ஏழை இந்தியாவின் கோடீசுவர வேட்பாளர்கள்!

2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள வேட்பாளர்கள் தமது வேட்புமனுவுடன் அளித்துள்ள சொத்து மதிப்புகளின் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அளித்துள்ள இந்தச் சொத்துக் கணக்கு எவ்வளவு யோக்கியமானது என்பது வேறு விடயம். அவர்கள் காட்டியுள்ள கணக்கின் படியே இந்த முடிவுகள் இங்கே தரப்படுகின்றன.

மொத்தம் தமிழகத்தில் போட்டியிட்ட 844 வேட்பாளர்களில் 178 பேர் கோடீசுவரர்கள் (21%). இது சென்ற தேர்தலைக் காட்டிலும் கிட்டத்தட்ட 2 மடங்கு. கோடீசுவரர்கள் அல்லாதோர் பெரும்பாலும் சுயேச்சைகள் அல்லது சிறிய கட்சிகளைச் சேர்ந்தோர்.

காங்கிரஸ் வேட்பாளர்களில் 85 % கோடீசுகள்: பா.ஜ.க வில் 67%, அ.தி.மு.கவில் 80%, தி.மு.க 97%, தே.மு.தி.க 86%, ஆம் ஆத்மி 52%, ம.தி.மு.க 86%, பா.ம.க 50%, சி.பி.எம் 11%, சி.பி.ஐ 13%; பகூஜன் சமாஜ் கட்சி 5%,

நமது வேட்பாளர்களின் சராசரிச் சொத்து

சராசரிச் சொத்து எவ்வளவு தெரியுமா 2.56 கோடி.

இது சுயேச்சைகளின் சொத்து மதிப்புகளையும் சேர்த்துக் கணக்கிட்டது. அவர்களில்தான் பஞ்சைப் பராரிகள் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கையும் அதிகம். அவர்களைத் தவிர்த்துக் கட்சி வேட்பாளர்களின் சராசைச் சொத்து மதிப்பை மட்டும் கணக்கிட்டால்.. உங்களுக்கு மயக்கமே வந்துவிடும்…

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் சராசரிச் சொத்து 18.6 கோடி, பா.ஜ.க 31.77 கோடி, அ.தி.மு.க 6.34 கோடி, தி.மு.க 10.19 கோடி, தே.தி.மு.க 9.95 கோடி ஆம் ஆத்மி 2.79 கோடி, பா.ம.க 5 கோடி, முஸ்லிம் லீக் 4 கோடி, புதிய தமிழகம் 16 கோடி, ம.ம.க 1 கோடி, வி.சி.க 91 லட்சம், சி.பி.எம் 43 லட்சம்;

புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கசிகள் தலா ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளனர். எல்லோரும் கோடீஸ்கள் தான். அவர்களின் சொத்து மதிப்பே இங்கு சராசரி மதிப்பாக வருகிறது.

தமிழ்நாட்டு கோடீஸ்கள் சிலரின் விவரங்கள்….

வசந்தகுமார் (கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர்) சொத்து 285 கோடி மட்டும்..

ஏ.சி.ஷண்முகம் (வேலூர், பா.ஜ.க) 108 கோடி;

கே.என்.ராமச்சந்திரன் (ஶ்ரீ பெரும்புதுர், அ.தி.மு.க ) 93 கோடி;

ஜகத்ரட்சகன் (ஶ்ரீ பெரும்புதூர், தி.மு.க): 78 கோடி:

பாரிவேந்தன் பிச்சமுத்து (பெரம்பலூர், பா.ஜ.க) 77 கோடி;

கார்தி சிதம்பரம் (சிவகங்கை, காங்) 59 கோடி;

தேவநாதன் யாதவ் ( திருநெல்வேலி, த மா கா ) 32 கோடி;

அன்புமணி ராமதாஸ் (தருமபுரி, பா.ம.க ) 31 கோடி;

டாக்டர் கிருஷ்ணசாமி (தென்காசி, புதிய தமிழகம்) 16 கோடி;

தம்பிதுரை (கரூர், அ.தி.மு,க) 13 கோடி;

தயாநிதி மாறன் ( மத்திய சென்னை, தி மு க) 10 கோடி;

மணிசங்கர் அய்யர் (மயிலாடுதுறை, காங்) 8 கோடி:

எஸ்.பி. உதயகுமார் (கன்னியாகுமரி, ஆம் ஆத்மி) 5 கோடி;

உ.வாசுகி (வட சென்னை, சி.பி.எம்) 2 கோடி:

தமிழ்நாட்டு கோடீஸ் வேட்பாளர்கள் இன்னுஞ் சிலரின் விவரங்கள்….

நண்பர்கள் பலரும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தயாநிதி மாறனின் தேர்தல் வேட்பு மனு வாக்குமூலத்தை மீண்டும் ஒருமுறை பார்த்து உறுதி செய்தாயிற்று.

சி.பி இராதாகிருஷ்ணன் (கோவை, பா.ஜ.க 66 கோடி), ஆரோன் ரஷீத் (தேனி, காங், 64 கோடி), பிரபு (கோவை, காங் 60 கோடி), சாருபாலா தொண்டைமான் (திருச்சி, காங், 57 கோடி), பொங்கலூர் பழனிச்சாமி (பொள்ளாச்சி, தி.மு.க, 40 கோடி), முஹம்மத் ஜலீல் (இராமநாதபுரம், தி.மு.க, 29 கோடி), இராம சுகந்தன் (தருமபுரி, காங் 20 கோடி), கிருஷ்ணசாமி வாண்டையார் (தஞ்சாவூர், காங்) 17 கோடி…

இவர்களை எல்லாம் விட நம்ம தயாநிதி மாறன் ஏழைதான். பாவம், அவர் காட்டியுள்ள சொத்து மதிப்பு 10,94, 29,143 ரூபாய்கள் மட்டுந்தான்.
என்னா கொடுமை சார் இது.

குறிப்பு: தேர்தல் ‘ஃப்ராடு‘-களுக்கு எத்தனையோ வழிமுறைகள்..

வேட்பு மனுக்களில் சொத்து தொடர்பாக தயாநிதி மாறன் செய்துள்ள அப்பட்டமான பொய் வாக்குமூலங்கள் பற்றிப் பலரும் இங்கே தங்களின் ஆத்திரங்களைப் பதிவு செய்துள்ளனர்.

மாறன் மட்டுமா, அநேகமாக எல்லா பெரிய / சிறிய கைகளுமே இந்த ஃப்ராடைச் செய்துள்ளன.

எனக்குத் தெரிந்த ஒரு அறிவுஜீவி எழுத்தாள வேட்பாளர் தன் சொத்து என ஒரு கோடியை விடவும் சற்றுக் குறைவாகத் தன் தேர்தல் மனு வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். (அதனால்தான் அவர் குறித்த பதிவு என் பட்டியல்களில் வரவில்லை).

ஆனால் எனக்குத் தெரிந்த வகையிலேயே கும்பகோணம் அருகில் அந்த வேட்பாளருக்கு, அவரது மனைவியின் பெயரில் கோடிகள் மதிப்பில் ஒரு சொத்துள்ளது. அதை அவர் 4 கோடி ரூபாய்க்கு விற்கக் கடந்த ஒரு வருடமாக முயற்சித்துக் கொண்டுள்ளார்.

இன்று அவர்மீது கொடுக்கப்பட்டு விசாரணையில் உள்ள ஒரு சொத்து குவிப்பு புகாரிலும் இந்தச் சொத்தும் உள்ளது.

இப்படி வேட்பாளர் மனு வாக்குமூலத்தில் சொத்துக் கணக்கைக் குறைத்துக் காண்பிபதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன.

ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் நுழைந்தாலும் பணக்காரன் சொர்கத்திற்குள் நுழைய இயலாது என்பது பழமொழி. உபயம் ஏசுநாதர். ஊசி முனைக் காதுக்குள் ஒட்டகங்கள் நுழைந்தாலும் கோடீஸ்கள் அல்லாதோர் இந்திய நாடாளுமன்றத்திற்குள் நுழைய இயலாது என்பது புது மொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *