சேவ் தமிழ் இயக்கம், வைகோ, இராமதாஸ், தமிழ்த் தேசியம் ஒரு குறிப்பு

‘save tamil iyakkam’ (சேவ் தமிழ் இயக்கம்), நான் நேசிக்கிற தமிழ் இயக்கங்களில் ஒன்று. இளைஞர்கள் நிறைந்த இந்த இயக்கத்தில் பெரும்பாலோர் IT professionals என்று அறிகிறேன்.

ஈழத் தமிழர் பிரச்சினைகட்கே இவர்களும் முக்கியத்துவம் கொடுத்து இயங்கினாலும், தமிழ் மக்களுக்கு வேறு சில பிரச்சினைகளும் உண்டு என்பதை ஏற்று சாதிப் பிரச்சினை, குடிசை வாழ் மக்கள் பிரச்சினை, கூடங்குளப் போராட்ட ஆதரவு ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள். ஏதோ இதையும் செய்தோம் என்றில்லாமல் உண்மையான அக்கறையுடன் இவற்றையும் முன்னெடுப்பர்.

பல்லாயிரம் ஊதியம் பெறும் கார்பொரேட் ஊழியர்கள் குறித்தும் கார்பொரேட் பணிக் கலாச்சாரம் குறித்தும் சில கருத்துக்களைச் சில நாட்கள்முன் இப்பக்கத்தில் நான் பதிவிட்டிருந்ததை நண்பர்கள் பார்த்திருக்கலாம். முதலாளியத்தின் அனைத்து ஊழல்களுக்கும் வாரிசாக உள்ள இன்றைய கார்பொரேட்களிடம் கை பொத்தி, மெய்யடக்கிச் சேவகம் புரியும் இவர்கள் என்னாளும் தம் நிறுவனங்களில் நடக்கும் அநீதிகள், ஊழல்கள், மூன்றாம் உலக மக்களின்மீது இந் நிறுவனங்கள் மேற்கொள்ளும் வன்முறைகள் பற்றி ஆகியன குறித்து ஒரு கேள்வியையும் கூட எழுப்பத் தயாராக இல்லாதவர்கள். எழுப்பினால் அடுத்த கணம் என்ன நடக்கும் என உணர்ந்த இவர்கள் தம் மனிதாபிமானத்தைக் காட்ட ‘நல்ல காரியங்களுக்கு’ நன்கொடை அளிப்பார்கள் நன்கொடை அளிப்பார்கள். சமூக நலப் பணி செய்வார்கள், உள்ளூர் அரசுடன் பெரிய அளவில் முரண்படாத வகையில் போராட்டங்களும் நடத்துவார்கள்.

ஆனால் எக்காரணம் கொண்டும் தம் நிறுவனத்தில் நடக்கும் அநீதிகள் குறித்துக் குரல் எழுப்ப மாட்டார்கள். ஒரு சங்கம் அமைக்க முயற்சிக்க மாட்டார்கள். கார்பொரேட் கலாச்சாரத்தில் அதற்கெல்லாம் இடமில்லை. அந்த வகையில் அரசு ஊழியர் சங்கங்கள், வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் இயக்கங்கள் போன்ற அமைப்புகள் அவற்றின் எத்தனையோ குறைகளுக்கும் அப்பால், ஒரு குறிப்பிட்ட அளவிற்குச் சமூகப் பொறுப்புடன் செயல்படுவதையும், தம் துறை சார்ந்த அரசு கொள்கைகளை விமர்சிக்கத் தயங்காததையும், சக ஊழியர்களுக்கு நிர்வாகத்தால் பாதிப்பு ஏற்படும்போது அதை எதிர்த்து நிற்பதையும், பல நேரங்களில் வெற்றி ஈட்டுவதையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

சேவ் தமிழ் இயக்கத்தைப் பொருத்தமட்டில் அவர்களிடமும் இந்தக் குறைபாடுகள் உள்ளபோதும், இவற்றையெல்லாம் தாண்டி, உண்மையான சமூக அக்கறையும், ஏதாவது சமூகத்திற்குச் செய்தாக வேண்டும் என்கிற துடிப்பும் உள்ளவர்கள். பணியிடத்திலும் அநீதிகளை எதிர்க்கிற, தொழிற் சங்கம் அமைத்துப் போராடுகிற வாய்ப்பும் இவர்களுக்கு இருந்திருக்குக்குமேயானால் இவர்களின் பார்வையும் பணிகளும் இன்னும் கூர்மையடையுமே, ஒரு அறம் சார்ந்த அரசியல் விகசிப்பு ஏற்படுமே என நினைத்துக் கொள்வேன். ஆனால் இன்றைய கார்பொரேட் கலாச்சாரத்தில் அதற்கெல்லாம் இடமில்லை.

சரி, அது இருக்கட்டும். இன்று காலை இவ் அமைப்பைச் சேர்ந்த ஒரு தோழி என்னுடன் தொடர்பு கொண்டு உண்ணா நிலைப் போராட்டம் மேற்கொண்டுள்ள தோழர் தியாகு அவர்கள் குறித்து உரிய ஊடகக் கவனம் இல்லாத நிலை குறித்துப் பேசினார். பேச்சு சமீபத்தில் இவர்களின் ‘சேவ் தமிழ் இயக்கம்’ முன்நின்று நடத்திய ‘பன்னாட்டு மாணவர் மாநாடு’ பற்றித் திரும்பியது. இலங்கையில் நடைபெற உள்ள ‘காமன்வெல்த்’ மாநாட்டிற்கு எதிராக நடத்தப்பட்ட இந்தப் “பன்னாட்டு” மாநாட்டில் முக்கியக் கதா நாயகனாக நிறுத்தபட்ட நபர் வை.கோ. அவரை மாநாட்டிற்கு அழைக்கப்போன நாளிலிருந்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களுடன் முகநூல் பக்கங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.

குஜராத் 2002க்குப் பின்னும் மோடிக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றவர் இந்த வைகோ. ‘திராவிட’ என்கிற சொல்லைத் தன் கட்சிப் பெயரில் சுமந்திருந்தாலும் எந்நாளும் இந்துத்துவ விசுவாசத்தைக் கைவிடாதவர். ‘சேவ் தமிழ் இயக்கம்’ சென்ற மாதம் நடத்திய அந்த ஈழ ஆதரவு மாநாட்டிலும்கூட வைகோ, “மதவாதம் குறித்த பிரசினைகளை எல்லாம் கூட இன்று சற்று மறப்போம். ஈழப் பிரச்சினையை முன்னெடுப்போம்” என்கிற பொருள்படப் பேசியுள்ளார்.

இன்று என்னுடன் தொடர்பு கொண்ட தோழியிடம் நான் இதுபற்றிச் சொன்னபோது, “அப்படியெல்லாம் அவர் அங்கே பேசினார்னு யாரும் சொல்லலியே” என்றார். மாநாட்டு வேலைகளில் தீவிரமாக இருந்திருப்பார் போலும். அதோடு தமது மாநாட்டில் முக்கிய பேச்சாளர் இவ்வாறு கூற நேந்தது குறித்த விவாதம் அவர்களுக்குள் நடைபெறவில்லை போலும். விவாதிக்கிற அளவுக்கு இதை அவர்கள் முக்கியமாகக் கருதவில்லை என்றும் கொள்ளலாம்.

இறுதியில் அந்தத் தோழி, மோடியின் நண்பரும், இன்று இந்துத்துவ சக்திகளுடன் தேர்தல் கூட்டணியை வெட்கமின்றி அறிவித்துள்ளவருமான வைகோவைத் தங்கள் மாநாட்டில் முக்கிய பேச்சாளராக அழைத்தது குறித்து இப்படிச் சொன்னார் : “இல்லை, நாங்கள் தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர் என்கிற ஒரே அளவுகோலின் அடிப்படையில் மட்டுமே வைகோவை அழைத்தோம்”.

நான் என்ன சொல்வது? சரிதான். இங்குள்ள மக்களின் பிரசினைகள் ஒரு பொருட்டில்லை என்றால் அவர்களின் அளவுகோல் சரிதான். ஆனால் ஈழப் பிரச்சினையில் வைகோ அளவிற்குக் கடந்த காலத்தில் தீவிர ஆதரவு காட்டிய, இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட பன்னாட்டு மாநொடொன்றில் பங்குபெற்று தமிழீழத்திற்கு ஆதரவாகப் பேசிய பா.ம.க தலைவர்களுக்கு ஏன் வைகோவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அம் மாநாட்டில் அளிக்கப் படவில்லை?

நம்மைப் பொருத்த மட்டில் பா.ம.கவை அழைக்காததின் நியாயத்தை முழுமையாகப் புரிந்து கொள்கிறோம். ஆனால் அதே தர்க்கம் ஏன் வைகோவுக்குப் பொருந்தவில்லை? பா.ம.கவை அழைக்கக் கூடாது, ஆனால் வைகோவை அழைக்கலாமா?

இங்கே மத அடிப்படையிலான ஃபாசிசம் உங்களுக்குப் பிரச்சினை இல்லையா? நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு அளவில் இந்துத்துவக் கருத்துக்கள் ஒளிந்து கொண்டுள்ளனவா? அதை உசுப்பி விடுவதுதான் இந்துத்துவ சக்திகளின் பணியாக உள்ளதா?

சரி, இப்படி ஈழப் பிரச்சினையே அடிப்படை அளவுகோல் என்பவர்கள் சாதி பிரச்சினைகளிலாவது முழு நியாயத்துடன் நடந்து கொள்வார்களா?

‘சேவ் தமிழ் இயக்கம்’ தற்போது ‘தமிழ்நாடு மக்கள் கட்சி’ எனும் அமைப்புடன் இணைந்து செயல்படுவதாக அறிகிறோம். நல்லதுதான் அமைப்புகள் பிளவுபட்டுக் கொண்டே போகிற நிலையில் இவ்வாறான இணைவுகள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் ஐயமில்லை. இதுவரை அகில இந்திய மற்றும் பொதுவுடைமை அடையாளங்களின் கீழ் இயங்கிய ஒரு மா.லெ பிரிவு இப்போது இப்படியாக தம்மைத் தமிழ் அடையாளத்திற்குள் சுருக்கிக் கொண்டு தமிழ் நாடு மக்கள் கட்சி என்பதாக இயங்குகிறது.

சமீபத்தில் அவ்வமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ள தோழர் தங்கத் தமிழ் வேலன் ஆசிரியர் வேலைகளுக்கான ‘டெட்’ தேர்வில் தமிழக அரசு இட ஒதுக்கீடு கடைபிடிக்காமை குறித்து ஒரு பிரச்சார இயக்கம் நடத்துவது குறித்து எங்களுடன் பேசினார். தங்கத் தமிழ் வேலன் என்னுடைய ஊரைச் சேர்ந்தவர். துடிப்பான இளைஞர். இந்தப் பிரச்சினையில் உண்மையான அக்கறை கொண்டிருந்தார்.

லயோலா கல்லூரிப் பேராசிரியர் ஒருவர், நான், பேரா. ப.சிவகுமார், பேரா. மு.திருமாவளவன் ஆகியோர் முன்நின்று இது குறித்து ஆய்வு செய்து ஒரு விரிவான அறிக்கை அளித்தோம். ப்ரெஸ் மீட் ஒன்றும் நடத்தினோம். ஓரளவு இப் பிரச்சினையைத் தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம்.

இதற்கிடையில் இட ஒதுக்கீட்டைப் புறக்கணித்து அடுத்த ‘டெட்’ தேர்வும் அறிவிக்கப்பட்டது. அப்படியானால் டெட் தேர்வை நடத்தும் டி.ஆர்.பி அலுவலகத்தை முற்றுகை இடும் போராட்டம் ஒன்றை நடத்துவோம் என நாங்கள் சொன்னதைத் தங்கத் தமிழ் வேலனும் ஏற்றுக் கொண்டார். நாளும் குறிக்கப்பட்டது.

எங்கள் வேலைகளை எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு சென்ற மாதம் இந்தப் போராட்ட நாளில் எல்லோரும் காத்திருந்தோம். முதல் நாள் இரவு 11 மணிக்கு பேரா.மு.திருமாவளவனிடமிருந்து எனக்கொரு தகவல் வந்தது. அவரும் அக் கட்சியில் முக்கிய பொறுப்பொன்றில் உள்ளார். ‘டெட்’ போராட்டம் காரணம் ஏதுமின்றி ஒத்தி வைக்கப்பட்டது என்பதுதான் அவர் சொன்ன செய்தி.

தினம் என்னுடன் பேசி வந்த தமிழ் வேலன், அதற்குப் பின் இன்று வரை தொடர்பிலில்லை.

டெட் தேர்வில் இட ஒதுக்கீட்டிற்கான இப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டதற்கான ஒரே காரணம், மற்ற வேலைகளுடன் ஒப்பிடும்போது இதற்கு அவர்களிடம் முன்னுரிமை இல்லை என்பதுதான்.

பின் வேறெதற்கு முன்னுரிமை?

வைகோவைக் கதாநாயகனாக்கி ஈழ ஆதரவு மாநாடு நடத்துவதற்குத்தான். இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட மாநாட்டு முழக்கங்களுக்கிடையில் கரைந்து போனது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பிற மாநிலங்களில் வழங்கியுள்ளதுபோல இங்கும் ‘டெட்’ தேர்வில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை.

டாக்டர் ராமதாசின் இன அரசியலும் சாதி அரசியலும்

மருத்துவர் இராமதாஸ் ‘பை பாஸ்’ அறுவை சிகிச்சைக்குப் பின் உடல் தேறி வந்துவிட்டார். அவருக்கு வாழ்த்துக்கள். மருத்துவர் மீது எனக்கு விமர்சனங்களைப் போலவே மிக்க மரியாதையும் உண்டு. அவரது ஆரம்ப கால முழக்கங்களான, “ஒரு தலித்தை முதலமைச்சராக்க வேண்டும்”, “எனது குடும்ப உறுப்பினர்களை அரசியலுக்குக் கொண்டு வந்தால் என்னைச் சாட்டையால் அடியுங்கள்” என்பவற்றை நாங்கள் வரவேற்றோம் இதன் பொருள் அவரை முழுமையாக நம்பினோம் என்பதல்ல. ஆனாலும் அப்படி ஒருவர் சொல்லிக் களத்திற்கு வரும்போது அதை அவநம்பிக்கையோடு புறக்கணிப்பது நல்ல அரசியலாகாது. நாங்கள் மட்டுமல்ல தலித் அரசியல் இயக்கங்களும் அப்படித்தான் அவரை எதிர்கொண்டன.

நம்பிக்கையூட்டுமாறு சில வேலைகளை அவர் செய்யவும் செய்தார். மத்திய அமைச்சரவையில் அமைச்சராக வாய்ப்பு ஏற்பட்டபோது தனது கட்சியில் இருந்த இரு தலித் தலைவர்களை அமைச்சர்களாக்கினார். குடந்தைக்கு அருகிலுள்ள குடிதாங்கி கிராமத்தில் பொது வீதி வழியே தலித்கள் பிணம் தூக்கிச் செல்ல இயலாத நிலையை நாங்கள் அவர் கவனத்திற்குக் கொண்டு சென்றபோது, எங்களிடம் வாக்களித்தபடி அவரே வந்து தலித் பிணம் ஒன்றைத் தூக்கிச் செல்லும் நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றார். அந்த ஊர் வன்னியர்கள் அவரது கட்சியிலிருந்து கூட்டமாக விலகினர்.

தோழர் அரங்க குணசேகரன் அவர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போது (1993), அவர் விடுதலை செய்யப்படாவிட்டால் “வட தமிழ் நாட்டில் பேருந்துகள் ஓடாது” என அறிக்கை விட்டார். பா.ம.க நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுப் பேரணியைத் தொடங்கி வைத்தது பசுபதி பாண்டியன். அவர் கொல்லப்பட்டபோதும் அதைக் கண்டித்து பா.ம.க தரப்பில் அரிக்கை வெளியிடப்பட்டது.

என்ன இருந்தாலும் வன்ன்னிய அடையாளத்தை அவர் விடவுமில்லை. அதுவும் அவரை விடவில்லை, வன்னியர் சங்கப் போராட்டம் மூலம் அரசியலுக்கு வந்தவர் அவர். அடையாள அரசியல் என்பது எப்படி இரு பக்கமும் கூரான கத்தியாகச் செயலடும் என்பது குறித்து நான் தொடர்ந்து எழுதி வருகிறேன், அடையாள அரசியல் இதுகாறும் அடையாளம் மறுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் சேர்க்கும் அதே நேரத்தில் அது பிற அடையாளங்களின் மீதான வன்முறையாகவும் வெளிப்படும். இது எல்லா அடையாள அரசியலுக்கும் நேர்வதுதான். அது இராமதாசுக்கும் நேர்ந்தது, தனது தொகுதி வன்னியர்கள் மட்டுந்தான் என்பதையும் அதற்கு மேல் இந்த அடையாளத்துடன் செயல்பட்டு வனியர் அல்லாத தமிழர்களின் வாக்குகளைச் சேகரித்துவிட இயலாது என்பதை விரைவில் அவர் புரிந்து கொண்டார்.

வன்னியர்களை முழுமையாகத் திரட்டினால் அதுவே போதும் என்கிற நிலை வந்தவுடன் அவர் அரசியல் முன்னுரிமை வன்னியர்களை அதிகாரப்படுத்துவது என்பதாக அமைந்தது. இந்த அதிகாரப்படுத்தல் என்பது வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்களில் தலித் மக்களுக்கு எதிராக முடிந்த வரலாற்றை பெரிதாக விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ஆனால் அதே நேரத்தில் பா.ம.க வையும் வன்னியர் சங்கத்தையும் அவர் வேறுபடுத்திக் காட்ட வேண்டிய அவசியமிருந்தது. பா.ம.க அரசியல் கட்சி. நமது தேர்தல் முறையில் கூட்டணியில்லாமல் இது போன்ற கட்சிகள் வெல்வது சாத்தியமில்லை. அதோடு அரசியல் கட்சி என்கிறபோது அது கொஞ்சம் “விரிந்த” அரசியலைப் பேசியாக வேண்டும். இது போன்ற நிலையில் உள்ளவர்களுக்கு இருக்கவே இருக்கிறது தமிழ்த் தேசியம். இராமதாஸ் அதைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டார்.

மருத்துவருக்குத் தமிழுணர்வு இல்லை என நான் சொல்லவரவில்லை. அவரது தொடக்க கால அரசியலைப் பார்த்தீர்களானால் அவர் தமிழர் வாழ்வுரிமை மாநாடுகள் மட்டுமல்லாமல் கூடவே அம்பேத்கர், கார்ல்மார்க்ஸ் ஆகியோரையும் முன்னிலைப்படுத்தத் தவறியதில்லை. ஆனாலும் விரிந்த அரசியல் என வந்தபோது அவர் தமிழ்த் தேசிய அரசியலையே தனது சாதி வாத அரசியலின் முகமூடியாகத் தேர்வு செய்தார். தமிழ்த் தேசியர்களும் அதற்கு ஒத்துழைத்தனர். ஈழப் போராட்டம், முல்லைப் பெரியாறு பிரச்சினைகள் வரும்போது இராமதாசுடன் கட்டித் தழுவிக் களத்தில் இறங்குவதும், சாதிப் பிரச்சினைகள் மேலுக்கு வரும்போது, தமிழகத்தில் ஒன்றுமே நடவாதது போல, சாய்வு நாற்காலிகளைத் தூசு தட்டிச் சாய்ந்து ஓய்வு கொள்வதும் நமது தமிழ்த் தேசியர்களின் வாடிக்கை என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

இந்தக் காலங்களில் இராமதாசின் அட்டகாசங்களை அவர்கள் கண்டு கொள்ளவே மாட்டார்கள், மறுபடி ஈழப் பிரச்சினை ஏற்றம் கண்டால் இராமதாஸ் படு தீவிரமாக அது குறித்துப் பேசுவார். தனக்குப் பொதுவான தமிழர் நலனில் அக்கரை உள்ளது எனக் காட்டிக் கொள்வார். தமிழ்த் தேசியர்களும் இவரது சற்றைக்கு முந்திய சாதிவாதங்களைக் கண்டு கொள்ளாமல் அணைத்துக் கொள்வார்கள்.

மரக்காணம் மற்றும் இளவரசன் மரணத்தை ஒட்டிய போராட்டங்களின்போது நான் ஒன்றைச் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம். பாருங்கள், இபோது இத்தனை சாதி ஆதிக்க வெறியுடன் பேசிக் கொண்டு மட்டுமல்ல மாநாடுகளையும் நடத்திக் கொண்டிருப்பவர், சற்று ஓய்வுக்குப் பின் களத்திற்கு வருவார்; வரும்போது தமிழ்த் தேசிய முகமூடியைத் தீவிரமாகத் தரித்துக் கொள்வார் என்று எழுதியிருந்தேன்.

இப்போது அது உறுதியாகியுள்ளதைக் கவனியுங்கள். சில சமீபத்திய இராமதாஸின் பேச்சுக்கள் கீழே:

“ஈழப்போரை கொச்சைப்படுத்தும் மெட்ராஸ் கஃபே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் – ஆக,8

“ஆந்திரத்துடன் இணைக்கப்பட்ட தமிழர்கள் அதிகம் வசிக்கும் காளஹஸ்தி, சத்தியவேடு,சித்தூர் ஆகிய வட்டங்களை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும்”, ஆக 10

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்” -அறிக்கை, ஆக 23
“மீனவர்கள் மீண்டும் கைது: இலங்கையை பிரதமர் எச்சரிக்க வேண்டும்” – அறிக்கை, ஆக,27

இது தவிர காவிரிக் கண்காணிப்புக் குழு அமைப்பது குறித்தும் அவர் பேசி இருந்தது நினைவில் உள்ளது. இது தவிர சமீபத்தில் அவர் பேசிய வேறு சில ஒட்டுமொத்தத் தமிழர் பிரச்சினைகள்:

“தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” – தினத்தந்தி, ஆக 31

“மத்திய மாநில அரசு மோதல் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைப் பாதிக்கும்” – தினத்தந்தி, ஆக 31

“உண்ணா விரதம் இருக்கக்கூட (நடிகர்) விஜய்க்கு உரிமை இல்லையா?”- அறிக்கை, ஆக 17
“மருத்துவ மாணவர்களை புதிய தரவரிசை பட்டியல் தயாரித்து சேர்க்க வேண்டும்” – அறிக்கை, ஆக 19

இப்படியான “பொதுப் பிரச்சினைகளை” முழக்கிக் கொண்டுள்ளபோதே அவர் தன்பிரச்சினையை எக்காரனம் கொண்டும் விட்டுவிடமாட்டார்.

“தமிழகத்தில் 144-வது சட்டப் பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது” (தினமணி, ஆக 28) என்ற அவரது அறிக்கையைச் சமீபத்தில் பார்த்திருப்பீர்கள். ஆதாவது தருமபுரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக 144 தடை உத்தரவு இருப்பதைக் கண்டித்துதான் இந்தப் பேச்சு.

தலித் அல்லாத சாதி மாநாடுகளை நடத்தி தனது சாதிவாத அரசியலை அவர் உச்சபட்சமாக நடத்திக்கொண்டிருந்தபோது உளுந்தூர்ப்பேட்டையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் அவர் பேசிய பேச்சு கீழே முழுமையாக:

“நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து டாக்டராக வேலை பார்த்ததில் இருந்து வன்னியர் சங்க காலத்தில் இருந்து, பாமக தொடங்கிய பின்பு வரை நான் ஜாதிவெறியன் தான். என் மக்கள் முன்னேற வேண்டும். படிக்க வேண்டும். வேலைக்கு போக வேண்டும். 3 வேளை வயிறார சாப்பிட வேண்டும் என நினைப்பவன் ராமதாஸ் மட்டும்தான். அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை வன்னியர்களுக்காக குரல் கொடுப்பவர் ராமதாஸ் மட்டுமே. மழை, வெயில் பார்க்காமல் உழைப்பவர்கள் வன்னியர்கள். நம்மைக் கண்டால் யாருக்கும் பிடிக்கவில்லை. தீப்பந்தம் எடுத்துச் சென்று கொளுத்துவதாக பிரசாரம் செய்கிறார்கள். நமது கைகளை வெட்டுவதாக கூறுகிறார்கள்.

நாம் ஒற்றுமையாக இருப்போம் என்று சொன்னால் உன் பெண்ணை கொடுக்கிறாயா என்று கூறுகிறார்கள். நமது பெண்களுக்கு காதல் வலை வீசி கடத்தி செல்கிறார்கள். பெண்ணை பெற்றவர்கள் உஷாராக இருக்க வேண்டும். படிக்க வைக்கும் போது யாரையாவது துணைக்கு அனுப்பி வைக்க வேண்டும். நல்ல அறிவுரை சொல்லுங்கள்.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள வன்னியர்கள் ஒட்டு மொத்தமாக மாம்பழத்திற்கு தான் ஓட்டுப்போட வேண்டும் என்ற முடிவுக்கு வாருங்கள். இரட்டை இலை, சூரியன், கைக்கு போட்டால் நம்மை நாமே அழித்துக் கொள்வதாகும். வன்னியன் மாம்பழத்திற்கு ஓட்டுப்போடுங்கள். அதிமுக, திமுகவில் உள்ள வன்னியர்களுடன் பேசுங்கள். ராமதாஸ் இருக்கும் போது வன்னியர் ஆட்சி வரவேண்டும்.விழுப்புரம் தொகுதியில் வரும் எம்.பி., தேர்தலில் நாம் ஒற்றுமையாக வாக்களித்தால் வெற்றி பெறலாம். 2016ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் அப்படியே வெற்றி பெறுவோம். எல்லோரும் விழிப்பாக இருங்கள். சிந்தியுங்கள் மற்ற கட்சிகளை மறந்து பாமகவை நினையுங்கள் என்றார் ராமதாஸ்.” – டிச 7, 2012

இந்தப் பேச்சு அவரது அரசியலைத் தெளிவாக்கிவிடுகிறது. அவர் தனது அரசியல் முரணை வன்னியர் எதிர் தலித் என்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. “நம்மைக் கண்டால் யாருக்கும் பிடிக்கவில்லை” என அவர் சொல்லும்போது ஒட்டு மொத்தத் தமிழ் அடையாளத்திலிருந்தும் வன்னியர்களைப் பிரித்து நிறுத்துகிறார். இந்தப் பேச்சைக் கூர்ந்து கவனித்தால் அவரது அரசியல், “வன்னியர் ஒட்டு அன்னியர்க்கில்லை” என்கிற அளவில் சுருங்கி விடுவது விளங்கி விடுகிறது.

ஆக இராமதாசின் அரசியல் அப்பட்டமாக இனவாத முகமூடி தரித்த சாதிவாத அரசியல்தான் என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று தேவை?

சமீபத்தில் தருமபுரி சென்றிருந்தேன். அங்கே இரு சமூகத்தினருக்கிடையேயும் கெட்டுக் கிடக்கும் சமூக உறவுகள் வேதனையை அளித்தது. தலித்களுக்கும் வன்னியர்களுக்கும் இடையே முற்றிலும் பேச்சு வார்த்தைகள் நின்றுபோன ஒரு பகைச் சூழல் அங்கு நிலவுகிறது. ஏற்கனவே நெருக்கமாகப்ப் பேசிக் கொண்டிருந்த நண்பர்கள் கூட இப்போது பேச்சுவார்த்தைகள். இல்லாமல் உள்ளனர் அப்படிப் பேச நேர்ந்தால் கூட அக்கம்பக்கம் பார்த்து இரகசியமாகத்தான் பேச வேண்டியுள்ளது. பேருந்தைப் பிடிக்கச் செல்லும் வழியிலும் கூட ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக் கொள்வதில்லை. பெரிய அளவில் தலித்கள் வன்னியர்களை நம்பி வாழக்கூடிய நிலை பிரச்சினைக்கு முன் இல்லை என்றபோதிலும், ஒரு சில தலித்கள் விவசாய வேலைகள், ‘பெயின்டிங்’ போன்ற சிறுசிறு வேலைகளுக்கு வன்னியர்களை நம்பி இருந்துள்ளனர். அவர்களுக்கு இப்போது யாரும் வேலை கொடுப்பதில்லை.

சொந்த ஊரில் தலித்கள் தம் பிள்ளைகளைப் படிக்க வைக்க இயலவில்லை. பொது ரேஷன் வினியோகமும் நின்றுவிட்டது. தலித் மக்களுக்கு அவர்களின் கிராமத்தில் கொண்டு வந்து ரேஷன் வினியோகம் நடக்கிறது. அடையாள அரசியல் அதன் உச்சத்தை எட்டியுள்ளது. வன்னியர்கள் ஓட்டும் ஆட்டோகளில் வன்னியர் சங்க அக்கினிச் சட்டி அடையாளங்கள் பெரிதாய்க் காட்சியளிக்கின்றன,

இந்த நிலையில் இராமதாஸ் பேசுகிற ஒட்டு மொத்தத் தமிழர் அர்சியலுக்கு என்ன பொருள். அவர் யாரை ஏமாற்றப்பார்க்கிறார்? வன்னியர்களையா? மற்றவர்களையா? நிச்சயம் வன்னியர்களாக இருக்க இயலாது.

சாதிகளாகப் பிளவுண்ட இந்நாடு தன்னைத் தேசம் என அழைத்துக் கொள்ள அருகதை இல்லை என அம்பேத்கர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

மருத்துவர் தன்னை இப்போது “சமூகப் பொறியாளர்” எனச் சொல்லிக் கொள்கிறார். ஆனால் அவர் எப்போதுமே சாதிவாதத்தையும் இனவாதத்தையும் இணைக்கும் “வெல்டர்” ஆகத்தான் இருந்துள்ளார். ஆனால் இது ரொம்பப் பலவீனமான வெல்டிங். இந்த வெல்டிங் மூலம் கட்டப்பட்ட கப்பலில் ஏறுபவர்கள் நிச்சயம் கரை சேர மாட்டார்கள்