காந்தியும் காஞ்சியும் – [இந்து நாளிதழுக்கு மறுப்பு]

இந்து நாளிதழுடன் “ஆனந்த சுதந்திரம்” என்றொரு ‘விளம்பரதாரர் சிறப்பு இணைப்பு’ வழங்கப்பட்டுள்ளது. “காஞ்சி மகானும் காந்தி மகானும்’ என்பது கட்டுரைத் தலைப்பு. கா.சு வேலாயுதன் என்றொரு நபர் எழுதியுள்ளார்.

“இந்தியாவின் ஆன்ம சக்திகளான இரு பெரும் மகான்களிடையே நடந்த சந்திப்பு அது. ஒருவர் சுதேசி உணர்வும் சுதந்திரமும் தழைக்கத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். இன்னொருவர் சனாதன தர்மத்தையும் சுதர்மத்தையும் காப்பாற்ற வாழ்வையே தவமாக்கியவர்” – என்று தொடங்குகிறது கட்டுரை.

தென்னாட்டுச் சுற்றுப் பயணத்தில் இருந்த காந்தி பாலக்காட்டுக்கு அருகிலுள்ள நெல்லிச்சேரி என்னுமிடத்தில் சங்கராச்சாரி தங்கி இருந்ததை அறிந்து அவரைச் சந்ந்திக்க விருப்பம் தெரிவித்தாராம். ‘பெரியவரும்’ அவரை வரச் சொன்னாராம். ஒரு மணி நேரம் பேசினார்களாம். என்ன பேசினார்கள் என்று யாருக்கும் தெரியாதாம். ஆனால் அந்த சந்திப்பை இருவருமே மிக முக்கியமானதாகக் கருதினார்களாம். சுமார் 20 ஆண்டுகள் கழித்து சங்கராச்சாரி அனுப்பிய ஒரு செய்தியில் காந்தி அவரிடம் சுவாமி சிரத்தானந்தர் கொலை செய்யப்பட்டது குறித்து மனம் நொய்ந்து பேசினதாகவும், இன்னும் இதுபோன்ற படு கொலைகள் நடக்கும் என்பது குறித்து அச்சம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளாராம்..

இருபதாண்டுகள் குறித்து இப்படி உரிய ஆதாரங்கள் ஏதுமின்றி சங்கராச்சாரி கூறியுள்ளது இந்தச் சந்திப்பு குறித்த உண்மைகளை அறிந்தவர்களுக்கு வியப்பளிக்கிறது. அடுத்த இரு பத்தாண்டுகளில் கொல்லப்பட்டது காந்திதானே ஒழிய, இந்து சாமியார்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. நிற்க.

இப்போது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுக் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் ஜெயேந்திர சங்கராச்சாரியை விட ரொம்பவும் யோக்கியமான சங்கராச்சாரி எனவும், நிறையக் கற்றுத் தேர்ந்தவர் என்றும் “மகா பெரியவாள்” சந்திரசேகரேந்திரன் குறித்து நமது ஊடகங்கள் ‘இமேஜ் பில்ட் அப்’ பண்ணுவது வழக்கம். ‘தெய்வத்தின் குரல்’ எனும் அவரது உரைத் தொகுப்பு தமிழகத்தில் பல்லாயிரக் கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

காந்தியைப் பொருத்த மட்டில் அவர் எந்தச் சாமியார் பின்னாலும் போனவர் இல்லை. எந்த மடங்களையும் அவர் புனிதமாகக் கருதித் தரிசனைக்குச் சென்று வந்தவரில்லை. ஏன் எந்தக் கோவில்கள். புனித ஷேத்திரங்கள் ஆகியவற்றுக்கும் போய் வருவதையோ. யாகங்கள் வேள்விகள் புரிவதையோ, எடைக்கு எடை துலாபாரம் வழங்குவதையோ போன்ற அசட்டுத்தனகள் செய்வதை வழக்கமாகக் கொண்டவர் இல்லை.

அவர் நடத்திய பிரார்த்தனைக் கூட்டங்கள் சர்வ சமய ஒன்றுகூடல்களாகவே இருந்தன. இந்துக்கள், முஸ்லிம்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் எனப் பல சமயத்தாரும் ஒன்று கூடி, எல்லோரது கடவுளரையும், எல்லோரும் போற்றிப் புகழ்ந்தவையாகத்தான் அந்தப் பிரார்த்தனைக் கூட்டங்கள் அமைந்தன.

ஏற்றுக் கொண்டதில்லை. ராமன் அயோத்தியில் பிறந்தான் என்கிற நம்பிக்கை எதையும் அவர் முன்வைத்ததில்லை. ராமாயணத்தை வரலாறாக அவர் ஏற்றுக் கொண்டதில்லை. அவரைப் பொருத்த மட்டில் ராமன் என்பவன் ஒரு ‘லட்சிய மானுடன்’, ‘ராம ராஜ்யம்’ என்பது ஒரு லட்சிய அரசு அவ்வளவே.

சரி, இப்போது காந்தி, சங்கராச்சாரியைச் சந்தித்த கதைக்கு வருவோம். சந்திப்பு நடந்தது உண்மை. எத்தகைய பின்னணியில் அந்தச் சந்திப்பு நடந்தது எனக் காண்போம்.

இந்தியாவெங்கும் தீண்டமை ஒழிப்பு குறித்து காந்தி பேசத் தொடங்கியிருந்த காலம் அது. பின்னாளில் அது அரிஜன ஆலயப் பிரவேசமாக உருமாறியது. பெருந்திரளில் ஆதிக்க சாதியினரும் தலித்களும் இணைந்து ஆலையப் பிரவேசங்கள் நடந்தன. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் காங்கிரஸ் தலைவர் வைத்தியனாத அய்யரின் தலைமையில் இதுகாறும் ஆலய நுழைவு மறுக்கப்பட்டவர்கள் ஆலயத்தில் நுழைந்த வரலாற்றையும் அதற்குச் சனாதன சமுக்கங்களிலிருந்து பெரிய அளவு எதிர்ப்பு வந்த வரலாற்றையும் நாம் அறிவோம்.

இன்னொரு பக்கம், பால்ய மணத்திற்கு எதிராக ஹர விலாஸ சாரதரும், தேவதாசி முறைக்கு எதிராக முத்து லட்சுமி ரெட்டியும் மசோதாக்கள் கொண்டு வந்ததும் சனாதனிகளின் மூக்குகளிலும் கண்களிலும் கரும் புகையை வரவழைத்திருந்தன. போதாக் குறைக்கு காந்தி இவற்றை ஆதரித்தார். சத்தியமூர்த்தி போன்ற தனது கட்சிக்காரர்களுக்கும், சட்ட மன்றத்தில் அவர்கள் வைத்த நிலைபாட்டிற்கும் எதிராக காந்தி தமிழ்நாட்டில் முத்து லட்சுமி நடத்திய கூட்டமொன்றில் (1927, செப்டம்பர் 9) கலந்து கொண்டதுடன், அந்தப் பயணம் முழுவதும் தேவதாசி ஒழிப்பை அவர் ஆதரித்துப் பேசினார்.

அடுத்த முறை காந்தி தமிழகம் வந்தபோது தமிழகம் முழுவதும் சனாதனிகள் அவருக்கு எதிர்ப்புக் காட்டினர், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆலயக் கதவுகள் மூடப்பட்டன. “தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரகம்” என்கிற நூல் காந்தியைத் தரக்குறைவாக ஏசி வெளியிடப்பட்டது. இந்நூலின் முழு வடிவம், துண்டறிக்கை வாசகங்கள் முதலியவற்றிற்கு எனது “காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்” நூலைக் (எதிர் வெளியீடு, பொள்லாச்சி, 2007) காண்க.

இந்த இடைப்பட்ட காலத்தில்தான் காந்தி – சங்கராச்சாரி சந்திப்பு நடந்தது. இந்து நாளிதழ் சொல்வது போல காந்தி ஒன்றும் சங்கராச்சாரியை விரும்பிச் சந்திக்கவில்லை. சங்கராச்சாரியைச் சந்திப்பதற்கு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இது குறித்து நான் முன் குறிப்பிட்டநூலில் எழுதியிருக்கும் வாசகங்கள்:

“மகாமேதை, ஒழுக்கசீலர், நேர்மையாளர் என்றெல்லாம் கூறப்படும் (லேட்) ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஶ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி என்கிற சங்கராச்சாரியை காந்தி 1927 அக்டோபர் 15 அன்று பாலக்காட்டுக்கு அருகில் உள்ள நல்லிச்சேரி சரஸ்வதி கோவிலில் சந்திக்க நேர்ந்தது. அப்படியான ஒரு சந்திப்பைப் பார்ப்பனர்கள் திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தனர். சங்கராச்சாரி (இந்தி தெரிந்திருந்தும்) சமஸ்கிருதத்தில் பேச, காந்தி (சமஸ்கிருதம் தெரிந்திருந்தும்) இந்தியில் பேசினார். கடவுள் நம்பிக்கையை வற்புறுத்தி இயங்கும் காந்தியைப் பாராட்டிய சங்கராச்சாரி, ‘எனினும் ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாத்திரங்களளையும், பழைய பழக்க வழங்களையும் நம்பியிருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்களென்றும், அவர்களுடைய மனம் நோகும்படி செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்ற்றே தாம் முடிவுக்கு வரவேண்டியிருக்கிறதென்றும் கூறினார். இதைச் சொல்வதற்காகவே அச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது.

“தனது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல என்றைக்கும் தயங்காதா காந்தி, சுமார் ஒரு மணி நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். சங்கராச்சாரியாரின் கருத்துக்களை மனதில் கொண்டு, முடிந்தவரை அவற்றை நிறைவேற்ற முயற்சிப்பதாகச் சொல்லி விடைபெற்றார். தொடர்ந்து காந்தியின் செயற்பாடுகளைக் கவனிக்கும் யாருக்கும் சந்திரசேகரரின் மேற்படி கருத்துக்களை காந்தி மயிரளவும் மதிக்கவில்லை என்பது விளங்கும்.”

காந்தியைத் தான் தங்கியிருந்த குடிசைப் பகுதியில் ஒரு மாட்டுத் தொழுவத்திற்கு அருகில் சந்தித்ததாகவும், காந்தி அமர சங்கராச்சாரி தன் பீடத்தையே தரத் தயாராக இருந்ததாகவும் இந்துக் கட்டுரை கதை அளக்கிறது. சங்கராச்சாரி தங்கியிருந்தது நல்லிச்சேரி சரஸ்வதி கோவில். காந்தி பிரப்பால் தாழ்ந்த வருணத்தைச் சேர்ந்தவர் (வைசியர்) என்பதால் மாட்டுத் தொழுவத்திற்கு அருகில் அவரை அமர வைத்துப் பேசியதே உண்மை.

மகா ஒழுக்கசீலரான” சந்திரசேகரேந்திரரின் காஞ்சிபீடம் அத்தோடு நிற்கவில்லை. வேறுபல முயற்சிகளையும் செய்தது. அவற்றில் ஒன்று, அன்றைய புதிய தொழில்நுட்பமான அச்சுத் தொழில்நுட்பத்தை வர்ணாசிரமத்தைக் காப்பாற்றும் ஆயுதமாகப் பயன்படுத்துவது. இந்த நோக்கத்துடன் காஞ்சி பீடத்தின், அதாவது மகா ஒழுக்க சீலரான சந்திரசேகரரின் ஆசியுடனும், நிதி உதவியுடனும் ‘ஆரியதர்மம்’ என்றொரு இதழ் தொடங்கப்பட்டது. 1927 டிசம்பரில் நடைபெறவுள்ள காஙகிரஸ் மாநாட்டுக்கு இணையாக வர்ணாசிரம மாநாட்டைக் கூட்டவும் முடிவு செய்யப்பட்டது.

1927 ஐப்பசி மாதம் 25ந்தேதிய ‘ஆர்யதர்மம்’ இதழில், “ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தைப் பற்றியவரை யான் நன்கறிவேன், இச் சென்னையில் ஒரு கிளை மடம் ஸ்தாபித்து,,,,புனிதமான ‘ஆர்யதர்மம்’ என்கிற இப்பத்திரிக்கையையும் நடத்துகிறது” என ஆசிரிய உரையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வாசகங்களின்படி வருணாசிரமத்தைக் காப்பாற்ற உருவெடுத்த ‘ஆர்யதர்மம்’ என்கிற அந்த இதழ் சந்திரசேகர சங்கராச்சாரியின் நிதி உதவியுடன் தொடங்கப்பட்டது என்பது விளங்குகிறது.

வருணாசிரம ஆதரவு மஹாநாடெல்லாம் இன்று தேவையா, அப்படி மாநாடு நடத்துவதெல்லாம் நமது மரபா எனச் சிலர் கேட்டபோது,

“பண்டைக் காலத்தில் யக்ஞம், உத்ஸவம், விவாஹம் முதலியவைகள் அப்போது மஹாநாட்டின் வேலையை முடித்துவைத்தது. காலத்திற்கேற்றவாறு, அதுவும் காந்தி தென்னாடு வந்த பிறகு அத்யாவசியமாக இதைக் கூட்டியே ஆகவேண்டுமென்று பலரும் நினைக்கின்றனர்.”

என்ப் புலம்புவதிலிருந்து சந்திரசேகர சங்கராச்சாரி, காந்திக்கு எதிராகவே நிதி உதவி செய்து இந்த ‘ஆரதர்மம்’ என்கிற வருணாசிரம ஆதரவு இதழை நடத்தினார் என்பது விளங்குகிறது. காந்தியின் தென்னாட்டு வருகை வருணாசிரமத்திற்கு எதிராக இருந்ததாகக் கருதி அவர்கள் அசுர்றதும் புரிகிறது.

காந்தியை வருணசங்காரம் செய்ய வந்தவராக இந்த இதழ் முன்னிறுத்தியது. இது குறித்த விவரங்களை அறிய எனது நூலையும், தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள ‘ஆர்யதர்மம்’ இதழ்களையும் வாசிக்க வேண்டுகிறேன்.

இந்த இதழின் புத்தகம்11, ஸஞ்சிகை 30ல் வெளிவந்துள்ள, ஒரு கூற்று:

“தீண்டாதவர்கள் நிரபராதிகள். நம்மைப்போலவே மனிதர்களே. அப்படியிருக்க ஏன் தள்ள வேண்டும் என்கிறார் (காந்தி). ஆகா தீண்டத்தகாதவர்களும் நம்மைப் போலவே மனிதர்கள்தானாம். இதைச் சங்கராச்சாரியார் தெரிந்துகொள்லவில்லை. இந்த அதி சூஷ்மத்தைக் கந்திதான் தெரிந்துகொண்டார். அதனால்தான் அவர்களை எட்டிப் போவென்று சொல்லலாகாதாம். சங்கராசாரியாரவர்கள் இவ்வொன்றையும் தெரிந்து கொள்ளாததால்தான் விலகிப் போவென்றார் போலும்”

காந்தியை அவர்கள் எந்த அம்சத்தில் சங்கராச்சாரியிடமிருந்து வேறுபடுத்தினர் என்பது இக்கூற்றிலிருந்து நமக்கு விளங்குகிறது.

இத்தனைக்குப் பிறகும் காந்தி ஆலயப் பிரவேசத்தை வெற்றிகரமாக நடத்தினார். சனாதனிகள் வெறிகொண்டனர். அடுத்தமுறை காந்தி தமிழகம் வந்தபோது கடுமையான எதிர்ப்புகள் வந்தன. அப்போது காந்திக்கு எதிராக வெளியிடப்பட்ட சுவரொட்டி வாசகங்கள் பலவற்றையும் எனது நூலில் காணலம். ஒன்று மட்டும் இங்கே:

“வராதே காந்தீ! ஓடிப்போ காந்தீ!! பேசாதே காந்தீ!!!

வேதத்தை அறியாமலே கொண்ட வெறியை வேதத்தை / விளக்கியே தீர்க்க வரும் வேதப் பிரானொத்த ஜகத்குரு / சங்கராச்சாரியைக் காண விரும்பாத காந்தீ, ஓடிப்போ! / இங்கிலீஷ் படித்த கர்வமும் பட்டினி கிடக்கும் கெட்ட பிடிவாதமும் தவிர வேறொரு சரக்குமில்லாத காந்தி ஓடிப்போ! / ராஜ துரோஹியாகவே வாழ் நாளை வீண்படுத்திய பழக்கத்தினால் தர்மத்தை மதியாமல் தெய்வத் துரோஹியாய்த் தலைப்பட்ட காந்தி ஓடிப்போ!”

மேற்படி துண்டறிக்கையை வெளியிட்டவர் திருவரங்கம் பெரியகோவில் பத்திராதிபரான பார்த்தசாரதி அய்யங்கார், தேதி 09.02.1954.

இது 1934ல் வெளியிடப்பட்டது, 1930களில் காந்தியின் முன்னெடுப்பில் ஆலயப் பிரவேசங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் 1920களின் பிற்பகுதியிலிருந்தே காந்தி தீண்டாமைக்கு எதிராகப் பேசவும் செயல்படவும் தொடங்கினார். இதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் காந்தி – சந்திரசேகர சங்கராச்சாரி ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றது.

திருவரங்கக் கோவில் பத்திராதிபர் பார்த்தசாரதி அய்யங்கார் வெளியிட்ட துண்டறிக்கையிலிருந்த, “சங்கராச்சாரியைக் காண விரும்பாத காந்தீ, ஓடிப்போ!” என்கிற வாசகத்திலிருந்தது, காந்தி சங்கராச்சாரியைச் சந்திக்க ஆர்வம் காட்டவில்லை என்பதும் உறுதியாகிறது.

உண்மைகள் இப்படியிருக்க சங்கராச்சாரியைச் சந்திக்க காந்தி ஆர்வம் கொண்டார் என்பதும், அதை அறிந்த சங்கராச்சாரி பெரியமனது பண்ணி அதற்கு இசைந்தார் என்றும் இந்து நாளிதழ் கட்டுரை வெளியிடுவதன் பொருளென்ன?

காந்திக்கு எதிராகப் பண உதவி செய்து, இப்படியான ஒரு பத்திரிக்கையை நடத்திய நபர் சந்திரசேகரேந்திர சங்கராச்சாரி. அவரைக் காந்தி சந்திக்க விருப்பு தெரிவித்துச் சென்று சந்தித்தார் என்பது எத்தனை அபத்தம்.

காந்தியை இறுதியில் கொன்று தீர்த்தவர்கள் பார்ப்பனர்கள் என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. கோட்சே துப்பாக்கிக் குண்டால் சுட்டுத் தீர்த்த செயலைத்தான் சந்திரசேகர சங்கராச்சரியின் ஆர்யதர்மமும் தன் எழுத்துக்களால் செய்தது.

இல்லையா?

காந்தி விரிவாகத் தன் இயக்கங்களைப் பதிவு செய்தவர். அவரது பதிவுகள் 90க்கும் மேற்பட்டப் பெருந் தொகுப்புகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. சங்கராச்சாரியுடனான இச் சந்திப்பிற்குக் காந்தி தனது பதிவுகளில் பெரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘இந்து’ ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள இந்த இணைப்பு, இந்து நிர்வாகம் வெளிட உள்ள தமிழ் நாளிதழின் முன்னோடி என்றே கருத வேண்டியுள்ளது. சில நாட்களுக்கு முன் இந்து நாளிதழில் தமிழ் முஸ்லிம் இயக்கங்களுக்கு எதிராக வெளிவந்த ஆர்.வெங்கடாசலபதி எடுத்துள்ள பேட்டியும், இந்தக் கட்டுரையும், வர உள்ள தமிழ் ‘இந்து’ நாளிதழ் எத்தகைய போக்குடன் அமையும் என்பதற்குக் கட்டியம் கூறுகின்றன எனக் கொள்ளலாமா?

ஆங்கில இந்து நாளிதழின் சிரப்புக்களில் ஒன்று அது கடைபிடித்து வரும் மதச் சார்பின்மை. தமிழ் இந்து நாளிதழ் அந்தப் பண்பைக் கைவிடப் போகிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *