இந்திய பாக் போர் வெறிப் பேச்சுக்கள்

(ஜனவரி 23, 2013 ல் எழுதியது)

டெல்லி பாலியல் வன்முறைக்கு அடுத்தபடியாக இன்று இந்திய ஊடகங்களை நிரப்புகிற செய்தி காஷ்மீருக்குள் உள்ள போர் நிறுத்தக் கோட்டில் (LoC) ஏற்பட்டுள்ள முறுகலும் அதை ஒட்டிய ஆவேசப் பேச்சுக்களுந்தான். “கொல்லப்பட்ட ஒவ்வொரு இந்திய வீரரின் தலைக்கும் பத்து பாகிஸ்தானியர்களின்  தலை உருள வேண்டும்”, “பாகிஸ்தான் மீது இந்தியா ‘உண்மையான நடவடிக்கை’ எடுக்க வேண்டும்”, “சமாதானத்திற்கு இது நேரமில்லை”, “வேறு வகைச் சாத்தியங்கள் உண்டு என எச்சரிக்கிறோம்” என்பது போன்ற முழக்கங்களை இன்று அமைச்சர்கள், எதிர்க் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி இந்திய இராணுவத் தலைமைகளும் உதிர்க்கின்றன.

பாகிஸ்தானையும் முஸ்லிம்களையும் முதல் எதிரிகளாகக் கற்பித்து ஒரு அரசியலைக் கட்டமைக்கும் இந்தியாவின் பிரதான எதிர்க் கட்சியான பா.ஜ.கவுக்கும் காங்கிரசிற்கும் இந்த விஷயத்தில் பெரிய வித்தியாசமில்லை என்பதுபோல இன்று இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அமைகின்றன. பாகிஸ்தானிலிருந்து இங்கு வந்துள்ள இசைக் கலைஞர்களையும் ஹாக்கி வீரர்களையும் திருப்பி அனுப்புவதும் பாகிஸ்தானியர்களுக்கு இந்திய விசா அளிப்பதை நிறுத்துவதும், “இனி பாகிஸ்தானுடன் சுமுக உறவு கிடையாது” என்று பிரதமர் அறிவிப்பதுபும் கவலை அளிக்கிறது.

பாகிஸ்தானுடனான உறவைப் பொருத்தவரை பேச்சு வார்த்தை, போர் நிறுத்தம், பாகிஸ்தான் மண் பயங்கரவாதத்தின் நாற்றங்காலாக இருப்பதைத் தடுக்கும் நோக்கில் அழுத்தத்தை அளித்துக்கொண்டே சுமுகமான போக்கு வரத்து, வணிக உறவு ஆகியவற்றைப் பேணுவது ஆகிய அணுகல்முறைகளுக்கு முன்னுரிமை அளிப்பவர் என்கிற பெயர் பிரதமர் மன்மோகனுக்கு உண்டு. நான்கு ஆண்டுகளுக்கு முன் (ஜூலை 16, 2009) ஷர்ம் –எல்- ஷேக்கில் (எகிப்து) நடைபெற்ற சார்க் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகனும் பாகிஸ்தானின் அன்றைய பிரதமர் கீலானியும் இணைந்து வெளியிட்ட அறிக்கை இங்கே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியது. பா.ஜ.க மற்றும் அதற்கு ஆதரவான ஊடகங்கள் மன்மோகன், இந்திய நலனை விட்டுக் கொடுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டின.

பயங்கரவாதத்தைத் தடுப்பதில் இரு நாடுகளும் ஒத்துழைப்பது, இது தொடர்பான உளவுகளைப் பகிர்ந்துகொள்வது என்பது தொடர்பாகப் பேச வரும்போது ‘பலூசிஸ்தான்’ என்கிற சொல்லைக் கூட்டறிக்கையில் சேர்த்ததற்காகவே அத்தனை கண்டனங்களும் முன்மொழியப்பட்டன. இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதச் செயல்கள் பலவற்றின் விளை நிலமாக பாகிஸ்தான் உள்ளது என்பது ஊரறிந்த உண்மை. பதிலுக்கு பாகிஸ்தான், தனது நாட்டில் பலூசிஸ்தான், வாசிரிஸ்தான் ஆகிய பகுதிகளில் உருவாகும் உள்நாட்டுப் பயங்கரவாதத்தின் பின்புலமாக இந்தியா உள்ளது எனக் குற்றம் சாட்டுகிறது. இந்தியா இதை ஏற்பதில்லை. இந்நிலையில் இரு தரப்புக் கூட்டறிக்கையில் பலூசிஸ்தான் பெயரும் இடம் பெற்றதற்குத்தான் அத்தனை எதிர்ப்பு. கூட்டறிக்கை என்பது இரு தரப்பினரும் சற்றே தம் இறுக்கங்களை விட்டுக் கொடுத்து இறங்கி வருவதுதான். நமது நிலைபாடு மட்டுமே அதில் இடம் பெறவேண்டும் எனச் சொல்வது என்ன நியாயம் என மன்மோகன் தரப்பினர் பதிலளித்தது எடுபடவில்லை.

பாக் மண்ணில் திட்டமிடப்பட்டு இந்திய மண்ணில் நிகழ்த்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளதன் பின்னணியில் இத்தகைய நியாயமான கோபம் இந்தியாவில் உருவாவது வியப்பில்லை. சமீபத்தில் (ஜனவரி 8) காஷ்மீரில் ஊரி பகுதியில் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (LoC) அருகில் ஹேம்ராஜ், சுதாகர் சிங் என்கிற இரு இந்திய இராணுவ வீரர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு உடல் சிதைக்கப்பட்ட நிகழ்வு இன்று மிகப் பெரிய கொந்தளிப்பிற்கும், ஏதாவது எதிர்வினை ஆற்றியாக வேண்டும் என்கிற மனநிலை உருவாக்கத்திற்கும் காரணமாகியுள்ளது.

பாகிஸ்தான் இன்று கிட்டத்தட்ட ஒரு ‘தோல்வியடைந்த அரசு’ (Failed State) என்கிற நிலைய நோக்கிச் சென்றுகொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானை ஆக்ரமித்திருந்த சோவியத் படைகளுக்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட முஜாகிதீன்கள் (1979 – 87), ஆப்கனிலிருந்து சோவியத் படைகள் வெளியேற்றப்பட்டபின் ஆயுத நீக்கம் செய்யப்படவில்லை. அமைதி வாழ்க்கைக்கு அவர்கள் திருப்படப்படவில்லை. மாறாக பாக் இராணுவத்தின் ஐ.எஸ்.ஐ இயக்ககம் அவர்களில் ஒரு பகுதியை காஷ்மீர்ப் பிரச்சினையை முன்வைத்து இந்தியாவிற்கு எதிராகத் திருப்பியது. இன்னொரு பகுதி அடுத்ததாக ஆப்கனைக ஆக்ரமித்த அமெரிக்கப் படைகளுக்கு எதிராகத் திரும்பியது. பலூசிஸ்தான், கில்ஜித், சிந்து பகுதிகளில் இன்று ஆயுதம் தாங்கிய பிரிவினை இயக்கங்கள் செயல்படுகின்றன. கராச்சியில் முட்டாஹிடா குவாமி இயக்கதினர், தெற்கு பஞ்சாபில் செராய்கிகள் ஆகியோரும் இன உணர்வு அடிப்படையில் இயங்குகின்றனர்.

மொத்ததில் பாகிஸ்தான் இன்று இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக மட்டுமல்ல, பாகிஸ்தானுக்கு உள்ளேயான பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாகவும் மாறியுள்ளது. இந்தப் பயங்கரவாதம் இன்று இந்தியாவில் ஏற்படுத்தியுள்ள அழிவுகளைக்காட்டிலும் பாகிஸ்தானிற்குள் அதிக அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. இது போதாதென்று எல்லையோரப் பகுதிகளில் அமெரிக்கா நடத்தும் ஆளில்லா விமானத் (ட்ரோன்)தாக்குதல்களால் உயிரிழப்பவர்களும் உள்நாட்டிலேயே அகதிகளாயிருப்போரும் பல இலட்சம் பேர்.

பாக் இன்று தன் நிதிநிலை அறிக்கையில் 25 சதத்தை இராணுவத்திற்கு ஒதுக்குகிறது. அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமையால் உருவாகியுள்ள வறுமை பெரிய அளவில் அந்நாட்டு இளைஞர்களை பயங்கரவாதத்தை நோக்கித் தள்ளுகிறது.  பாக் அரசே இன்று  இந்நிலையை ஏற்றுக்கொண்டு தன் அணுகல்முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சென்ற சுதந்திர நாளின்போது (ஆக 14, 2012) பாக் இராணுவக் கழகத்தில் (National Military Academy) பேசிய ஜெனரல் கயானி உள்நாட்டில் வளர்ந்து வரும் பயங்கரவாதம் குறித்துக் கவலை தெரிவித்ததோடு, தேசிய உணர்வுச் சக்திகளைத் திரட்டிப் பல்வேறு ஆயுதக் குழுக்களையும், இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள், லஷ்கர்கள் ஆகியவற்றையும் எதிர்க்க வேண்டிய முக்கியத்துவத்தை வற்புறுத்தியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தேசிய இராணுவப் பல்கலைக் கழகத்தில் (National Defence University) பேசும்போது பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப், உள்நாட்டுப் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் நோக்கில் பாக்கின் இராணுவ மற்றும் பாதுகாப்புக் கொள்கைகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும் பேச நேர்ந்துள்ளது.  இந்த அடிப்படையில் சமீபமாக பாக் இராணுவம் தனது கொள்கையை ‘மறு அளவை’ (Re-calibration) செய்து தனது ‘முதல் எதிரி’ நிலையிலிருந்து இந்தியாவை நீக்கி, உள்நாட்டு பயங்கரவாதத்தை அந்த இடத்தில் வைத்துள்ளதாகவும் செய்தியொன்று வந்தது.

இந்த அணுகல் முறை மாற்றம் பாக்கில் செயல்படும் பலமுனை அதிகார மையங்களின் கருத்தொருமிப்பு எனச் சொல்லிவிட இயலாது என்பது உண்மைதான். எனினும் இத்தகைய ஒரு பின்புலத்தில் இன்று காஷ்மீர் எல்லையோரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்பதுதான் கேள்வி.

அந்த வகையில் இந்தியத் தரப்பும், இந்திய ஊடகங்களும் இந்தப் பிரச்சினையை அணுகுவது ஒரு புத்திசாலித்தனமான அயலுறவுக் கொள்கை சார்ந்த அணுகல்முறைதானா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. பாக் ஊடகங்களைப் பொருத்தமட்டில் எல்லையில் உருவாகியுள்ள இந்த முறுகலுக்கு அத்தனை முக்கியம் அளிக்கவில்லை. அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத்தக்க வேறு உள்நாட்டு அதிரடிப் பிரச்சினைகள் உள்ளன என்பது மட்டும் இதற்குக் காரணமில்லை. பொதுவாக இந்திய பாக் உறவுகளிலுள்ள நெரிசல்களைப் பொருத்த மட்டில் பாக் ஊடகங்கள் தத்தம் பார்வைகளைச் சுயேச்சையாக வெளிப்பத்தும் எனவும், அதே நேரத்தில் இந்திய ஊடகங்கள் அனைத்தும் ஒருமித்த குரலில் அரசின் அணுகல்முறையை அப்படியே வலியுறுத்தும் எனவும் ஒரு கருத்து உண்டு. தற்போதும் அப்படித்தான் நிகழ்வுகள் உள்ளன.

“அடங்காப்பிடாரியான தன் பக்கத்து நாட்டைக் கட்டுக்குள் வைக்க முடியும் என இந்தியா உலகத்திற்குக் காட்ட வேண்டும்” என்றொரு தேசிய ஆங்கில நாளிதழ் தலையங்கம் எழுதுகிறது. அதன் பிரதம ஆசிரியர் பெயரில் வெளிவந்துள்ள இன்னொரு கட்டுரையில் அவர், அமைதி, பேச்சுவார்த்தை, பதட்டத்தைக் குறைத்தல் ஆகியவற்றைப் பற்றி அதிகமாகப் பேசுகிற ‘பாகிஸ்தானின் நண்பர்களான’ சில திரைப்படக்காரர்கள், அறிவு ஜீவிகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றைக் கடுமையாகச் சாடுகிறார். அப்படியானவர்கள் பாக் அரசிடம் விலைபோனவர்கள் எனச் சொல்கிற அளவிற்கு அக்கட்டுரை அமைகிறது. பாக் மீது போர் தொடுத்து ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே இத்தகைய பேச்சுக்களின் உள்ளுறையாக அமைகின்றது.

‘இந்து’ நாளிதழ் மட்டுமே இந்தப் போக்கிலிருந்து விடுபட்டு நடுநிலையாகத் தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளது. பாக்குடன் இனி சுமுக உறவு கிடையாது என்கிற மன்மோகனின் பேச்சைக் கண்டித்து அந்த நாளிதழ் நேற்று (ஜன 16) எழுதியுள்ள ஒரு தலையங்கத்தில், “இது அப்படி ஒன்றும் நல்ல முடிவு அல்ல. இந்திய  வீரர்களின் தலை துண்டிக்கப்பட்ட நிகழ்வு வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியதுதான். ஆனால் இது போன்ற செயல்களைப் பாகிஸ்தான் மட்டுமே ஏகபோகமாய்ச் செய்து வருகிறது  என்பதல்ல. இதை நாம் நேர்மையோடு ஒப்புக்கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டுக் கோட்டருகில் சில கட்டுமானங்களை பாக் செய்து வருவதாக சென்ற மார்ச்சில் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்டனி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் இதே வேலையை இந்தியாவும் செய்து வருகிறது என்பதை, வேறு யாருமல்ல, இந்திய இராணுவத் தளபதி விக்ரம்சிங்கே ‘இந்து’ நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். முதல் கல்லை யார் எறிந்தது எனக் கேட்டுக் கொண்டிருப்பதில் பொருளில்லை. இப்போது வேண்டுவது நிதானத்தைக் கடைபிடிப்பதுதான்” எனக் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்திய பாக் எல்லையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு (செப் 26, 2003) சுமார் பத்தாண்டுகள் ஆகின்றன. போர் நிறுத்தத்தின் பலன்களை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்கத் தொடங்கியுள்ள சூழலில் இன்றைய நிகழ்வுகள் அமைந்துள்ளன. பத்தாண்டுகளுக்கு முன் இப்குதிகளிலிருந்து பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டு முகாம்களில் குடியமர்த்தப்பட்டவர்கள் இரண்டாண்டுகளுக்கு முன் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அதுவரை அவர்கள் தினம் காலை சுமர் இரண்டு மணிநேரம் பயணித்து தம் கிராமங்களிலுள்ள நிலங்களில் வேலை செய்யப் போவார்கள்.  மதியம் அவர்கள் வீட்டிலுள்ளோர் சமைத்து உணவு எடுத்து வருவார்கள். மாலை இருட்டுமுன் அவர்கள் வீடு திரும்பியாக வேண்டு,. பாக் இராவணுவ ஷெல்லடித் தாக்குதல் போர்வையில் தீவிரவாதிகள் இந்தியப் பகுதிகளுக்குள் ஊடுருவுவதைத் தடுப்பதற்கு இந்த ஏற்பாடு.

கட்டுப்பாட்டுக்கோடு என்பது அதுவரை ஒன்றாக இருந்த கிராமங்கள் மற்றும் வயற்காடுகளினூடாகப் போடப்பட்ட ஒன்று. ஒரு பக்கம் இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீர். மறுபக்கம் பாக்  அரசின் இராணுவம்…. இன்று முட்கம்பி வேலிகளாலும் கடும் இராணுவக் கண்காணிப்புகளாலும் பிரிக்கப்பட்டுக் கிடக்கின்றன அக்கிராமங்கள். கிராமங்கள் மட்டுமல்ல அந்தக் கிராமங்களில் வசித்த மக்களும்தான்.

இப்படியாக தேச எல்லையைக் காரணம்காட்டி கிராமங்களைப் பிரிப்பது எத்தனை அபத்தமானது என்பது மட்டுமல்ல, எத்தனை சோகமானது என்பதையும் உணர ஒருவர் சாதத் ஹஸன் மன்டோவின் ‘டோபா டேக் சிங்’ என்கிற சிறுகதையைப் படிக்க வேண்டும். (உருது மூலத்தின் ஆங்கில வடிவத்தை Sadat Hasan Manto, Toba Tek Singh என கூகிளில் தேடினால் அடையலாம்.) அந்தக் கதையில்,  இந்திய பாக் பிரிவினையின்போது பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் உள்ளவர்களையும்  அவரவர் மத, இன அடிப்படையில் அவரவர் நாட்டுக்கு அனுப்புவது என்கிற ஒரு பைத்தியக்கார முடிவை அரசு எடுத்து அவ்வாறே அவர்கள் பிரித்து அனுப்பபடுவர். அப்போது அந்தப் பைத்தியங்கள் எழுப்பும் கேள்விகளும், அவர்கள் காட்டும் எதிர்ப்புகளும் யார் பைத்தியக்காரர்கள் என்கிற கேள்வியை நம்முன் எழுப்பும்.

இதுபோல  சம்பத்தப்பட்ட மக்களின் கருத்தைக் கவனத்தில் கொள்ளாது நம் அரசியல்வாதிகள் தம் மேசை மீது விரிக்கப்பட்ட வரைபடத்தில் வரையும் கோடுகள் பாரதூரமான விளைவுகளை மக்களின்மீது ஏற்படுத்தும். ஒரே குடும்பத்தில் பிறந்த இருவர் ஒரே நாளில் வேவ்வேறு பகை நாடுகளுக்குரியவர்களாக மாற்றப்படுவர். இனி அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க இயலாது.

அப்படிப் பல பத்தாண்டுகளாகத் தன் மகன்களைப் பார்க்காமல் பிரிந்து வாழ்ந்தவர்தான் காஷ்மீரின் ஊரிப் பகுதியிலுள்ள சரோன்டா என்கிற கிராமத்தைச் சேர்ந்த ரேஷ்மா பீவி. இவர் தனது தள்ளாத முதுமையில் (70) மகன்களோடு வசிப்பது என்கிற முடிவில் சென்ற செப் 26, 2011 அன்று கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்தார். இப்படி ஒருவர் கண்காணினிப்பைக் கடந்துசென்றதை அறிந்த இந்திய இராணுவம் துணுக்குற்றது.கட்டுப்பாட்டுக் கோட்டருகில் கண்காணிப்பிற்கென பங்கர்களைக் கட்டத் தொடங்கியது.

போர் நிறுத்த ஒப்பந்தப்படி இவ்வாறு பங்கர்கள் கட்டுவதற்கு அனுமதியில்லை. நேரடித் தொலைபேசித் தொடர்பு வழியாக பாக் தரப்பிலிருந்து இதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்திய இராணுவம் இதைக் கண்டு கொள்ளவில்லை. நாங்கள் சரோண்டா கிராமத்தை நோக்கித்தான் பங்கரை அமைக்கிறோமே தவிர பாக் இராணுவத்தை நோக்கி அல்ல என இந்திய இராணுவம் கூறியதை பாக் இராணுவம் ஏற்கவில்லை. ஒலி பெருக்கி மூலமாகப்  பாக் இராணுவம் எச்சரிக்கை செய்தது. பின் ஷெல்லடித் தாக்குதல்களைத்  தொடங்கியது. மூன்று இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து இரு பக்கமும் போர் நிறுத்தத்தை மீறும் செயல்கள் அதிகரித்தன. சில ஆண்டுகளாகவே இவ்வாறு போர் நிறுத்தத்தை இரு தரப்பும் மீறுவது அதிகரித்து வந்தது 2008ம் ஆண்டில் மட்டும் இதுபோல 77 மீறல்கள் நடைபெற்றன என அப்போதைய வெளியுறவுச் செயலர் சிவசங்கர மேனன் குறிப்பிட்டார். சென்ற ஆண்டில் 117 மீறல்கள் நடந்துள்ளனமிந்த ஜனவரி 8ந்தேதி இரு இந்திய இராணுவ வீரர்கள் பாகிஸ்தன் இராணுவத்தால் கொடூரமாகக் கொல்லப்பட்ட செய்தி பெரிதான பின்பு, அதை பாக் இராணுவம் மறுத்ததோடு நிற்காமல், அதற்கு இரு நாட்கள் முன்னதாகத் தனது வீரர் ஒருவர் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டதாக அறிவித்தது. இந்திய இராணுவம் தான் எல்லை தாண்டிச் சென்று தாக்கவில்லை என்றுதான் சொல்கிறதே ஒழிய பாக் வீரர் கொல்லப்பட்டதை மறுக்கவில்லை.

இதில் யார் பொய் சொல்கிறார்கள் எனச் சொல்வது எளிதல்ல. இராணுவங்கள் எந்தக் காலத்தில் உண்மைகளைப் பேசின?

இன்றைய பிரச்சினைகளைப் பொருத்த மட்டில் பாக் அரசு ரொம்பவும் அடக்கி வாசிக்கிறது. அதன் அணுகல்முறை மாற்றம் தவிர அதன் உள் நாட்டு நெருக்கடிகளும் இதற்கொரு காரணமாக உள்ளன.  பேச்சு வார்த்தைக்குத் தயார் என அது சொல்கிறது.  தொடக்கத்தில் அது வழக்கம்போல ஐ.நா அவை தலையிட்டு இதை விசாரிக்கட்டும் என்று சொன்னது. இந்தியாவும் வழக்கம்போல மூன்றாவது நபருக்கு இதில் இடமில்லை என அக் கோரிக்கையை நிராகரித்தது.

பேச்சு வார்த்தைக்குத் தயார் என பாக் வெளியுறவு அமைச்சர் ஹீனா ரப்பானி சொல்வதையும், பாக் இராணுவம் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறக் கூடாது என ஆணையிட்டிருப்பதாகவும் இன்று செய்திகள் வந்துள்ளன. இதைக்கூட மன்மோகன் அரசின் நடவடிக்கைகளைக் கண்டு பாக் அரசும் இராணுவமும் பயந்து பின் வாங்குவதாக இன்றொரு ஆங்கில நாளிதழ் முதற் பக்கச் செய்தி வெளியிட்டுள்ளது.

கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி வாழ்ந்து வரும் இலட்சக்கணக்கான மக்கள் கடந்த சில ஆண்டுகளாக எளிதில் அதனூடாகப் பயணம் செய்து கொண்டிருந்தனர். வணிக உறவுகள் புதுப்பிக்கப்பட்டன். இரவில் நிம்மதியாகத் தூங்கினர். இணையத் தளம் ஒன்றில் கண்டுள்ள தகவல் ஒன்றின்படி, போர் நிறுத்தத்திற்கு முன் 2000வது ஆண்டில் செப் 26 முதல் நவ 27 வரையிலான இரு மாதங்களில் மட்டும் கட்டுப்பாட்டுக் கோட்டருகில் 611 பேர் கொல்லப்பட்டனர். இதில் 159 பேர் இராணுவத்தினர். 151 பேர் சாதாரண மக்கள். பிறர் “தீவிரவாதிகள்”.

2009ல் பாதுகாப்பு அமைசர் அன்டனி நாடாளுமன்றத்தில் கூறியபடி, போர் நிறுத்தம் தொடங்கப்பட்ட 2003 முதல் 2006 வரை ஒருவர் கூடக் கொல்லப்படவில்லை. 2003 முதல் ஜூலை 2009 வரை நடைபெற்ற 110 சம்பவங்களில் கொல்லப்பட்ட இந்திய வீரர்கள் வெறும் நான்கு பேர். சிவிலியன்கள் வெறும் இரண்டு பேர். போர் நிறுத்தம் எத்தகைய அமைதியை அங்கு வாழும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தின என்பதை அறியாதவர்களும், அறிந்தும் இது குறித்துக் கவலைப்படாதவர்களும் இன்று எழுப்பும் போர் ஊளைகளை என்ன சொல்வது?

அரசியல்வாதிகளும் ஊடகங்களும் உமிழும் போர்வெறிப் பேச்சுக்கள் இந்த நிலையையை அழித்துவிடுமோ என்கிற அச்சம் அமைதியை விரும்புவோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் அணு வல்லமை பெற்ற நாடுகள். பாக்கைப் பொருத்தமட்டில் இந்திய அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்லி வருவதைப் போல பல அதிகார மையங்கள் செயல்படக்கூடிய ஒரு நாடு. போர் இரு நாடுகளுக்குமே இன்றைய சூழலில் உகந்தது அல்ல.

எத்தனை போர் வெறிக்கும் வெறுப்புக்கும் மத்தியில் இசைக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் ஆகியோர் இரு மக்களையும் இணைக்கும் பாலங்களாக விளங்கி வந்துள்ளனர். அதேபோல இரு நாடுகளிலும் உள்ள வணிகர்களும்கூட அமைதிச் சூழலையே விரும்புவர். பயங்கரவாதத்தின் விளை நிலமாகப் பாகிஸ்தான் இருந்தபோதும் பாகிஸ்தானிகள் எல்லோரும் பயங்கரவாதிகள் அல்லர். இரு நாடுகளுக்குமே பயங்கரவாதம் பெரிய பிரச்சினை என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு புத்திசாலித்தனமான அயல் உறவு நிலைபாடு என்பது இன்றைய சூழலில் பாகிஸ்தானிற்குள் உள்ள பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்களையும் அடிப்படைவாதிகளையும் தனிமைப் படுத்துவதாகவே அமைய வேண்டும்.  மாறாக அவர்களின் நோக்கத்தை நிரைவேற்றுவதாக அமைந்துவிடக் கூடாது.

இந்திய அரசின் அணுகல்முறை அந்த வகையில் அமையவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *