மணிமேகலை 8 :பாத்திரம் பெற்ற பைங்கொடி மடவாள்

நெஞ்சில் கனம் மணக்கும் பூக்கள் 11 – தீராநதி, டிசம்பர் 2017

droupathi

மணிமேகலைக் காவியத்துள் பதிக்கப்பட்ட கிளைக் கதைகள் யாவும் வெறும் காப்பிய அழகுக்காகவன்றி பவுத்தக் கோட்பாடுகளை விளக்குமுகவும் அமைக்கப்பட்டுள்ளன எனக் கண்டோம். தவிரவும் அவை பௌத்த அறவழியை முன்னிறுத்துவதோடு நில்லாமல் மிக நுணுக்கமாக வைதீக அணுகல் முறைகளையும், நம்பிக்கைகளையும் வெளிப்படையாகவும் தீவிரமாகவும் மறுப்பதாகவும் உள்ளது நம் கவனத்துக்குரிய ஒன்று.

எடுத்துக்காட்டாக நாம் முன் கண்ட சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை என்பது அவரவர் கர்ம வினைக்கேற்ப மறுபிறவி அமையும், அதிலிருந்து யாரும் தப்ப இயலாது என்கிற பவுத்தக கோட்பாட்டைச் சொல்வதோடு நிற்கவில்லை. “கொலை அறமாம் எனும் கொடுந்தொழில் மாக்கள் அவலப் படிற்றுறை ஆங்கது” எனச் சொல்வதன் ஊடாக வேள்விகளில் உயிர்களைப் பலியிடுவதன் மூலம் ஒருவன் பிறவியைக் கடத்தல் என்பதோ, புண்ணியம் சேர்த்தல் என்பதோ சாத்தியமில்லை என்பதும் சாற்றப்படுகிறது.

தெய்வங்களை அணுகிப் பக்தி செய்வதன் ஊடாகவோ, இல்லை தெய்வங்களைப் பக்தி கொண்டு வேண்டுதலின் ஊடாகவோ, இல்லை வேள்விகள் முதலான சடங்குகளின் ஊடாகவோ கூட கர்ம வினைகளிலிருந்து யாரும் தப்ப ஏலாது என்பதை நிறுவும் முகமாக சாத்தனார் அக்காட்சியை அமைப்பது கவனமாகக் காணத் தக்க ஒன்று. அந்தக் காதையின் இறுதியில் சம்பாபதித் தெய்வம் அனைத்து தெய்வங்களையும் ஆங்கு ஒருங்கு கூட்டி அவர்களின் இயலாமையைக் காட்டிய காட்சி இடம்பெறுகிறது. எத்தனை கடவுளர் கூடினும் கர்ம வினையை அவர்களால் மாற்ற இயலாது என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப் படுகிறது.

அப்படியாயின் பிறவிக் கடலைக் கடக்க வழிதான் என்ன. அற வாழ்வொன்றே வழி என்கிறது பௌத்தம். கொல்லாமை உள்ளிட்ட பவுத்த சீலங்களைக் கடைபிடித்தொழுகுதல் மட்டுமே வினை தீர்க்கும் வழி எனச் சொல்வதன் ஊடாக பக்தியின் இடத்தில் அறத்தை வைக்கிறது பௌத்தம். அத்தோடு நில்லாமல் “பேயடித்து மாண்ட சார்ங்கனின்” கதையின் ஊடாக பேய் அடித்தல் முதலான நம்பிக்கைகளையும் கேள்விக்குட்படுத்துகிறது பவுத்தம். கர்ம வினைதான் சார்ங்கனின் மரணத்திற்குக் காரணமே ஒழிய பேய் அடித்ததா இல்லையா என்பதல்ல அங்கு பிரச்சினை.

இந்த அத்தியாயத்தில் நாம் காண உள்ள ஆபுத்திரன் கதையும் அவ்வாறே ‘பசிப்பிணி அகற்றல்” எனும் ஓர் உன்னத பௌத்த அறத்தை உணர்த்துவதோடு நில்லாமல் வேள்விகளில் உயிர்களைப் பலியிடும் மடமையையும் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. மணிபல்லவத் தீவில் உள்ள கோமுகிப் பொய்கையில் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபிப் பாத்திரம் பெற்ற கதையும் தொடர்ந்து வரும் ஆபுத்திரன் குறித்த இரு காதைகளும்  பௌத்த அறத்தையும், வைதீக நம்பிக்கைகளையும், மிக நுணுக்கமாக எதிர் எதிராக (juxtapose) நிறுத்துகின்றன. சாத்தனாரின் காவிய நுட்பத்திற்கு இது ஓர் சான்று.

அரசுருவாக்கங்கள், அதன் ஆடம்பரங்கள், பெரும் போர்கள், பெருவிழாக்கள் எல்லாவற்றிற்கும் ஊடாக பஞ்சம், பசி, வறுமை, இரந்தும் உயிர்வாழும் கொடுமை ஆகிவையும் இணையாக நம் தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதை அறிவோம். மிகப் பிரும்மாண்டமாக இந்திரவிழா நடைபெறும் அதே புகாரில்தான் சக்கரவாளக் கோட்டம் அருகில் இருந்த உலகவறவியில் பல ஊர்களிலுமிருந்து வந்திருந்த உருபசி உழன்றோரும், யாரும் இன்மையால் அரும்பிணி உற்றோரும், உணவிடுவாரை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இரப்போர்களும் நின்றிருந்ததையும் காண்கிறோம்.

பசியாற்றுதல் என்பது பவுத்தத்தின் ஒரு தீவிரமான கோட்பாடு (obsession). அது அதன் பிரிக்க இயலாத ஓரங்கம். “நோய்களிலேயே கொடிது கொடிது பசி” என்றார் புத்தபிரான் (தம்மபதம்). இன்றும் பவுத்த இயக்கங்கள் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கூட “பசித்தோர்க்கு உணவிட நடப்போம்” (walk to feed the hungry) என்பன போன்ற  முழக்கங்களுடன் செயல்படுகின்றன.

“ஆசையைவிடப் பெரும் தீ / வெறுப்பைவிடப் பெருங் குற்றம் / பிரிவினும் பெரும் துயர் / பசியினும் பெரு நோய் / இறுதி விடுதலையினும் பேரின்பம் ஏதுமில்லை” – என்பது பௌத்த முழக்கங்களில் ஒன்று. பசித்துயர் அகற்றல் என்பதை மானுடர்க்கு மட்டுமே பொருத்தி நிறுத்துவதில்ல. பறவைகள், மிருகங்கள் என மன்னுயிர் அனைத்தின் பசி நீக்கலையும் அது ஒரு தர்மமாக ஏற்கிறது.

“அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்

மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

கண்டதில்லை”

என அறம் உரைக்கிறது மணிமேகலை.

மணிபல்லவத்தீவில் புத்த பீடிகையை வணங்கித் தன் முற்பிறப்பை உணர்ந்த மணிமேகலையின் முன் தோன்றிய மணிமேகலா தெய்வம் இனி அந்தச் சிறுபெண் மிகப் பெரிய அறப்பணிகளை இம்மண்ணுலகில் செய்ய உள்ளாள், அன்று தமிழகத்தில் ஓங்கி நின்ற பல்வேறு சமய சித்தாந்தங்களையும் எதிர்கொண்டு வாதில் வெல்லும் பெரும்பணி அவளுக்குக் காத்திருக்கிறது என்பதையெல்லாம் கணக்கிற்கொண்டு அவளுக்குச் சில அற்புத ஆற்றல்களைத் தந்துதவியது. சிறுமி, பெண், இளையோள், வளையோள் என்றெல்லாம் அவளை வாதுக்கு நிற்போர் எளிதாக நினைத்துவிடக் கூடாது என மாற்று உரு எய்தவும், வானில் பறக்கவும் உரிய மந்திரங்களைத் தந்து அகலும் அத் தெய்வம் மீண்டும் திரும்பி வந்து, “சிறந்த கொள்கைச் சேயிழை!” என அவளை விளித்து, “ஒன்றை மறந்தேன். உடல் என்பது உணவின் பிண்டம்; நான் இப்போது உனக்கருளும் மந்திரம் உன் பசி அறுக்கும்” என அதையும் சொல்லி அகன்றது தெய்வம்.

மணிமேகலை அந்த வெண்குன்றங்களையும், பூஞ்சோலைகளையும் மறுபடி வியக்கத் துவங்குகையில், “யார் நீ?” என்றவாறு அங்கு தோன்றியது இன்னொரு தெய்வம்.  அது தீவதிலகை. இந்தக் கேள்வியை இப்போது எதிர்கொள்கிறவள் நாம் காப்பியத் தொடக்கத்தில் கண்ட சிறுமி மணிமேகலை அல்லள். இதற்குள் அவள் பல அனுபவங்களைப் பெற்றுவிட்டாள். முற்பிறப்பையும், எதிர்காலக் கடமைகளையும் உணர்ந்துவிட்டாள். தீவதிலகைக்கு அவள் அளிக்கும் பதிலில் அந்த முதிர்ச்சி தெறிக்கிறது.

“யார் நீ என்கிறாய். எந்தப் பிறப்பில்? சென்ற பிறப்பில் நான் இராகுலன் என்பானின் மனைவி இலக்குமி; இப்பிறவியில் ஆடற் கணிகை மாதவி ஈன்ற மணிமேகலை..” என்கிறாள்.

அதற்கு, “இரத்தின தீபத்தில் (இலங்கைத் தீவின்) உள்ள சமந்த மலையில் (சிவனொளிபாதமலை எனப்படுவது) அமைந்துள்ள புத்தபிரானின் பாதபீடிகையை வணங்கி வந்தவள் நான்; தேவர் தலைவனின் ஆணைக்கிணங்க இந்த பீடிகைகயைக் காவல் காக்கும் பேறுடையேன்..” எனத் தீவதிலகத் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது. தொடர்ந்து, “ தருமத் தலைவன் புத்த தேவனின் அறமொழிகளில் பிறழாத நோன்பினர் மட்டுமே இந்த பாதபீடிகையைக் கண்டு தொழும் பேறு பெறுவர். இந்தக் கோமுகிப் பொய்கையில் புத்த பிரான் தோன்றிய ஒவ்வொரு விசாக பௌர்ணமி அன்றும் ஆபுத்திரனின் கைகளில் இருந்த பெருமைக்குரிய அந்தப் பாத்திரம் வெளித்தோன்றும். இன்று அந்த நாள். அந்தப் பாத்திரத்தில் பெய்யப்படும் உணவு அள்ள அள்ளக் குறையாமல் பெருகும் தகைமை உடைத்தது அது. அதன் பெருமைகளை அறவணரிடத்திலிருந்து நீ அறிவாய்…” –எனத் தீவதிலகை கூறியதும் மணிமேகலை எழுந்து ஆவலுடன் பொய்கையை வணங்கி நின்றாள்.

அப்போது அந்த அற்புதம் நிகழ்ந்தது. அப்பொய்கையினின்று மேலெழுந்த அமுதசுரபி வலஞ்செய்து நின்றிருந்த மணிமேகலையின் கைகளைச் சென்றடைந்தது. மனம் பொங்கி நின்ற மணிமேகலை,

“மாரனை வெல்லும் வீர ! நின்னடி !

தீநெறிக் கடும்பகை கடிந்தோய் ! நின்னடி !

பிறர்க்கறம் முயலும் பெரியோய் ! நின்னடி !

துறக்கம் வேண்டாத் தொல்லோய்!  நின்னடி !

எண்பிறக் கொழிய இறந்தோய் ! நின்னடி !

கண்பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் ! நின்னடி!

தீமொழிக்கு அடைத்த செவியோய் ! நின்னடி !

வாய்மொழி சிறந்த நாவோய் ! நீனடி !

நாகர் துயர்கெட நடப்போய் ! நின்னடி !

உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி !

வணங்குதல் அல்லது, வாழ்த்தலென் நாவிற்கு

அடங்காது !”

எனத் துதித்து அதை ஏற்றனள் மணிமேகலை.

இல்லாதோர் பசி நீக்கும் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி எனும் மானுடக் கற்பனை உலக இலக்கியங்களிலோ இல்ல உலக மதங்களிலோ வேறெங்கும் காணக் கிடைக்காத அற்புதம். இதைவிடப் பிரும்மாண்டமான பேரழிவுக் கற்பனைகளை எல்லாம் நாம் எத்தனையோ புராணங்களிலும், தொன்ம இலக்கியங்களிலும் கண்டிருக்கலாம். ஆனால் இப்படி பசித்தோர் துயர் நீக்க ஒரு தருமப் பாத்திரத்தை பௌத்தமன்றி வேறெதுவும் கற்பித்ததில்லை..

“பசிப்பிணி என்னும் பாவி ! அதுதான் எத்தனை கொடிது. அது கொண்டோரின் குடிப்பிறப்பு அழிக்கும்; நற்பண்புகளைக் கொல்லும்; வாழ்வின் ஆதாரமாக விளங்கும் கல்வி எனும் பற்றுக்கோட்டையும் அகற்றும்; நாணம், மேன்மை எல்லாவற்றையும் சிதைக்கும்; அழகிய ஆபரணம் பூணும் முலைகளுடன் கூடிய மனைவியுடன் இன்னொருவர் வீடில் யாசகத்திற்குச் சென்று நிற்க வைக்கும்; புல்லும் பொசுங்கும் கொடிய பஞ்சத்தில் விசுவாமித்திரன் போன்ற முனிவனையே நாய்க்கறியைத் தின்ன வைக்கும்;

“திருப்பிச் செய்யும் சக்தி உடையோர்க்கு அளித்தல் பெரிதன்று. அது அறத்தை விலைபேசுவது.. ஒன்றும் ஆற்ற இயலா மக்களின் அரும்பசியைக் களைவோரே மெய்யான அறவாழ்க்கை வாழ்வோர். இந்த மண்ணுலகில் வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! அத்தகைய உயிர்க்கொடைக்கான உறுதியுடையவளாயினை நீ!” – எனத் தீவதிலகையும் மணிமேகலையை வாழ்த்தினர்.

“இந்த நாவலந்தீவத்தில் நல்லறம் விதைத்து நற்பயன் கண்டோரின் இல்லின்கண் கிழிந்த ஆடையுடனும், துன்புறுத்தும் பெரும்பசியுடனும், மழை அல்லது வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் முற்பிறவியில் தாங்கள் அறமற்ற வாழ்க்கை வாழ்ந்தமைக்காக வருந்திப் பிச்சைக்கு நிற்போர் பலர். தன் குழந்தையின் வாடிய முகத்தைக் கண்டதும் வருந்திப் பால்சுரக்கும் தாய் முலை போல உணவைச் சுரப்பது இந்த அரும்பாத்திரம். அதைக் காண விருப்பம் உடையேன் நான்..” எனக் கூறி தீவதிலகையின் அடி வணங்கி, பீடிகையை வலம்வந்து தொழுது, விடைபெற்று, வன்வழி பறந்து, ஏழு நாள் ஆகியும் மகளைக் கானோமே எனக் கலங்கிக் காத்திருந்த அன்னையை அடைந்து அவளது முற்பிறப்பையும் சொன்னாள் மணிமேகலை.download

மாதவி, சுதமதி எல்லோரும் அமுதம் சுரக்கும் அப் பாத்திரத்தை வணங்கி, அறவணரைத் தொழச் சென்றனர்.

அறவணரிடம் அனைத்தையும் பகிர்ந்து கொண்ட மணிமேகலை அவரை அறம் உரைக்கக் கேட்டனள். இவ்வூரில் இன்னும் பல “ஏது நிகழ்ச்சிகள்” நடக்க உள்ளன. அதற்கு முன் அத்தகைய அறவுரைகள் பொருந்தா எனக் கூறிய அறவணர் மாதவி, சுதமதி இருவரும் புத்தபிரான் திருவடி தொழுது தொடர்வினை நீங்குவர் என ஆசி அருளினர். அதோடு, “மக்களுக்கு மட்டுமின்றி தேவர்க்கும் ஏதேனும் பொது அறம் இருக்குமாயின் அது பசிப்பிணி அகற்றல்தான்” என அறவணர் வழியாக, பசியகற்றல் என்பதைத் தேவர்க்கும் கடமை ஆக்குகிறது மணிமேகலை.

அடுத்து அறவணர் வழியாக நமக்கு உரைக்கப்படும் ஆபுத்திரன் வரலாறு இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு மனிமேகலையின் இரட்டைப் “பிரதியியல் களநுட்பத்தை” (textual strategy) விளங்கிக் கொள்ள உதவும். அதாவது ஒரு பக்கம் பௌத்த அறத்தை விளக்கும் போதே இன்னொரு பக்கம் வைதீக அணுகல்முறைகளை எதிர்த்து அது களமாடும் பாங்கு சுவையான ஒன்று. ஆபுத்திரன் கதை இதற்கு விரிவான களம் அமைத்துத் தருகிறது.

ஆபுத்திரன் காசியில் வசித்திருந்த அபஞ்சிகன், சாலி என்கிற ஒரு பார்ப்பனத் தம்பதியரின் மகன். சாலி கற்பில் பிறழ்கிறாள். பாவம் நீங்க குமரியில் நீராடித் திரும்பும் வழியில் ஆபுத்திரனைப் பெறுகிறாள். அந்தப் “பாவச்சுமை”:யை இரக்கமின்றி அங்கேயே விட்டு அகல்கிறாள். பசியில் கதறிக் கிடந்த அந்தத் தாயற்ற குழந்தைக்கு இரங்கிய ஒரு பசு அதை நாவால் நக்கி, வாயில் பாலையும் பொழிந்தது. இப்படி ஒருவாரம் அக்குழந்தையைப் பாலூட்டி வளர்த்தது அப்பசு. அதனால் அவன் “ஆ புத்திரன்” ஆனான்.

அப்போது அவ்வழியே ஒரு பார்ப்பனத் தம்பதி வந்தனர். வயனங்கோடு எனும் ஊரைச் சேர்ந்த இளம்பூதி எனும் அந்தப் பார்ப்பனன் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அள்ளி, “இவன் ஆ மகன் அல்லன்; என் மகன்” எனக் கூறி, கண்ணீர் விட்டு அக்குழந்தையை எடுத்து வந்து வளர்த்தனன்.

அந்தப் பார்ப்பனத் தம்பதியால் அன்புடன் வளர்க்கப்பட்ட ஆபுத்திரனுக்கு முப்புரி நூல் அணிவிக்கும் முன்னதாகவே அனைத்து வேத மந்திரங்களும் சொல்லிக் கொடுக்கப்பட்டன. ஆபுத்திரனும் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான்.  ஓர்நாள் ஆபுத்திரன் அவ்வூரிலுள்ள ஒரு அந்தணனின் வீட்டிற்குச் சென்றான். ஆங்கே வேள்வியில் பலியிடவென ஒரு பசு மாலை சூட்டப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. தன் நிலையுணர்ந்த பசுவின் கண்களில் வழிந்த நீரைக் கண்ட ஆபுத்திரன் நெஞ்சு நடுக்குற்று, நெடுங் கண்ணீர் உகுத்து, “இப்பசுவைத் துயரிலிருந்து விடுவிப்பேன்; நள்ளிரவில் திருட்டுத் தனமாக அதைக் கொண்டு செல்வேன்” எனக் கூறி அவ்வாறே செய்யவும் செய்தான்.

கற்கள் நிறைந்த பாதை வழியே ஆபுத்திரன் அப்பசுவைக் கடத்திச் சென்ற போது தேடி வந்த பார்ப்பனர் அவனைக் கோலால் அடித்து, “இப்படிப் பசுவைக் கடத்திச் செல்ல நீ ஒன்றும் நீச குலத்தில் பிறக்கவில்லை. நிகழ்ந்ததைச் சொல். புலைச் சிறு மகனே ! உன்னை அந்தணக் குலத்திலிருந்து சாதி விலக்கு செய்வோம்” என்று கேள்விகளால் துளைத்தனர். அப்போது அந்த நற் பசு வெருண்டு சீறி அப்பார்ப்பனரைக் கொம்பால் குத்திக் கிழித்துக் காட்டிடை ஓடித் தப்பித்தது.

 

(அடுத்த இதழில் ஆபுத்திரன் ஊடாக பவுத்தம் முன்வைக்கும் கருத்துகள்)