கொடிது கொடிது குண்டர் சட்டம்

தமிழக அரசு “குண்டர் சட்டத்தில்” இப்போது (2014 ஆகஸ்ட்) கொண்டுவந்துள்ள மாற்றங்கள் மிகவும் மோசமானவை. தடுப்புக் காவல் சட்டங்கள் எல்லாமே அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை இல்லாமல் செய்வதுதான். ஆனாலும் அரசுகள் எப்போதுமே தன் மக்களுக்கு முழுமையான அடிப்படை உரிமைகளை வழங்கியது இல்லை. பண்டைய கிரேக்கக் குடியரசிலேயே ‘நெருக்கடிநிலையை’ அறிவிக்கும் உரிமையை (Iuitium) அரசு தன்கையில் வைத்திருந்தது என்கிறார் வாழும் ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர் Georgio Agamban. ‘அரசின் காரணங்களுக்காக’ (raison de etat) அடிப்படை உரிமைகளை  ரத்து செய்தால் பின் அதைக் கேட்கும் உரிமை மக்களுக்கு இல்லை. 1947 தொடங்கி இந்திய அரசு எந்நாளும் இப்படியான சட்டங்கள் இல்லாமல் வாழ்ந்தது இல்லை.

பிரிட்டிஷ் காலத்து தேசத்துரோகச் சட்டம் முதல், Defence of India Rules, MISA, TADA, POTA, NSA, ESMA, AFPSA, UAPA, மாநிலங்கள் தோறும் இயற்றப்பட்டுள்ள ஏகப்பட்ட COCA சட்டங்கள்… இப்படி எத்தனை எத்தனை. நீதிமன்றங்கள் எந்தக் காலத்திலும் இச்சட்டங்களை ‘அரசியல் சட்ட ஆளுகைக்கு எதிரானவை’ எனச் சொல்லி ரத்து செய்ததில்லை. வழமையான சட்டங்களைக் கொண்டு ஆட்சி நடத்தும் சூழல் உண்மையிலேயே அரசுக்கு இல்லையா என்கிற கேள்வியை அவை எழுப்பியதில்லை. மாறாக இப்படியான சட்டங்களை இயற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா எனக் கேள்வியைத் திருப்பிப்போட்டு இச்சட்டங்களுக்கு அவை ஏற்பு வழங்கிவிடுகின்றன.  தடுப்புக் காவல் சட்டங்களில் கைது செய்யப்படுபவர்கள் பிணையில் வெளிவர இயலாது.

குண்டர் சட்டம் போன்றவைகளைப் பயன்படுத்த அரசு சொல்லும் காரணத்தை மக்களின் பொதுப்புத்தியும் அப்படியே ஏற்றுக்கொள்கிறது. தொடர்ந்து குற்றங்களை இழைப்பவர்கள் (habitual offenders) மீது சாதாரணச் சட்டங்களைப் பயன்படுத்தினால் அவர்கள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வெளியே வந்துவிடுகின்றனர் என்பதுதான் அரசின்வாதம். இப்போது 1600 க்கும் மேற்பட்டவர்கள் குண்டர் சட்டத்தில் தமிழகச் சிறைகளில் உள்ளனர். (2009ல் இது 1690 ஆகவும், 2010ல் 1781 ஆகவும், 2011ல் 1364 ஆகவும் இருந்தது. இவர்கள் எல்லோரும் habitual offenders அல்ல .ஒரு சிலர் அப்படி இருக்கலாம். பலரை முதன் முறையாகக் கைது செய்து விட்டுப் பின் அவர்கள் சிறையில் உள்ளபோதே வேறு சில வழக்குகளை அவர்கள் மீது திணித்துப் பின் குண்டர் சட்டத்தையும் பிரயோகிக்கின்றனர். நான் அப்படிச் சிலருக்காக board முன்சென்றுவாதிட்டுள்ளேன். குண்டர் சட்டத்தை ஒருவர் மீது பிரயோகிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஐஏஎஸ்-கள் யாரும் தங்கள் மூளையையோ, மனத்தையோ பயன்படுத்தி இந்த ஆணையை இடுவதில்லை. காவல்துறை நீட்டுகிறதாளில் கையொப்பம் இடுவார்கள். அதற்குப் பின் பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர்கள் 12 நாட்களுக்குள். இது தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என அரசிடம் விண்ணப்பிக்கலாம்.

இதெல்லாம் எத்தனை குரூர நகைச்சுவை பாருங்கள். அரசுதான் இப்படி அநியாயமாக அவர்களைக் கைது செய்கிறது. பிறகு அரசிடமே விண்ணப்பிப்பதால் என்ன பயன். யாருக்கும் அதன் மூலம் விடிவு கிடைதந்தாக வரலாறு இல்லை. பல நேரங்களில் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் கிடைக்கவில்லை எனக் கூறி உறவினர்களின் மனுக்களைத் தள்ளிவிடுவதும் உண்டு. பிறகு ஏழு வாரத்திற்குள் (50 நாட்கள்) இதற்கான ‘போர்ட்’முன் அவரைக் கொண்டுவந்துநிறுத்துவார்கள். அந்த போர்டில் ஓய்வுபெற்ற ஆம் “ஓய்வுபெற்ற”  ஒரு நீதிபதி உட்பட ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு அமர்வு நீதிபதி என மூவர் இருப்பர். ஒது ஒரு நிர்வாக விசாரணைக் குழுதான். அவர்கள் முன்பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது நெருங்கிய உறவினர், நண்பர்யாராவது போய்ப்பேசலாம்.

அவர்கள் வழக்குரைஞர்களாக இருக்கலாகாது என்பது நிபந்தனை.ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு இந்தப் பதவியே பெரியவரப்பிரசாதம். பிறகென்ன…. அந்த அறையில் அந்த மூன்று நீதிபதிகளுக்கும்முன் இரண்டுவட்டங்கள் போட்டிருப்பார்கள். இடப்புர வட்டத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர். வலப்புற வட்டத்தில் அவருக்காகப் போகிறவர்கள் நின்றுகொண்டு தங்கள் பக்க நியாயங்களைச் சொல்லலாம். நான் அப்படிப் போய் பேசிய சிலரில் கூடங்குளத்திலிருந்து வந்த பையன் ஒருவன். பெயர் சிந்துபாரத். எஸ்.பி. உதயகுமார் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்த பையனின் கேஸ்கட்டுகளை எல்லாம் படித்துவிட்டு ஒரு மனுவையும் தயாரித்துக் கொண்டு போயிருந்தேன். அந்த இளைஞன் இதற்குமுன் எந்த வழக்கிலும் தொடர்பில்லாதவன். போராட்டத்திலும் அவனுக்குப் பங்கில்லை. ‘ஃப்லெக்ஸ்போர்ட்’ எழுதுவது அவன் தொழில். போராட்டக்காரர்களுக்கு ‘ஃப்லெக்ஸ்போர்ட்’ தயாரித்துக் கொடுக்கக்கூடாது எனப் போலீஸ் எச்சரித்துள்ளது. அவன் என்ன செய்வான். அந்த ஊரில் கடை வைத்திருப்பவன். அந்த மக்கள் போராடுகின்றனர். எப்படி அவனால் மறுக்க முடியும்? அவனுக்குத் திருமணமான பன்னிரண்டாம் நாள் அவனைக் கைது செய்து குண்டர் சட்டத்தில் போடுகிறது நமது இரக்கமுள்ள காவல்துறை. அது காதல் திருமணம் வேறு. பெற்றோர்விருப்பம் இல்லாமல் செய்யப்பட்ட கலப்புத் திருமணம். அவன் மீது இதற்கு முன் எந்த வழக்கும் கிடையாது என்றேன். ஆனால் குண்டர் சட்டம் போடுவதற்கு முன்னதாக அவன் சிறையில் இருக்கும்போதே வேண்டும் என்றே வேறு சில வழக்குகளையும் அவன் மீது போட்டார்கள்.

கூடங்குளத்தில் அவ்வாறு கைதுசெய்யப்பட்ட இன்னொருவருக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் சென்றுவாதாடினார். அடுத்த சிலமாதங்களில் அவரையே குண்டர் சட்டத்தில் போட்டது ஜெயலலிதா அரசு. சென்றமுறை வலப்புறவட்டத்தில் நின்று பேசிய மணி அவர்கள் இம்முறை இடப்புறவட்டத்தில் நிற்க வேண்டியதாயிற்று. அவருக்காக யார் பேசினார்கள் எனத் தெரியவில்லை. அவரே பேசியிருப்பார் என நினைக்கிறேன். நான் எப்போது இடப்புறவட்டத்தில் நிற்கப்போகிறேனோ தெரியவில்லை. புதிய சட்டத்திருத்தத்தின்படி . முகநூலில் ஸ்டேடஸ் போட்டாலும்கூடக் குண்டர் சட்டமாமே.. நண்பர்களே எச்சரிக்கை.

பாலியல் குற்றங்களுக்கும் இனிகுண்டர் சட்டமாம். பாலியல் குற்றங்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவைதான். ஆனால் அதற்கு உரிய, இப்போது திருத்தப்பட்டுள்ள சட்டங்களே போதுமானவை. சாதி மீறியகாதல்களிள், மனமொத்து காதலர் இருவரும் தலைமறைவானாலும்கூட, இந்த உறவைப் பிடிக்காத பெற்றோர் தம் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாகத் தான் புகார்கொடுப்பர். அதுபோதாதா நம் காவல்துறைக்கு?

பெரிய அளவில்(122 பேர்) பா.ம.கவினர் மீது குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்ட போதும் அதை நாங்கள் கண்டிக்கவே செய்தோம். சாதிவெறிப் பேச்சுகளுக்கு இதுவேண்டும் தானே எனச் சிலர் நினைக்கலாம். அப்படியான பேச்சுக்களுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டமே போதுமானது. அதை ஒழுங்காகப் பயன்படுத்தினாலே போதும். பெரிய அளவில் இன்று குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளவர்கள் தலித் மக்கள் உள்ளிட்ட மிகவும் அடிநிலையில் உள்ளவர்கள் தான் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை ஒரே நேரத்தில் கொத்துக் கொத்தாக நீதிமன்றங்கள் விடுதலை செய்ததுண்டு. கொளத்தூர் மணி மற்றும் அவரது கட்சிக்காரர்களும் அப்படித் தான் விடுதலை ஆனார்கள். அரசுக்கும் தெரியும். இது வம்புக்காகப் போடப்பட்ட வழக்கு. மிகவும் பலவீனமான ஒன்று. நிச்சயம் நீதிமன்றத்தில் அடிபட்டுப்போகும் என்று. ஆனாலும் அவர்கள் ஏன் இதைப் பயன்படுத்துகின்றனர்? நீதிமன்றத்தில் கேஸ் உடைவதற்குள் ஆறேழு மாதங்கள் ஓடிவிடுமே…. இப்போதைய சட்டத்திருத்ததில் ஒருவரை குண்டர் சட்டத்தில் போட அவர் habitual offender ஆக இருக்க வேண்டியதில்லையாம்.

ஆக இனி நீதிமன்றத்திற்குப் போயும் அப்பாவிகள் விடுதலை ஆவது குதிரைக் கொம்புதான். அம்மா கொண்டுவந்துள்ள இச்சட்டத்திருத்தம் வியப்புக்குரிய ஒன்றல்ல. எல்லாம் எதிர்பார்த்ததுதான். எந்த விமர்சனத்தையும் பொறுத்துக் கொள்ளாத மனம் படைத்த ‘அம்மா’ வுக்கு இப்போது கோபம் எல்லாம் முகநூல் முதலான சமூக ஊடகங்கள் மீதுதான் இதை ஒடுக்கும் முயற்சியாகத்தான் .இப்போது ‘சைபர்’ குற்றங்களும் குண்டர் சட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது கருத்துரிமையைப் பறிக்கும் முயற்சி. நமது அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை (Article 19) மற்றும் சட்ட விரோதமாகச் சிறையில் அடைப்பதற்கு எதிரான உரிமை (Article 22 (2) ஆகியவற்றிற்கு எதிரானது. ஆனால் இதில் வேதனை என்னவெனில் இதற்கு எந்தப் பெரிய எதிர்ப்பும் தமிழகத்தில் இல்லை என்பதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *