ரவிக்குமாரின் ஒரு பதிவும் பதிலும்

கீழே உள்ளது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தன் முகநூல் பக்கத்தில் செய்துள்ள பதிவும் அதற்கு இடப்பட்ட இரு பின்னூட்டங்களும். நண்பர் ஒருவர் இதை என் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். எந்தப் பின்னணியில் இப் பின்னூட்டம் இடப்பட்டுள்ளது என்பது இவற்றை வாசித்தால் புரியும்.

ரவிக்குமாரின் பதிவு:

“தி இந்து நாளேட்டில் அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரைக்கு நான் பதிவுசெய்திருக்கும் comment:

அ.மார்க்ஸ் பயன்படுத்தியிருக்கும் ‘தீண்டத்தகாதவர்கள்’ என்ற சொல் காந்தி பயன்படுத்திய ’ஹரிஜன்’ என்ற சொல்லைவிடவும் மோசமானது. தலித் என்பது பொருத்தமற்றது என அவர் கருதினால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லிவிட்டுப் போகட்டும். Untouchable என்ற சொல்லுக்கு ’தீண்டாதார்’ என்ற மொழியாக்கம் தமிழில் உள்ளதென்பது பேராசிரியருக்குத் தெரியாதா? அல்லது தீண்டத்தக்கவர்கள் , தீண்டத் தகாதவர்கள் என்ற பாகுபாடுதான் அவருடைய நிலைபாடா? “- ரவிக்குமார்

Rajan Kurai Krishnan Untouchable என்னும் ஆங்கிலச்சொல்லும் பிழையானதுதான். அதன் மொழிபெயர்ப்புத்தான் தீண்டத்தகாதவர். ஆங்கிலத்தில் தேவையான சந்தர்ப்பங்களில் Untouched என்ற சொல்லை சில கருத்தரங்கங்களில் பயன்படுத்தியுள்ளேன். தமிழில் தேவையான சந்தர்ப்பங்களில் தீண்டப்படாதவர்கள் என்று சொல்வதில் வரலாற்றுத்தடம் இருக்கும் என நினைக்கிறேன்.

Ravi Kumar நிறப்பிரிகை நடத்தியபோதே அவரோடு இதே விஷயம் குறித்து நான் பேசியிருக்கிறேன்.பேராசான் மார்க்ஸ் என அவர் எழுதுவதையும் விமர்சித்திருக்கிறேன்.

இது குறித்து என் கருத்துக்கள்:

1.ராஜன் சொல்லியுள்ளது போல “தீண்டத்தகாதவர்கள்” எனும் சொல் என் கட்டுரையில் ஒரு இடத்தில் Untouchable என்கிற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. Untouchable, Untouchablity முதலான சொற்களை அண்ணல் அம்பேத்கர் பெரிய அளவில் பயன்படுத்தியுள்ளார். “The Untouchables Who Were They and Why They Became Untouchables ?”, “Untouchables or The Children of India’s Ghetto”, “Mr. Gandhi and the Emancipation of the Untouchables “முதலியன அவர் தம் நூலுக்குக் கொடுத்த தலைப்புகளில் சில. “Essays on Untouchability” என அவரது கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாக வந்துள்ளன. முல்க் ராஜ் ஆனந்தின் புகழ் பெற்ற நூலின் தலைப்பு கூட “The Untouchable” தான்..

டாக்டர் அம்பேத்கரின் நோக்கம் ரவிக்குமார் சொல்வதுபோல இந்திய சமூகத்தை Touchable எதிர் Untouchable எனப் பிரிப்பது அல்ல. மாறாக அத்தகைய பிரிவினையை ஒழிப்பதே.

2. ‘தலித்’ என்கிற சொல்லை தமிழில் பரவலாக்கியதில் எனக்கு முக்கிய பங்குண்டு என்பது வரலாறு. குறைந்த பட்சம் எனது மூன்று நூற்களின் தலைப்பில் “தலித்” எனும் சொல் இடம் பெற்றுள்ளது. காந்தி, அம்பேத்கர் காலத்தில் தலித் மக்களைக் குறிக்க Untouchable என்கிற சொல்லே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்ததால் காந்தி குறித்த இக்கட்டுரையில் அந்த இடத்தில் அச் சொல் பயன்படுத்தபட்டுள்ளது.

3. அண்ணல் அம்பேத்கர் பயன்படுத்திய Untouchable எனும் சொல்லுக்கு ரவிக்குமார் கூறியுள்ளதுபோல ‘தீண்டாதார்’ எனும் சொல் பொருத்தமற்றது. இச்சொல்லுக்குத் ‘தொடாதவர்கள்’ என்றே பொருள் கூடும். வேண்டுமானால் ‘தீண்டப்படாதவர்கள்’ எனக் கூறலாம். இல்லை ‘தீண்டாதார்’ என்றாலே ‘தீண்டப்படாதவர்கள்’ என்பதுதான் பொருள் எனில், பின் ‘தீண்டாதார்கள்’ என ஏன் சொல்ல வேண்டும்?

4. சொற்களின் அரசியல் முக்கியமானதுதான். “சொல் அதுவே சிறந்த சொல்” என நாங்கள் நிறப்பிரிகையில் பதிவதும் வழக்கம்தான். அதன் பொருள் சொற்களைக் கையாள்வதில் சிரத்தை இருந்தால் போதும், செயலில், அதாவது சொந்த வாழ்வில் மக்களுக்கு, அதுவும் தான் சார்ந்துள்ள மக்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் துரோகம் இழைக்கலாம், துரோகம் இழைத்துச் சொத்தும் அதிகாரமும் சேர்க்கலாம் என்பதல்ல. எனது சொந்த வாழ்விலும் அரசியல் வாழ்விலும் நூறு சதம் அத்தகைய நேர்மையுடன் வாழ்ந்துள்ளேன், வாழ்ந்து வருகிறேன் எனச் சொல்லும் நெஞ்சுரம் எனக்குண்டு.

5. ‘பார்ப்பனர்’ என்கிற சொற் பிரயோகத்தைப் ‘பிராமணர்’ என மாற்றுவது, பெரியார் ஈ.வெ.ரா அவர்களைப் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு ‘பொம்பளைப் பொறுக்கி’ என்கிற ரேஞ்சில் வசை பாடுவது, பின்னர் அரசியலுக்கு வந்தவுடன் வழிந்து அடக்கி வாசிப்பது, இதெல்லாவற்றைக் காட்டிலும் பேராசான் மார்க்ஸ் என்றோ, தந்தை பெரியார் என்றோ, அண்ணல் அல்லது பாபா சாகேப் அம்பேத்கர் என்றோ சொல்வது பெரிய பிழை என நான் கருதவில்லை. கலைஞர், கலைஞர் என வழிந்து காலிலும் விழத் தயங்காதவர்கள் இதை எல்லாம் சொல்வதை விட நகைச்சுவை என்ன இருக்க இயலும்?

6. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக்கொண்டு ச.ம.உ ஆன ரவிக்குமாருக்கு அந்த இயக்கம் நடத்திய நடத்துகிற எண்ணற்ற போராட்டங்களில் என்ன பங்கு என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வி.சி அமைப்பின் நிறுவனர் தொல். திருமாவளவன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தும் போராட்டங்கள் எதிலும் பங்கு பெறாத இவர் “கலைஞரை”ச் சந்திக்கப் போகும்போது மட்டும் முந்திக் கொண்டு சென்று பணிந்து குனிந்து நிற்பதையும் ஒரு கணம் நினைவில் கொண்டு வந்து பாருங்கள். திருமா அவர்கள் உடபட வி.சி கட்சிப் பொறுப்பாளர்கள் எல்லோர் மீதும் எத்தனையோ போராட்ட வழக்குகள் உண்டு, வழக்குகள் ஏதும் இல்லாத ‘கறைபடாத கரங்களுக்குச்’ சொந்தமான ‘தலைவர்’ ஒருவர் உண்டு என்றால் அவர் இவர் ஒருவர்தான். சென்ற தேர்தலில் காட்டு மன்னார் கோவில் தொகுதியில் நின்று வெற்றிபெற்ற இவர் வெள்ளம் வந்தபோது கூடத் தொகுதிப் பக்கமே போகாததால்தான் நடந்து முடிந்த தேர்தலில் அவரது கட்சியினரும், அத் தொகுதி தலித் மக்களுமே இவரை வேட்பாளராக நிறுத்தக் கூடாது என வெளிப்படையாக எதிர்ப்புக் காட்டினர் என்பதையும், அப்படியும் அவர் நிறுத்தப்ப்பட்டபோது அவர்கள் அவரைத் தோற்கடித்தனர் என்பதையும் யாரும் மறந்துவிட மாட்டார்கள்.

7. அ.தி.மு.க வுடன் தேர்தல் கூட்டு வைத்து வெற்றி பெற்றபின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தி.மு.கவுடன் இணைத்ததில் ரவிக்குமாரின் பங்கு ஊரறிந்த ஒன்று, அவர் தி.மு.கவிற்கே போய்விடுவார் என்ற கருத்து பரவலாக இருந்ததும் யாவரும் அறிந்த ஒன்று. ஒரு வேளை தி.மு.க மட்டும் பெயரைக் கெடுத்துக் கொள்ளாமல் இருந்திருந்தால் அவர் இன்னேரம் தி.மு.கவிற்குப் போயும் இருப்பார். அது கிடக்கட்டும். இப்படி அ.தி.மு.க வை நிரந்தர எதிரியாக்கி தி.மு.கவின் தொங்கு சதை என்கிற அளவிற்கு விடுதலைச் சிறுத்தைகளைக் கொண்டு வந்து நிறுத்தியதன் ஊடாக, கூட்டணி அரசியலில் வி.சி.கவின் பேர ஆற்றலைப் (bargaining power) பலவீனப் படுத்திய பெருமையும் ரவிக்குமாருக்கே உரித்து. இது குறித்து வி.சி அணிகள் மத்தியில் கடும் வெறுப்பும் அவர் மீதுண்டு.

சொற் பயன்பாட்டில் மட்டும் political correctness காட்டினால் போதாது. அரசியல் செயல்பாடுகளிலும் political correctness வேண்டும், அறம் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *