ஏன் கூடாது ‘நீட்’?      

(செப்டம்பர் 2017 ‘உங்கள் நூலகம்’ இதழில் வெளியான கட்டுரை)

ஒன்று

இந்திய அளவில் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் ஒரு சமச் சீர்வை ஏற்படுத்துவது என்று சொல்லித்தான் இங்கே நீட் புகுத்தப்படுகிறது. அது எத்தனை பொய் என்பதைப் பார்ப்போம். தமிழ்நாடு மட்டுமின்றி இன்றும் அசாம் கர்நாடகா, கேரளா, மே.வங்கம், ஆந்திரம், காஷ்மீர் எனப் பல மாநிலங்களிலும் ‘நீட்’ டுக்கு எதிர்ப்பு தோன்றியுள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள், வணிக நோக்கில்லாத கல்வித்துறையினர், மாநில நலன்களில் அக்கறையுள்ள கட்சியினர் என எதிர்ப்பு உருவாகியுள்ளது. இந்த வகையில் இன்று இந்தியத் துணைக் கண்டம் ஒரு வகையில் இந்தி பேசும் மாநிலங்கள் X இந்தி பேசாதவை என இரு கூறுகளாக எதிர் எதிர் நிலையில் நிற்கின்றன.

டெல்லியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் CBSE போன்ற கல்வி வாரியப் பாடத் திட்டங்களில் பயின்ற உயர் சாதி, உயர் வர்க்க மாணவர்களே இதன் மூலம் பயன் பெறுவர் என்கிற பிற மாநிலத்தவரின் அச்சம் இன்று உறுதியாகியுள்ளது. சாதி, வர்க்கம் என்கிற வேற்றுமைகளுக்கு அப்பால் இப்போது மொழி, வாழும் நிலப் பகுதி, நகர்ப்புறம், கிராமப் புறம் எனும் முரண் ஆகிய அடிப்படையிலான ஒதுக்கல்கள் இதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. அடித்தள மக்களின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ள பெருமைக்குரிய மாநிலக் கல்வி வாரியங்கள் இன்று மதிப்பிழந்துள்ளன.

நீட்டுக்கு ஆதரவாகச் சொல்லப்பட்ட வாதங்கள் என்ன மாதிரியானவை? பல்வேறு விதமான தனித்தனி நுழைவுத்தேர்வுகளிலிருந்து மாணவர்களை இத்தகைய பொதுத் தேர்வு காப்பாற்றும் என்பது ஒன்று மற்றது மருத்துவச் சேர்க்கையில் இப்போதுள்ள மிகப் பெரிய ஊழல்கள், கொள்ளைகள் முதலியன ஒழிக்கப்படும் என்பது. மற்றபடி ஒரே மாதிரி தரமான மருத்துவ வர்க்கம் ஒன்று இந்தியா பூராவும் உருவாகும் என்பது  மூன்றாவதாகச் சொல்லப்பட்ட  வாதம்.

எல்லாம் அபத்தம். ஒரு நுழைவுத் தேர்வு என்பது எப்படி ஒரே மாதிரி தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும்?  திறமான, சீரான மாருத்துவக் கல்வியும், பயிற்சியும்தான் ஒரே தரமான சிறந்த மருத்துவர்களை உருவாக்க முடியுமே ஒழிய ஒரு நுழைவுத் தேர்வு எப்படி அதைச் சாதிக்க முடியும்?

சேர்க்கையில் உள்ள ஊழல்களை ஒழிக்க வேண்டும் என்றால் உரிய விதிகளை உருவாக்கி, கடுமையான கண்காணிப்புகள், மீறும் நிறுவனக்களைக் கடுமையாகத் தண்டிப்பது ஆகியவற்றின் மூலம்தான் அதைச் சாதிக்க வேண்டுமே ஒழிய இப்படி இன்னும் ஒரு மோசமான ஒதுக்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதைச் சாதிக்க முடியாது, சாதிக்கவும் கூடாது. தேவையானால் ஒவ்வொரு மாநிலத்திற்குமான நுழைவுத் தேர்வுகளைக் கட்டாயமாக்கலாம். பல மாநிலங்களில் அத்தகைய நுழைவுத் தேர்வுகள் சிறப்பாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. இதையெல்லாம் செய்யாமல் ஊழலை ஒழிக்கிறேன் என்கிற பெயரில் இப்படியான ஏழை எளிய அடித்தள சாதிகளைச் சேர்ந்த, கிராமப்புற, இந்தி பேசாத மக்களைப் பழிவாங்கும் ஒரு முறையைக் கட்டாயமாகப் புகுத்துவதை எப்படிச் சகிப்பது? கோடிக்கணக்கான ரூபாய்களை ‘கேபிடேஷன் ஃபீ’ ஆக வசூலிப்பதைக் கடும் கண்காணிப்புகளை ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. ஆனால் உயர் பணத் திமிர் மிக்க ஒரு மேல்தட்டு 5 சத மக்களின் பிரச்சினை. இதைக் காட்டி ஏழை எளிய அனிதாக்களைப் பலி கொடுக்கக் கூடாது.

இரண்டு

பல நுழைவுத் தேர்வுகளை ஒரே நேரத்தில் எழுத வேண்டிய சுமையை மாணவர்களுக்குக் குறைக்க நீட் போன்ற பொது நுழைவுத் தேர்வு தேவை என்கிற வாதத்தில் ஏதும் நியாயம் இருக்கிறதா எனப் பார்க்கலாம்.

‘நீட்’ தேர்வை விரும்பித் தேர்வு செய்பவர்களைப் பொருத்த மட்டில் யார் அந்த மாணவர்கள், அப்படி எழுதுகிறவர்கள் எத்தனை வீதம் பேர் என்பதற்கு உரிய தரவுகள் இல்லை. எனினும் அதுவும் ஒரு மிகச் சிறிய வீதத்தினர்தான். அவர்களும் கூட சமூகத்தின் மேல் தட்டிலிருந்து வருபவர்கள்தான். சென்ற ஆண்டு அனைத்திந்திய மருத்துவக் கல்வி நிறுவனங்கள் (AIIMS) நடத்திய இந்தப் பொது நுழைவுத் தேர்வில் பங்குபெற்ற மாணவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சம். இது அப்போது மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்த மொத்த மாணவர் தொகையில் வெறும் பத்து சதம்தான். அப்போது இந்தப் பொதுத்தேர்வு கட்டாயம் இல்லை என்பதால் மற்ற 90 சதம் மாணவர்களும் ‘நீட்’ எழுதுவதில் ஆர்வம் காட்டவில்லை. பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சியுற்று பல்வேறு படிப்புகளுக்கும் மேற் செல்கிறவர்களின் மொத்த எண்ணிக்கையுடன் இதை ஒப்பிட்டால் பொதுத்தேர்வை, அதாவது ‘நீட்’டை விருப்பபூர்வமாகத் தேர்வு செய்தவர்களின் எண்ணிக்கை மிக மிக மிகக் குறைவு என்பதை விளக்க வேண்டியதில்லை.

சரி அப்படிப் பொது நுழைவுத் தேர்வைத் தேர்ந்தெடுத்த அந்தச் சிறு தொகை மாணவர்கள் யார்? அவர்கள் CBSE போன்ற மத்தியக் கல்வி வாரியப் பாடத் திட்டங்களில் படித்த மேல்தட்டினர்தான். இன்று 1716 மதிப்பெண்கள் வாங்கிய அனிதா எனும் கூலி வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்த ஒரு தலித் பெண்ணுக்கு நீட் தேர்வில் வெற்றி பெற இயலாத காரணத்தால் மருத்துவக் கல்வி வாய்ப்புப் பறி போனதை இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் எப்படி புறக்கணிக்கத் தக்க ஒரு சிறிய மேல் தட்டினரின் நலனுக்காக மற்ற 90 சதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஏன் தற்கொலை நோக்கித் தள்ளப்படுகிறார்கள் என விளங்கும்.

சரி.ஏன் CBSE மாணவர்கள் மட்டும் ஏன் எளிதில் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறுகிறார்கள்? மாநிலக் கல்வி வாரியங்களில் படிப்பவர்களால் அது சாத்தியமில்லாமல் போகிறது? வேறொன்றுமில்லை. ‘நீட்’ தேர்வு CBSE பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது என்பதுதான் இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில். CBSE பாடத் திட்டத்தில் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுவதால் அந்தப் பாடத் திட்டத்தில் படித்தவர்கள் நீட்டில் வெற்றி பெற முடிகிறது. மற்றவர்களுக்கு அது சாத்தியமில்லாமல் ஆகிறது.

அடுத்த கேள்வி: இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலக் கல்வி வாரியங்கள் மற்றும் இதர ICSC போன்ற இதர கல்வி வாரியங்களின் பாடத்திட்டங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு CBSE ன் பாடத் திட்டத்தின் அடிப்படையில் ‘நீட்’ தேர்வை நடத்துவது ஏன்? இப்படியான சந்தர்ப்பங்களில் மிக அதிக மாணவர்கள் பயன்பெறுமாறு அதிக மாணவர்கள் படிக்கிற ஏதேனும் ஒரு பாடத் திட்டத்தைத் தேர்வு செய்வதுதானே நியாயம்? இந்தியா முழுவதிலும் உள்ள CBSE பாடத்திட்டத்தில் வாசிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில் மாநிலக் கல்வி வாரியப் பாடத் திட்டத்தில் படிக்கிற மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லையா? இந்தியா முழுவதும் மொத்தமாக 12ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையையும், CBSE மாணவர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் ‘நீட்’ தேர்வு என்பது எந்த அளவுக்கு உயர் தட்டு, உயர் சாதி, நகரங்களை மையமாகக் கொண்ட ஒரு தேர்வு முறை என்பதும் நம் அனிதாக்கள் ஏன் தற்கொலையை நோக்கித் தள்ளப்படுகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

மூன்று

தமிழகத்தின் சமச்சீர்க் கல்வி முறை, அதன் கேள்வித் தாள் வடிவம், தேர்வு முறை, பாடத் திட்டம் எல்லாம் குறைகளற்றவை என நான் சொல்ல வில்லை. நிச்சயம் அவற்றில் குறைபாடுகள் உண்டு. நாங்களே பலவற்றைச் சுட்டிக் காட்டியுள்ளோம். 11 ம் வகுப்புப் பாடங்களை நடத்தாமலேயே 12ம் வகுப்புப் பாடங்களை நடத்துவதற்குத் தோதாக நமது கல்வி முறை உள்ளது, கேள்வித்தாள் வடிவம் மனப்பாட முயற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக உள்ளது முதலானவற்றை இப்படிச் சுட்டிக் காட்டியுள்ளோம். அரசும் கல்வித்துறையும் இப்போது அவற்றைக் கணக்கில் கொண்டு சில மாற்றங்களையும் இந்தக் கல்வி ஆண்டு முதல் கொண்டு வந்துள்ளன. குறைகளைக் கண்டறிந்து திருத்திக் கொள்ளும் திறமையும் வல்லமையும் நமக்குண்டு. இப்படி நம் கல்வி முறையில் சில குறைகள் உள்ளன என்பதற்காக CBSE தான் இந்தியாவில் உள்ள கல்வி முறைகளிலேயே சிறந்த முறை எனவும் அதில் குறைகளே இல்லை எனவும் நம்புவது போன்ற அபத்தம் ஏதுமில்லை. ஆனால் அப்படியான நம்பிக்கை நமக்குள் சிலரிடையே உள்ளது.

2009 ல் அறிவியலாளர் அனில் குமார் மற்றும் IIS யில் பணியாற்றிய டிபாகர் சட்டர்ஜி ஆகியோர் CBSE உடன் இந்தியாவில் உள்ள சில மாநிலக் கல்வி வாரியங்களை ஒப்பிட்டு ஒரு ஆய்வு செய்திருந்தனர்,

இயற்பியல், வேதியல், உயிரியல், கணிதம் ஆகிய நான்கு அறிவியல் பாடங்களிலும் மேற்கு வங்கக் கல்வி வாரிய மாணவர்களும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் ஆந்திர மாநில மாணவர்களும் CBSE மாணவர்களைக் காட்டிலும் சிறப்பாக உள்ளதை அவர்கள் நிறுவினர் (Current Science, 2009).  இதில் நாம் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில் மேற்கு வங்கமோ இல்லை ஆந்திரப் பிரதேசமோ ‘நீட்’ டில் அப்படி ஒன்றும் பிரமாதமாகச் செய்துவிடவில்லை. ஆக, ‘நீட்’டில் பிரமாதமாகச் செய்வது என்பது அவர்களின் கல்வித் திறமைக்கும் பாடப் புரிதலுக்கும் நிரூபணமல்ல.  CBSE  வடிவத்தில் ‘நீட்’ தேர்வு கட்டமைக்கப்பட்டுள்ளதன் விளைவுதான் அம் மாணவர்கள் ‘நீட்’டில் நன்றாகத் தெரிவது.

ஏதோ CBSE, MCI (இந்திய மருத்துவக் கவுன்சில்) லஞ்ச ஊழல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்றெல்லாம் நம்பினாலும் அப்போதும் நாம் முட்டாள்கள்தான்.

MCI யின் முன்னாள் தலைவர் கேடன் தேசாய் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல் கொடுத்தபோது லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர். சென்ற ஆண்டு CBSE ஏற்பாடு செய்திருந்த  All India Pre-Medical Test இப்படியான குற்றச்சாட்டுகளால் ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.

CBSE வாரியத்துக்கும் அதன் பாடத் திட்டத்துக்கும் இப்படியான ‘நீட்’ ஆதரவு தாராளமாக இருப்பதன் விளைவாக இன்று இந்தியாவெங்கும் CBSE பாடத் திட்டத்தை ஏற்கும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை ஊதிப் பெருத்துள்ளது. இந்த வகையில்  இப்போது ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது மாநிலக் கல்வி வாரியங்களைச் செல்லாக் காசாக்கும் முயற்சியாகிறது. மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் தம் பிள்ளைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருந்த பெற்றோர்கள் இனி அவர்களை CBSE பள்ளிகளைத் தேடிச் சென்று மிக அதிகமாகப் பணம் கொடுத்துச் சேர்க்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் கல்விக் கொள்கைகள் ஒரே சீராக இந்தியா முழுவதும் திணிக்கப்படுவதற்கும், கல்விக் கொள்ளைகள் அதிகமாவதற்கும், ஏழை எளிய மக்களின் கல்விச் செலவுகள் அவர்களால் தாங்க முடியாத அளவிற்கு அதிகரிப்பதற்கும்  மாநிலங்களின் கல்விக் கொள்கைகளும் அணுகல் முறைகளும் பலவீனமாவதற்கும் வழி வகுக்கப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இப்படி CBSE பள்ளிகளில் அதிகம் பணம் கொடுத்துப் படிக்க வழி இல்லாமல் தொடர்ந்து மானிலக் கல்வி முறையில் படிக்கும் ஏழை எளிய. அடித்தட்டுச் சாதிகளைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் இனி மருத்துவப் படிப்பை லட்சியமாகக் கொண்டார்களானால் என்ன ஆகும் என்பதற்குத்தான் அனிதாவின் இறப்பு நம் முன் இரத்த சாட்சியமாக அமைந்துள்ளது.

நான்கு

இந்தப் ‘பன்மை விடைக் கேள்விகள்’ (Multiple Choice Question) நிறைந்த கேள்வித்தாள் என்கிற CBSE யின் தேர்வு வடிவம் அப்படி ஒன்றும் மாணவர்களின் திறனை மதிப்பிட்டு விடுவதற்கான ஆகச் சிறந்த வடிவம் எனச் சொல்லிவிட முடியாது. அறிவியல் கருத்தாக்கங்களை தர்க்க பூர்வமாகத் தருவிக்கும் விரிவான தர்க்க அடிப்படையில் விளக்கம் அளிக்கும் (concept development) முறையும் முக்கியமானதே. தமிழ்நாடு, மேற்கு வங்கம் முதலிய மாநிலங்கள் இத்தகைய தேர்வுமுறையையே நீண்ட காலமாகப் பின்பற்றி வருகின்றன. என்னைப் பொருத்த மட்டில் இரண்டுக்கும் சம அளவில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாணவர்களை அவர்களுக்குப் போதிக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் ஒரு முடிவு சரியானதா தவறானதா எனச் சிந்திக்கத் தெரிந்தால் போதும் என நாம் எதிர்பார்க்கக் கூடாது. கணினிகள் கூட அந்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்து விடக் கூடும். மாறாக ஏற்கனவே உள்ள எல்லா நம்பிக்கைகளையும் சந்தேகிக்கும் திறன் உடையவர்களாக மாணவர்களை ஆக்குவதே அறிவியல் வளர்ச்சிக்குத் துணை செய்யும்.

நான் அடிக்கடி கூறும் ஒரு எடுத்துக்காட்டை இங்கு முன் வைக்க விரும்புகிறேன். மரத்தில் இருக்கும் ஆப்பிள் காம்பு அறுந்தால் கீழே விழ வேண்டியது இயல்புதானே என நியூட்டன் நினைத்திருந்தாரானால் அவரது புகழ் பெற்ற புவி ஈர்ப்புத் தத்துவம் கண்டுபிடிக்கப்பட்டிருக்க இயலாது. இப்படியான counter inductive சிந்தனை முறை அம்மைவதாகக் கல்வி முறை அமைய வேண்டும். எனவே ஆம் / இல்லை; சரி / தவறு என்கிற ரீதியில் கேள்வித் தாள்களை அமைத்து கணினிகளின் உதவியால் மாணவர்களை மதிப்பிடும் CBSE முறையே சிறந்தது என்பதாக நம்புவது சரியல்ல.

இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘நீட்’ என்பது புதிதல்ல. CBSE பாடத் திட்டத்தில் படித்த வடநாட்டு இந்தி மொழி மாணவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பளிப்பதற்காக ஏற்கனவே நடைமுறையில் இருந்த ‘மருத்துவக் கல்விக்கான அனைத்திந்திய முன் தேர்வு’ (AIPMT) என்பதன் நீட்சிதான் இன்றைய ‘நீட்’. இந்த AIPMT தேர்வு CBSE பாடத் திட்டத்தின்படி CBSE யால் நடத்தப்பட்டது என்பது மட்டுமின்றி அது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகள் அனைத்திலும் 15 சத ஒதுக்கீடு இருந்தது. இதைப் பெரும்பாலும் வட இந்திய ஆங்கிலோ – ஹிந்தி மேல் தட்டினரே பறித்துய்க் கொண்டிருந்தனர். ஒப்பீட்டளவில் வட நாட்டு இந்தி பேசும் மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகள் குறைவு. அந்த வகையில் பிற மாநிலங்களில் வட மாநிலத்தவரைத் திணிப்பதில் இது பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது. இதில் CBSE யில் பயின்ற மேல் தட்டினரே பெரிதும் பலனடந்தனர்.

‘நீட்’ தேர்வைக் கட்டாயமாக்குவதன் மூலம் இந்த நிலை மேலும் அதிகரிக்கும். அதாவது மேல்தட்டு நகர்ப்புற மாணவர்களின் கூடாரமாக மருத்துவக் கல்லூரிகள் ஆவது உறுதி.

இன்னொன்றையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ‘நீட்’ இப்போது இந்திய அளவில் கட்டாயமாக்கப்பட்டு, அதற்கு உச்சநீதிமன்றமும் ஆசி வழங்கி, ‘நீட்’டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட நளினி சிதம்பரம் கூறியது போல இனி ‘கடவுளிடம் முறையிட்டாலும் கூட’ ஆகப் போவது ஒன்றுமில்லை என ஆகிவிட்டது. ஆனால் இப்போதும் கூட AIIMS, PGI,JIPMER ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் ‘நீட்’ டிலிருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு இன்னும் சிறப்பான தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படுமாம். அதென்ன? இன்னும் உயர் மட்டத்திலுள்ள மேல் தட்டு நகர்ப்புற ஆங்கிலோ ஹிந்தியர்களுக்கான நிறுவனங்களாக ஆக்கும் முயற்சியாக அது அமையலாம்.

இவை எல்லாம் எங்கு கொண்டு போய் விடும்?

இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்காக சென்னைப் புற நகரில் உள்ள ஒப்பீட்டளவில் சற்றே மலிவான ஒரு மருத்துவமனையில் பத்து நாட்கள் நான் சிகிச்சைக்கு வந்தவருடன் தங்க நேரிட்டது. அங்கு நான் சந்தித்த அனுபவங்கள் குறித்து ஒரு பதிவு செய்திருந்தேன். சுமார் முப்பதாண்டுகளுக்கு முன் அதே போல ஒரு பத்து நாட்கள் நான் ஒரு மருத்துவ மனையில் இருந்த அனுபவத்துடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரை அது. அதில் நான் குறிப்பாகச் சுட்டிக் காட்டியிருந்தது இதுதான். இந்த முப்பதாண்டுகளில் பெரிய அளவில் நிலைமை மாறி இருந்தது. அதிக அளவில் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளையும் கிராமப்புறங்களையும் சேர்ந்த மருத்துவர்களை இப்போடு காணமுடிந்தது. ஒப்பீட்டளவில் மருத்துவர் – நோயாளி உறவு மிகவும் ஜனநாயகப்பட்டிருந்ததை விளங்கிக் கொள்ள முடிந்தது. எளிதில் அணுகக் கூடியவர்களாக மருத்துவர்கள் இப்போது உள்ளனர்.

கட்டாய ‘நீட்’ நடைமுறைக்கு வந்தால் இன்னும் சில ஆண்டுகளில் இந்த நிலை முற்றிலும் மாறும். மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள், ஜனநாயகப்பாடுகள் (democratisation) என்பன முற்றிலும் அழியும். அடித்தள மக்கள் முற்றிலும் அந்நியப்பட நேரிடும். இதுதான் எல்லாவற்றிலும் மோசமான பின்விளைவாக அமையும்.

ஐந்து

‘நீட்’ தேர்வு கட்டாயமானால் கிராமப்புற அடித்தள மாணவர்களின் வாய்ப்பு பறிபோகும் என்பதையும் அதன் விளைவாக மருத்துவ சேவை மேலும் மேட்டிமைத் தன்மை மிக்கதாக மாறி அடித்தள மக்கள் அந்நியமாக அது வழி வகுக்கும் என்பதையும் பார்த்தோம். இது தவிர கிராமப்புற மருத்துவ சேவையே நீட்டின் விளைவாக பாதிக்கப்படும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நீட்டில் வெற்றி பெற்று மருத்துவராகும் மேட்டிமைச் சக்திகளின் கனவு வெளி நாடு அல்லது நகர்ப்புற ‘மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல் + ப்ரைவேட் ப்ராக்டிஸ்’ என்பதாகவே அமையும்.  கிராமப்புற மக்கள் குறைந்த பட்சம் அருகிலுள்ள மாவட்டத் தலைநகர்களுக்காவது ஓடித்தான் மருத்துவ வசதி பெற முடியும் எனும் நிலை இன்னும் அதிகமாகும் அல்லது தொடரும்.

‘நீட்’ கட்டாயமாதலை ஆதரிப்பவர்களை இரு சாரராகப் பிரிக்கலாம். ஒரு சாரர் நகர்ப்புற மேல் தட்டினர். இன்னொரு சாரர் இதன் அரசியல் விளைவுகளையும் அரசின் நோக்கங்களையும் புரியாதவர்கள், அல்லது புரிந்தும் அது குறித்துக் கவலைப் படாதவர்கள். இந்த இரண்டாமவர்கள் கட்டாய ‘நீட்’ ஐ ஆதரிப்பதற்குக் கண்டுபிடித்துச் சொல்லும் ஒரே காரணம் அதன் மூலம் ‘நாமக்கல் பாணி ப்ராய்லர்’ பள்ளிகளும் ‘கேபிடேஷன் கொள்ளை’ களும் ஒழிக்கப்படும் என்பதுதான். இதுவும் ஒரு அப்பாவித்தனாமான நம்பிக்கைதான். இந்தப் பள்ளிகள் எல்லாம் CBSE க்கு மாறுவது தவிர இப்போதே இலட்சக் கணக்கான ரூபாய் பயிற்சிக் கட்டணத்துடன் ‘நீட்’ தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகளையும் இவை தொடங்கி விட்டன. மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்த மட்டில் கல்லூரி முதலாளிக்கு ஒதுக்கப்படும் 50 சத ‘மேனேஜ்மென்ட் கோடா’ வில் வழக்கம் போலக் கொள்ளைகள் தொடரத்தான் போகிறது. இந்த மாதிரிக் கொள்ளைகளை ஒழிக்கும் விருப்புறுதி உள்ள அரசுகள் வரும் வரை இவற்றுக்கு ‘நீட்’ தேர்வு மூலம் எல்லாம் முடிவு கட்ட இயலாது.

இவர்கள் மறைக்கும் அல்லது மறக்கும் ஆபத்தான ‘நீட்’ அரசியல் குறித்துச் சுருக்கமாகப் பார்ப்போம்.

மாநிலங்களின் உரிமைகள் மற்றும் மாநிலங்களின் தனித்துவம் என்பதை மத்திய ஆட்சியாளர்கள் மயிரளவும் மதிப்பதில்லை. கல்வியைப் பொருத்த மட்டில் அது உள்ளூர் அளவில் தீர்மானிக்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதுதான் கல்வியாளர்களின் கருத்து. டாக்டர் அம்பேத்கர் தலைமையில் நம் அரசியல் சட்டம் வடிவமைக்கப்பட்ட போது கல்வி மாநிலப் பட்டியலில் தான் வைக்கப்பட்டது. இந்திரா காந்தி நெருக்கடி நிலை கொண்டு வந்து ஜனநாகத்தை முடக்கிய காலகட்டத்தில்தான் கல்வி மத்திய – மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இன்றைய பா.ஜ.க அரசைப் பொருத்த மட்டில் அது மொழிவாரி மாநிலம் என்கிற கருத்தாக்கத்தையே ஏற்பதில்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள மொழி சார் அடையாளங்களை அழித்து மதம் சார்ந்த ஒற்றை அடையாளத்துடன் கூடிய இந்தியாவை உருவாக்க வேண்டும் எனக் கனவு காணும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பபின் கொள்கை இந்த நாட்டை அதன் மொழி அடையாளங்களை அழித்து, 72 நிர்வாக அலகுகளாகப் பிரிக்க வேண்டும் என்பதுதான். இந்த நோக்கில்தான் ஒரே மொழி பேசும் தெலுங்கு மக்களில் ஒரு பாதியான தெலங்கானா மக்கள் தனி மாநிலம் கோரியபோது அதைத் தீவிரமாக அவர்கள் ஆதரித்தனர்.

மக்கட் சமூகங்களை அவர்கள் தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களுடன் கூடிய சமூக அலகுகளாக அவர்கள் ஏற்பதில்லை. அப்படியான இன அடையான வேர்களில் இருந்து மக்களை அறுத்தெறிந்து (deracination), இந்திய அளைல் ஒரு பன்மைத்துவ அழிப்பை மேற்கொள்வது அவர்களின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று.

‘இந்தியா’ எனும் கருத்தாக்கத்தை அவர்கள் எந்நாளும் பல மொழி பேசுகிற பல்லின,, பல்மத மக்கள் வாழும் ஒரு பன்மைச் சமூகமாக ஏற்றதில்லை. ஒற்றை அடையாளத்துடன் கூடிய ஒற்றைச் சமூகமாகவே இந்தியச் சமீகங்களை அடையாளம் காணும் அவர்கள் மாநிலக் கல்வி வாரியங்கள் மீது காட்டும் காழ்ப்புணர்வை இந்த நோக்கிலிருந்து நாம் சரியாகப் புரிந்து கொள்வது அவசியம். பெருமைக்குரிய சாதனைகளை எல்லாம் செய்துள்ள மாநிலக் கல்வி வாரியங்களின் அதிக்காரங்களை எல்லாம் அழித்து அதை வெறும் பள்ளி இறுதியாண்டுத் தேர்வுச் சான்றிதழை அச்சிட்டுக் கொடுக்கும் நிறுவனமாக மாற்றுவதுதான் இன்று இவர்களின் நோக்கம். உயர் கல்விக்கென உள்ள UGC, ACTE, MCI முதலான நிறுவனங்களை எல்லாம் அழித்து எல்லா அதிகாரங்களும் மத்தியில் குவிக்கப்பட்ட ‘உயர் அதிகார நடுவண் அமைப்பு’ ஒன்றை அமைப்பது குறித்து 2014 தேர்தல் அறிக்கையில் பாஜக பேசியது. இன்று அது வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையிலும் அது உள்ளது. இது குறித்து நான் விரிவாக இந்தப் புதிய கல்விக் கொள்கை பற்றிய விமர்சன நூலில் எழுதியுள்ளேன். மாநில அடையாளங்களை அழித்து மத்தியப்படுத்தும் அவர்களது நோக்கத்தின் ஓரங்கம்தான் ‘நீட்’. ஏற்கனவே இங்கு செயல்பட்டுவரும் JEE, NIT முதலானவற்றுடன் இப்போது ‘நீட்’டும் சேர்ந்து கொள்கிறது.

கல்வித்துறைதான் இளம் பிள்ளைகள் முகிழ்த்து வெளிப்படும் நாற்றங்கால். அங்கே கை வைப்பது என்பது அவர்களின் மிக அடிப்படையான அணுகல்முறைகளில் ஒன்று. அதற்குள் பன்முகப் போக்குகளுக்கு இடமிருக்கவே கூடாது. அதனால்தான் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பல்கலைக் கழகங்களுக்குள் செயல்பட்ட சுதந்திரமான அரசியல் போக்குகளின் மீது கைவைத்தனர். உலக அளவில் புகழ் பெற்ற டெல்லி JNU வில் மாணவர் தலைவர்கள் கன்னையா குமார், உமர் காலித் போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டனர். நஜீப் எனும் ஆய்வு மாணவர் காணாமலடிக்கப்பட்டு ஓராண்டு முடியப் போகிறது. அங்கு நியமிக்கப்பட்ட புதிய துணைவேந்தர் பதவி ஏற்ற பின்  மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை மட்டும்  நான்கு இலட்சம் ரூபாய். அடுத்து ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம். அங்கு பல்கலைக் கழக ஜனநாயகத்துடன் சேர்த்து ரோஹித் வெமுலாவும் பலி கொள்ளப்பட்டார்.அப்புறம் ஜாதவ்பூர் பல்கலைக் கழகம், சென்னை IIT….

இந்தப் பின்னணிகளை எல்லாம் மறந்துவிட்டு “நீட்’ பிரச்சினையில் மோடி அரசும், நிர்மலா சீதாராமன் போன்றவர்களும் காட்டிய அலட்சியத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? ஒரு மாநில  சட்ட மன்றம் கட்சி வேறுபாடுகளை எல்லாம் மீறி நீட்டிலிருந்து ஓராண்டேனும் விலக்கு வேண்டும் எனத் தீர்மானம் இயற்றுகிறது. ஒரு மத்திய அமைச்சர், “நீங்கள் அவசரச் சட்டம் ஒன்று இயற்றுங்கள். விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம்” என்கிறார். அவசரச் சட்டம் இயற்றப்படுகிறது. அதன் கதி என்னாச்சு என்றால் “எனக்குத் தெரியாது” எனத் திமிர்த்தனத்துடன் பதில் வருகிறது. நீதிமன்றம் விசாரிக்கும்போது அதெல்லாம் விலக்கு அளிக்க முடியாது என அத்துணை ஆணவத்துடன் பதில் அளிக்கப்படுகிறது. இதையெல்லாம் இதன் பின்னால் உள்ள இந்த அரசியலைப் புரிந்து கொள்ளாமல் எப்படி விளக்க இயலும்?

இறுதியாக இன்னொன்றையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ‘நீட்’ ஆக இருக்கட்டும், பொது விநியோக முறைக்கான நியாய விலைக் கடைகளை ஊத்தி மூடுவதாக இருக்கட்டும், GST வரியாகட்டும் இவற்றை எல்லாம் நாம் உலகமயச் செயல்பாடுகளின் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் ஒப்புதல் இல்லாமல் இவற்ரில் எல்லாம் மத்திய அரசு கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துப் போட்டு வருவதன் விளைவுகள் இவை. இந்தியத் துணைக் கண்ட அளவில் கல்வி அதிகாரத்தை மத்திய அரசு தன் கைக்குள் வைத்துக் கொள்வது இன்று இதற்கு அவசியமாகிறது. வாஜ்பேயி தலைமையில் இருந்த பாஜக அரசுதான் அன்று கல்வியை ஒரு வணிகத்துக்குரிய சேவை என ஏற்றுக் கையொப்பம் இட்டது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால்தான் கீழே உள்ள இந்தக் கூற்றுகள் எத்தனை நியாயமானவை என்பது விளங்கும். அவை:

# நீட் திணிப்பு என்பது மாநில கல்வி வாரியத்தை (State Board) வெறும் +2 சான்றிதழ் கொடுக்கும் எந்த அதிகாரமும் அற்ற நிறுவனமாக ஆக்கும் முயற்சி..

# இது நவீன மருத்துவத்தில் இட துக்கீட்டின் மூலம் ஏற்பட்டுள்ள ஜனநாயகப்பாட்டை ஒழித்துக் கட்டுவதன் முதல்படி..

# உயர்சாதி – உயர் வர்க்க, நகர்ப்புற ஆங்கிலோ – ஹிந்திய ஆண்டைகளிடம் அதிகாரத்தை இடம் பெயர்க்கும் மோடி அரசின் திட்டங்களில் ஒன்று.

# இன்றைய கார்பொரேட் உலகமயச் சூழலை மிகச் சாதகமாகப் பயன்படுத்தி தமிழ் உள்ளிட்ட தேசிய அடையாளங்களைக் கசக்கி எறியும் நடவடிக்கைகள் இவை.

# எந்த விவாதத்திற்கும் உட்படுத்தாமல் நேரடியாக இவர்கள் உருவாக்கியுள்ள இன்றைய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் செயல்பாடுகளில் ஒன்று இது.

# வாஜ்பேயி தலைமையிலான NDA 1 ஐக் காட்டிலும் மோடி தலைமையிலான NDA 2 நுணுக்கமானது, அறுதிப் பெரும்பான்மையுடையது, கொடூரமானது என்பதை அறியாதவர்கள் வாயில் மண் !