காந்தியும் இந்து மதமும்

‘காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்’ என்கிற எனது நூல் வெளிவந்தபோது எங்கு சென்றாலும் என்னை நோக்கி வீசப்பட்ட கேள்வி ஒன்றுதான். கருத்து மாறுபடுவர்கள் மட்டுமின்றி, பொதுவில் என்னுடன் உடன்படுபவர்களும் கூட, “அதெப்படிங்க, காந்தி வருணாசிரமத்தையும் சாதிமுறையையும் ஏற்றுக்கொண்டவர் தானே. அவரைச் சனாதன எதிர்ப்பாளர் என்பதுபோல நீங்கள் முன்வைப்பதை எப்படி ஏற்க முடியும்?” என்று குடைந்தெடுத்தனர்.

இதற்குப் பதில் சொல்லி தமிழ்ச் சமூகத்தைத் திருப்திப்படுத்துவது அத்தனை எளிதன்று. எதார்த்தங்களை அவற்றின் சிக்கலோடு புரிந்து கொள்ள முயலாமல் எதையும் மிகை எளிமைப்படுத்தி, “இப்படி அல்லது அப்படி” எனத் தட்டையாகப் புரிந்து கொள்ளும் பண்பு வலுப் பெற்றுள்ள இன்றைய சூழலில் காந்தியைப் பற்றி அப்படித்தான் ஒரு எதிர்மறையான பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. புத்த பகவன் சொன்ன ‘யானையைப் பார்த்த குருடர்களின் கதை’ அன்றைக்கு மட்டுமின்றி இன்றைக்கும் பொருத்தமானதுதான்.

அவர்களுக்கு நான் பதில் சொல்வதற்குப் பதிலாக வேறு சில கேள்விகளை எழுப்புவது வழக்கம். அப்படியானால் ஏன் கோட்சே குழுவினர், சாவர்க்கர் உட்பட காந்தியைக் கொல்வதில் முனைப்புக்காட்டிக் கடைசியில் தம் முயற்சியில் வெல்லவும் செய்தனர்? வாக்களித்தபடி பாகிஸ்தானுக்கு 50 கோடிகளைக் கொடுப்பதற்கு காந்தி அழுத்தம் கொடுத்ததற்காகத்தான் தான் அவரைக் கொன்றதாக கோட்சே நீதிமன்றத்தில் சொன்னது உண்மையானால், நாட்டுப் பிரிவினை என்கிற பேச்சு எழும்பும் முன்னரே இதே குழுவினரும் இவர்களை ஒத்தவர்களும் அவரைக் குறைந்த பட்சம் ஐந்து முறை கொல்ல முயற்சித்தது ஏன்? காந்திக்கு எதிராக அவரை “வர்ண சம்ஹாரம்” செய்ய வந்தவர் என வரையறுத்து சென்னையிலிருந்து “ஆர்ய தர்மம்” என்றொரு இதழ் மறைந்த மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சுவாமிகளின் நிதி உதவியுடன் வெளியிடப்பட்டதன் பொருள் என்ன?

காந்தியைப் புரிந்துகொள்ள இந்தக் கேள்விகள் முக்கியமானவை. எப்படிப் பார்த்தாலும் இந்தக் கேள்விகளுக்கு நாம் இரு பதில்களைத்தான் சொல்ல முடியும். ஒன்று சுதந்திர இந்தியா இந்து ராஷ்டிரமாக உருப் பெறுவதற்கு ஒரு வலுவான தடையாக அவர் இருந்தார் என்பது. காந்தி பல்வேறு சாதி, மதம், மொழி பேசும் மக்களின் தேசமாக இந்தியாவைக் கற்பிதம் செய்தார், சாவர்க்கரும் மற்றவர்களும் இந்தியாவை இந்துக்களின் தேசமாகக் கற்பிதம் செய்ய முயன்று காந்தியின் மக்கள் செல்வாக்கின் முன் படு தோல்வி அடந்தனர், காந்தியின் தேசியம் பன்மைத்துவம் சார்ந்தது. அது ஒரு உள்ளடக்கும் தேசியம் (inclusive nationalism). அவரை எதிர்த்தவர்களின் தேசியம் இந்துக்கள் தவிர மற்றவர்களை விலக்கும் தேசியம் (exclusive nationalism).

மற்றது அவர் இந்து மதம் குறித்து முன்வைத்த வாசிப்புகள் முற்றிலும் சனாதனத்திற்கு எதிராக இருந்தன. குறிப்பாக இந்து மதத்தில் தீண்டாமை கிடையாது என அவர் முன்வைத்த வலுவான கருத்துக்களைச் சனாதனிகளால் ஏற்கவே இயலவில்லை. காந்தி ஆலயப்பிரவேச இயக்கத்தை முன்னெடுத்தபோது, அவரது தமிழக வருகையை எதிர்த்து “காந்தீ, திரும்பிப் போ” எனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டன. சிதம்பரம் உள்ளிட்ட கோவில்கள் மூடப்பட்டன. காந்தியை இழிவுபடுத்தி, “ தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம்” என்றொரு நூல் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. என்னுடைய முன்னுரையுடன் அந்நூல் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

காந்தி தீண்டத்தகாதவர்கள் பிரச்சினையில் கொண்டிருந்த கருத்துக்களில் நமக்கும் சில மாறுபாடுகள் உண்டு. ஆனாலும் பெரியார் உள்ளிட்ட சாதி ஒழிப்புப் போராளிகள் இந்தத் திசையில் பேசியவற்றையும், செய்தவற்றையும்கூடச் சகித்துக் கொண்டவர்கள் காந்தி அதைச் செய்த்தபோது கொதித்தெழுந்தனர். ஏன்? சாதி ஒழிப்புப் போராளிகள் பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்று அவர்களை எழுச்சி கொள்ளச் செய்தனர். காந்தியோ பாதிக்கப்பட்டவர்களோடு நில்லாமல் யார் பாதிப்பிற்குக் காரணமாக இருந்தார்களோ அவர்களிடமும் பேசினார். அவர்களையும் களத்தில் இறக்கினார். சென்ற நூற்றாண்டில் ஆசியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய மக்கள் இயக்கங்களிலொன்றாக காந்தியின் தலைமையிலான ஆலயப் பிரவேச இயக்கம் அமைந்தது என இன்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

காந்தி தீண்டாமைக்குக் காரணமானவர்களை நோக்கிப் பேசியதாலேயே அவரின் மொழி இதர சாதி ஒழிப்புப் போராளிகளின் மொழியிலிருந்து வேறுபட்டிருந்தது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவரது மொழி தோற்றத்தில் மென்மையாக இருந்த போதிலும் இந்து மதத்தின் அடிப்படைகளை அசைப்பதாகவும் இருந்ததைப் புரிந்து கொண்டதால்தான் அவரைச் சனாதனிகள் ‘வர்ண சம்ஹாரம்’ செய்ய வந்தவராகப் பகைத்தனர்.

காந்தியின் இந்து மத வாசிப்பு மரபு வழி வாசிப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இந்து மதத்தில் தீண்டாமை இல்லை என்று மட்டும் அவர் சொல்லவில்லை, ஆலய வழிபாடுகள், மதச் சடங்குகள், நேர்த்திக் கடன்கள் ஆகியவற்றையும் விலக்கி வாழ்ந்தவர் அவர். ஆலயங்களை விபச்சார விடுதிகள் என்கிற அளவிற்கு அவர் ஒப்பிட்டுப் பேசியபோதும் இந்தியத் துணைக் கண்டத்தில் ஏற்படும் இயற்கைச் சீரழிவுகள் தீண்டாமையை இந்துச் சமூகம் கடை பிடிப்பதன் விளைவுதான் என்று சொன்னபோதும் இங்கு ஏற்பட்ட சர்ச்சைகளும் கண்டனங்களும் நினைவுகூரத் தக்கன. வருணாசிரமம் குறித்த அவரது தொடக்க காலக் கருத்துக்களும் கூட இறுதியில் பெரிய அளவில் மாறின.

இராமனை அவர் ஒரு இலட்சிய மானுடனாகவும், இராம ராஜ்யம் என்பதை ஒரு இலட்சிய அரசாகவும் மட்டுமே அவர் முன்வைத்தார். இராமாயணத்தை ஒரு வரலாற்றுக் காவியமாகவோ, இராமனை ஒரு வரலாற்று நாயகனாகவோ முன்வைப்பதை அவர் மற்றுத்தார். வேறு சொற்களில் சொல்வதானால் காந்தியின் தர்க்கத்தில் இராமன் அயோத்தியில் பிறந்தான் என்பதற்கும் சேதுப் பாலத்தை அவன் அமைத்தான் என்பதற்கும் இடமில்லை.

காந்தி தன் அரசியலுக்கு வரலாற்றை என்றும் துணை கொண்டதில்லை. அதேபோல டால்ஸ்டாய், தோரோ ஆகியவர்களின் சிந்தனை வழி வந்த அவரிடம் “தேசபக்தி” என்கிற சொல்லாடலும் இருந்ததில்லை. காந்தி உயிருடன் இருந்த காலத்தில் அவருக்கு எதிராக சர் சங்கரன் நாயர் எழுதிய நூலின் தலைப்பு “காந்தியும் அராஜகமும்” (Gandhi and Anarchy).

திலகர், அரவிந்தர் முதலான காந்திக்கு முந்திய தேசியப் போராட்ட வீரர்கள் எல்லோரும் பகவத் கீதையை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான தனி நபர்க் கொலை உள்ளிட்ட போர்த் தொழிலை முன்வைக்கும் புனித நூலாக வாசித்துக் கொண்டிருந்த நேரத்தில் காந்தி அதை ஒரு சமாதானத்தின் சாத்தியங்களையும், அஹிம்சைப் பாதையையும் வற்புறுத்தும் நூலாக வாசித்து உரை எழுதினார். இது குறித்து ஒரு நவீன காந்தியியல் ஆய்வாளர், “வாசிப்புச் சுதந்திரம் என்கிற நவீன கோட்பாட்டை அதன் உச்சபட்ச வடிவத்தில் கையாண்டவர் காந்திதான்” எனக் கூறுகிறார்.

காந்தியின் இந்து மதம் குறித்த வாசிப்பில் நாம் காணும் சிக்கல்கள் கூட அவை எந்தப் புனித நம்பிக்கைகளின் (believes) அடிப்படையிலிருந்தும் உருவாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மாறாக அவை உடல் மற்றும் உளத் தூய்மை குறித்த அவரது கட்டுப்பெட்டித் தனமான கருத்துக்களிலிருந்தே முகிழ்த்துள்ளன. எடுத்துக்காட்டாக சேரன்மாதேவிக் குருகுலப் பிரச்சினையில் கூட பார்ப்பனர்களையும் பார்ப்பனர் அல்லாதவர்களையும் தனித்தனியே அமரவைத்துப் பந்தி பரிமாறியதைத் தவறு எனக் கூறியவராயினும் காந்தி ‘சம பந்தி போஜனம்’ என்பதை ஒரு உயரிய கொள்கையாக ஏற்கவில்லை. தீண்டாமை ஒழிக்கப்பாட்டு எல்லாவற்றிலும் சமத்துவம் கடைபிடிக்கப்பட்ட அவரது தென் ஆப்ரிக்க டால்ஸ்டாய் மற்றும் போனிக்ஸ் பண்ணைகளின் விதிமுறைகளில் சமபந்தி போஜனம் ஒரு உயரிய கொள்கையாக ஏற்கப்படவில்லை,

ஆனால் இந்த அணுகல்முறை சாதி, வருண அல்லது தீண்டாமை அடிப்படையில் முன்வைக்கப்படவில்லை. ஒன்றாக அமர்ந்து உண்ணுவது என்பதே அசிங்கம் என அவர் காருதினார். தனது மனைவி பிள்ளைகளுடன் கூட ஒன்றாக உண்ணுவதை அவர் வெறுத்தார். “சாப்பிடுவது என்பது கழிப்பதைப் போலவே ஒரு மோசமான விஷயம். கழிப்பதிலாவது ஒரு வெளியேற்றும் சுகம் நமக்கு உள்ளது” என்பது அவரது கூற்று. அதே நேரத்தில் அவரது தென் ஆப்ரிக்க வீட்டில் ஒரு தலித் கிறிஸ்தவ ஊழியரின் அறையிலிருந்த கழிவு நீர்ப் பானையை கஸ்தூரிபாய் ஏணி வழியாகச் சுமந்து வந்து சுத்தம் செய்யத் தானும் தயங்கி, காந்தியையும் செய்யக் கூடாதென எதிர்த்தபோது அவர் மனைவியை எவ்வளவு மூர்க்கமாக எதிர்த்தார் என்பதைச் ‘சத்திய சோதனை’யில் காணலாம். அவரது சமபந்தி போஜன வெறுப்பு சாதி அடிப்படையில் உருவானது அல்ல.

இந்து மதம் பிறவி அடிப்படையிலானது, ஒருவர் இந்துவாகப் பிறக்க மட்டுமே முடியும் என்பதை அதன் குறைபாடுகளில் ஒன்றாக முற்போக்காளர்கள் விமர்சிப்பது வழக்கம். ஆனால் காந்தியோ அதுவே இந்து மதத்தின் சகிப்புத் தன்மைக்கு எடுத்துக்காட்டு என்றார். அதாவது மதம் மாற்றுவது என்பது பிற மதங்களின் இருப்பைச் சகிக்காததின் விளைவு என்பது அவர் கருத்து. கடைசிவரை மதமாற்றம் என்பதை அவர் ஏற்கவே இல்லை. ஆனால் சட்டம் இயற்றி மதமாற்றத்தைத் தடுப்பது என்கிற நிலை வந்தபோது அம்முயற்சியைக் கடுமையாக எதிர்த்தார். அதென்ன?

அதுதான் காந்தி.