்வும் நிர்ணயிக்கப்படும் ஒரு சமூக அமைப்பில் எவ்வாறு அந்தச் சமூக நியதியை வெல்வதோடு, எதிர்கொள்ளும் எல்லாத் தடைகளையும் கடந்து இறுதி உய்வின் ஒரு முக்கிய படியாகிய துறவு நிலையைச் சென்றடைகிறாள் என்பதைச் சொல்வதுதான் மனிமேகலைக் காப்பியத்தின் அடிப்[படை அமைப்பு.

பிறவிப் பெருங்கடலை அறுக்கும் இறுதி உய்விற்குரிய துறவு நிலை எய்துவதற்கு உரிய பொருத்தமான “காரணி”கள் அத் தகுதிக்குரியோரின் வாழ்வில் அவரவரின் வாழ்வுக்கேற்றவாறு தோன்றி, மலர்ந்து, முதிர்ச்சி அடையும் என்கிறது பவுத்தம். இந்த துறவுக்குரிய ‘காரணி’ என்பதற்கான பவுத்த தத்துவக் கருத்தாக்கம் சமஸ்கிருதம் மற்றும் பாலியில் ‘ஹேது’ எனப்படும். சாத்தனார் இதைத் தமிழ் மரபிற்கேற்ப ‘ஏது’ எனக் குறிப்பார். மணிமேகலைத் துறவுக்குரிய இந்த ஏதுக்கள் தோன்றி மலர்வது குறித்து ஒன்பது குறிப்புக்கள் மணிமேகலைக் காப்பியத்துள் அமைந்துள்ளன. காப்பியக் கதைப் போக்கின் ஊடாக இந்த ஏதுக்கள் எதிர்கொண்டு (எதிர்தல்), மணிமேகலையின் வாழ்வின் ஊடாக அவை நிகழ்ந்து (நிகழ்தல்), படிப்படியாக அவை முற்றிக் (முற்றுதல்) கனிவதைச் சொல்வதுதான் மணிமேகலைக் காப்பியம். துறவுக்குரிய இந்த நற்காரணிகள் மணிமேகலையின் வாழ்வில் எதிர்கொண்டு, மலர்ந்து  முற்றுவது எனும் வளர்ச்சிப் போக்கு காப்பியத்தின் கதை, பவுத்த சீலங்களை விளக்கும் உட்கதைகள், பவுத்த அடிப்படைத் தத்துவக் கோட்பாடு ஆகிய மூன்றையும் பிசிறின்றி இணைக்கிறது.

வைதீகம் கருமங்களை (அதாவது செயல்களை) “பாவம் X புண்ணியம்” எனப் பகுக்கும். பவுத்தம் கருமங்களை நல்ல நோக்கமுடையவை, கெட்ட நோக்கம் உடையவை என அவற்றின் நோக்கங்களின் அடிப்படையில் வேறுபடுத்திக் காட்டும். நல்ல நோக்கங்களுடன் அமைவன ‘குசல கம்மங்கள்’; ‘கம்மம்’ என்பது ‘கர்மம்’ எனும் வடமொழிச் சொல்லின் பாலி மொழி வடிவம். தீய நோக்கங்களுடன் அமைவன ‘அகுசல கம்மங்கள்’. குசல கம்மங்கள் என்பன கர்ம விளைவுகளிலிருந்து உங்களை விடுவித்து பிறவியற்ற இறுதி விடுதலையை நோக்கி நகர்த்தும். அப்படியான நல் நோக்கத்துடன் கூடிய செயல்களுக்குக் காரணியாக அமையும் நிகழ்வுகள் “குசலமூலம்” எனப்படும். இத்தகைய மூலம் அல்லது காரணி அல்லது நிகழ்வு என்பதே இங்கு ‘ஏது’ எனப்படுகிறது. இத்தகைய நிகழ்வுகளும் செயல்களும் பேரானந்தத்தை விளைவிப்பவை என்கிறது பவுத்தம்.

மீண்டும் மீண்டும் பிறத்தலுக்குக் காரணமான கர்மிய விளைவுகளை ஏற்படுத்தும் கம்மங்கள் அகுசல கம்மங்கள் எனப்படும். 1.ஆசை (லோபம்), 2.வெறுப்பு அல்லது பகை (தோஷம்), 3.மருள் அல்லது ஐயம் அல்லது தெளிவற்ற நிலை (மோகம்)’ ஆகியவற்றுக்குக் காரணமானவையே அகுசல கம்மங்கள். (பார்க்க: அ.மார்க்ஸ், புத்தம் சரணம், கருப்புப் பிரதிகள், பக். 74, 84). ஆசையின்மை (அலோபம்), வெறுப்பின்மை (அதோஷம்), ஐயமின்மை (அமோகம்) ஆகியவற்றுடன் செயலூக்கமுள்ள ஒரு வாழ்வை எதிர்கொள்வதே இறுதி விடுதலைக்கான வழி. அப்படியான விருப்பபூர்வமான செயலுக்கு (செய்கை அல்லது பாலி மொழியில் ‘சேதனா’) இட்டுச் செல்லும் ஏதுக்களை (காரணமாகும் நிகழ்வுகளை) நோக்கி இட்டுச் செல்பவர்களாக பவுத்த பிக்குவான அறவண அடிகள், மணிமேகலா தெய்வம் முதலானவர்கள் சாத்தனாரின் படைப்பில் பாத்திரங்களாக இடம் பெறுகின்றனர்.

என்ன செய்கிறோம் என்பதைக் காட்டிலும் என்ன நோக்கத்துடன் நமது செய்கைகள் உந்தப்படுகின்றன என்பதற்கும் ஐயமின்மை என்பதனூடாக ஆழ்ந்த புரிதல், அதற்குக் காரணமாகும் கல்வி ஆகியவற்றிற்கும் பவுத்தம் அளிக்கும் கூடுதல் முக்கியம் இங்கே கவனத்துக்குரியது.

புகார் நகரில் பிரும்மாண்டமான ஏற்பாடுகளுடன் கூடிய இந்திரவிழா அறிவிப்போடு காப்பியம் மொட்டவிழ்வதைக் கண்டோம். தீவகச் சாந்தியுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. விழா எனில் ஆடலும் பாடலும் அதனின்றும் பிரிக்க இயலாதவை. இது உலகெங்கிலும் ஒரு பொது இயல்பு. இந்தியத் துணைக் கண்டத்தைப் பொருத்த மட்டில் அனைத்தும் குலமரபாகப் பிரித்து ஒதுக்கப்பட்ட பின்னணியில் கணிகையர் குலத்தில் தோன்றிய அன்றைய புகழ்பெற்ற ஆடல் நாயகியான மாதவியின் நடனத்தை ஊர் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மாதவி மட்டுமல்ல அவளது அழகிய இளமகள் மணிமேகலையின் ஆட்டமும் இம்முறை விருந்தாக அமையும் என்கிற மக்களின் எதிர்பார்ப்புகள் பொய்க்கின்றன. மணிமேகலையோடு மாதவியும் வாராததைக் கண்டு மக்களைக் காட்டிலும் மாதவியின் தாய் சித்திராபதி தணியாத் துன்பம் அடைந்தாள் என்கிறார் சாத்தனார். செவ்வரியோடிய நீண்ட கண்களை உடைய தன் மகளின் உற்ற தோழியாகிய வயந்தமாலையை (வசந்தமாலை) அழைத்து மாதவியின் ஆட்டம் இல்லாமற் போனமைக்காக ஊர்தூற்றும் செய்தியை அவளிடம் சொல்லிவரப் பணிக்கிறாள்.

ஆடிய சாயல் அழகு மிக்க மாதவி வாடிய உடலுடனும் மகளுடனும் இருந்த மலர் மண்டபத்துக்குச் சென்று வயந்தமாலை இந்த ஊரலரை எடுத்துரைக்கிறாள். வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்தையும் சார்ந்த கூத்தும் பாட்டும், தூக்கும் துணிவும் என்கிற ஆடற் கலையின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றுத் துறைபோகிய பொற்றொடி எனப் பதினைந்து அழகான வரிகளில் மாதவியின் கல்விச் சிறப்பை இங்கு விதந்து முன்வைப்பார் சாத்தனார். குலத்தொழிலில் இத்தகைய வல்லுனளான நீ இப்படி தவக்கோலம் பூண்டு அமர்ந்துள்ளது வெட்கக் கேடு என முடிப்பாள் வயந்தமாலை. ஆம். நமது மரபில் கணிகையாய்ப் பிறந்தோர் அதற்குரிய வாழ்க்கை வாழ்வது வெட்கக்கேடான செயல்லல்ல. யாராயினும் அவர்கள் பிறவித் தொழிலைச் செய்யாதிருத்தலே நாணுடைத்து.

பவுத்தம் மேலோங்கி வளர்ந்து வந்த அந்தக் காலகட்டத்தில், துறவு நிலையும், துறவியரும் பெரிதும் மதிக்கப்பட்ட அக்காலத்தில் கணிகையர் இருவரைத் துறவுக்குரியோராய்ப் படைத்தது மட்டுமின்றி அதிலொருவளை பிறவிப் பெருங்கடகைக் கடக்கும் ஒளிபெற்றவளாய்ப் படைத்திருப்பதுதான் இந்தப் பவுத்தக் காப்பியத்தின் தனித்துவம். இரட்டைக் காப்பியங்களாகத் தமிழ் போற்றும் சிலம்பும் மணியும் இப்படியான எளிய மக்களையும், குற்றம் குறைகளுடையோரையும் காப்பியநாயகர்களாகக் கொள்வதை நாம் கவனத்தில் கொள்ளல் தகும். பவுத்தம் அங்குலிமாலன் போன்ற கொலைக்கஞ்சாத கள்வனுக்கும் புனித நிலை சாத்தியம் எனக் கொண்டாடும் ஒரு மதம்..

“காதற் கணவன் மறைந்தால் அவனது உடலோடு தீப்பாய வேண்டும் அல்லது கைம்மை நோன்பு பூண்டு காலம் கழிக்க வேண்டும். நான் கணவனை இழந்தவள்; கணவனுக்கு நேர்ந்த அநீதியைப் பொறாது தன் முலை திருகி எறிந்து மதுரையை அழலுக்கு இரையாக்கிய மாபெரும் பத்தினியின் மகள் மணிமேகலை. அவள் இந்தத் திருந்தாச் ‘செய்கை’ தீத்தொழிற் படாள் எனப் போய்ச் சொல்” என வயந்தமாலையைத் திருப்பி அனுப்பும் மாதவி, தான் மாதவராம் அறவண அடிகளின் உறைவிடம் சென்று அவரது வழிகாட்டலில் பவுத்த சீலங்கள் ஐந்தையும் ஏற்றுக் கொண்டுள்ளதையும் கூறுவாள்.

தான் ஒருவேளை பத்தினி என்கிற பிறப்பிற்குரியவளாக இல்லாதிருக்கலாம்; ஆனால் தந்தையின் பத்தினி என்கிற வகையில் கண்ணகி மணிமேகலையின் தாயாகிறாள். எனில் அவளும் எப்படி இத் தீத்தொழிற்குரியவள் ஆவாள் என்றொரு நியாயத்தையும் மாதவி முன்வைக்கிறாள்.

ஆனால் மறச்செயல்கள் அனைத்தையும் நீத்தவரும் மாசறு கேள்வி ஞானத்திற் சிறந்தவருமான அறவண அடிகளார் இந்தப் பிறவி நியாயங்களை எல்லாம் யோசித்தார் இல்லை. மாசறு மாதவன் தாள் பணிந்து ஐவகைச் சீலங்களையும் ஏற்போர் யார்க்கும் உய்வுண்டு என அவர்களை ஏற்றுக் கொண்டார். ஆடற்கலைக்கு அது பேரிழப்பாக இருக்கலாம். ஆனால் அவர்கள் தேர்ந்த பாதை சிறைக்கோட்டங்களை அறக்கோட்டங்கள் ஆக்கப் போகிறது. எத்தனையோ பேர்களின் பசித்துயர் களையப் போகிறது. பிறவியின் பெயரால் அவர்கள் அந்த வாய்ப்புகளை இழந்திருப்பின் அது அவர்களுக்கு மட்டுமா இழப்பு?

மாதவி சொன்னதைக் கேட்டு வயந்தமாலை வந்த வழியே திருப்பிச் சென்றபோது அந்த வனத்தில் மாதவி, மணிமேகலை அவள் தோழி சுதமதி ஆகிய  மூவரும் அம் மண்டபத்தில் அமர்ந்து பூசைக்குரிய மாலையைத் தொடுத்துக் கொண்டிருந்தனர்.

இந்தக் கணத்தில்தான் மணிமேகலையின் துறவுக்குரிய அந்த முதல் ஏது நிகழ்ந்தது.

தன் தாய்க்கும் வயந்தமாலைக்கும் இடையில் நடந்த அந்த உரையாடலைச் செவிமடுத்திருந்த மணிமேகலையின் கண்களிலிருந்து கசிந்த நீர்த் துளிகள் அந்தப் பூக்களில் சிந்தி பூசைக்குரிய அவற்றின் புனிதம் அழிந்தது. அதுவே அந்த முதல் ஏது நிகழக் காரணமாகவும் அமைந்தது. தனது முற்பிறவிகள் சார்ந்த கர்மிய வினைப்பயன்களை அந்தச் சிறுபெண் எதிர்கொள்ளத் தொடங்கினால். அவற்றை அவள் எவ்வாறு எதிர்கொள்கிறாள் என்பதைப் பொறுத்து அவளின் எதிர்காலம் அமையப் போகிறது.

“வயந்த மாலைக்கு மாதவி உரைத்த

உயங்குநோய் வருத்தத்து உரைமுன் தோன்றி

மாமலர் நாற்றம்போன் மணி மேகலைக்கு

ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள தாகலின்…”

என்பார் சாத்தனார். தந்தை மற்றும் இன்னொரு தாயான கண்ணகி ஆகியோரின் சோக முடிவுகள், பெற்ற அன்னை தவக்கோலம் பூண்டது, தன்னையும் அவள் அவ்வழியே திருப்பத் துணிவுகொண்டது முதலான  செய்திகள் மணிமேகலை துறவு மேற்கொள்வதற்கான ஏதுவாக அமைந்தது.

மகளின் கண்ணீரைத் துடைத்த மாதவி, பூசைக்குரிய புது மாலை தொடுக்க மீண்டும் உவவனம் சென்று பூக்கொய்துவரக் கோரினாள். தனியே செல்ல வேண்டாம் நானும் போகிறேன் என சுதமதியும் உடன்சென்றாள். ஊர்வழியே நடைபயின்று சென்றுகொண்டிருந்த அவர்களைப் பலரும் கண்ணுறுகின்றனர்.

அப்போது மதம் கொண்ட யானை ஒன்றை யாவரும் வியக்க அடக்கித் தேரில் வருகிறான இளவரசன் உதயகுமாரன். மணிமேகலை மலர்கொய்ய உவவனம் பக்கல் சென்றிருப்பதை அறிந்து அவளைத் தேரில் ஏற்றிக் கொணர்வேன் எனக் கூறி அவளிருக்கும் இடம் நோக்கி தேரைப் பாய்ச்சுகிறான். தேரொலி கேட்டு மருண்ட மணிமேகலை, அவன் தன் மீது மோகம் கொண்டிருப்பதை முன்னரே அறிந்தவள். அஞ்சி பளிக்கறையினுள் புகுந்த அவளை மணிமேகலா தெய்வம் தோன்றிக் காப்பாற்றி, மணிபல்லவத் தீவில் கொண்டு வைக்கிறது. அங்கே அவள் முற்பிறப்பு உணர்த்தப்படுகிறாள். புத்தபீடிகையை வணங்கும் பேறு பெறுகிறாள். கோமுகிப் பொய்கை அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியை அவளுக்கு அளிக்கிறது. ஆகா, எத்தனை வேகமாக நிகழ்ச்சிகள் நகர்கின்றன. அந்தச் சிறுபெண்தான் அடுத்தடுத்து என்னென்ன மாதிரியான அனுபவங்களை எல்லாம் எதிர் கொள்ள நேர்கிறது.

(அடுத்த இதழில் ஏதுக்கள் மலர்ந்து, முதிர்ந்து மணிமேகலை துறவேற்றல்)