திருநங்கையரின் பாடுகள்

திருநங்கையருக்கு இன்று அரசு ஏற்பும், சமூகத்தில் ஒரு மரியாதையும் ஏற்படத் தொடங்கியுள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கூவாகம் ‘அரவான் களபலி’ விழாவிற்கு நேரடியாகச் சென்று ஒரு அற்புதமான கட்டுரையை இனிய நண்பர் அருணன் ‘நிறப்பிரிகை’க்கு எழுதித் தந்தார். அநேகமாக சிற்றிதழ் ஒன்று திருநங்கையர் குறித்த கட்டுரை ஒன்றை வெளியிடுவது அதுதான் முதல்முறை என நினைக்கிறேன். ‘நிறப்பிரிகை’ சாதித்த பல முதற் காரியங்களில் இதுவும் ஒன்று.

ஆனால் திருநங்கையருக்கு ஏற்பட்டுள்ள சமூக ஏற்பு இன்னும் மிகவும் தொடக்க நிலையில்தான் உள்ளது. அவர்களுக்குள்ள பிரச்சினைகள் ஏராளம். இன்னும் அவை சரியாக எதிர்கொள்ளப்படவும் விவாதிக்கப் படவும் இல்லை எனத்தான் நினைக்கிறேன்.

#####
வழக்குரைஞர் மதுரை ரஜினி அவர்கள் ஒரு வாழ்நாளை பல்வேறு விளிம்பு நிலையினர், சிறுபான்மையினர், தலித்கள் குறிப்பாக ஆக ஒடுக்கப்பட்ட அருந்ததியர் ஆகியோர் மத்தியில்அர்ப்பணித்துச் செயல்ட்டு வருகிறார். தன்னலம் கருதாது உடல் உழைப்பை மட்டுமின்றி நிதி ஆதாரங்களையும் செலவிட்டு அவர் ஆற்றி வரும் பணிகள் அளப்பரியன. இதை மனதாரச் சொல்கிறேன்.

அவர் நெருக்கமாக உறவாடும் விளிம்பு நிலைப் பிரிவினரில் திருநங்கையர் முக்கியமானவர்கள். இரண்டாண்டுகள் முன் திருநங்கையர் குறித்து மதுரையில் அவர் ஏற்பாடு செய்த நிகழ்வொன்றிற்கு அவ்வளவு திருநங்கையர் திரண்டிருந்தனர். அவர்கள் எல்லோருக்கும் ரஜினி அன்பிற்குரிய “அக்கா”.

ரஜினி திருநங்கையருடனான தனது அனுபவங்கள் குறித்துச் சொல்பவற்றில் பல நமக்குக் கண்ணீர் வரவழைக்கக் கூடியவை. இப்படியுமா என நம்மை வியக்க வைப்பவை.

ஒரு திருநங்கை மதுரையில் ஓரளவு வசதிமிக்க வணிகக் குடும்பத்தில் பிறந்தவள். அவள் திருநங்கையாகத் தன்னை அறிவித்துக் கொண்டபின் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாள். அவளது பெற்றோருக்கும் அண்ணன்மார்களுக்கும், குறிப்பாக அவளது அண்ணியருக்கும் அவள் ஒரு அவமானம்.

ஒருநாள் அந்தத் திருநங்கை அவசரமாக ரஜினியைத் தேடி வந்துள்ளாள். கண்கள் கலங்க அவள், “அக்கா, அம்மா சாகக் கிடக்கிறாங்களாம். சேதி வந்திருக்கு. சாகுற முன்னாடி நான் ஒரே ஒரு தடவை பார்க்கணும். அவங்க என்னை விட மாட்டாங்க..நீங்கதான் அக்கா ஏதாவது செய்யணும்….”

ரஜினி அந்த வீட்டுப் பஞ்சாயத்தில் பலமுறை ஈடுபட்டவர். தயக்கத்தோடு, “அவங்க எங்கடி உன்னை விடப் போறாங்க..” எனச் சொன்ன போதும் அந்தத் திருநங்கையின் நிலையைக் கண்டு உடனடியாகத் தன் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவளை அழைத்துக் கொண்டுஅவர்கள் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

தூரத்தில் இவர்களைப் பார்த்த உடனேயே அந்தத் திருநங்கையின் தந்தை வெளியே ஓடி வந்து, “வக்கீலம்மா, ஒங்களுக்குப் பலதடவை சொல்லிட்டேன். அவனை அழைச்சிட்டு வந்து எங்க மானத்தை வாங்காதீங்கன்னு. அவனை முதல்ல இங்கேருந்து அழைச்சிட்டுப் போங்க. அவன் அண்ணங்காரங்க யாராவது கண்ணுல பட்ட கொன்னுடுவானுங்க..” என சத்தம் போட்டுள்ளார். ரஜினி பொறுமையாக அவரிடம், இப்படி சாகக் கிடக்கிற நேரத்துல எல்லாம் பேசாதீங்க, ஒரே ஒரு தடவை பாத்துட்டுப் போகட்டும் என விளக்கியுள்ளார். அவர் பிடிவாதமாக மறுக்க, பின் சற்றுக் கறாராக ரஜினி அவரிடம் இது அந்தத் திருநங்கையின் உரிமை நீங்க தடுக்கமுடியாது எனச் சொல்லியுள்ளார்.

“ஏம்மா இப்பிடி என் உயிரை வாங்குறீங்க. சரி, அவனை இங்கேயே விட்டுட்டு போயி அவன் அம்மாகிட்ட கேளுங்க. அவ சரின்னா அழைச்சிட்டுப் போங்க..” என அந்தப் பெரியவர் கூறியுள்ளார்.

உள்ளே அந்த அம்மை மரணப் படுக்கையில் இருந்துள்ளார். ரஜினி அருகே சென்றவுடன் உற்று நோக்கிவிட்டுக் தாரை தாரையாகக் கண்ணீர் விட்டுள்ளார். மரணப் படுக்கையிலும் ரஜினி விளக்கு முன்னே அவர் எல்லாவற்றையும் புரிந்து கொண்டுவிட்டார். “வேணாம், வேணாம்..” எனச் சைகை காட்டியுள்ளார். திருநங்கையின் அண்ணிமார்களைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

அவரது கட்டிலில் அமர்ந்து மெதுவாக அவரிடமும் அண்ணியரிடமும் பேசி அனுமதி பெற்றுப் பின் வெளியே சென்று அந்தத் திருநங்கையை அழைத்து வந்துள்ளார்.

தாயும் மகளும் சந்தித்த அந்தக் கணம்.. பெரும் ஓலமிட்டுத் தாயின் மேல் விழுந்து அந்தத் திரு நங்கை அழுது புலம்பிய அந்தக் காட்சி… தாயும் மகளும் தழுவிக் கிடந்த அந்தக் கோலம்…

நேற்று முன்தினம் அதை விவரித்தபோதும் ரஜினியின் கண்கள் கலங்கின.
#####

அதே திருநங்கையுடன் ரஜினிக்கு இன்னொரு அனுபவம். சுமார் பத்தாண்டுகளுக்கு முன் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் அவளுக்குப் பால் மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

இப்போது ரஜினியிடம் அவள் ஒரு புகார் செய்துள்ளாள். தனக்கு சரியாக அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை எனவும் இழப்பீடு கோரி வழக்குத் தொடர வேண்டும் எனவும் கேட்டுள்ளாள்.

இது குறித்த technical விவரங்கள் தனக்குத் தெரியவில்லை எனவும், முதலில் நிர்வாகத்திடம் பேசிப் பார்ப்போம் எனவும் ரஜினி கூறியபோது, தனக்கு இழப்பீடு தராவிட்டாலும் பரவாயில்லை, பதிலாக தனக்கு ஒரு செயற்கை சிலிகான் மார்பு பொருத்தித் தந்தால் போதும் எனவும் கூறியுள்ளாள். தன்னை ஒருவன் திருமணம் செய்து கொள்வதாகச் சம்மதித்துள்ளான் எனவும், அதற்கு முன் இந்த மார்பு பொருத்தும் சிகிச்சையைச் செய்ய வேண்டும் எனவும் அந்தத் திருநங்கை கூறியுள்ளாள்.

ரஜினியை மதுரையிலுள்ள அனைவருக்கும் தெரியும். தன்னலம் கருதாது நூறு சதம் நேர்மையாக செயல்படுபவர் எனவும் அவர்மீது எல்லோருக்கும் மரியாதை உண்டு.

முதலில் அந்த அறுவை சிகிச்சை செய்த மருத்துவரைப் போய்ப் பார்த்துள்ளனர்.

அந்தத் திருநங்கையைப் பார்த்தவுடனேயே அந்த டாக்டர் டென்ஷன் ஆகியுள்ளார். “டேய்.. (திருநங்கையின் பூர்வப் பெயரைச் சொல்லி) மறுபடியும் வந்துட்டியாடா? ஒன்ன இங்க வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கன்ல.. மேடம், நீங்க எல்லாம் ஏன் மேடம் இவனைக் கூட்டிட்டு வர்றீங்க. இவன் பொய் சொல்றான் மேடம். எல்லாம் சரியாத்தான் செஞ்சிருக்கன் மேடம். டேய் ஏறி அந்தப் பெஞ்சில படு. நான் எக்ஸ்ப்ளெய்ன் பண்றேன்..” எனக் கத்தியுள்ளார்.

“அதெல்லாம் வேணாம் டாக்டர். இப்ப அது கூட பிரச்சினை இல்ல. அவளுக்கு இந்தச் செயற்கை மார்பு..” எனச் சொன்னவுடன் அவர், “அதுக்காகத்தான் இவன் பொய் சொல்றான். அதெல்லாம் வேற டிபார்மென்ட். எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்ல… போய் நீங்க டைரக்டரைப் பாருங்க….” என முடித்துக் கொண்டுள்ளார்.

மீனாட்சி மிசன் மருத்துவமனையின் தலைவரும் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான டாக்டர் சேதுராமனிடம் ரஜினி தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது வழக்கம்போல அவர் ரஜினியை அன்போடு விசாரித்துள்ளார். ரஜினி இந்தப் பேச்சைத் தொடங்கியவுடன், “ஒ ! அவனா?, ரஜினிம்மா, அவன் பொய் சொல்றாம்மா. பத்து வருஷத்துக்கு முன்னாடி ஆபரேஷன் செஞ்சது. இவ்வளவு நாள் கழிச்சு வந்து இப்பிடிச் சொன்னா அது சரியா இருக்குமா? நானும் பலதடவை சொல்லிட்டேன். ஆபரேஷன் பண்ண டாக்டரும் எல்லாம் சரியாத்தான் இருக்குங்கிறாரு.. இப்ப ஒண்ணும் பண்ண முடியாதும்மா.. ” எனக் கூறியுள்ளார்.

ரஜினி இந்த மார்பு பொருத்தும் கோரிக்கையை வைத்தபோது அவர், “என்னம்மா இது. ம்…. சரி. நீங்க ஒரு ஒரு அரை மணி நேரம் கழிச்சு போன் பண்ணுங்க..” என்றுள்ளார்.

அரைமணிக்குப் பின் தொடர்பு கொண்டபோது,

“ரஜினிம்மா, நான் இப்ப ஹாஸ்பிடல் நிர்வாகத்த மகன்ட்ட ஒப்படைச்சிட்டேன். எல்லாம் அவர்தான் பாக்குறார். நான் இப்பிடி ஏதாவது ஏழை பாழைங்களுக்கு உதவி செய்யனும்னு தலையிட்டா அவங்க எனக்கு அனுமதிச்சிருக்குற தொகை 25,000 ரூபாதான். இந்த ஆபரேஷனுக்கு செயற்கை மார்பு 25,000 த்திலேருந்து 1,25,000 ரூபா வரைக்கும் இருக்கு. என்னால ஒன்னுதான் செய்ய முடியும். அந்த 25,000 ரூபா மார்பைப் பொருத்தி ஃப்ரீயா ட்ரீட்மன்ட் குடுக்கச் சொல்றேன். ஆனா நீங்கதான் பொறுப்பெடுத்துக்கணும். அவன நம்ப முடியாது. சொன்ன பேச்சைக் கேக்கமாட்டான்.” எனக் கூறியுள்ளார்.

ரஜினி அந்தத் திருநங்கையிடம் விஷயத்தைச் சொன்னபோது அவள் பிடிவாதமாக மறுத்துள்ளாள். அந்த 25,000 ரூபாய் மார்பு நீண்ட காலத்திற்குப் பயன் தராது எனவும், ஏமாற்றமுற்றுத் தன் வருங்காலக் கணவன் தன்னைக் கைவிடுவதற்கு அது காரணமாகிவிடும் எனவும் 1,25,000 ரூபாய் செலவிலேயே தனக்குச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் எனவும் கறாராகச் சொல்லியுள்ளாள்.

ரஜினி பொறுமையாக அவளிடம், “அதுக்கு மேலே அவங்க செலவு பண்ணத் தயாரா இல்ல. நம்மளாலையும் இப்ப உடனே அவ்வளவு செலவு செய்ய முடியாது. உன்னக் கட்டிக்கப் போறவர அழைச்சிட்டு வா. அவருக்குக் கவுன்சிலிங் கொடுப்போம். இந்த விஷயத்தை எல்லாம் அவர் முழுசாப் புரிஞ்சுகிட்டுக் கல்யாணம் பண்ணிக்கிறதுதான் நல்லது” என விளக்கியுள்ளார்.

அதை அவசரமாக மறுத்த அந்தத் திருநங்கை, “அய்யோ அதெல்லாம் வேணாங்க்கா. அப்புறம் அந்த ஆளு கல்யாணமே வேணான்னு சொல்லிடுவாரு..” என அவசரமாகக் கூறி அகன்றுள்ளாள்.

சில மாதங்கள் கழித்து வந்த அந்தத் திருநங்கை, “அக்கா, எனக்கு அந்த 25,000 ரூபா வுலேயே அதை வச்சிடச் சொல்லுங்கக்கா..” என்றுள்ளாள்.

டாக்டர் சேதுராமனிடம் தொடர்பு கொண்டு பேசி, தான் பொறுப்பெடுத்துக் கொள்வதாக வாக்குறுதியும் அளித்து அந்தத் திருநங்கையை ரஜினி மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமத்தித்துள்ளார். ஆபரேஷன் தேதியும் குறித்தாயிற்று.

ஆபரேஷனுக்கு முதல்நாள் மருத்துவமனையிலிருந்து ரஜினிக்கு ஒரு அழைப்பு.

அந்தத் திருநங்கையைக் காணவில்லையாம்.

ரஜினி அலைந்து திரிந்து அவரைக் கண்டுபிடித்துக் கேட்டபோது, ” எனக்கு அந்த 25,000 ரூபா இது வேணாம்க்கா. அந்த 1,25,000 ரூபாதுதான் வேணும்..” எனக் கூறி அகன்றுள்ளார்.
#####

திருநங்கையருக்கு இப்போது பல நலத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் பால்மாற்று அறுவை சிகிச்சைகளும் இலவசமாகச் செய்யப்படுகின்றன. முழு விவரமும் தெரியவில்லை. விசாரிக்க வேண்டும். பால்மாற்று மருத்துவத்தின் ஓரங்கமாக மார்பு அமைக்கும் சிகிச்சையும் செய்யப்பட்டு நல்ல தரமான செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட வேண்டும்.

இது குறித்து பொதுநல வழக்கு ஒன்றையும் ரஜினி தொடுக்க உள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக இத்தகைய சிகிச்சைக்காக வருபவர்களின் உணர்வுகளையும், பாலியல் தேர்வையும் மத்தித்து அனைவரும் அவர்களை எதிர்கொள்ள வேண்டும்.

எனக்கும் அந்தத் திருநங்கையைத் தெரியும். இந்தக் குறிப்பு முழுவதிலும் உள்ள உரையாடல்களைக் கவனித்தால் ஒன்றை நீங்கள் உணர இயலும். அவளது பாலியல் தேர்வை ரஜினியும், சக திரு நங்கையரும் தவிர வேறு யாரும் மதிக்க வில்லை. அந்தத் திருநங்கையை “அவன்” எனவே அவர்கள் குறிப்பதையும் அவளது பூர்வாசிரமப் பெயராலேயே அவள் அழைக்கப்படுவதையும் கவனிக்க வேண்டும். (அதனாலேயே நான் இந்தக் குறிப்பு முழுவதும் அந்தத் திருநங்கையை ஒருமையில் “அவள்” எனக் குறிப்பிட்டுள்ளேன்).

திருநங்கையர் குறித்த சமூக மதிப்பீடுகளில் இன்னும் பெரிய அளவு மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

மேலப்பாளையம் மற்றும் நெல்பேட்டையில் வாழும் அடித்தள முஸ்லிம்கள்

மூன்று நாட்களாக மேலப்பாளையம் (திருநெல்வேலி), நெல்பேட்டை (மதுரை) பகுதிகளில் வாழும் அடித்தள முஸ்லிம்களுடன் நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. என்னுடன் சுகுமாரனும் ரஜினியும் இருந்தனர். மேலப்பாளையத்தில் எங்களுடன் தோழர்கள் பீட்டர், ரமேஷ், ஆதித் தமிழர் பேரவை சங்கர் மற்றும் வழக்குரைஞர் அப்துல் ஜாபர் சேர்ந்துகொண்டனர். நெல்பேட்டையில் பழனிச்சாமி, வழக்குரைஞர்கள் சையத் அப்துல் காதர், யூசுஃப் ஆகியோர் எங்களுடன் இருந்தனர்.

சச்சார் அறிக்கையில் இந்திய முஸ்லிம்களின் நிலை இங்குள்ள தலித்களின் நிலையைக் காட்டிலும் பல அம்சங்களில் மோசம் எனக் கூறியுள்ளதைத் தமிழகத்தில் வாழும் நம்மால் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள இயலாது. அதுவும் என்னைப் போன்ற தஞ்சை மாவட்டக் காரர்களுக்கு அது புரிவது கடினம். இங்குள்ள அய்யம்பேட்டை, பாபநாசம், ராஜகிரி, கூத்தாநல்லூர், அத்திக்கடை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் ஓரளவு முஸ்லிம்கள் வசதியாக இருப்பார்கள். முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் முஸ்லிம்கள் நடத்துகிற தரமான பள்ளிகளும் உண்டு.

உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிஹார் முதலான மாநிலங்களுக்குச் சென்று பார்க்கும் போதுதான் சச்சார் கூறியதை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. கைவினைத் தொழில்கள், ரிக்‌ஷா இழுப்பது, இரும்பு அடிப்பது முதலான கடுமையான பணிகளில் ஈடுபட்டுள்ள வறுமை வயப்பட்ட முஸ்லிம்களை அங்குதான் நிறையக் காண முடிந்தது. அஸ்ஸாமில் வன்முறையாக இடம்பெயர்க்கப்பட்ட மூன்று இலட்சம் முஸ்லிம்களின் அகதி வாழ்வு கண்ணீரை வரவழைத்தது.

மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியனவும் இது போல மிகவும் அடித்தள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் தான். சுமார் ஒன்றரை இலட்சம் முஸ்லிம்கள் அங்கிருப்பதாகச் சொன்னார்கள். நெருக்கமான வீடுகள், குண்டும் குழியுமான வீதிகள். கல்விக்குப் பெயர்போன பாளையங்கோட்டையின் ஒரு பகுதியான மேலப்பாளையத்தில் முக்கிய கல்வி நிலையங்கள் எதுவும் கிடையாது. நிறைய பீடிக் கம்பெனிகள் உள்ளன. அவற்றின் முதலாளிகள் பெரும்பாலும் மலையாளிகள். பீடி சுற்றுவது மேலப்பாளையத்தார்கள்.

மதுரையின் மையப் பகுதியில் அமைந்துள்ள நெல்பேட்டையும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு பகுதி. அங்கும் இதே நிலைதான். பாரம்பரியமான சுங்கம் பள்ளிவாசலிலிருந்து கூப்பிடு தூரத்தில் அமைந்த ஒரு மிகக் குறுகலான வீதியில் ஒரு சிறு அறையில்தான் நாங்கள் உட்கார்ந்து பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். சன்னலுக்கு வெளியே ஒரு மாட்டுக் கறிக் கடை. கறிக் கழிவுகள் ஒரு கூடையில் ஈ மொய்த்த வண்ணம் கிடந்தன. நிணம் பொசுங்கும் நாற்றம் காற்றில் கலந்து வந்து கொண்டிருந்தது. கசாப்புக் கடை, அடுப்புக் கரி விற்பது, ஆட்டோ ஓட்டுவது.. இப்படியான வேலைகள்தான் பலருக்கும்.

இரண்டு பகுதிகளிலுமே கல்வி அறிவு வீதம் மிக மிகக் குறைவு என்பது பார்த்தாலே தெரிந்தது. உண்மை வழக்குககளில் சம்பந்தப்பட்டவர்கள், பொய் வழக்கு போடப்பட்டவர்கள், முதலில் ஒரு உண்மை வழக்கில் சிக்கிப் பின் தொடர்ந்து பல பொய் வழக்குகளில் சிக்கவைக்கப் பட்டவர்கள் எனப் பலரையும் சந்தித்தோம். அவ்வளவு பேரும் எதையும் மறைக்காமல் எங்களிடம் உண்மைகளையே சொன்னார்கள். ஓரளவு எங்களால் ஊகிக்க முடியும். யார் உண்மைகளைச் சொல்கின்றனர், யார் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார்கள், யார் மிகைப்படுத்திச் சொல்கிறார்கள் என்பது.. எங்களிடம் பேசிய அத்தனை பேருக்கும் தங்கள் வழக்கு விவரங்கள், அல்லது தம் மீதான போலீஸ் கொடுமைகள் எதையும் சரியாகச் சொல்லக் கூடத் தேரியவில்லை. அத்தனை அப்பாவிகள் என நான் சொல்வது இதை வாசிக்கும் பலருக்கும் புரியும் என எனக்குத் தோன்றவில்லை.

‘மேலப்பாளையம் முஸ்லிம்கள்’ என்றொரு சிறு நூலை பேராசிரியை சாந்தி எழுதியுள்ளார். சாந்தி, நண்பர் லெனா குமாரின் மனைவி. சுமார் பத்து ஆண்டுகள் இருக்கலாம். சாந்தி என்னை முன்னுரை எழுதக் கேட்டுக்கொண்டார். அற்புதமான ஒரு இன வரைவியல் நூலது. யாரோ ஒரு ஆய்வாளரின் உதவியாளராக அடிக்கடி மேலப்பாளையம் சென்று வந்தவருக்கு அம்மக்களோடு நெருக்கமான உறவு ஏற்பட்டுவிட்டது. மே.பா முஸ்லிம்களின் இனவரைவியற் கூறுகளைத் தொகுத்து எழுதத் தொடங்கினார். ஆனால் அது, அவர்களின் உணவு, உடை, நம்பிக்கைகள், பிறப்பு, இறப்புச் சடங்குகள் என்கிற அளவில் தொகுப்பதோடு நின்றுவிடவில்லை, அவர்களைக் காவல்துறை எவ்வாறு சுரண்டுகிறது, கொடுமைப்படுத்துகிறது என்பதை நேரில் கண்டு மனம் கலங்குகிறார். அவற்றையும் பதிவு செய்கிறார். மொத்தத்தில் அரசியல் பிரக்ஞையுடன் கூடிய ஒரு அற்புதமான இன வரைவியல் நூலாக அது உருப்பெற்றது.

சித்தரஞ்சன் என்றொரு காவல்துறை அதிகாரி பற்றி சாந்தி அந்நூலில் குறிப்பிடுவார். அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வார். உன் மகனை தீவீரவாதக் கேசில் சிக்க வைப்பேன் எனச் சொல்லி அப்பாவி முஸ்லிம்களிடம் காசு பறிப்பதில் சமர்த்தர் அவர். அப்போது சாந்தி ஒரு ஆய்வு உதவியாளர் மட்டுமே. ஒரு பெண்ணாகவும், எந்தப் பெரிய அரசியல் பின்புலமும் இல்லாமல் இப்படிப் போலிஸ் அதிகாரியின் பெயரை எல்லாம் குறிப்பிட்டு எழுதுகிறாரே, ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்வது, பேசாமல் பெயரை நீக்கிவிடச் சொல்லலாமா என ஒரு கணம் நினைத்தேன். பிறகு, சரி, ஒரு பெண், தன் கண்முன் நிகழும் சமூக அநீதியைப் பொறுக்க இயலாமல் எழுதுகிறார், அதை ஏன் நாம் முடக்க வேண்டும், அவரது அந்த அழகான துணிச்சலை நாம் ஏன் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என நினைத்து, ஒன்றும் பேசாமல் முன்னுரையை எழுதிக் கொடுத்தேன்.

மேலப்பாளையம் போகுமுன் சாந்தியின் நூலை ஒருமுறை படித்துவிடலாம் எனத் தேடினேன். யாரிடம் கொடுத்தேனோ கிடைக்கவில்லை. திருநெல்வேலியில் இறங்கியவுடன் லெனா குமாரிடம் தொடர்பு கொண்டு பெற முயற்சித்தேன். அவர் ஏதோ புதுச்சேரி போய்விட்டாராம். சித்தரஞ்சன் பெயர் நினைவில் இருந்தது. எப்படி இருக்கிறார் அந்த அதிகாரி எனக் கேட்டேன். அவர் ரிடையர் ஆகி கடும் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார் என்றார் ஜப்பார்.

முஸ்லிம் அமைப்புகள் ஏதும் அந்நூலை அநுமதி பெற்று மறு வெளியீடு செய்யலாம்.

நெல்பேட்டைக்குள் நாங்கள் நுழைந்தபோது, அடடே ரஜினி அக்கா என இரண்டு மூன்று பேர் வந்து ரஜினியைச் சூழ்ந்து கொண்டனர். இப்போது நல்ல பல இளம் முஸ்லிம் வழக்குரைஞர்கள், முஸ்லிம்கள் மீது போடப்படும் வழக்குகளை எடுத்து நடத்துகின்றனர். ஒரு பதினைந்தாண்டுகளுக்கு முன் இதுபோன்ற பல வழக்குகளை ரஜினிதான் நடத்தியுள்ளார். தடா சீனி, இப்போது பரிசறிவித்துத் தேடப்படும் போலீஸ் பக்ருதீன் உட்படப் பலரது வழக்குகளை நடத்தியவர் ரஜினி. ஒரு சுவாரசியமான சம்பவத்தைச் சொன்னார். அசோக் சிங்கால் உட்படப் பல இந்துத்துவப் பேச்சாளர்கள் பேசும் கூட்டம் ஒன்று மதுரையில் நடந்துள்ளது. மிக மோசமாகவும் ஆபாசமாகவும் முஸ்லிம்களைப் பேச்சாளர்கள் ஏசியுள்ளனர். கோபமடைந்த சிலர் ஓடி வந்து ரஜினியிடம் கூறியுள்ளனர். ரஜினி உடனே கூட்டம் நடக்கும் இடத்திற்கு விரைந்து ஒலிபெருக்கி ஒன்றின் அருகில் நின்றுகொண்டு ஒரு டேப் ரிக்கார்டரில் ஏச்சுக்களைப் பதிவு செய்துள்ளார். அப்போது மழை தூறி இருக்கிறது. சுடிதார் துப்பட்டாவை எடுத்துத் தலைமீது போட்டுக் கொண்டு ஒலிப்பதிவு வேலை நடந்திருக்கிறது. அவ்வளவுதான், முஸ்லிம் பெண் தீவிரவாதி கூட்டத்தில் தாக்குதல் நடத்த வந்துள்ளதாகச் செய்தி பரவி கூட்டம் அப்படியே ரஜினியை ஆத்திரத்துடன் சுற்றிக் கொண்டுவிட்டது. நல்ல வேளை அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன் ரஜினிக்குத் தெரிந்த காவல்துறை அதிகாரி காவலர்களுடன் ஓடி வந்து ரஜினியைப் போலீஸ் வேனில் ஏற்றிக் காப்பாற்றியுள்ளார். பிறகு அந்த அதிகாரியே மேடை ஏறி மைக்கைப் பிடித்து அது தீவிரவாதி இல்லை எனப் பலமுறை சொன்னபின்புதான் ஆவேசம் அடங்கி இருக்கிறது.

சென்ற ஆண்டு திருப்பரங்குன்றத்தில் வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட பின்பு தாங்கள் எவ்வாறெல்லாம் காவல்துறையால் இழுத்துச் செல்லப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டோம் என்பதைக் கசாப்புக் கடையில் வேலை செய்யும் ஷேக் அலாவுதீன், மினி ஆட்டோ டிரைவர் முகம்மது யாசின், அ.தி.மு.க கவுன்சிலர் ஒருவரிடம் உதவியாளராக இருந்த ஜாபர் சுல்தான் முதலானோர் விவரித்தபோது கண்கள் மட்டுமல்ல எங்கள் மனமும் கசிந்தது.

யாரையாவது ஒருவரை இழுத்துச் சென்று அடித்து உதைப்பது. அவரது புகைப்படம், கைரேகை இதர அங்க அடையாளங்களைப் பதிவு செய்வது. அவரது செல்போனைப் பிடுங்கி அதிலுள்ள தொடர்பு எண்கள் எல்லாவற்றையும் கணினியில் ஏற்றிக் கொள்வது, பின் அந்த ஒவ்வொரு எண்ணுக்கும் உரியவரை வரவழைத்து அவர்களியும் இதேபோல நடத்துவது என்பதாகக் கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட அப்பகுதி ஆண்கள் எல்லோரது ‘ப்ரொஃபைல்களும்’ எடுக்கப்பட்டுவிட்டன என்றார் அப்துல் காதர். சுமார் எவ்வளவு பேர்கள் இருக்கும் என்றேன். 600 பேர்கள் வரை இருக்கலாம் என்றார். எண்ணிக்கை துல்லியமாக இல்லாததால் எங்கள் அறிக்கையில் “நூற்றுக்கணக்கானோர் இப்படிப் ப்ரொஃபைல் செய்யப்பட்டுள்ளனர்” எனப் பதிவு செய்தோம். முஸ்லிம்கள் மத்தியில் இப்படியான racial profiling செய்ய்யப்படுவது எத்தனை பேருக்குத் தெரியும்?

தனியாக வாழும் பெண்களையும் ஏ.டி.எஸ்.பி மயில்வாகனன் மற்றும் இன்ஸ்பெக்டர் மாடசாமியின் கீழிருந்த சிறப்புக் காவற் படை விட்டு வைக்கவில்லை.மறைந்த பிர்தவ்சின் மனைவி ஆமினா பேகம், முகம்மது ஹனீபாவின் மகள் சகர் பானு ஆகியோர் தாங்கள் விசாரிக்கப்பட்டதை வேதனையோடு பகிர்ந்து கொண்டனர். சகர் பானுவையாவது தேடப்படும் பிலால் மாலிக்கைத் தெரியும் என்பதற்காக விசாரித்தனர் என ஆறுதல் கொள்ளலாம். ஆமீனா பேகத்தின் கதை பரிதாபமானது. நாங்கள் பார்த்தவர்களுள் ஆமீனா ஒருவர்தான், தன்க்கு நேந்ததைச் சீராகச் சொல்லக் கூடியவராக இருந்தார்.

கணவனை இழந்த ஆமீனா தன் மூன்று சிறு பிள்ளைகளை அடுப்புக் கரி வியாபாரம் செய்து காப்பாற்றி வருகிறார். ஆண் துணை இன்றித் தனியாக வாழ்கிறார் எனத் தெரிந்தவுடன் காவல்துறையினர் இவரை அணுகி அவர்களுக்குத் தகவலாளியாக (informer) இருக்கக் கட்டாயப் பாடுத்தியுள்ளனர் முதலில் மாரியப்பன் என்றொரு அதிகாரி வந்துள்ளார். ஆமினா உறுதியாக மறுத்துள்ளார். அப்புறம் மீண்டும் உன்னை விசாரிக்க வீட்டுக்கு வரப்போகிறோம் எனக் கூறியுள்ளனர். நீங்கள் வீட்டிற்கு வர வேண்டாம், நானே வருகிறேன் என ஆமினா கூறி எஸ்.பி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கே மயில்வாகனன், மாடசாமி குழுவினர் சுமார் 40 காவலர்கள் சூழ அவரை விசாரித்துள்ளனர், பெண்களை விசாரிக்கும்போது பெண் காவலர்கள் இருக்க வேண்டும் என்கிற விதியும் மீறப்பட்டுள்ளது. பணம் தருகிறோம் உளவு சொல்ல வேண்டும் என ஆமினாவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆமினா குரலை உயர்த்திச் சத்தம் போட்டுள்ளார். நாந்தான் முடியாதுன்னு சொல்றனே, அப்புறம் ஏன் இப்படித் தொந்தரவு செய்றீங்க எனக் கத்தியுள்ளார். சரிம்மா, சரிம்மா சத்தம் போடாதே, வா, முதல்ல கான்டீன்ல போயி சாப்பிடு எனச் சொல்ல ஆமினா மறுத்துள்ளார். சரி ஆட்டோவில போ எனச் சொல்லி ஒரு நூறு ரூபாய் நோட்டையும் எடுத்து நீட்டியுள்ளனர்.

பிறகு தேசிய அளவில் செயல்படும் மனித உரிமை அமைப்பான என்.சி.எச்.ஆர்.ஓ தலையிட்டு தொல்லை செய்த அதிகாரிகள் மீது private complaint கொடுத்த பின்பு இப்போது பிரச்சினை சற்று ஓய்ந்துள்ளது, நெல்பேட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட வழக்குரைஞர்களான முகமது யூசுப், அப்துல் காதர் சகோதரர்கள் என்.சி.எச்.ஆர்.ஓவில் துடிப்பாகச் செயல்படக் கூடியவர்கள். நானும் சுகுமாரனும் அஸ்ஸாம் சென்றிருந்தபோது தமிழ்நாடு என்றவுடன் பாதிக்கப்பட்ட பலரும் யூசுப்பைத் தெரியுமா எனக் கேட்டனர். அஸ்ஸாம் வன்முறைகள் நடைபெற்றபோது ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சென்று தங்கி பாதிக்கப்பட்ட பலரையும் சந்தித்து விசாரித்து வாக்குமூலங்களைப் பெற்று வழக்கு நடத்த உதவி செய்தவர் அவர்.

பேசிக் கொண்டு வெளியே வந்தபோது சுங்கம் பள்ளிவாசலைச் சுற்றி நான்கு கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுள்ளதைக் கண்டு அதிர்ச்சியுற்றோம். தொழுகைத் தலத்தில் கண்காணிப்புக் காமிராக்களா? திகைத்தோம். நான் அதைப் படம் எடுக்க முயற்சித்தபோது வேண்டாம் சார் எனத் தடுத்தனர். நான் படம் எடுப்பது தடைப் பட்டாலும், நான் படம் எடுக்க முயற்சித்ததை அந்தக் காமரா படம் எடுத்துக் கொண்டது.

முதலில் பள்ளிவாசலுக்கு உள்ளும் வெளியிலும் 18 கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தப்பட்டனவாம். யூசுப் சகோதரர்களைப் போன்றோர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தபோது பள்ளிவாசலுக்குள் பொருத்தப்பட்டிருந்த 14 காமராக்களை எடுத்துவிட்டார்களாம். காமராக்களைப் பொருத்தியது பள்ளிவாசல் நிர்வாகந்தான் என்ற போதிலும், காவல்துறையின் நிர்ப்பந்தம் காரணமாகவே அவை பொருத்தப்பட்டுள்ளன எனப் பலரும் கூறினர். 18 காமராக்களுக்கும் சுமார் 2.5 லட்சம் செலவாகுமாம். பள்ளிவாசல் வரவு செலவுக் கணக்கில் இந்தச் செலவு பதியப்படவில்லை என்பதால் காவல்துறை வாங்கித் தந்துதான் இவை பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றார் ஒருவர்.

எப்படியான போதிலும் இது ஒரு மிக மோசமான முன் உதாரணம். சுங்கம் பள்ளியைக் காட்டி இனி எல்லாப் பள்ளிகளிலும் இப்படிக் கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தபடலாம். இப்படித் தொழ வருபவர்களைக் கண்காணிப்பதைக் காட்டிலும் கொடுமை ஏதுமில்லை. முஸ்லிம் அமைப்புகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியன கிட்டத்தட்ட slum ஏரியாக்கள் என்கிற அளவில்தான் உள்ளன. கல்வி வீதம், நிரந்தர வேலை, சுய தொழில் வாய்ப்பு முதலியன மிகக் குறைவாக உள்ளன. இவற்றின் விளைவான வறுமை, கடன் தொல்லை, வட்டிக் கொடுமைகளும் உள்ளன. இப்படியான பகுதிகளில் சிறு குற்றங்கள், ரவுடியிசம் முதலியன உருவாவதற்கான வாய்ப்புகள் பொதுவில் இருக்கும். எனினும் இது விரல்விட்டு எண்ணக் கூடிய சிறிய அளவில்தான் இருக்கும். பெரும்பாலான மக்கள் அப்பாவிகளாகத்தான் இருப்பார்கள். இங்கும் அப்படியான குற்றச் செயல்கள் இருக்கத்தான் செய்கின்றன. முஸ்லிம்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இங்கு இவை மத நிலைப்பட்டதாகவும் எளிதில் மதச் சாயம் பூசப்படக் கூடியதாகவும் ஆகிவிடுகின்றன. இதை இந்தக் கோணத்தில் அணுகாமல் ‘முஸ்லிம் தீவிரவாதம்’ என்கிற கோணத்திலேயே காவல்துறை அணுகுகிறது. காவல்துறையிடம் பொதிந்துள்ள சிறுபான்மை எதிர்ப்பு மன நிலை இத்துடன் இணந்து கொள்கிறது. சிறிய அளவிலோ பெரிய அளவிலோ முதல் குற்றம் செய்யும் ஒருவரைத் தொடர்ந்து பொய் வழக்குகள், விசாரணைகள், பணப் பறிப்புகள் என்கிற வகைகளில் தொல்லை செய்து வருவதால் அவர்கள் மேலும் குற்றச் செயல்களுக்குத் தள்ளப்படுகின்றனர். இதை ஒட்டி மேலப்பாளையம் போன்ற பகுதிகளை ஏதோ பாயங்கரவாதிகளின் நகரமாகவும், முஸ்லிம் சமுதாயத்தையே “சந்தேகத்திற்குரியதாகக்” கட்டமைப்பதும் நடக்கிறது. ஆக, ஒரு விஷச் சுழல் இவ்வாறு முழுமை அடைகிறது. இன்று விலை கூறித் தேடப்படும் இப்பகுதி “முஸ்லிம் தீவிரவாதிகள்” எல்லோரும் இப்படியாக உருவாக்கப்பட்டவர்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது. ஆமாம் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான், உருவானவர்கள் அல்ல. இவர்கள் அப்படியானதில் நாம் வாழும் இந்தச் சமூகத்திற்குப் பெரிய பொறுப்பு உள்ளது. நம்மையும் சேர்த்துத்தான்.

மேலப்பாளையம், நெல்பேட்டை போன்ற பகுதிகளுக்கு நகரின் பிற பகுதிகளுக்குச் சமமாக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இப்பகுதிகளில் உரிய அளவில் நர்சரி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை கட்டித்தரப்பட வேண்டும். சுய தொழில் வாய்ப்புக்கள், அதற்கான பயிற்சி முதலியன அளிக்கப்பட வேண்டும்.இப்பகுதிகளை ஒட்டி தொழில் வளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பிரச்சினையை முழுமையாக அணுகி அதன் சிக்கல்களை ஏற்றுப் புரிய முயற்சித்தல் அவசியம். நமது ஊடகங்கள், அரசு மற்றும் காவல்துறை ஆகியவற்றின் அணுகல்முறைகள் நிச்சயமாக இந்தத் திசையில் இல்லை.