இந்தியா – பாக் மோதல் எங்கு கொண்டு விடும்?

(மார்ச் 2019  ‘மக்கள் களம்’ இதழில் வெளி வந்தது)

சென்ற மாதம் ‘ஜெய்ஷ் –ஏ –முகமட்’ (JeM) எனக் கூறப்படும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அடில் அஹமட் தர் எனும் 22 வயது இளைஞனின் தற்கொலைத் தாக்குதலால் (2019  பிப்ரவரி 14) குறைந்த பட்சம் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதிலிருந்து பத்தொன்பது நாட்கள் கழித்து இக்கட்டுரையை ‘டைப்’ செய்து கொண்டுள்ளேன். இடையில் நிறைய நடந்துவிட்டன. ஆசியாவின் அணுவல்லமை மிக்க இந்த இரு நாடுகளுக்கும் இடையே ஒரு யுத்தம் தொடங்கி மிகப் பெரிய அழிவுகளுக்கு இட்டுச் செல்லுமோ என்கிற அச்சம் இப்போது சற்றே குறைந்துள்ளது. இந்நிலை உருவானதில்,  நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், பாக் அதிபரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் காரணமாகியுள்ளதை உலகமே பாராட்டுகிறது.

பிப்ரவரி 14 அன்று காஷ்மீரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான இந்திய இராணுவ வீரர்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொழுது இளைஞன் ஒருவன் ஒரு தற்கொலைத் தாக்குதலை நடத்திவிடுவான் என யாரும் நினைக்கவில்லை. மோடி அரசு பதவி ஏற்றபின் (2014) காஷ்மீரப் பள்ளத்தாக்கில் வேகமாக அமைதி குலைந்தது.எனினும், இதற்கும் முந்தைய பல ஆண்டுகால முஜாஹிதீன் பயங்கரவாதத்திற்கும் 2014 க்குப் பிந்திய அமைதியின்மைக்கும் ஒரு வேறுபாடு உண்டு.2014 க்கும்முன் பள்ளத்தாக்கிலும் இந்தியாவின் வேறு சில பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில்காஷ்மீர மகளைக் காட்டிலும் அதிக அளவில் அந்நிய மண்ணில் பயிற்சி அளிக்கப்பட்ட முஜாகிதீன்களே அதிகமானதும், முக்கியமானதுமான பங்கு வகித்தனர்.

2014க்குப் பிந்திய இந்த எழுச்சியில் பள்ளத்தாக்கைச் சேர்ந்த உள்ளூர் காஷ்மிர் முஸ்லிம் இளைஞர்களே முக்கியமாக இருந்தனர்.வீதிகளில் கூடி கற்களை வீசி, பெல்லட் குண்டுகளுக்குத் தம் கண்களைப் பறி கொடுத்த நூற்றுக்கணக்கானோரிடம் பெரிய ஆயுதங்களும் இருந்ததில்லை.அவர்கள் பயிற்சிபெற்ற முஜாஹிதீன்களும் இல்லை. புர்வான் வானி  ஆசிரியக் குடும்பம் ஒன்றில் பிறந்த ஒரு இளைஞன், அவனது அண்ணன் ஆசையாக வாங்கியிருந்த ஒரு மோட்டார் சைகிளை ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவனை ஒரு இந்தியவீரன் பிடித்துச் சென்று, கடும் சித்திரவதைகளுக்குப் பின் அவன் கொல்லப்படுகிறான். இது அங்கு அன்றாட நிகழ்வாகிப்போன ஒன்று.சுமார் ஆறு குடிமக்களுக்கு ஒரு படை வீரன் என உலகிலேயே அதிக அளவில் படைகள் நிறுத்தப்பட்டுள்ள மிகச் சில பகுதிகளில் காஷ்மீரப் பள்ளத்தாக்கு ஒன்று.இந்தியாவின் எந்தச் சட்டங்களும் நெருங்க இயலாத அளவிற்கு அபரிமிதமான அதிகாரங்களுடன் கூடிய படைவீரர்கள் அவர்கள், அவர்கள் செய்யாத கொடுமைகள் இல்லை. அண்ணன் இவ்வாறு இந்தியப் படை வீரர்களால்  கொல்லப்பட்டதை அறியும் புர்ஹான் வானி ஒரு முஜாகிதீன் ஆகிறான். அந்த 22 வயது இளைஞனை இந்திய இராணுவம் பிடித்துக் கைது செய்ய வாய்ப்பொன்று கிடைத்தபோது அவனைக் கைது செய்து விசாரிக்காமல் சுட்டுக் கொன்றபோது (2016) பள்ளத் தாக்கே கிளர்ந்து எழுந்தது. அவனது மரண ஊர்வலத்தில் இலட்சக் கணக்கில் மக்கள் திரண்டனர்.

அதற்குப் பின் அங்கு முந்திய சில ஆண்டுகளில் இருந்த அமைதி குலைந்தது. ஆனால் இந்த அமைதிக் குலைவுக்குக் காரணம் பயங்கரவாதிகளோ இல்லை அந்நிய மண்ணில் பயிற்சி பெற்றவர்களோ இல்லை, உள்ளூர் மக்கள், மாணவர்கள், இளைஞர்கள்தான, கைகளில் வெறும் கற்களைத் தவிர வேறெந்த ஆயுதங்களும் இல்லாமல் வீதிகளில் நின்றனர், இராணுவத்தினர் மீது கற்களை வீசினர். இராணுவம் ‘பெல்லட்’ குண்டுகளால் ஆயிரக் கணக்கானோரின் கண்களைக் குருடாக்கிய கதையை உலகறியும்.இப்படியான ஒரு பின்னணியில்தான் புர்ஹான் சுட்டுக் கொல்லப்பட்டு மூன்றாண்டுகள் கூட முடிவடையும் முன் இன்றைய போர்ச்சூழல் உருவாகியுள்ளது.

நாற்பதுக்கும் குறையாத இந்தியப் ம்படைவீரர்கள் கொல்லப்பட்ட நிகழ்வோடு இன்றைய அமைதியின்மையும் போர்ச்சூழலும் உருவாகியுள்ளது.

113059-yzpstdrwyp-1550154353

இந்தத் தாக்குதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

1இன்று இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான இந்தத் தற்கொலைப் போரளியும் உள்ளூர் காஷ்மீரிதான்.அவன் ஜெய்ஷ் ஏ முகமது அமைப்பில் பயிற்றுவிக்கப்பட்டவன் ஆனாலும் அவன் பாகிஸ்தானியோ இல்லை வெளியிலிருந்து வந்தவனோ அல்ல, அவன் ஒரு உள்ளூர் காஷ்மீரி.அப்படிப் பொது மக்களிலிருந்து கோபத்துடன் கைகளில் கற்களை மட்டும் ஏந்தி வந்து கண்களைக் குருடாக்கிக் கொண்டஇளைஞர்கள் இப்போது ஒரு தலைமுறைக்குப் பின் மீண்டும் பயிற்சியளிக்கப்பட்ட முஜாஹிதீன்களாகக் பயங்கரமான வெடிமருந்துகளுடன் தன்னை அழித்துக் கொண்டு கூடவே படைவீரர்களுக்குப் பேரழிவு ஏற்படுத்த்ம் தற்கொலைப் போராளி ஆகிறான். இது கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்.மீண்டும் நிலைமை பழைய நிலைக்குத் திரும்புகிறது.காஷ்மீர இளைஞர்கள் இன்று முழுமையாக அந்நியமாகிப் போயுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.இதும ்கட்ந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட நிலை..

அவன் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவன் என்றும், அந்தப் பயங்கரவாதத்திற்குத் தாமே பொறுப்பேற்பதாகவும் ஜெய்ஷ்ஏ முஹமது அமைப்பு வெளிப்படையாக அறிவித்துள்ளது..

நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.காஷ்மீர மக்கள் தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்தியத் துணைக் கண்டத்துடன் இணைந்தவர்கள்.அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் படாத நிலையில் பல காலம் ஆயுதங்கள் எடுக்காமல் போராடி இறுதியில் ஆயுதப் போராட்டத்துத் தள்ளப்படுகின்றனர்.

நீண்ட கால ஆயுதப் போராட்டம், பயங்கரவாதத் தாக்குதல்கள் என்றெல்லாம் இருந்து பின் அவர்கள் சற்றே ஓய்ந்திருந்து 2008 வாக்கில் அமைதி வழியில் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து பேரணி ஒன்றிற்காகத்  திரண்ட போது மன்மோகன் சிங் அரசு அதை ஒடுக்கியது.

எனினும் 2014 வரை அங்கு பெரிய அளவில் வன்முறைகள், பயங்கரவாதத் தாக்குதல்கள் இல்லை.அதாவது நிலைமை சரியாகிவிட்டது என்பதில்லை.ஏதோ ஒரு வகையில் காஷ்மீரிகளுடன் ஒரு பேச்சுவார்த்தை சாத்தியமாக இருந்தது.

மோடி அரசு பதவி ஏற்றபின் நிலமை மீண்டும் மோசமானது.ஆனால் அப்போதும் கூட காஷ்மீர மக்கள் முற்றிலும் அந்நியமாகிவிடவில்லை.

இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இன்றையப் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவன் வெளியிலிருந்து வந்த பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவ்பன் அல்ல, ஜெய்ஷ் அமைப்பு ஒரு உள்ளூர் இளைஞனை இதற்குப் பயன்படுத்தியுள்ளது என்பது சிந்திக்கத் தக்கது. மீண்டும் காஷ்மீர் மக்களின் இந்திய எதிர்ப்புப் போராட்டம் இந்த ஐந்தாண்டுகளில் ஜெய்ஷ் போன்ற அமைப்புகள் உள் நுழையக் கூடிய போராட்டமாக மாறியுள்ளது.மக்கள் முற்றிலும் அந்நியமாகியுள்ல நிலையை இன்று ஜெய்ஷ் முதலான அமைப்புகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

எந்தப் பேச்சு வார்த்தைக்கும் தயாராக இல்லை எனும் நிலைபாட்டை எடுத்துக் கொண்டு, இருக்கும் நிலையில் எந்த மாற்ரத்தையும் ஏற்படுத்த மோடியோ இல்லை ராஜ்நாத் சிங்கோ தயாராக இல்லத சூழலில் மீண்டும் அங்கே பயங்கரவாதம் தலைஎடுத்துள்ளது.

பிரச்சினை இங்கே இருக்கிறது.

பாகிஸ்தானுடனான ஒரு யுத்தம் இதற்குத் தீர்வாகி விடுமா?

1971 க்குப் பின் மீண்டும் இன்றுதான் இந்திய விமானப் படை எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் மீதுஒரு தாக்குதலை நடத்தியுள்ளது.அதைக் கண்டு எல்லோரும் நடுங்கினோம்.நாம் மட்டுமல்ல உலகே நடுங்கியது.இரண்டும் அணு ஆயுதங்களைக் கையில் கொண்ட நாடுகள்.என்கிற அச்சம் எல்லோருக்கும் உள்ளது.இது ஒரு சமநிலையை எற்படுத்தி அது போரைத் தடுக்க உதவுமா?

ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும், இந்தியா பாக்கைக் காட்டிலும் 8.5 மடங்கு பொருளாதார பலமும், இரண்டு மடங்கு படைபலமும் உள்ள நாடு.அதன் தாக்குதல் வலிமை பாக்கைவிட மிக அதிகம்,இந்நிலையில் போரில் சமநிலை இல்லாதபோது தன்னிடமுள்ள அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தும் ஆசை அதற்கு வரலாம்.முதல் ஆசை யாருக்கு வந்தால் என்ன, அழிவது இருவருந்தான்.

ஆனால் இப்படியான போர்ச்சூழல் உருவாகும் என புல்வாமா தாக்குதல் நடக்கும் வரை யாரும்  எதிர் பார்க்கவில்லை. தேர்தல் நேரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுகும் இடையில் ஒரு போர்உருவாகலாம் என ஒரு மாதம் முன்பே அமெரிக்க உளவுத்துறை எச்சரித்தது உண்மைதான்.ட்ரம்பும் கூட அப்படி இருவாரங்களுக்கு முன் ஒருமுறை கூறியது செய்தியானது. இருந்தாலும் அப்படி எல்லாம் போர்ச் சூழல் உருவாகாது என்கிற நம்பிக்கைக்குக் காரணம் கடந்த சில ஆண்டுகளாக பாக்கில் இம்மாதிரியான பயங்கரவாத அமைப்புகளின் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளதுதான், இந்தியாவைக் காட்டிலும் பாக்கை அதிகமாக ஆதரித்து வந்த அமெரிக்கா இப்போது சிலகாலமாக வெளிப்படையாக பாக்கைக் கண்டிக்கத் தொடங்கி இருந்தது. அமெரிக்காவுக்கு எதிரான பலமான சக்தியாக இருந்த ருஷ்யா இப்போது பலமிழந்து போயிருந்ததாலும், மோடியின் இந்தியா மிகத் தீவிரமாக அமெர்ரிக்க – இஸ்ரேல் அணியில் இணைந்து நின்றதாலும் இப்போது அமெரிக்கா துணிச்சலாக பாக்கின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. பாகிஸ்தான் தஞ்சமடைய இபோது சீனாவைத் தவிர வேறு கதி இல்லை என்கிற நிலையில் ட்ரம்ப் பயங்கரவாதக் குழுக்களை ஒழிக்க வேண்டும் என நிபந்தனை விதித்து பாக்கிற்கான ஆயுத உதவிகளையும் நிறுத்தினார்..ஜனவரி 2018ல் அமெரிக்கா 1.3 பில்லியன் டாலர் இராணுவ உதவியை நிறுத்திய போது பாக்கின் பொருளாதாரமே அட்டம் கண்டது.இதன் விளைவாக பாக்கும் லக்‌ஷர் ஏ தொய்பா, ஜெய்ஷ் ஏ முகமது முதலான அமைப்புகளுக்கான ஆதரவுகளை நிறுத்தியிருந்தது. அவ்வமைப்புகளும் தம் பயிற்சி முகாம்களைக் கலைத்துச் சிதறி இருந்தன, அதனால்தான் இன்றைய பிரச்சினைகளுக்குச் சில நாட்கள் முன் (பிப்ரவரி 2019) நடைபெற்ற ம்யூனிச் பாதுகாப்பு அமைப்புச் சந்திப்பில் (Munich Security Forum) இந்தியா – பாக் உரசல் குறித்து எந்த விவாதமும் நடை பெறவில்லை.

இந்தப் பின்னணியில்தான் பிப்ரவரி 14ல் புல்வாமா தாக்குதல் நடந்தது.நரேந்திர மோடியைப் பற்றி அறிந்தவர்கள் எல்லோருக்கும் அச்சம்தான்.போர்ச்சூழல் உருவாகும் என எதிர்பார்க்காதவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.நரேந்திர மோடியும் பாஜகவினரும் தேசிய உணர்வை மிகத் தீவிரமாக விசிறத் தொடங்கினர்.கம்யூனிஸ்டுகள் உட்பட யாரும் தேசத் துரோகியாக விரும்பாமல் யார் அதிக தேச பக்தர் என நிறுவிக் கொள்வதில் மும்முரமாயினர்.

பிப்ரவரி 26 நள்ளிரவில் இந்தியாவின் மிர்ரேஜ் 2000 விமானங்கள் பன்னிரண்டு பாக் எல்லைக்குள் நுழைந்து அதன் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் உள்ள பாலகோட் பகுதியில் இருக்கும் ஜெய்ஷே அமைப்பின் பயங்கரவாத முகாம் ஒன்றில் குண்டுகளை வீசி அதிலிருந்த சுமார் 250லிருந்து 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியத் தரப்பில் பெரிய அளவில் செய்திகள் பரப்பப் பட்டன. இது இந்தியாவின் இரண்டாவது “துல்லியத் தாக்குதல்“ (surgical strike) எனக் கூறப்பட்டது. தாக்குதலுக்குச் சில மணி நேரத்தில் தொலைக்காட்சியில் தோன்றிய இந்திய பாதுகாப்புத் துறைச் செயலர் விஜய் கோகலே இது ஒரு “இராணுவ நடைமுறையிலான தாக்குதல் அல்ல முன்கூட்டிய பாதுகாப்புத் தாக்குதல்” – எனும் பொருள் பட “preemptive nonmilitary strike” என்றும், “இது பாகிஸ்தான் மீதான தாக்குதல் அல்ல. பயங்கரவாதத்தின் மீதான தாக்குதல்” என்றும் கூறினார். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர் பங்கிற்கு, “இது இராணுவ நடவடிக்கை அல்ல. ஒரு சிவிலியன் கூட பாதிக்கப்படவில்லை” – என்றார்.

பாக் இராணுவம் தன் பங்கிற்கு, “இந்தியாவுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது” என முழங்கியது.அதாவது தாங்கள் பதில் தாக்குதல் தொடுப்போம் என எச்சரித்தது.

சரி நிச்சயம் போர்தான் என அஞ்சினோம்.1971க்குப் பின் பல்வேறு சந்ந்தர்ப்பங்களில் மிகத்தீவிரமாகப் பிரச்சினைகள் வந்த போதெல்லாம் கூட இப்படி இரண்டு நாடுகளுமே எல்லை தாண்டித் தாக்குதலை நடத்தியதில்லை.இனி என்ன ஆகுமோ என்கிற அச்சம் நம் எல்லோரையும் சூழ்ந்தது.

இந்த நேரத்தில் மிகவும் பொறுமையாகப் பிரச்சினையைக் கையாண்டது பாக் பிரதமர் இம்ரான் கான் தான்.இரு நாடுகளும் மிகப் பெரிய அழிவாயுதங்களைச் சுமந்துள்ள நாடுகள்.நமக்குள் இப்படியான மோதல் எங்கு கொண்டுபோய் விடும்.பொறுமையாகப் பிரச்சினையை அணுகுவோம் என்றும் அப்படியான பெரிய அளவிலான பயங்கரவாத முகாம்கள் தன் நாட்டில் இல்லை என்றும் அவர் கூறினார். இன்னொரு பக்கம் பயங்கரவாத முகாம் ஒன்றைத் தாக்கி 300 பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுவது பொய் எனவும், அழிக்கப்பட்டது ஆள் இல்லாத மரங்கள் சூழ்ந்த ஒரு பகுதிதான் எனவும் சில புகைப்[பட ஆதாரங்களுடன் பாக் தரப்பில் செய்திகள் பரப்பப் பட்டன.l_440199_043358_updates

இந்த நேரத்தில் சில வெளி நாட்டுப் பத்திரிக்கைகள் களத்தில் இறங்கின. Huff Post இணைய இதழ் இந்தியா குண்டு வீசிய இடங்களில் வாழ்ந்த ஒரு சிலரைய நேர்கண்டு எழுதிய கட்டுரைச் செய்தி உலகம் முழுதும் பரவியது. ‘அல்ஜசீரா’ போன்ற ஊடகங்களும் அதே போன்ற செய்திகளை வெளியிட்டன.குண்டு வீசப்பட்ட இடத்தில் வாழும் நூரான் ஷேக் என்பவர் 250 பேர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால் எங்கே அவர்களின் உடல்கள் எனக் கேட்டுச் சிரிப்பதைப் படத்துடன் ஹஃப் போஸ்ட் வெளியிட்டது. பெரிய முகாம் இருந்தது உண்மை.ஆனால் இப்போது அப்படி எல்லாம் இல்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

இதற்கிடையில் இந்தியாவின் இந்தத் தாக்க்குதல் நடந்த அடுத்த நாள் (பிப் 27) எல்லை தாண்டித் தமது எல்லைக்குள் நுழைந்த இரண்டு இந்திய விமானப்படை விமானங்களைத் தான் சுட்டு வீ௳த்தியதாக பாக் அறிவித்தது. வீழ்த்தப்பட்ட ஒரு விமானத்தில் இருந்த விமான ஓட்டி அபிநந்தன் வர்த்தமானன் என்பவர் பாக் இராணுவத்தால் உயிருடன் பிடிக்கப்பட்டார்.இந்தப் பிரச்சினையிலும் இம்ரான் கான் உலகோர் வியக்கும்படி நடந்து கொண்டார். அபிநந்தனுக்கு நல்ல சிகிச்சை அளித்து பாதுகாப்புடன் இந்தியாவிடம் ஒப்படைத்தார்,

iaf-pilot-in-pakistani-custody-will-be-governed-under-geneva-convention-2019-02-27

பாலகோட் தாக்குதலில் ஜெய்ஷே பயங்கரவாத முகாமை அழித்து 300 பயங்கரவாதிகளைக் கொன்ற செய்தி பொய் என்பது எல்லாத் தரப்பிலிருந்தும் நிறுவப்பட்ட பின் மார்ச் 04 அன்றுமத்திய தகவல்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியா அரசுத் தரப்பில் அப்படி எல்லாம் சொல்லவே இல்லை எனவும் ஊடகங்கள்தான் அப்படிச் செய்தியைப் பரப்பிவிட்டன என்றும் கூறி எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். மார்ச் 4 அன்று கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விமானப்படைத் தளபதி பி.எஸ்.தனோவா அவர்கள், “எங்களின் நோக்கம் இலக்கைத் தாக்குவதுதானே ஒழிய எத்தனை பேர் இறந்தனர் என்றெல்லாம் சொல்ல முடியாது. அரசுதான் விளக்கம் அளிக்க வேண்டும்” எனச் சொல்லியுள்ளார்.இந்தச் செய்தியை வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கூடவே மார்ச் 3 அன்று இந்தத் தாக்குதலில் 250 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமித் ஷாஅளந்துள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது.

பாக் ஒன்றும் பயங்கரவாதிகளுக்குப் புகல் அளிக்காத நாடு அல்ல, அங்கு ஜெய்ஷே முகாம்கள் இருந்ததெல்லாம் உண்மைதான்.அதேபோல பாக் இராணுவம் அரசின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படக்கூடிய நிலைமைகள் இருந்ததும் உண்மைதான்.ஆனால் நிலைமைகள் எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை.ஒரு நேரத்தில் தமிழகம் முழுவதும் ஈழப் போராட்ட ஆயுதக் குழுக்கள் எல்லாம் இங்கே ஆயுதப் பயிற்சி முகாம்களை அரசாதரவுடன் நடத்தியதை அறிவோம்.ராஜீவ் கொலைக்குப் பின்னர் அவை கலைத்து ஒடுக்கப்பட்டதையும் அறிவோம்.இன்று பாக்கிலும் ஓரளவு நிலைமை மாறியுள்ளது.பெரிய பயங்கரவாத முகாம்கள் எல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை.இராணுவமும் முன்னைப்போல இப்போது அரசை மீறிய அதிகாரமுள்ள அமைப்பாக இருக்கும் நிலையில் இல்லை.இந்தியா பாகிஸ்தான் இரண்டுமே அணு வல்லமை உடைய நாடுகள் மட்டுமல்ல. வறுமை நிறைந்த நாடுகள், அவை தமக்குள் போரிட்டுக் கொள்வதைப்போல மூடத் தனம் ஏதும் இருக்க இயலாது.balacot

ஒன்றைச் சொல்லி முடிப்பது அவசியம். 1947 தொடங்கி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சினைகள் அனைத்தையும் ஆராய்ந்தால் அவற்றுக்குப் பின் காஷ்மீர்ப் பிரச்சினை இருப்பது விளங்கும், காஷ்மீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் வேறு எத்தனை நடவடிக்கைகளையும் அடக்குமுறைகளையும் மேற்கொண்டாலும் அங்கே அமைதியை நிலைநாட்ட முடியாது. காஷ்மீர்ப் பிரச்சினை பேச்சு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது எனும் நிலையை மேற்கொண்டிருக்கும் வரை இப்பிரச்சினைக்குத் தீர்வில்லை.

மேலும் இரு குறிப்புகள்

  1. நாடுகளுக்கிடையேயான கடைபிடிக்கப்படும் சில அவசியமான ஒழுங்குகளில் (Westphalian Order) ஒன்று எக்காரணம் கொண்டும் இன்னொரு நாட்டின் எல்லைக்கோட்டித் தாண்டிப் பிரவேசிக்கவோ தாக்கவோ கூடாது என்பது. 1971 க்குப் பின் நிலைமைகள் எவ்வளவு மோசமான போதும் இந்தியாவும் பாக்கும் அதைக் கடைபிடித்து வந்துள்ளன. எல்லை தாண்டித் தாக்குதல் செய்வதென்பது போர் தொடங்கிவிட்டதான ஓர் அறிவிப்பிற்குச் சமம். கிரீமியாவை ருஷ்யா இணைத்துக் கொண்டதை அவ்வாறே பன்னாட்டுச் சமூகம் எதிர் கொண்டுள்ளது. 2016 அமெரிக்கத் தேர்தலில் ருஷ்யாவின் தலையீடும் இவ்வாறே கருதப்படுகிறது. எனினும் இதன் பொருட்டு அமெரிக்கா ரஷ்யாவிற்குள் இதுவரை எல்லைதாண்டியத் தாக்குதல் நடத்தியதில்லை. இந்தியா 1971 க்குப் பின் இதுவரை இதுவரை இப்படியான செயற்பாடுகளில் இறங்காதது பன்னாட்டளவில் அதன் மீதான மதிப்பு குறையாமல் இருப்பத்ற்கு ஒரு காரணம்..
  1. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை ஒட்டி இந்தியா மேற்கொண்ட சில கண்டிக்கத் தக்க நடவடிகைகளில் ஒன்று ஹுரியத் தலைவர்கள் உட்பட சுமார் 170 பேர்களுக்கு வழங்கி வந்த பாதுபாப்பை இந்திய அரசு ரத்து செய்தது. இதில் உயிராபத்து உள்ள பல காஷ்மீர அரசியல் கட்சித் தலைவர்களும் அடக்கம். இந்தியா முழுவதும் குறிப்பாக வட மாநிலங்களில் காஷ்மீர மாணவர்கள், வணிகர்கள், ஊழியர்கள் முதலானோர் கடுமையாகத் தாக்கப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்கப் பரிவாரத்தினர் இதில் முக்கிய பங்கு வகித்தனர். “இயல்பான தேசபக்தியின் எதிர் விளைவு என இதை அவர்கள் நியாயப்படுத்தவும் செய்தனர். டெராடூனில் ஒரு கல்வி நிறுவனம் அடுத்த ஆண்டுமுதல் காஷ்மீர மாணவர்களுக்குத் தம் நிறுவனத்தில் இடமளிப்பதில்லை என பா.ஜ.க மாணவர் அணிக்கு எழுதிக் கொடுத்துள்ள செய்தியும் பத்திரிகைகளில் வந்துள்ளது. இவ்வாறு இந்தியாவின் பலபகுதிகளிலும் நடந்த தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் ஒரு நாள் கடை அடைப்பும் மேற்கொள்ளப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *