மார்க்சியமும் பௌத்தமும் : புத்தர் நாகார்ஜுனர் மார்க்ஸ் தலாய்லாமா

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்  32                       

புத்தர் மிகப்பெரிய தத்துவ விசாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. அன்று கங்கைச் சமவெளியில் நடந்துகொண்டிருந்த பல்வேறு தத்துவப் போக்குகள் மற்றும் அவற்றின் மூலம் எழுப்பப்படும் கேள்விகள் ஆகியவற்றிற்கு புத்தர் உரிய முக்கியத்துவம் அளித்து அவற்றை எதிர்கொள்ளவில்லை என்கிற விமர்சனத்தை அவர் மீது அவரது சீடர்கள் வைத்ததையும் இத் தொடரில் முன்பொருமுறை கண்டோம்.

எனினும் புத்தருக்குப் பிந்திய ஆறேழு நூற்றாண்டுகளில் பௌத்த தர்க்கம் அதற்கே உரிய தனித்துவத்துடன் பிற இந்தியத் தத்துவங்களை எதிர்கொண்டது. அதில் காஞ்சி நகரை மையமாகக் கொண்டு இயங்கிய தமிழ் பௌத்த அறிஞர்களின் பங்கு மிக முக்கியமானது என்பது மட்டுமல்ல அவை பிற இந்தியப் போக்குகளிலிருந்து மட்டுமல்லாது அரிஸ்டாட்லியப் பாரம்பரியத்தில் வந்த மேலைத் தத்துவ மரபிலிருந்தும் வேறுபட்டுத் தனித்துவத்துடன் விளங்கிய ஒன்று அது குறித்துச் சற்றுச் சுருக்கமாகப் பார்க்கலாம்,

இன்று பௌத்த தத்துவம் அதற்குறிய தனித்துவத்துடன் உலகின் முக்கிய தத்துவப் போக்குகளில் ஒன்றாக விளங்குகிறது, அதன் தனித்துவத்தை நவீன சிந்தனையாளர்களான லெவி ஸ்ட்ராஸ் வரை அங்கீகரிக்கின்றனர். மேலைத் தத்துவங்கள் ஆனைத்தும் அரிஸ்டாட்டலியப் பாரம்பரியத்தில் வந்தவை. அதில் ஒரு முக்கிய இடையீடாக உருப்பெற்றது மார்க்சீயம்தான். இதைச் சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.

b 3

அரிஸ்டாட்டலியப் பாரம்பரியத்தில் – அமைப்பியல் தொடங்கி பின் நவீனம் வரை இன்று ஏற்படுத்தியுள்ள மிகப் பெரிய அதிரடி மாற்றங்களைச் சற்றே ஒதுக்கிவைத்துப் பார்த்தால் – இதுவரை மேலைத் தத்துவமாக அறியப்பட்டவை “முரண்பாடு” (contradiction) என்பதை ஒரு தத்துவார்த்தக் கருத்தாக்கமாக ஏற்றதில்லை. சரியாகச் சொல்வதானால் முரண்பாடுகளின் இருப்பை அரிஸ்டாட்டில் தொடங்கி மேலைத் தர்க்கப் (logic) பாரம்பரியம் அங்கீகரிப்பதில்லை. எந்த ஒரு கூற்றும் (statement) “உண்டு” அல்லது “இல்லை” என்கிற இருமை எதிர்வுக்குள் (binary opposition) அடங்க வேண்டும். எந்தக் கூற்றும் ஒன்று “சரி” யாக இருக்க வேண்டும் அல்லது “தவறு” ஆக இருக்க வேண்டும். ஏதொன்றும் இந்த இரண்டுக்கும் இடையில் – ஒரே நேரத்தில் சரியானதாகவும் தவறானதாகவும்- இருக்கும் வாய்ப்பை எதிரொலிப்பதாக அமையக் கூடாது. முரண்பாடுகளுக்கு இடமற்றதாகவே எந்த ஒரு கூற்றும் அமைய வேண்டும். முரண்பாடுகளுக்கு இடையில் மூன்றாவதாக ஏதொன்றும் இருக்க முடியாது என்பதை “இடைப்பட்ட ஒன்றை ஏற்க மறுக்கும் கோட்பாடு” (Principle of Excluded Middle) என மேலைத் தத்துவத்தில் குறிப்பர். மூன்றாவதற்கு இடமில்லை (tertium non datur) என இடைப்பட்ட இருப்பு பறந்தள்ளப்படும். அதோ அந்த மலையிலிருந்து புகை வருகிறது என்றால் மேலைத் தத்துவ அடிப்படைகளின்படி அங்கே நெருப்பு இருக்க வேண்டும் என்பதே சரியான கூற்று. வேறு சாத்தியம் ஏற்கப்படுவதில்லை. பௌத்தம் இதை ஏற்பதில்லை. இதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பௌத்தத் தத்துவப் போக்குகளில் ஒன்றான நாகார்ஜுனரின் (கி.பி150 – 250) “மாத்யமிகா” அணுகல் முறையில் (மகாயன பௌத்த மரபு) முன்வைக்கப்படும் “நான்கு மூலைகள்” (சதுஷ்கோடி) எனும் கருத்தாக்கம் இங்கே கருதத்தக்கது. “உண்மை”, “பொய்” என்கிற இரண்டிற்கும் அப்பால் ஏதேனும் ஒன்று ஒரே நேரத்தில் “உண்மையாகவும் பொய்யாகவும்” இருக்க முடியும் என்பது மட்டுமல்ல “உண்மையாகவும் இல்லாமல், பொய்யாகவும் இல்லாமலும்” கூட ஒன்று இருக்க முடியும் என்றார் அவர். இந்த நான்கு சாத்தியங்களுக்கும் நாகார்ஜுனரின் தத்துவம் இடமளிக்கிறது. மேலைத் தத்துவங்களில் காண இயலாத தனித்துவம் இது..

எடுத்துக்காட்டாக “ அதோ அந்த மலையிலிருந்து புகை வருகிறது” எனும் கூற்றைச் சொல்வார்கள். புகை இருந்தால் நெருப்பிருக்கும் என்பதாக மட்டுமே கொண்டு ஏதேனும் ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது. வேறு சாத்தியங்களும் உண்டு.

எல்லாவற்றையும் ஆம் / இல்லை என்கிற இரட்டை எதிர்விற்குள் (binary oppositions) அடக்கிவிட முடியாது. இரண்டிற்கும் இடைப்பட்ட சாத்தியங்கள் உண்டு என்பதை நவீன இயற்பியலும் (physics) ஏற்கிறது, ஐன்ஸ்டினில் சார்பியல் கோட்பாடு (Relativity Theory), டீ ப்ராக்லியின் பொருட்களின் இரட்டைப் பண்பு குறித்த கோட்பாடு (Dual Nature of Matter), ஹெய்சன்பர்கின் உறுதியின்மைக் கோட்பாடு (Uncertainty Principle) முதலியன இத்தகைய ஆம் / இல்லை எனும் இரட்டை எதிர்வுகளைச் சென்ற நூற்றாண்டில் நொறுக்கித் துவம்சமாக்கியதை நான் எனது பின்நவீனத்துவம் குறித்த கட்டுரைகளில் விரிவாக விளக்கியுள்ளேன்,

மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வருவோம். இந்த வகையில் பௌத்தம் மேலைத் தத்துவங்களைப் போல அல்லாமல் முரண்பாடுகளைத் தீண்டத் தகாதவையாகப் புறம் தள்ளுவதில்லை. முரண்பாடுகளை அது ஏற்கிறது.

இங்கேதான் மார்க்சியம் முரண்பாடுகளுக்குக் கொடுத்த முக்கியத்துவம் நம் நெஞ்சில் உறைக்கிறது. எல்லாவற்றுக்குள்ளும் முரண்பாடுகள் இருக்கும். முரண்பாடுகளுக்குள் மோதல் இருக்கும். மோதல்களின் ஊடாகவே சமூக இயக்கம் சாத்தியமாகும் என்பதுதான் மார்க்சீய இயங்கியலின் அடிப்படை.

மேலைச் சிந்தனையில் பெரும்புரட்சியை ஏற்படுத்திய ‘பின் அமைப்பியல்’ மற்றும் ‘பின் நவீனத்துவ’ கருத்துக்களை விளக்க முயலுவோர் க்ளாட் லெவி ஸ்ட்ராசிலிருந்துதான் தொடங்குவர். அவர் , “மார்க்சியமும் புத்திசமும் ஒரே காரியத்தைத்தான் செய்கின்றன. ஆனால் வெவ்வேறு மட்டங்களில் (Marxism and Buddhism are doing the same thing, but at different levels) எனக் கூறியது (1955) குறிப்பிடத் தக்கது.

பௌத்தத் தரப்பிலிருந்தும் இது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. திபெத்தின் 14வது தலாய்லாமா வணக்கத்துக்குரிய டென்சின் கியாஸ்டோ,marx-bud

“நவீன பொருளாதாரக் கோட்பாடுகள் எல்லாவற்றிலும் மார்க்சியம் மட்டுமே அற அடிப்படையில் அமைந்த ஒன்று. முதலாளியத்தைப் பொருத்தமட்டில் லாபம் மற்றும் லாபத்தை ஈட்டும் வழிகள் மட்டுமே முக்கியம்… சோவியத் யூனியனின் வீழ்ச்சி என்பது என்னைப் பொருத்தமட்டில் அது மார்க்சியத்திற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. அது எதேசாதிகாரத்தின் (totalitarianism) தோல்வி மட்டுமே. இந்தக் காரணத்தால்தான் நான் இன்னும் என்னை ஒரு அரை மார்க்சிஸ்ட் – அரை புத்திஸ்ட் எனச் சொல்லிக் கொள்கிறேன்”

என சோவியத் வீழ்ச்சியை மார்க்சியத்தில் தோல்வியாக முன்வைத்து பேசப்பட்ட சொல்லாடல்களின் போது (1993) கூறியது குறிப்பிட்டத் தக்கது.

வணக்கத்துக்குரிய டென்சின் கியாஸ்டோ அவர்கள் அத்தோடு நிறுத்தவில்லை. தொடர்ந்து அவர், “பௌத்தம் எதை மனிதர்களுக்கான பேரின்பத்தின் உச்சம் எனச் சொல்கிறதோ அந்தச் சூன்ய நிலையில் (state of nothingness) மனதை வைத்துக்கொண்டு மேலும் கீழுமாக நடந்து கொண்டுள்ள ஒரு ‘வாக்கிங் ஸ்டிக்’ போல நான் ஆகிவிட்டேன்” என கார்ல் மார்க்ஸ் ஒருமுறை கூறியுள்ளதையும் மேற்கோள் காட்டினார்.

மார்க்சியம் தோழிலாளி வர்க்கம் X முதலாளிவர்க்கம் என்கிற முரண்பாடுகளை முன் வைப்பதோடு நிறுத்திவிடுவது இல்லை. இரண்டுக்கும் இடையிலான முரண்பாடுகளின் இருப்பை அது ஏற்றுக் கொள்கிறது. சொல்லப்போனால் அதற்கு அது அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதோடு நிறுத்திவிடாமல் அந்த முரண்பாடுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை அது அதிகம் பேசுகிறது.

நல்லது X கெட்டது, சரி X தவறு, எதிரி X நண்பன், ஆண் X பெண், இந்து X முஸ்லிம் முதலான இரட்டை எதிர்வுகள் (binary oppositions) மூலமாகவே உலகைப் பார்ப்பது வன்முறை மட்டுமல்ல. அது உலகைப் புரிந்து கொள்வதற்கான வழிமுறை அல்ல என்பது ஆக முக்கியம்.

மார்க்ஸ் மேலைத் தத்துவ மரபுகளில் ஒன்றான ஹெகலிய மரபில் வந்தவர்தான் என்ற போதிலும் அவர் “ஹெகலைத் தலைகீழாகக் கவிழ்த்தவர்” என அறிஞர்களால் வகைப்படுத்தப்பட்டவர். அந்த வகையில் அவரது சிந்தனைகள் அவருக்குப் பின் வந்த இன்றைய நவீன சிந்தனைகளுக்கு மிக நெருக்கமானவை.

புத்தருக்கும் நாகார்ஜுனருக்கும் இடையில் சுமார் 750 ஆண்டு கால இடைவெளி உள்ளது. புத்தருக்கும் தின்னாகர், தருமகீர்த்தி ஆகியோருக்கும் இடையில் ஓராயிரம் ஆண்டு காலம் ஓடி விடுகிறது. இடையில் பௌத்தத்தில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து விடுகின்றன. கடவுளின் இருப்பை மறுத்தவர் புத்தர். பின்னவர்கள் புத்தரே கடவுளாக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள். இந்த வேறுபாடுகள் இருந்தபோதும் பின்னாளில் வளர்ந்தெழுந்த பௌத்த தர்க்கம் புத்தரின் அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுவிடவில்லை. வைதீகத் தத்துவங்களிலிருந்து அது முரண்பட்டே வந்தது. எல்லாம் இயக்கத்தில் உள்ளது என்கிற பௌத்த அடிப்படையை அது துறக்கவில்லை. இங்கு பேசப்படும் இருமை எதிர்வு என்பதும் கூட புத்தர் உரைத்த ‘ஓடிக் கொண்டிருக்கும் நீரில் இந்தக் கணத்தில் இருக்கும் நீர்த்துளி அடுத்த கணத்தில் இருப்பதில்லை’ எனும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் உருவானதுதான்.

இந்தப் பின்னணியோடு நாம் மணிமேகலைக்குத் திரும்புவோம். ஒரு முக்கிய தத்துவ விசாரங்களின் மையமாக காஞ்சி உருப்பெற்றுக் கொண்டிருந்த தொடக்கத்தில் இயற்றப்பட்டது மனிமேகலை. பௌத்த தர்க்கப் போக்கை உருவாக்கியவர்களில் ஒருவரான தின்னாகர்தான் சாத்தனாரின் கைவண்னத்தில் அறவண அடிகளாக இடம்பெறுகிறார் என்றொரு கருத்தும் உண்டு.

நூல் குறித்த ஒரு முன்னுரைப்பாக அமைகிறது மணிமேகலையின் பதிகம். இதனைக் “கதை பொதி பாட்டு” எனக் கூறுவதும் உண்டு. அதாவது நூலின் அமைவு, கதைப்போக்கு ஆகியவற்றைச் சுருக்கமாக அறிமுகம் செய்யும் பகுதி இது. அன்று விளங்கிய பல தத்துவப் போக்குகளையும் ஒரு ஆணைப் போல பொய் உருக் கொண்டு கேட்டறிந்த மணிமேகலை அப்பொய்யுருவைக் களைந்து ஒரு தவமுனியாய் வடிவு கொண்டு அறவணரின் பாதத்தை வணங்கி தரும நெறிகளைக் கேட்கலானாள் என காவியத்தின் இறுதிப் பகுதி குறித்துக் கூறுகிறது இப்பதிகம். “மணிமேகலை துறவு” எனும் இக்காவியம் முப்பது பாட்டுக்களாக அமைக்கப்பெற்றது எனவும், பெரும் வண்மை மிக்க தமிழ்த்திறம் கொண்டதாக இதனை ஆக்கியவர் வளம்மிக்க தானிய வணிகரான  சாத்தனார் எனவும், அவர் கூற இளங்கோ அடிகள் அருள்கூர்ந்து அதனைக் கேட்டதாகவும் கூறும்.

இவ்வாறு நூற்பாயிரம் மணிமேகலைக் காவியத்தை “மணிமேகலை துறவு” எனக் கூறுவது கவனத்துக்குரியது. நீலகேசி உரையிலும் இக்காவியம் பற்றி இவ்வாறே ஒரு குறிப்பு உண்டு. காவியம் என்பதற்கான பொருள் (subject matter) குறித்து விளக்கும்போது அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு நிலைகளையும் அது தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும் என இந்தியக் காவிய மரபு வகுப்பதை அறிவோம். பல்வேறு வகைகளில் தனித்துவம் மிக்கதாக விளங்கும் இன்னொரு முக்கிய தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம், காப்பியம் உரைக்க வேண்டிய இறுதி நிலையாகிய “துறவு” என்பதில் முடிவதில்லை. மணிமேகலையோ ஒரு வகையில்  மாதவியின் துறவோடு தொடங்குகிறது. மணிமேகலை எனும் சிறுபெண், பல்வேறு இடர்ப்பாடுகளை எல்லாம் தாண்டி, துறவுக்குரிய ஏதுக்களை எல்லாம் அடைந்து முற்றிக் கனிந்து துறவு நிலை அடையும் வரலாற்றைச் சொல்வது. அந்த வகையில் இந்த இரு காப்பியங்களையும் ஒரு சேரக் கொண்டு அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு நிலைகளையும் அகத்தே கொண்ட இரட்டைக் காப்பியங்களாகக் குறிப்பதுண்டு.

சிலப்பதிகாரத்தின் அடைக்கலக் காதையில் கோவலன் மாடலனிடம் தான் கண்ட தீய கனவொன்றைச் சொல்வான். “பெருநகர் ஒன்றில் கீழ்மகன் ஒருவானால் கண்ணகி நடுங்கித் துயருறும் நிலை ஏற்படுகிறது. நான் ஆடையின்றி எருமை ஒன்றின் மீது ஊர்ந்து செல்கிறேன். அதன் பின் என் அழகிய மனைவியோடு பிறப்பறுத்தார் பெறும் பேறை அடைகிறேன். பின்னர் காமக் கடவுள் வெறுத்துப் போய்த் தன் மலரம்புகளை எறிந்துவிட்டு கையறுநிலை அடைந்து ஏங்கும் வண்ணம் அணிதிகழும் போதி அறவோனிடம் மாதவி மணிமேகலையை அடைக்கலமாக்குகிறாள்…” (சிலம்பு 15: 95 -105) எனக் கண்ட கனவின் ஊடாக மணிமேகலை பௌத்த துறவி ஆவாள் என்பதைச் சொல்வான். இதன் ஊடாக இளங்கோ அடிகள் இரு காப்பியங்களையும் இணைத்து அறம்,பொருள், இன்பம், வீடு எனும் நான்கு புருடார்த்தங்களும் தோன்றப் பெறும் இரட்டைக் காப்பியங்களாக முன்னிறுத்துவதாகவும், இரண்டு காப்பியங்களையும் இப்படி ஒன்றாக இணைத்துப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் இளங்கோ அடிகளுக்கே இருந்தது எனவும் இதற்கு விளக்கமளிப்பதுண்டு (Dr,S.Krishnaswami Iyangar,. Manimekalai in its Historical Settings).

(அடுத்து மணிமேகலை அறவணரிடம் தருமங்கேட்டு பவத்திறம் நோற்ற வரலாறு)

 

“அறிவு உண்டாக”- என ஆங்கவன் வாழ்த்தினன்

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 22 , தீராநதி, நவம்பர் 2018                         

மணிமேகலையின் கதை அமைப்பு சற்றுச் சிக்கலானது. ஆங்காங்கு பவுத்த அறங்களைக் காப்பியத்தின் கதைப் போக்கில் பொருத்தமாய்ப் பதிக்க வேண்டியது இப்படிக் கதை அமைப்பு சிக்கலாவதில் ஒரு பங்கு வகிக்கிறது. சோழ அரசன் கிள்ளிவளவன் நாக நாட்டு இளவரசி பீலிவளையுடன் கொண்ட காதற் கதையை சித்திராபதி சொல்வதன் நோக்கம் மணிமேகலையை சிறையிலிருந்து மீட்டு அழைத்துச் செல்வதே. கடலை ஆளும் மணிமேகலா தெய்வத்தின் வலிமையைச் சொல்வதற்கு அவள் இங்கே இந்த வரலாற்றைச் சொல்கிறாள். அப்போது பூம்புகார் அழியவில்லை. ஆனால் தீவகச் சாந்தி செய்யாவிட்டால் மணிமேகலா தெய்வம் கோபம் கொள்ளும். நகரம்  கடல் வயிறு புக நேரும் என்றொரு சாபம் இருக்கிறது. அதன் விளைவாக மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் அத் தெய்வத்தின் பெயர் தாங்கிய தன் பேத்தியைச் சிறையில் இட்டுத் துயரில் ஆழ்த்தினால் அதை அத் தெய்வம் பொறுக்காது என வெளிப்படையாகவே சொல்லி விடுகிறாள் சித்திராபதி.

அரசி அதற்குத் தக்க பதிலைச் சொல்லிவரும் நேரத்தில்தான் அறவணரும் மாதவியும் மணிமேகலையை மீட்க அங்கு வருகின்றனர். அடிகளைக் கண்டதும் அரசியும் அவள் ஆயச் சுற்றமும், சித்திராபதி உள்ளிட்ட அனைவரும் எழுந்து நிற்கின்றனர். வீழ்ந்து வணங்கிய அரசியை அறவணர், “அறிவு உண்டாக” என வாழ்த்துகிறார்.

“பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு” வாழ்க என்றெல்லாம் அம் மாதவர் வாழ்த்தவில்லை. அறிவு உண்டாக என மட்டுமே அவர் வாழ்த்துகிறார். பவுத்தம் துறவை மட்டும் போதிக்கும் மதமல்ல, திறன் சாரந்த வாழ்வு என்பதையும் அது வலியுறுத்துகிறது, அறன் சார்ந்த வாழ்வே திறன் சார்ந்த வாழ்வாகவும் இருக்க முடியும் என்பதையும் அது முன்வைக்கிறது.  புத்தரின் இறுதி நேரத்தில் அவரோடு இருக்க வாய்த்த அடியார்கள் அவரிடம் இறுதியாய் எங்களுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என வினவும்போது அவர், “புதிதாய் என்ன சொல்லப் போகிறேன். உனக்கு நீயே விளக்கு” என்றுதான் கூறுகிறார். தனது போதனைகளே உங்கள் வழிகாட்டி எனக் கூட அவர் சொல்லவில்லை. தனது போதனைகளையும் கூட அவரைப் பின்பற்றுபவர்கள் சிந்திப்பதற்கான ஒரு பொருள் என்றே அவர் முன்வைத்தார். ‘உபய கவுசல்ய’ என்பது ஒரு பவுத்தக் கருத்தாக்கம். அதாவது சூழலுக்குத் தகுந்த உபாயம். அவ்வப்போது எதிர் கொள்ளும் சூழலுக்குத் தக அவர்கள் தங்கள் அறிவின் துணை கொண்டு அறத்தின் வழி நின்று உபாயங்களைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். மற்றபடி இறைவனை வேண்டியோ, புனித நீராடியோ, நல்ல நேரம் பார்த்தோ, விரதம் இருந்தோ, புனித யாத்திரை சென்றோ வாழ்வில் வெற்றி பெற இயலாது. அப்படி வாழ்வது அறம் சார்ந்த வாழ்வாகாது.

புத்தர் காட்டும் எண்வழிப் பாதை ‘சம்மா திட்டி’ எனத் தொடங்கும். அதாவது சரியான பார்வை. தொடர்ந்து சரியான நோக்கம், சரியான நடத்தை சரியான பேச்சு, சரியான வாழ்முறை, சரியான முனைப்பு, சரியான ஓர்மை, சரியான தியானம் என முடியும். இதிலிருந்து என்ன புரிந்து கொள்கிறோம்? எது சரியான பாதை என பவுத்தம் சொல்லவில்லை. பின் நாம் அதை எப்படித் தேர்வு செய்வது? எது குறித்தும் நமக்கு சரியான பார்வை என்பது அவ்வப்போது எதிர்கொள்ளும் சூழலுக்குத் தக அறவழியில் அறிவைப் பயன்படுத்திக் காண்பதே. இதுவே புத்தர் அருளிய வழிகாட்டல். ‘சரியான’ என்பதை right எனப் பொருள் கொள்வதைக் காட்டிலும் correct, perfect  எனப் பொருள் கொள்ள வேண்டும். பவுத்தம் ஒரு மதமல்ல. புத்த பகவன் ஒரு தத்துவவாதியோ, சடங்குகள் மற்றும் கோட்பாடுகளுடன் ஒரு மதத்தை உருவாக்கியவரோ  இல்லை என்றெல்லாம் சொல்வதன் பொருள் இதுவே.

அப்படியாயின் ‘இறுதி உண்மை’ என எதுவும் இல்லையா? பௌத்தம் அதைத்தான் ‘நிர்வாண நிலை’ என்கிறது. இவ்வுலக வாழ்வை வெறும் மாயை என அது மறுக்கவில்லை. மாறிக்கொண்டே இருக்கும் இவ்வுலகின் விதிகளையும், அவை குறித்த உண்மைகளையும் அது ஏற்றுக் கொள்கிறது.. மற்ற அனைத்து மதங்களும் விஞ்ஞான முடிவுகளை ஏற்காத நிலையில் பவுத்தம் அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளையும் ஏற்றுக் கொண்டது. கிரகங்களின் நிலையை வைத்து எதிர்காலத்தைச் சொல்ல இயலும் என்கிற கருத்தை புத்தர் அளவிற்கு வன்மையாகக் கண்டித்தவர் யாருமில்லை.  இந்த phenomenal world ன் விதிகளாகவும் உண்மைகளாகவும் அறிவியல் கோட்பாடுகளை அவர் அங்கீகரித்தார்.
ஆனால் இவை ஒப்பீட்டளவிலானவை. நமது அறிதல், அளவுகோல்கள், கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையிலானவையே இந்த அறிவியல் உண்மைகள்.. அந்த அளவிற்கு அவை உண்மையானவை. அதே நேரத்தில் அந்த வகையில் அவை ஒப்பீட்டளவிலானவையும் கூட. பொருள்களை உங்களின் கருத்துக்கள், முன் முடிவுகளின் அடிப்படையில் அணுகி நீங்கள் அடையும் முடிவுகள் அவை. அதையும் கூட அறிவியல் பிற்காலத்தில் ஏற்றுக் கொண்டது. எல்லாம் சார்பானவையே; எதுவும் முற்றுண்மையானவை அல்ல என்பதுதானே ஐன்ஸ்டினின் கோட்பாடு.
ஆனால் எதையும் அதன் இயல்பில் அறிந்து கொள்வதற்கு (nominal truth) எல்லாவற்றையும் முற்றுண்மையானது  என அணுகும் பார்வை தடையாகிறது.  nominal truth ஐ அறிந்துகொள்ள வழி என்ன? எந்த முன்முடிவுகளும், நம்பிக்கைகளும், அறிதலும் அற்ற நிலை அடைவதுதான். அதைத்தான் புத்த பகவன் ‘நிர்வாண நிலை’ என்றார். அதுவே ஒளிபெற்ற நிலை. intuition, ப்ரக்ஞை, “பன்னா”.

எல்லா அறிதல்களிலிருந்தும் விடுதலை என்பதன் பொருள் இதுவே. அப்படித் துறக்க வேண்டியவற்றுள் புத்தர் தன்னுடைய சிந்தனைகளையும் கூட உள்ளடக்கினார். இப்படிக் கோட்பாடுகளையும் வழிமுறைகளையும் எப்போதும் சுமந்து திரிபவர்களை அவர் நதியைக் கடக்கத் தயாரித்த மரத் தெப்பத்தை நதியைக் கடந்தபின்னும் தலையில் சுமந்து வரும் மூடத் தனத்துடன் ஒப்பிட்டார் (மஜ்ஜிம நிகாயம், அலகத்தூபம சுத்தம்). மரணப்படுக்கையிலும் அவர்  சொன்னாரே: “உனக்கு நீயே விளக்கு..”

அறிவைப் போற்றிய பவுத்தம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது. இந்தியாவில் உருவான நாளந்தா, தட்சசீலம், விக்ரம சீலம், வல்லபி, புஷ்பகிரி, சோமபுரி மகாவிகாரை முதலான பல்கlலைக் கழகங்கள் யாவும் பவுத்தம் உருவாக்கியவை என்பது நினைவுக்குரியது. இன்றைய ‘பல்கலைக்கழகங்களுக்கு’ ஒரு தொன்ம மாதிரிகளாக அவை இருந்தன. வைதீக குருகுலக் கல்வி முறையிலிருந்து அது பலவகைகளில் வேறுபட்டது. ஒற்றை ஆசிரியரிடம் அவரது இருப்பிடம் சென்று, பணிவிடைகள் மேற்கொண்டு அவர் அறிந்தவற்றை மட்டுமே கற்றுக் கொள்ளும் குருகுல முறை கடுமையான வருண நெறிகளுக்கு ஆட்பட்டிருந்ததை நாம் ஏகலைவன் வரலாற்றிலிருந்து அறிகிறோம். பவுத்த பல்கலைக் கழகங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு கலைகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஓரிடத்தில் குவிந்து, பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களுக்குப் பலவற்றையும் கற்றுத் தரும் முறை அது. வருண வேறுபாடுகளுக்கு அங்கு இடமில்லை.

விஹாரைகளில் கற்றுக் கொடுக்கப்பட்டவை என்றால் பௌத்த மதக் கல்வியாக மட்டும்தானே இருக்கமுடியும் என்கிற ஐயம் தோன்றலாம். பிக்குகளாக வருபவர்களுக்கு மட்டும்தான் மதக் கல்வி மட்டும் பயிற்றுவிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு மதம் சாராத secular கல்வி அங்கே கற்றுத் தரப்பட்டது.

பிராமணக் கல்வி முறைக்கும், சிரமணக் கல்வி முறைக்கும் இன்னொரு வேறுபாடும் உண்டு. பிராமணம் போலச் சிரமணம் புறச் சடங்குகளுக்கும், இதர புற வினைகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. அகப் பயிற்சிக்கே அது முதன்மை அளித்தது. நல்வாழ்வு, திறன் சார்ந்த வாழ்வு, அறம் சார்ந்த வாழ்வு ஆகியவற்றையே பௌத்தம் கல்வியின் நோக்கங்களாகக் கொண்டிருந்தது. அற வாழ்வு, ஆழ்நிலைஉள்நோக்குச் சிந்தனை (contemplation), ஞானம் (wisdom) ஆகியன கல்வியின் உள்ளடக்கங்களாக இருந்தன. ஆன்மீகப் பயிற்சி என்பதாகச் சுருங்காமல்  உடல், ஒழுக்கம், அறிவு, சிந்தனை ஆகிய முழுமையான ஆளுமை வளர்ச்சியை அது நோக்கமாகக் கொண்டிருந்தது. அவற்றோடு பவுத்தக் கல்வி முற்றுப் பெறுவது  இல்லை. உரிய தொழிற் பயிற்சிகளுக்கும் அதில் இடமிருந்தன.

அறவணர் அரசியை ‘அறிவுண்டாக’ என வாழ்த்தியதன் உட்பொருள் இதுவே.

அடிகளுக்கு ஆசனம் காட்டி, திருவடி விளக்கிச் சிறப்புச் செய்தபின், “என் நல்வினைப்பயனே உம்மை இங்கு அழைத்து வந்தது. உங்கள் சொல்வலிமை குன்றவில்லை என்ற போதிலும் உடல் தளர்ந்துள்ளது. மூத்த இவ்வுடல் பல்லாண்டு வாழ்க” என வாழ்த்தினாள் அரசி. “தேவி ! கேட்பாயாக” -எனத் தன் அறவுரையைத் தொடங்கினார் அடிகள்.

“தவநெறி மேவிய உடல் கொண்டவனாயினும் நான் கீழிறங்கும் மாலைச் சூரியன் போன்றவனே. பிறந்தார், மூத்தார், பிணி நோயுற்றார், இறந்தார் என்பது இயல்புதானே ! பேதமை தொடங்கி வினைப்பயன் ஈறாக வகுக்கப்பட்ட பன்னிரண்டு இயல்புகளையும் பிறந்தோர் அறிந்தால் பெரும் பேறு பெற்றவர்கள் ஆவர். அறியார் ஆயின் ஆழ் நரகை அடைவர்” -எனக் கூறி அவற்றை விளக்குவார்.

“பேதமை என்பது கண்ணால் கண்டு ஆராய்ந்து ஒன்றை நம்பாது சொல்லப்பட்டவற்றை அப்படியே நம்புதல்; மூவுலகங்களிலும் சேதனப் பிரபஞ்சம் எனப்படும் உயிர்களின் இவ்வுலகம் மிகப் பெரிது. ஒருவர் தான் செய்த வினைப்பயனுக்கு ஏற்ப இவ்வுயிர்களில் ஏதொன்றின் கருவில் உதித்து, அவ் வினைப்பயனுக்கு ஏற்றவாறு இன்ப துன்பங்களை அனுபவிப்பர். கொலை, களவு, காமம், தீய ஆசைகள் ஆகியன உடலால் மேற்கொள்ளப்படும் குற்றங்கள்; பொய், கோள், கடுஞ்சொல், பயனற்ற சொல் ஆகிய நான்கும் சொல்லால் இழைக்கப்படும் குற்றங்கள்; தீய விருப்பு (வெஃகல்), கோபம், மயக்கம் முதலியன உள்ளத்தால் நிகழும் குற்றங்கள்; நல்லறிவுடையோர் இக் குற்றங்களில் மனம் செலுத்த மாட்டார்கள். அப்படிச் செய்வார்கள் என்றால் அவர்கள் விலங்கு, பேய், நரகர் முதலான பிறப்புகளை எடுத்து உழல்வார்கள்.

“இப்பத்து வகைக் குற்றங்களிலிருந்தும் நீங்கி, பஞ்சசீலம் தாங்கி, தானம் செய்து வாழ்வாராயின் வானவர், மக்கள்,  பிரமர் என்போராய் நல்வினைப் பயனை அனுபவிப்பார்கள்.

“அரசமா தேவியே ! உடனிருக்கும் மங்கையரே ! குற்றமற்ற நல் அறத்தினைப் போற்றுவீர் ! மறுபிறப்புணர்ந்த மணிமேகலையே ! நீ பிற சமய அறங்களை எல்லாம் கற்று வந்த பின் உன் பால் வந்து, இவ் அற நெறிகள் எல்லாவற்றையும், அவற்றின் கூறுகளையும் முற்படக் கூறுவேன்” – எனக் கூறி எழுந்தார்.

தொடர்ந்து மணிமேகலையும் எழுந்தாள். அறவணரின் நல்ல மொழிகளை மறவாது போற்றிச் சிறப்புறுங்கள் என வாழ்த்தினாள். பிறகு, “நான் இனி இங்கிருந்தேனாயின் இளவரசனின் மரணத்திற்குக் காரணமானவள் எனப் பழிப்பர். ஆதலால் நான் இப்போது ஆபுத்திரன் நாட்டை அடைந்து, அதன் பின் மணிபல்லவம் சென்று தொழுது, வஞ்சி மாநகருக்குச் சென்று  மா பத்தினியான கண்ணகிக்காகக் குறைவற்ற நல்லறத்தினை எங்கும் செய்து கொண்டிருப்பேன். என மனதுக்கு இனியவர்களே ! எனக்கு ஏதும் துன்பம் நேருமென்று யாரும் கலங்க வேண்டாம்” என்று அனைவரையும் வணங்கி நின்றாள்.

இங்கு நமக்கொரு கேள்வி எழுகிறது. கண்ணகி அன்று பத்தினித் தெய்வமாக போற்றப்பட்டவள். ஆலயம் எடுத்து வணங்கப்பட்டவள். அவளுக்காக இந்த இளம் பெண் அறம் செய்யப் போகிறேன் எனச் சொல்வதன் பொருள் என்ன? கண்ணகி தனக்கிழைக்கப்பட்ட கொடுமைக்கு வெகுண்டு மதுரை மாநகரையே எரித்து அழித்ததை மணிமேகலையின் பவுத்த மனம் ஏற்கவில்லை எனக் கொண்டு, அதற்குப் பகரமாய் தனது அறச்செயல்களின் பலன்களைக் காணிக்கையாக்குகிறாள் எனப் பொருள் கொள்வதற்கும் இதன் மூலம் வாய்ப்பு ஏற்படுகிறது.

மணிமேகலை அங்கிருந்து புறப்படுகிறாள். காப்பியத்தின் இறுதிக் கட்டத்திற்குள் நாமும் அடியெடுத்து வைக்கிறோம். அந்த மாலைப் பொழுதில் அவளது சம்பாபதி ஆலயம், உலகவறவி , ஒளி சிந்தும் கந்திற்பாவை எல்லாவற்றையும் வணங்கி வலம் வந்தாள். வானில் பறந்து சென்று புண்ணியராசன் ஆளும் சாவகம் அடைந்து நகர் புறத்தே உள்ள ஒரு பூஞ்சோலையுள் இறங்கினாள். இளைப்பாறலுக்குப் பின் அங்கு உறையும் மாதவனான தரும சாவகனைச் சென்று வணங்கினாள். இந்நகரின் பெயர் யாது, ஆளும் மன்னனின் பெயர் என்ன என வினவினாள்.

நாகபுரம் எனப் பதில் வந்தது. பூமிசந்திரனின் மகன் புண்ணியராசன் இந்நாட்டு மன்னன். இவன் பிறந்தது தொடங்கி இங்கே மழை பொய்ப்பதில்லை; மண்ணும் மரங்களும் வளங்களை அள்ளித் தருகின்றன. எவ்வுயிர்க்கும் நோய் நொடிகள் இல்லை என அந்த மாதவன் பதிலுரைத்தான்.

புகார், மணிபல்லவம், சாவகம், வஞ்சி, காஞ்சி என மணிமேகலையின் பிரபஞ்சம் விரிவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தொடர்ந்து நாம் பார்த்து வருவது போல மணிமேகலை விரிக்கும் பவுத்த பிரபஞ்சம் இவ்வாறு தமிழகம், ஈழம், சாவகம் என்பதாக அமைகிறது. புத்தபிரான் அவதரித்த லும்பினி, அவர் ஒளி பெற்ற புத்த கயா ஆகியனகூட ஓரிடத்திலும் சுட்டப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்வோம். சாவகம் என்பது இன்றைய ஜாவா தீவைக் குறிக்கிறது. உலகின் மிகப் பெரிய தீவுகளில் ஒன்றான இது இன்று இந்தோனேசியாவில் அமைந்துள்ளதை அறிவோம்.. இந்தோனேசியாவின் தலைநகரான ஜாகர்த்தா இங்குதான் உள்ளது. இன்று இந்தோனேசியா ஒரு முஸ்லிம் நாடு. கி.மு 800 களில் அங்கு பவுத்த அரசு இருந்தது. முன்னதாக அங்கு இந்து மன்னர்களின் ஆட்சி நடைபெற்றது. சாவகத்தை ஆளும் புண்ணியராசன் இந்திரனின் வழி வந்தோன் என சாத்தனார் பதிவு செய்வதும் கவனிக்கத் தக்கது.

 

(துறவை நோக்கிய மணிமேகலையின் இறுதி நகர்வு தொடங்குகிறது)

 

 

 

 

 

 

அறம் சார்ந்தவற்றில் பவுத்தம் பேரங்களை அனுமதிக்கிறதா?

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 14     

தீராநதி, மார்ச் 2018              

பௌத்தத்தில் பத்தினி வணக்கம் முதன்மைப்படுத்தப் படுவதில்லை. தன்னை ஒரு பவுத்த காவியமாக முன்னிறுத்திக் கொள்ளும் மணிமேகலை இவ்வகையில் சற்று பௌத்த மரபிலிருந்து விலகி நிற்கிறது எனலாம். தான் தேர்ந்து கொண்ட என்பதைக் காட்டிலும் தனக்குத் தேர்ந்தளிக்கப்பட்ட வாழ்வைப் பெருமிதத்துடன் ஏற்றுக் கொண்டு, தனது பேறாய்க் கிடைத்த அந்த அற்புத்தப் பாத்திரத்துடனும் உள்ளத்தில் சிலிர்த்த பேருவகையுடனும் பிச்சை ஏற்க வீதியில் இறங்கிய மணிமேகலை, “பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடும் பிச்சையை முதலில் ஏற்றல் பெரும் பெருமைக்குரியதாய் அமையும்” என்றனள்.

இந்த இடத்தில் மணிமேகலைக் காப்பியத்தினுள் இரு துணைக்கதைகள் பதிக்கப்படுகின்றன. அவற்றினூடாக இன்னும் சில அடிப்படையான பௌத்த அறங்கள் முன்வைக்கப்படுகின்றன.. அது மட்டுமல்ல இந்தப் பின்னணியில் தென் ஆசியப் பவுத்தப் பிரபஞ்சம் ஒன்றும் நம் முன் விரிக்கப்படுகிறது.

இங்கு அறிமுகமாகும் காயசண்டிகை எனும் பாத்திரத்தின் துயர் நிறைந்த கதையைச் சொல்லும்முன் அவள் வாயிலாக அறிமுகமாக்கப்படும் ஆதிரை  மற்றும் அவளது கணவன் சாதுவன் ஆகியோரின் வரலாறு பௌத்த அறங்களை விளக்க முற்படுகிறது எனப் பார்க்கலாம். பவுத்தம் எவ்வாறு மக்களுடன் ஒரு உரையாடலை மேற்கொண்டு, சில அம்சங்களில் தன் இறுக்கத்தைத் தளர்த்தியும், சில விட்டுக் கொடுத்தல்களுக்கும் இடமளித்தும் மக்கள் மத்தியில் தனக்கொரு இடத்தை நிறுவிக்கொள்கிறது என்பதையும் காணலாம்.

“ஒரு குளத்திற்கு அதனுள் பூத்திருக்கும் தாமரை மலர்கள் அழகு சேர்ப்பன. அவறுள் ஓங்கி வளர்ந்து அழகு சேர்க்கும் ஒரு திருமலர் போன்ற கற்பின் சிறப்பைப் பெற்றவளான ஆதிரை வாழும் வீடு இதுதான்” எனக் கூறி அவளிடம் சென்று முதற் பிச்சை ஏற்றல் தகும் என காயசண்டிகை சொல்வதனூடாக ஆதிரை சாதுவன் இணையரின் வரலாறு இங்கே பதியம் கொள்கிறது.

சாதுவன் தீய ஒழுக்கங்கள் பலவற்றின் ஊடாக மனையறம் பேணற்குரிய தகவு அற்றவனாகி, மனைவியைப் பிரிந்து, கணிகை ஒருத்தியுடன் வாழ்ந்து வந்தான். வட்டாடல், சூதாடல் என எல்லாத் தீய ஒழுக்கங்களின் ஊடாகவும் தன் பொருளனைத்தையும் இழந்தான். அவனிடம் பொருள் இருந்தவரை அவனைப் பேணிக் கொண்டாடிய அக் கணிகையும் அவனை ஒன்றும் இல்லாதவன் எனப் பழித்துக் கைவிட்டாள்.

மீண்டும் செல்வந்தன் ஆகவேண்டும் என்கிற அடங்கா வேட்கையுடன் சாதுவன் மரக்கலம் ஒன்றில் ஏறி வணிகர்களுடன் பொருள் தேடிச் சென்றான். கோவலனின் கதையுடன் சில அம்சங்களில் ஒப்புமை உடைய சாதுவனின் வரலாறு பல அம்சங்களில் அதிலிருந்து வேறுபடுகிறது. மாதவி கணிகையர் குலத்தில் பிறந்தவளாயினும் அவளை வெறும் பொறுளாசை மிக்க ‘வேசி’ என்பது போன்ற வழமையான கருத்தாக்கத்திலிருந்து வேறுபடுத்தி நிறுத்துவார் இளங்கோ அடிகள். மாதவியைப் பொருத்த மட்டில் அதே பார்வையுடன் அவளை இன்னும் ஒரு படி உன்னதப் படுத்தி பௌத்த அறம் பேணும் துறவு நிலை எட்டுபவளாகச் சித்திரிக்கும் சாத்தனார் இங்கு இந்தக் கணிகையை வழக்கமான பொதுப் புத்தி எப்படிப் பார்க்குமோ அப்படியே பதிவு செய்கிறார்ம. எனினும் காப்பியத்தின் போக்கு அக் கணிகையைத் தொடர்வதில்லை. அவள் இங்கு முக்கிய பாத்திரம் இல்லை.

கணிகையின் தொடர்பால் பொருளிழந்த கோவலனைப் போலவே மீண்டும் பொருள் தேடச் செல்லும் சாதுவனின் வரலாறும் பெரிதும் அதிலிருந்து வேறுபடுகிறது. அவன் சென்ற கலம் கவிழ்கிறது. எனினும் அவன் உயிர் பிழைத்து நிர்வாணச் சாரணப் பழங்குடி மக்கள் வாழும் ஒரு மலைப் பக்கமாய்க் கரை ஒதுங்குகிறான்.

மரக்கலம் சிதைந்து, சிதைந்த மரத் துண்டுகளைப் பற்றிக் கொண்டு அவனைப் போலவே கடலில் தத்தளித்த சக வணிகர்களில் சிலர் புகாரை அடைந்து சாதுவனின் மனைவி ஆதிரையிடம் அவன் விபத்தில் மறைந்தான் என்பதாகத் தகவல் அளிக்கின்றனர். கணவன் ‘இறந்த’ சேதி அறிந்த ஆதிரை, “சிறந்த என் கணவன், தன வினைப்பயன் உற்று இறந்தனன். நானும் உயிர் நீத்து அவனைத் தொடர்வேன்” எனக் கூறி தீப்பாய்கிறாள். ஆனால் அந்தத் தீ அவளைப் பற்றவும் சுட்டெறிக்கவும் மறுக்கிறது. தீக்குழியுனுள் அவள் அமைத்துக் கொண்ட படுக்கையும், அவள் உடுத்தியிருந்த்க கூறையும், அவள் கூந்தலை அணிசெய்திருந்த மாலையும் தீப்பற்றாது நின்றதோடன்றி தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள்போல எந்த ஊறும் அடையாது ஒளிவீசி நின்றாள்  ஆதிரை.

“தீயும் கொல்லாத் தீவினையாடி ஆயினேன்” என அவள் ஏங்கி நிற்கும் தருணம் அசரீரி இறங்கி அவள் கனவன் உயிர் பிழைத்திருக்கும் நற்செய்தியை அறிவித்தது. ஆறுதல் கொண்டு வீட்டிற்குச் சென்று கணவனின் வருகைக்குக் காத்திருந்த ஆதிரையை, தன் கற்புத் திறத்தால் மழை பொழிய வைக்கவும் வல்ல பிற பத்தினிப் பெண்டிர் தொழுது போற்றும் பெருமை பெற்றவள் எனக் கூறுவதன் ஊடாகப் பத்தினிப் பெண்டிர் பெருமையைத் தொடர்கிறார் சாத்தனார்.

இன்னொரு பக்கம் கதை சாதுவனைப் பின்தொடர்ந்து பவுத்த அறங்களை விளக்க முற்படுகிறது. பவுத்த அறங்களை மட்டுமின்றி பவுத்தம் மக்களை அணுகிய வழிமுறைகளில் உள்ள ஒரு நுணுக்கத்தையும் நாம் புரிந்துகொள்ள ஏதுவாக சாதுவன் வரலாறு பதிக்கப்படுகிறது. பிற அவைதீக அறக் கோட்பாடுகளை முன்நிறுத்திய சமணம் முதலான மதங்களைப் போலன்றி பவுத்தம் நீண்ட காலம் இந்திய மண்ணிலும் இன்னும் தென் ஆசிய நாடுகளிலும் நிலை கொண்டதற்கான காரணங்களில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள ஏதுவாகவும் அமைகிறது.

அங்கே கரை ஒதுங்கிய சாதுவன் ஒரு மலையடிவார மரநிழலில் மயங்கிக் கிடந்த தருணத்தில், அவ்விடத்தே வசிக்கும் நர மாமிசம் உண்ணும் வழமையுடைய நக்க சாரணர் அவனைக் கண்டனர். ‘தனியனாய் வந்து துயருற்றுக் கிடக்கிறான். எனினுன் ஊனுடை இவ்வுடல் நமக்கு நல்ல உணவாகலாம்’ என எண்ணி அவனை அணுகி எழுப்பினர்.

சாதுவன் வணிகன். பல நாடுகள் சென்று அம்மக்களுடன் அவரவர் மொழியில் பேசி அவர்களிடம் தன் பண்டங்களை விற்று தனக்குத் தேவையானவற்றை வாங்கி வரும் திறன் மிக்கவன். “மற்றவர் பாடை (மொழியை) மயக்கறு மரபிற் கற்றவன்” என அவனைக் குறிப்பார் சாத்தனார். யராயினும் அவரவர் பாடையில் (மொழியில்) பேசுதல் என்பது அவரோடு நட்பு பேணுதற்கும், நம் கருத்துக்களை அவரிடத்தே கொண்டு செல்லவும் நல்ல உபாயமாக இருக்கும். பிற மதங்கள் இங்கு வரும்போது அவை இங்குள்ள மொழிகளில் மக்களை அணுகியதையும், அத்னூடாக இங்குள்ள மொழிகளுக்கு அவை வளம் சேர்த்தமையையும் இங்கு நினைத்துப் பார்க்கல் தகும். கிறிஸ்தவம், இஸ்லாம் எல்லாம் இங்கு தமிழுக்கு வளம் சேர்த்தமையையும், இங்கு அவை நிலை கொண்டமைக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்ததையும் நாம் இந்தப் பின்னணியிலிருந்தும் அணுக வேண்டும். தம் மொழியை உன்னதப் படுத்தி தேவ பாஷையாக நிலை நிறுத்தல் என்பதற்குப் பதிலாக அவை நம் மொழியில் பேசி நம் மொழிக்கு வளம் சேர்த்து நம்மோடு நிலை கொண்டன. சாதுவன் மற்றவர் மொழியை மயக்கமறக் கற்றவன் மட்டுமல்ல. அதை அதன் மரபு அறாமலும் கற்றவன்.

தம் மொழியில் சாதுவன் பேசியதைக் கண்டு வியப்புற்ற அச்சாரணர் அவனை வணங்கி அவர்களின் குருமகனிடம் அழைத்துச் சென்றனர். கள் காய்ச்சும் பானைகள், கழிவுகளின் முடை நாற்றம், வெயிலிற் காய்ந்து கிடக்கும் வெள்ளெலும்புத் துண்டுகள் சூழ்ந்த தன் இருப்பிடத்தில் கரடியொன்று தன் துணையோடு இருந்தாற்போலக் காட்சியளித்தான் அந்தக் குரு மகன்.

உரையாடல் தொடங்கியது. மொழி அவர்களைப் பிணைத்து நெருக்கமாக்கியது என்கிறார் சாத்தனார். “பாடையிற் பிணித்து அவன் பான்மையன் ஆகி” குளிர்ந்த பரநிழலில் அவனருகே சென்றமர்ந்த சாதுவனை, “நீ இங்கு வந்த காரணம் என்ன?” என்று கேட்க சாதுவனும் அவன் நிலையைச் சொன்னான். மிக்க அனுதாபம் கொண்ட அந்தப் பழங்குடித் தலைவன், அருந்த ஒன்றும் இன்றி அலைகடலில் உழன்று வந்துள்ளான். இரக்கத்திற்குரியவனாக உள்ளான். வாருங்கள் மக்களே! இந்த நம்பிக்கு மிக்க இளமையுடைய ஒரு பெண், வெம்மையான கள், மாமிசம் எல்லாவற்றையும் வேண்டும் மட்டும் கொடுங்கள்” என ஆணையிட்டான்.

இந்த விருந்துபசார வார்த்தைகள் சாதுவனைத் துயருறச் செய்தன என்கிறார் சாத்தனார். இந்த இடத்தில் சாதுவனுக்கும் சாரணர் தலைவனுக்கும் இடையில் விவாதம் தொடங்குகிறது. “கொடிய சொற்களைக் கேட்டேன்! இது எதுவும் வேண்டேன்” என அவன் அவசரமாக மறுத்தது அந்தப் பழங்குடித் தலைவனுக்கு ஆத்திரத்தை அளித்தது. ஆத்திரம் மட்டுமல்ல வியப்பும் தோன்றியது.

“அழகிய பெண்கள், சுவை மிகு உணவு இவை எல்லாம் இல்லாவிட்டால் மக்கள் இந்த உலகில் வாழ்ந்தென்ன பயன்? அப்படி ஏதும் இருக்கிறதென்றால் எனக்குக் காட்டேன். நாங்களும் பார்க்கிறோம்.. சொல்!”

சாதுவன் சொல்லத் தொடங்கினான்:

“மயக்கும் கள்ளையும், உயிர்களைக் கொல்லுதலையும் சீறிய அறிவுடையோர் ஏற்பதில்லை. பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது.  நல்லறங்களைச் செய்வோர் நல்லுலகம் அடைதலும், நல்லதல்லாதவற்றைச் செய்வோர் அருநரகடைதலும்தான் முடிவு என உணர்ந்தோர் அவற்றைக் களைந்தனர். நீயும் இதை அறிந்து கொள்”

கட கடவென நகைத்தான் அந்தத் தலைவன். “உடம்பை விட்டகலும் அவ்வுயிர் ஒரு வடிவத்தில் இன்னொரு இடம் சென்று புகும் என்றாயே அது எப்படி? எனக்குச் சொல்” என்றான்.

“கோபப்படாமல் இதக் கேள். உடம்பில் உயிர் தரித்திருக்கும் வரை உடல் உறும் இன்ப துன்பங்களை அது உணரும். ஆனால் அந்த உயிர் உடலை விட்டு அகன்றால் எரியும் நெரிப்பில் இட்டாலும் அதை அது உணராது. எனவே இவற்றை எல்லாம் உணர்கின்ற உயிர் ஒன்றும் உள்ளதென்பதை அறிந்து கொள்” – இது சாதுவன்.

இது கேட்டதும், எரியும் விழிகளையுடைய அந்த நாகர் தலைவன் நன்கறிந்த அந்த செட்டியின் (சாதுவனின்) காலில் வீழ்ந்தான். “கள்ளையும், கறியையும் விட்டுவிட்டல் இந்த உயிரை நான் எப்படிக் காப்பேன். நான் சாகும் வரை வாழ்வதற்குரிய நல்லறங்களைச் சொல்” என வேண்டி நின்றான்.

“நல்லது. நன்னெறியில் உன் வாழ்க்கை தொடரட்டும். உனக்குத் தகுந்த (ஒல்லும்) அறம் உரைப்பேன். என்னைப்போல மரக்கலம் கவிழ்ந்து தப்பிப் பிழத்து வந்தடைவோரைக் கொல்லுதலைக் கைவிடு. அவர்களின் அரிய உயிரைக் காப்பாற்று. மூப்படைந்து வீழ்ந்து சாகும் விலங்குகளை அல்லாமல் பிற உயிர்களைக் கொல்லும் செயலைக் கைவிடு.”

சாதுவனின் இந்த அறவுரையைக் கேட்ட அந்தச் சிறுமகன், “இது எனக்குப் பொருந்தும். இதை ஏற்று என்னால் கடை பிடிக்க இயலும். இதோ இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள அரும்பொருட்களை எல்லாம் எடுத்துக் கொள். இதுவரை மரக்கலம் கவிழ்ந்துத் தப்பி வரும் மக்களை எல்லாம் கொன்றோம். உண்டோம். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டனவே இவை. எல்லாம் சந்தனம், அகில் முதலான மண மரங்கள், மெல்லிய ஆடைகள், மிக்க மதிப்புடைய பொருட் குவியல்கள். எடுத்துக் கொள்” என்றனன்.

அவற்றை ஏற்றுக் கொண்ட சாதுவன் சந்திரதத்தன் எனும் வணிகண் வந்த கப்பலொன்றில் ஏறி ஊர் திரும்பினான். அன்பு மனைவி ஆதிரையோடு இனிய அற வாழ்க்கை வாழ்ந்தான் என்பது மணிமேகலை உரைக்கும் சாதுவன் – ஆதிரை வரலாறு.

மணிமேகலைக் காப்பியத்துல் பதித்து அழகு சேர்க்கப்பட்ட இந்தத் துணைக் கதையின் ஊடாக பவுத்தப் பரவல் குறித்துச் சிலவற்றை நம்மால் உணர் முடிகிறது. பவுத்தத்திற்கு இறுக்கமான அறக் கோட்பாடுகள் இருந்த போதும் அவற்றை மக்கள் எல்லோருக்கும் பொதுவானதாக இறுக்கமாகவும் சமணத்தைப் போன்று மிக உச்சமாகவும் வற்புறுத்துத்துவதில்லை. மக்களின் வாழ்க்கை முறைகளுடன் இணைந்து அவை தகவமைக்கப்பட்டன. இந்தக் கதஈல் உயிர்க் கொலை, மது, மாமிசம் பாலியல் பிறழ்வுகள் ஆகிய நான்கையும் கைவிடச் சொல்லித் தன் அறவுரையைத் தொடர்கிறான் சாதுவன். பெண்டிரை விடுதல் என்பது முற்றிலும் பாலியல் வேட்கையைக் கைவிடல் என்பதல்ல. இப்படியாக இளம் பெண்களைப் பரிசளித்தல், தாசிகள் என்றொரு பிரிவினை உருவாக்கல் முதலானவற்றைக் கைவிடுதலே பெண்டிரைக் கைவிடல் என்பதன் பொருளாகிறது. முற்றான துறவு என்பதையோ காமம் என்கிற உணர்வையே கைவிட வேண்டும் எனவோ சாதுவன் வற்புறுத்தவில்லை.

நாகர்களோ ஒரு கடலோர மலையடிவார நிலப்பகுதியில் வாழ்வோர். விவசாய வாய்ப்பு அங்கில்லை. கடலுணவு, மாமிசம் ஆகியவற்றை அவர்கள் தவிர்க்க இயலாது. எனவே இந்த அம்சத்திலும் சாதுவன் ஒரு சமரசத்திற்கு இணங்குகிறான். மாமிசத்தை முழுமையாகத் தவிர்க்க வேண்டியதில்லை. ஆனால் விருந்துகளுக்கெனவே கொல்லுதல் முதலானவற்றைத் தவிர்த்தல் தகும். இறந்த உடலங்களை உண்ணுதல் ஏற்கத்தக்கது என இந்த அம்சத்திலும் ஒரு முடிவு எய்தப்படுகிறது. இறுதியாக எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது சாதுவன் தொடக்கத்தில் வற்புறுத்திய அறங்களில் முற்றிலும் விட்டுக் கொடுக்காமல் அமைவது மயக்கும் மதுவைத் தவிர்த்தல் மட்டுமே.

ஆக ஒரு அற பேரம் (negotiation) ஒன்றுக்கு பவுத்தம் தயாராக இருந்தது.

(பவுத்தம் காட்டும் இறுதி உய்விற்கான ஒரே வழி – அடுத்த இதழில்)

 

இந்திரன் தோற்றான் புத்திரன் வென்றான்

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 13  

(மணிமேகலைக் காப்பியத் தொடர் – பிப்ரவரி, ‘தீராநதி’)

          

பிராமண மதத்தைச் சிரமண மதங்கள் எதிர்கொண்ட விதம் தனித்துவமானது. ஆன்மா, இறை, வேள்வி முதலானவை குறித்த பிராமண மதக்  கருத்தாக்கங்களைச் சிரமண மதங்கள் முற்றிலுமாக மறுத்தாலும் இந்திய மதங்களுக்கென உருவாகி இருந்த சில பொது நம்பிக்கைகள், கதைகள், கடவுளர்கள் ஆகியவற்றை அவை ஏற்றுக் கொண்டன. ஆனால் அவற்றை பிராமண மதம் எவ்வாறு முன்வைத்ததோ அப்படியாக அல்லாமல் முறிலும் எதிராகவும் பல நேரங்களில் தலைகீழாகவும் அவற்றை அவை ஆக்கிய விதம் நுணுக்கமானது மட்டுமல்ல சுவையானதும் கூட. அப்படி ஏற்றுக் கொண்ட கடவுளர்களில் ஒருவந்தான் இந்திரன்.

இந்திரனோ தேவர் தலைவன். ஒரு எளிய, யாருமற்ற, பெற்றோர் யாரென அறியாத ஆபுத்திரனை, “மாயிரு ஞாலத்து மன்னுயிர் ஓம்பும் ஆருயிர் முதல்வன்” என அவனுக்குச் சமமாக நிறுத்துகிறார் சாத்தனார். இந்த மாபெரும் உலகில் வசிக்கும் உயிர்கள் அனைத்தின் பசியையும் போக்கும் பெரும் பேறு பெற்றவம் ஆபுத்திரன். அந்தப் பெருமை தேவர் தலைவனுக்குச் சற்றும் குறைந்ததல்ல என்பது கருத்து. “பேராற்றல் மிக்க தேவர்களின் வேந்தனே! மண்ணுலகில் உள்ள எம் போன்றோரில் நல்வினை, தீவினைகளை அங்கிருந்து கொண்டு மதிப்பிடுகிறவர்கள் நீங்கள். தருமம் செய்யும் மக்கள், எளியோரைப் பாதுகாத்திருப்போர், நற்றவம் செய்வோர், பற்றறுக்க முயல்வோர் முதலானோர் வாழும் உலகு வாய்க்கப் பெறாதவர் நீங்கள்”- எனத் தேவருலகைக் காட்டிலும் இம் மண்ணுலகம் சிறந்தது எனத் தனக்கு வரம் அளிக்க வந்த இந்திரனுக்குச் சொல்வான் அந்த எளியவன்.

“பசித் துயருடன் வந்தோரின் கொடும்பசியைத் தீர்த்து அவர்கள் முகத்தை இனிதாக்கும் பணியே தெய்வம் எனக்குக் காட்டிய வழி. இந்தப் பணிக்குரிய எனக்குத் தேவர் கோமான் நீ என்ன தந்துவிட இயலும்? உண்டியா, உடுப்புக்களா, பெண்களா இல்லை என்னைப் பாதுகாக்க யாருமா?” என்றந்தப் பெற்றோர் பெயரறியா இளைஞன் எள்ளி நகையாடியபோது தேவருலகத் தலைவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

புராண தெய்வங்களுக்கே உரித்தான குயுக்தியும் தந்திரமும் மிக்க இந்திரன் குறுக்கு வழியில் யோசித்தான். இவ்வுலகில்; பசி இருந்தால்தானே அதை ஆற்றுவாய்.. பசியே இல்லாமல் செய்தால்? “இந்த நீணிலம் முழுமையும் நீர் பெருகி வளம் சுரக்க” என ஆணையிட்டு அகன்றான் தேவர் தலைவன். பன்னிரண்டு ஆண்டுகளாக மழையின்றிக் காய்ந்து கிடந்த பாண்டி நாட்டில் பெருமழை பெய்ய அங்கு எல்லா வளமும் சுரந்தது. பசித்தோர் இல்லாத அந்த நாட்டில் அவன் தன் தெய்வ ஆணையை எப்படி நிறைவேற்றுவான்? என்னேரமும் பசித்தோர் நிறைந்திருந்த அவனது அம்பலப் பீடிகை இப்போது சோம்பேறிகள், காமுகர்கள், தூர்த்தர்கள், வம்பு பேசுவோர், சூதாடுவோர் முதலானோரால் நிறைவதாயிற்று.

தன் அம்பலத்தை விட்டு நீங்கிப் பசித்தோரைத் தேடித் திரிந்த அவன் கேலிக்குரியவன் ஆனான். தன் எல்லாச் செல்வங்களையும் கடலில் பறிகொடுத்தவன் போல அலைந்து திரிந்து கொண்டிருந்த அவனை அப்போதுதான் கப்பலிலிருந்து இறங்கிய சிலர் கண்டு சாவக நாட்டில் (Jawa) பெரும் பஞ்சம் நிலவி உயிர்கள் செத்தழிவதைக் கூறினர்.

சாவகம் செல்லும் அக்கப்பலில் ஏறினான் ஆபுத்திரன். வழியில் கடல் சீற்றம் காரணமாக அம்மரக்கலம் மணிபல்லவத்தீவில் நின்றது. இறங்கியவன் ஏறினான் என எண்ணி நள்ளிறவில் அம்மரக்கலம் அகன்றது.

தன்னை விட்டு விட்டு மரக்கலம் அகன்றதை அறிந்த ஆபுத்திரன் துயரம் கொண்டலைந்தான். அள்ள அள்ளக் குறையாத அந்த அரிய பாத்திரம் பயனற்றுத் தன் கரங்களில் இருப்பதை வெறுத்தான். அங்கிருந்த கோமுகிப் பொய்கையில் அதனை விட்டு, “ஆண்டுக்கு ஒருமுறை இப்பாத்திரம் வெளிப்படட்டும்.  அருளரம் பூண்டு ஆருயிர் ஓம்பும் யாரும் இங்கு தோன்றும் நாளில் அவர் கைப் புகுவாய்” என அதை வேண்டி உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தான்.

கீழ்த் திசையில் தோன்றி மேற்திசையில் மறையும் ஞாயிறுபோல மணிபல்லவத்தீவில் உடலைத் துறந்த ஆபுத்திரன் சாவகத்தில் வாழ்ந்திருந்த மண்முக முனிவன் வளர்த்த பசுவயிற்றில் மீண்டும் பிறப்பெடுத்தான் என்று ஆபுத்திரன் வரலாற்றையும் அந்த தெய்வப் பாத்திரம் மணிமேகலையை வந்தடைந்ததையும் விளக்குவார் அறவணர். இப்போது ஆபுத்திரனை வயிற்றில் ஏந்திய பசுதான் தன் முற்பிறப்பில் அவனுக்குப் பாலூட்டிய பசுவும் கூட. பசு ஈன்ற அம்மகவைப் பிள்ளைப் பேறற்ற சாவக மன்னன் ஏந்தி வளர்த்து அரசன் ஆக்குவான். ஆபுத்திரன் இப்பிறவியில் சாவக நாட்டின் அரசனான கதை இது.

அப்போது சோழ நாட்டில் பெரும் பஞ்சம். இந்நிலையில் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியை வீணே வைத்திருக்கல் ஆகாது என அரும்பசி ஆற்ற மணிமேகலையை ஆயத்தப்படுத்தி அகல்வார் அறவணர்.

மதுமலர்க் குழலி என இக் காவியத் தொடக்கத்தில் நமக்கு அறிமுகம் செய்யப்பட்ட அச்சிறுமி துறவுக் கோலத்துடனும் கையில் அமுதசுரபியுடனும் வீதியில் இறங்கினாள். அது அம்மக்களுக்குப் பேராச்சரியத்தை அளித்தது. கூடிய மக்களில் சிறியோர், அவளது அழகில் ஈர்ப்புற்றோர், காமுகர் எனப் பல திறத்தாரும் இருந்தனர் என்கிறார் சாத்தனார்.

அப்படி நின்றவருள் என்ன உண்டாலும், எத்தனை உண்டாலும் தீராப்பசி எனும் நோயுடைய காயசண்டிகையும் ஒருத்தி. வடதிசைப் பிறந்து தென் திசை அடைந்து பொதியமலையில் தவமிருந்த ஒரு முனிவனின் சாபத்தால் இந்தக் கொடிய நோயை அடைந்தவள் அவள். அப்படியான சாபம் பெற்றதற்கும் அவளது பழ வினையே காரணம்.

மணிமேகலை ஒரு பவுத்த காவியமாயினும் இந்தியத் துணைக் கண்டத்தில் புத்தர் வரலாற்றுடன் இணைந்த புனிதத் தலங்களான லும்பினி, புத்த கயா முதலானவை காப்பியத்தில் இடம் பெறுவதில்லை. முற்றிலும் இன்னொரு புதிய புத்த வெளி ஒன்று இங்கு கட்டமைக்கப்படுகிறது. தென்னிந்தியா, இலங்கை, சாவகம் முதலான தென் கிழக்காசியா என்றொரு புதிய புத்த பிரபஞ்சம் ஒன்று அறிமுகப் படுத்தப் படுகிறது. தென்கிழக்காசிய என்பது பவுத்தத்தை ஏற்றுக் கொண்ட நிலப்பகுதியாக உருப்பெற்ற காலம் அது. இன்றும் அங்கு பவுத்தம் என்பது அதற்கே உரிய வடிவில் முக்கிய மதமாக உள்ளதை அறிவோம்.

‘பொதியில்’ எனும் பொதியமலை அகத்தியருடன் இணைத்துப் பேசப்படும் ஒன்று. அகத்தியர் முதன் முதலில் தமிழ் இலக்கியத்தில் தோன்றுவதும் மணிமேகலையில்தான். பரிபாடலிலும் அகத்தியர் உண்டெனினும், அதுவும் சங்க இலக்கியங்களிலேயே மிகவும் பின்னுக்கு வந்த ஒன்று. ‘பொதியில்’ எனும் சொல்லாக்கம் போதி + இல் என்பதிலிருந்து உருவாகி இருக்கலாம் எனவும் புத்தரின் அடுத்த அவதாரமாகக் கருதப்படும் அவலோகீதீஸ்வரர் ஆலயம்தான் இப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரூர் என்னுமிடத்தில் உள்ள சிவன் கோவில் என்றும் சொல்கிறார் பவுத்த அறிஞர் ஹிகாசோகா. தேரன் + ஊர் என்பதுதான் தேரூர் என ஆகியது என்பது அவர் கருத்து. அகத்தியருக்குச் சிலைகள் தென்கிழக்காசிய நாடுகளில் உண்டு. மணிமேகலையைப் போல இன்றும் அழியாமல் நமக்குக் கிடைத்துள்ள இன்னொரு பவுத்த நூலான வீரசோழியம் அகத்தியரை அவலோகிதீஸ்வரருடன் இணைத்துப் பேசுவதும் குறிப்பிடத் தக்கது. மணிமேகலை மற்றும் அதற்குப் பிந்திய காலத்தில் நிலைபெற்றிருந்த தெற்கத்திய பவுத்தத்தில் அகத்தியருக்கு ஒரு முக்கிய இடமிருந்தது என்பார் ஆனே மோனியஸ்.

(அடுத்த இதழில் பணிமேகலையும் பத்தினி வழிபாடும்)

 

 

மணிமேகலை 7 -பவுத்தம் முன்வைக்கும் பிறவி அறுத்தல் கோட்பாடு

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 10   

(தீராநதி, நவம்பர் 2017)              

புத்தர் தோன்றியதும் புத்தம் அரும்பியதும் இந்தியத் துணைக் கண்டத்தின் வடக்குப் பகுதியில்தான். புத்தர் அவதரித்த லும்பினி இன்று நேபாளத்தில் உள்ள கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ளது. புத்தர் நிர்வாணம் அடைந்த புத்த கயா நேபாளத்திற்குக் கீழ் அமைந்துள்ள பீஹார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் உள்ளது. அவர் பரிநிர்வாணம் அடைந்த குஷிநாரா உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூரிலிருந்து சுமார் ஐம்பது கி.மீ தொலைவில் நேபாள எல்லையில் உள்ளது.

எனினும் அடுத்த சுமார் மூன்று நூற்றாண்டுகளில் மாமன்னர் அசோகரது காலத்தில் பவுத்தம் இலங்கை முதலான தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் தடம் பதிக்கத் தொடங்கி இருந்தது. மணிமேகலைக் காப்பியம் புத்தருக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றியது. புகார், வஞ்சி, காஞ்சி எனும் தமிழகத்தின் அன்றைய மூன்று முக்கிய நகரங்கள் தவிர மணிபல்லவம், சாவகம் முதலான இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியேயும்  பௌத்தம் செழித்திருந்த பல நிலப்பரப்புகளையும் மணிமேகலை நம் முன் விரிக்கிறது. மணிமேகலையில் காட்சிப்படுத்தப்படும் மணிபல்லவத் தீவு இன்றைய இலங்கையின் நயினாத்தீவுதான் என்றொரு கருத்துண்டு. சாவகம் என்பது இன்றைய ஜாவா என்பதில் ஐயமில்லை. தென்னிந்தியா, இலங்கை, தாய்லந்த், கம்போடியா, லாவோஸ், ஜாவா, சுமத்ரா (இந்தோனேஷியா) என ஒரு தென்கிழக்காசிய பவுத்த வெளி ஒன்று அன்று உருவாகியிருந்தது என ஆனே மோனியஸ் போன்ற இன்றைய ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மணிமேகலையில் முக்கிய நகரங்களில் ஒன்றாக வெளிப்படும் காஞ்சிபுரத்திற்கும் சாவகத்திற்கும் இடையில் அடுத்த பல நூற்றாண்டுகள் வரை நெருக்கமான தொடர்பும் இருந்துள்ளது. பதினான்காம் நூற்றாண்டு ஜாவா காவியமான ‘நாகரக்ருதாகம’ எனும் நூலில் ஆறு பவுத்த விகாரைகள் அமைந்த “காஞ்சிபுரி” யிலிருந்து வந்த ஸ்ரீபுத்தாதித்யா எனும் பிக்கு எழுதிய கவிதைகள் பற்றிய குறிப்புகள் உள்ளதாக மோனியஸ் கூறுகிறார்.

இப்படியான ஒரு அகன்ற தெனிந்திய – தென் கிழக்காசிய இலக்கிய – பண்பாட்டு வெளி ஒன்று குறித்து தனக்கும் முன்பாக சில்வேய்ன் லெவி பதிவு செய்துள்ளதையும் அவர் குறிப்பிடுகிறார். இந்த நிலப்பகுதிகள் அனைத்தையும் இப்படி இணைக்கும் பண்பாட்டுக் குறியீடாக பவுத்த கடவுளர்களில் ஒன்றான மணிமேகலா தெய்வத்தை லெவி சுட்டிக் காட்டுகிறார். “தமிழ்நாடு, சிலோன், பர்மா, சயாம், கம்போடியா முதலான நாடுகளில் மணிமேகலா தெய்வம் அறியப்பட்டிருந்ததற்கு நிறைய சான்றுகள் உள்ளன” எனக் கூறும் லெவி “இந்த நில, நீர் பரப்புகளுக்கு அப்பால் அதற்கான சான்றுகள் ஏதும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை” என்றும் கூறுகிறார்.

கடல் கடந்து வணிகம் செய்வோரின் கடற்பயணங்களில் அவர்களைக் காப்பவராக வணிகர்களால் வணங்கப்பட்டதுதான் மணிமேகலா தெய்வம். பவுத்த புனிதத் தொகுப்புகளான மகாஜனக மற்றும் சங்க ஜாதகங்களிலும் எதிர்கால புத்தர் ஒருவர் கப்பல் கவிழ்ந்து கடலில் தத்தளித்தபோது அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தது என மணிமேகலா தெய்வம் குறிப்பிடப் படுகிறது. தமிழின் இரட்டைக் காப்பியங்களான சிலம்பு, மணி இரண்டிலும் அப்படிக் காப்பாறப்பட்ட எதிர்கால புத்தர் ஒருவர் கோவலனின் மூதாதையர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்படுவார். மாதவிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததை அறிந்த கோவலன், “எம் குலதெய்வப் பெயர் ஈங்கு இடுக” எனக் கூற, மணிமேகலைக்கு அத் தெய்வத்தின் பெயர் இடப்பட்டது என்பது இளங்கோவடிகள் கூற்று (அடைக்கலக் காதை). “பரப்பு நீர்ப் பவ்வம் பலர் தொழக் காப்போள்’ என்றும் ‘திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு’ எனவும் மணிமேகலாவை ஒரு கடற் தெய்வமாக சாத்தனாரும் குறிப்பார். பாலி இலக்கியங்களில் இந்தக் கதையாடல் சற்று வேறுபட்டு இருக்கும். மணிமேகலா தெய்வம் தனது காவற் பொறுப்பைச் சற்று மறந்திருந்ததால் கப்பல் கவிழ்ந்து ஏழு நாள் கழித்தே எதிர்காலப் புனிதரைக் காப்பாற்ற நேர்ந்தது என்று அவற்றில் கூறப்படும். ‘புத்சாரணா’ ‘சதர்மாலங்காரா’ முதலான சிங்கள நூல்களிலும் மணிமேகலா தெய்வம் போற்றப்படும். ஜாவாவின் (அதாவது சாவகத்தின்) தென்மேற்கு முனையில் உள்ள ‘பெலாபுஹான் ராட்டு’ எனும் கடற்கரைச் சிற்றூர் மணிமேகலா தெய்வம் தங்கி இளைப்பாறும் இடமாக இன்றும் கருதப்படுகிறது.

அந்த மணிமேகலா தெய்வம்தான் நம் காப்பிய நாயகி மணிமேகலையை உரிய ஏது நிகழ்ச்சிகளுடன் துறவு நோக்கி ஆற்றுப்படுத்துபவராக இங்கு வெளிப்படுகிறார். அந்தத் தெய்வம் உதயகுமாரனிடமிருந்து மணிமேகலையைக் காப்பாற்றி அவளறியாமல் அவளைத் தூக்கிக்கொண்டு வான்வழி பறந்து சென்று, புகாருக்கு தெற்காக முப்பது யோசனைத் தூரத்தில் வைத்துத் திரும்பும். அத்தோடு நில்லாமல், “விடியட்டும் அவளை என் கையில் கொணர்வேன்” என உறக்கம் வராமல் கிடந்த உதயகுமாரன் முன் தோன்றி அரசனின் கடமையை நினைவூட்டி,”தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த அவத்திறம் ஒழிக” என எச்சரித்து அகலும்.

அடுத்து உவவனம் செல்லும் அத் தெய்வம் அங்கு களைத்து உறங்கும் சுதமதியை எழுப்பி இந்திரவிழா காணப் புகாருக்கு வந்த தான் வேறு பொறுப்புக்களை மெற்கொள்ள வேண்டிய தேவை வந்ததை விளக்கும். “மணிமேகலையை புத்த தேவனின் அற வழியில் ஆற்றுப்படுவதற்கான ‘ஏது’ முதிர்ந்துளது. அதனால் அவளை மணிபல்லவத் தீவில் கொண்டு வைத்துள்ளேன். அங்கவள் முற்பிறப்புணர்ந்து இன்றிலிருந்து ஏழாம் நாள் திரும்புவாள். அன்று இங்கு நிகழ இருக்கும் ‘ஏதுக்கள்’ பல உள்ளன” என்றுரைத்து நீங்கும்.

உவவனத்திலிருந்து சுதமதி மாதவியின் இல்லம் நோக்கிச் செல்லும் வழியில் புகார் நகரின் அந்த இரவு நேரத்தை ஒரு பெருங் காப்பியத்திற்குரிய அழகுடன் சாத்தனார் விரித்துரைப்பார் (‘துயிலெழுப்பிய காதை).

அந்த இரவிலும் அந் நகரில் ஆடல் மங்கையர் தம் நடன அரங்குகளில் நாட்டியம் பயின்று கொண்டிருப்பர்; பல்வேறு இசைக்கருவிகள் முழங்கிக் கொண்டிருக்கும்; பரத்தை வீடு சென்று திரும்பிய கணவனிடம் ஊடி அகன்று படுத்திருந்த மனையாள் காமம் மீதூற கோபம் மறைந்து அவனைக் கட்டி அணைவாள்; சிறு தேர் இழுத்து தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறார்களை அவர்தம் செவிலித் தாய்மார்கள் படுக்கைக்கு அழைத்துச் சென்று வாசனைப் புகை காட்டி உறங்க வைப்பர். அடுத்து அந்தப் பெரு நகரில் நடுச்சாமத்திலும் ஒலிக்கும் பல்வேறு ஒலிகள் குறித்தும் சுமார் இருபத்திரண்டு வரிகளில் மிக விரிவாக காப்பியச் சுவையோடு எடுத்துரைக்கப்படும். அதன் பின் சுதமதி சக்கரவாளக் கோட்டம் தாண்டி ஊரம்பலத்தே சற்று இளைப்பாறுவாள். அவள்முன் தோன்றிய கந்திற்பாவை மாதவி, சுதமதி, மணிமேகலை ஆகிய மூவரும் சகோதரிகளாக  முறையே தாரை, வீரை, இலக்குமி என்கிற பெயர்களில் ரவிவர்மன் என்பானின் மகள்களாகப் பிறந்த முற்பிறப்பு வரலாற்றை உரைக்கும்.  அடுத்து சுமார் பதினாறு வரிகளில் புகார் நகரில் இரவு அடங்கி வைகறை விடியும் காட்சி அமையும். இறுதியாக மணிமேகலை இன்னும் வராததால் கவலையுற்றுக் கிடக்கும் மாதவியை அடைந்து நடந்த கதைகளை விளக்குவாள் சுதமதி.

இவற்றை இங்கு இத்தனை விரிவாகச் சொன்னதற்குக் காரணமுண்டு. இங்கே புகார் நகரம் கண்விழிக்கும் அதே நேரத்தில் அங்கே முப்பது காத தூரத்தில் அந்தச் சிறுபெண் மணிமேகலையும் கண் விழிப்பாள். அது இதனின்றும் முற்றிலும் வேறுபட்ட பின்புலம். புகாரில் அது ஒரு விழாக் காலம்; அது ஒரு பெருநகர், தலை நகர், அங்கு காண்பவை ஆடல், பாடல், கொண்டாட்டங்கள், படுக்கையில் முயங்கிக் கிடக்கும் காதலர்கள், சிறு தேர் உருட்டி விளையாடும் சிறார்கள்.. மணிபல்லவத்திலோ நாம் காண்பது முற்றிலும் வேறுபட்ட காட்சிகள். நில அமைப்பு மட்டுமல்ல அனைத்தும் வேறுபட்ட ஒரு சூழலில் கண் விழிக்கிறாள் மணிமேகலை. இந்தப் புதிய சூழல் உணர்த்துவதும், அது காட்டும் வழித்தடமும்தான் இனி அவள் வாழ்வாகப் போகிறது. அவளுக்குக் காட்டப்படும் இந்தப் புதியவாழ்வின் பொறுப்புகளை, அதன் கடமைகளை, இவற்றின் பின்புலமாக இருக்கும் உன்னதங்களை அவள் இனிதான் உணரப் போகிறாள். இந்த முரண்பட்ட இரு சூழல்களை அருகருகே அமைப்பதன் மூலம் (juxtapose) வாசிக்கும் நம்முள்ளும் எல்லாமும் வெறும் தகவல்களாகவன்றி ஒரு அனுபவமாக மலர்ந்து விகசிக்கின்றன.

மணிமேகலை விழித்தெழும் இடம் ஒரு கடற்கரை. அலைகள் சூழ்ந்த அந்தத் தீவில் யாரும் இல்லை. முத்து விளையும் வயல்கள், சிதறிக் கிடக்கும் செம்பவளத் துண்டுகள், ஆங்காங்கு தென்படும் மணற் குன்றுகள், கடல் அலைகள் உருட்டி வந்து சேர்த்துள்ள மரத் துண்டுகள், தனித்து நிற்கும் ஒரு புலிநகக் கொன்றை மரம், ஒரு மலர் சூழ்ந்த பொய்கை என இவைதான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிகின்றன. சுற்றிலும் அலைகளால் முற்றுகை இடப்பட்ட ஒரு பாடிவீட்டுக்குள் அடை பட்டிருப்பது போன்று அவள் உணர்கிறாள், இதுவரை கண்டறியாத, மனித வாடையே இல்லாத அந்தச் சூழலில் ஒரு மர நிழலில் கண்விழித்தெழும் ஒரு சிறு பெண்ணின் உணர்வு எப்படி இருக்கும். அவள் எழுந்த இடம் அவள் உறங்கத் தொடங்கிய உவவனம் இல்லை. உறங்குமுன் அருகிருந்த சுதமதி எங்கே? மலர் கொய்யச் சென்ற நான் இன்னமும் வாராததைக் கண்டு அன்னை மாதவி எத்தனை துயருறுவாள்?

இந்தச் சிந்தனைகள் அலைக்கழிக்க அவள் வாய்விட்டு “ஐயாவோ” எனக் கூவி அழத் தொடங்கினாள். அப்போது நிகழ்ந்தது அந்த அற்புதம். அவள்முன் எழுந்தது புத்த தேவனின் தர்மாசனம். மூன்று முழ அளவிற்கு நிலத்திற்கு மேலுயர்ந்து, நான்கு முழ அளவிற்கு அகன்று வெளிப்பட்டது ஒளி வீசும் அந்த தர்ம பீடிகை. தன்னை மறந்து கைதொழுதாள் மணிமேகலை. கண்களில் திரண்ட முத்துக்கள் அவளது முலைகள் மீது உதிர்ந்தன. இடம் வலமாக புத்த தேவன் அமர்ந்த அந்தத் தர்மாசனத்தைச் சுற்றி வந்து வணங்கினாள். மின்னலொன்று வானிலிருந்து நழுவி மண்ணில் சரிந்ததுபோல வீழ்ந்து வணங்கினாள்.

அப்படி வீழ்ந்து அவள் எழுந்தபோது அவள் தன் முற்பிறப்பு உணர்ந்தவளாய் வெளிப்பட்டாள். மாதவி, சுதமதி, மணிமேகலை மூவரும் முற்பிறவியில் சகோதரிகள் என அவளுக்கும் உணர்த்தப்பட்டது. இலக்குமி என முன்பிறவியில் அறியப்பட்ட மணிமேகலையின் கணவன் இராகுலன் திருமணம் ஆன எட்டாம் நாள் பார்வையாலேயே கொல்லும் திட்டிவிடப் பாம்பு தீண்டி இறந்தான். கணவனோடு அழற் பாய்ந்து உயிர்விட்டாள் இலக்குமி.

இலக்குமி (அதாவது முற்பிறவி மணிமேகலை), அப்பிறவியில் பிறவிப் பெருங்கடல் அறுக்கும் பேறு பெற்றிருக்கவில்லை. அதற்குரிய ‘ஏது நிகழ்ச்சி’ ஏதும் அப்போது முதிரவில்லை. “எனவே நீ அடுத்த பிறவி ஒன்றை எடுப்பாய். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறப்பாய். உனக்கொரு பெருந்துயர் வரும். மணிமேகலா தெய்வம் உன்னை எடுத்து வந்து இந்தத் தீவில் வைக்கும். அங்கு நீ பிறவிப்பிணியிலிருந்து விடுவிக்கும் மருத்துவனான புத்தன் அமர்ந்து அறம் உரைத்த ஆசனத்தின் காட்சி அருளப் பெறுவாய்..” என மணிமேகலைக்கு முற்பிறவி வரலாறு உணர்த்தப்பட்டது.

மணிமேகலைக் காப்பியத்தில் பதினாறு கிளைக் கதைகள் பதிக்கப்பட்டுள்ளன, அவை ஒவ்வொன்றும் ஒரு புத்த நெறியை விளக்குமாறு அமைந்துள்ளன என்றேன்.  இந்திய மதங்கள் எல்லாவற்றிலும் இந்த கர்ம வினைக் கோட்பாடு, அதாவது இறப்புக்குப் பின் மீண்டும் உயிர்கள் மறுபிறப்பு எடுப்பது என்பது ஒவ்வொரு மதத்திற்கும் உரிய தனித்துவங்களுடனும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இத்தொடரில் முதலாவதாக கோதமை அவள் மகன் சார்ங்கலன் ஆகியோரின் கதையைப் பார்த்தோம். பேயைக் கண்ட அதிர்ச்சியில் மரணமுற்ற மகனை உயிர்ப்பித்துத் தருமாறு சம்பாபதி என்னும் தெய்வத்திடம் வேண்டி அழுவாள் கோதமை. தன்னுயிரை எடுத்துக் கொண்டு அவனது உயிரைத் தருமாறு அவள் கோருவாள். ஒரு உயிர் போனது என்றால் போனதுதான். இப்பிறவியில் செய்த நல்வினை, தீவினை சார்ந்து அது இன்னொரு பிறவி எடுத்தே ஆக வேண்டும். இது விதி. எம்மைப் போன்ற தெய்வங்கள் நினைத்தாலும் அதை மாற்ற இயலாது என ஆற்றல் மிகு தெய்வமான சம்பாபதி சொல்லி அகலும்.

பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கான ஏதுக்கள் நிகழும் தகுதி பெற்று அதன் வழிச் செல்லும்வரை ஒருவர் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டும் என்பது ஒரு பவுத்த நம்பிக்கை. மணிமேகலையின் முற்பிறவிக் கதையைச் சொல்லி வரும்போதும் சாத்தனார் அப்பிறவியில் பிறப்பறுத்தற்குரிய ஏதுக்கள் நிகழாததால் இப்போது மணிமேகலையாய் மறு பிறவி எடுக்க வேண்டியதாயிற்று என்பதை வற்புத்துவது கவனிக்கத் தக்கது.

தன் முற்பிறவி உணர்ந்த மணிமேகலை அப்பிறவியில் தன் கணவனாக அமைந்த இராகுலன் இப்பிறவியில் எங்குளன் எனக் கேட்கும்போது மணிமேகலா தெய்வம் தோன்றி  இப்பிறவியில் அவன்தான் உதயகுமாரன் எனத் தெளிவுறுத்தும். அது மட்டுமல்ல முற்பிறவியில்  மணிமேகலை விண்ணிலிருந்து இறங்கிய சாது சக்கரன் என்கிற முனிவனுக்கு அமுதூட்டிய நல்லறத்தின் பயனாகப் பிறவி அறுக்கும் பேறுடையதாக இப்பிறவி அவளுக்கு வாய்த்துள்ளது என்பதையும் விளக்கும். “இப்பிறவியில் உதயகுமாரன்பால் உன் மனம் சென்றால் உனக்கு வாய்த்த இந்த நற்பேற்றை நீ இழந்தவள் ஆவாய். மிக உயர்ந்த நெல் வித்தொன்று வெங்களர் நிலத்தில் வீழ்ந்து பாழாவதற்கொப்ப அது முடியும். நீ அறத்தின் வித்து. நீ அப்படிப் பாழாகக் கூடாது. நீ நல்வழியில் உறுதிப்பட வேண்டுமென்றுதான் இங்கு கொணர்ந்தேன்” என தெய்வம் அவளுக்கு விளக்கும்.

“முற்பிறவியில் உன் தமக்கையர் இருவரும் ஒரே ஆடவனை மணந்தனர். அவர்கள் அப்பிறவியில் புத்த தேவனின் பாதங்கள் படிந்த பாதபங்கய மலையத் தொழும் பாக்கியம் பெற்றதனால் இப்போது மாதவியாகவும், சுதமதியாகவும் பிறந்து உன்னோடும் வாழும் பேறு பெற்றனர்” என்பதையும் சொல்லி முடிக்கும்.

 

(அடுத்த இதழில் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே எனும் பவுத்த அறம் மணிமேகலையில் வெளிப்படுதல்)