முஸ்லிம்கள் மற்றவர்களை ஒதுக்குகிறார்கள் என்பது உண்மையா?

இன்று காலை நண்பர் சுகுமாரன் முகநூலில் உள்ள ஒரு பதிவை எனக்கு அனுப்பி இருந்தார். முஸ்லிம் நண்பர் ஒருவர் ஒரு இலக்கிய இதழில் வெளி வந்திருந்த ஒரு கருத்தை முன்வைத்து இது சரிதானா எனக் கேட்டிருந்த ஒரு பதிவு அது. அந்தக் கருத்தின் அடிப்படையில் அந்த முகநூல் பதிவாளர் எழுப்பியிருந்த கேள்விகள் இரண்டு. அவை:

“1.இஸ்லாமியர்கள் செறிவாக வாழும் பகுதிகளில் பிற மதத்தவர்களுக்கு இடம் தருவதில்லை. 2. .மேலும் குமரி மாவட்டபகுதிகளில் வாழும் இஸ்லாமியர்கள் தங்களது வணிக நிறுவனங்களில் கூட…பிற மத சிறுவர்களை அனுமதிப்பதில்லை. இது உண்மைதானா.?”

இதுதான் அந்த இதழில் சொல்லப்பட்ட கருத்துக்களின் மீது அந்தப் பதிவாளர் எழுப்பியிருந்த கேள்வி. இனி இது தொடர்பாக நான் முன்வைத்த கருத்துக்கள்:

அந்த இலக்கிய இதழில் சொல்லப்பட்டுள்ளது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் இது எதற்காகச் சொல்லப்படுகிறது என்பது முக்கியம். இந்த அடிப்படையில் இங்கு இன்று நாடெங்கும் உருவாக்கப்படும் முஸ்லிம் வெறுப்பு அரசியலை நியாயப்படுத்துவதற்காக இது சொல்லப்படுகிறது என்பதுதான் இதில் மிக மிக ஆபத்தான அம்சம்.

ஒரு உண்மை மட்டுமே இன்னொரு உண்மைக்குச் சான்றாகிவிடாது.

இதில் பல்வேறு அம்சங்கள் கவனத்துக்குரியது. முதலில் இப்படியான கூற்றுகள் முழுமையாகச் சரிதானா என்பதைப் பார்க்கலாம். முஸ்லிம்கள் இயல்பிலேயே இப்படித் தங்களைக் கூட்டுக்குள் சுருக்கிக் கொள்பவர்களாக உள்ளனர். ஆனால் இது உலகளாவிய முஸ்லிம்களின் இயற்கைப் பண்பு எனச் சொல்ல இயலாது. இது இந்தியா போன்ற நாடுகளில் உருவாகியுள்ள ஒரு வகை சிறுபான்மை உளவியல். ஒருமுறை குடந்தையில் எனக்குப் பழக்கமான ஒரு முஸ்லிம் ஸ்டேஷனரி கடை முதலாளியைச் சந்தித்துப் பேசிக் ஒண்டிருந்தேன். ஒர் வசதியான படித்த முஸ்லிம் இளைஞருக்கு திருமணத்திற்கு ஒரு நல்ல பெண் வேண்டும் என்றேன். உடனே அவர் மிகவும் சீரியசாகிவிட்டார். “சார் இதெல்லாம் இங்கே பேசாதிங்க. நாங்க பாபநாசம், பண்டாரவடை, அய்யம்பேட்டைக்குள்தான் திருமண உறவுகளை வைச்சுக்குவோம்” எனச் சொல்லி பேச்சை முறித்துக் கொண்டார். நான் பெண் வேண்டும் எனக் கேட்ட முஸ்லிம் இளைஞர் புத்தாநத்தம் (திருச்சி மாவட்டம்) பகுதியைச் சேர்ந்தவர். இந்தச் சம்பவத்தை நான் என்  புத்தகம் ஒன்றிலும் குறிப்பிட்டுள்ளேன். மேலப்பாளையம் முஸ்லிம்கள் பற்றி ஒரு ethnic study வந்துள்ளது. சாந்தி என்பவர் எழுதியுள்ளார். அதில் அவர் அங்கு திருமணங்கள் மேலப்பாளையத்திற்குள்தான் நடக்கிறது என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் நான் நாகூர் கந்தூரித் திருவிழாவுக்குச் சென்றிருந்தேன். என் இளம் நண்பர் அஹமது ரிஸ்வான் ஒரு விடயத்தைச் சொன்னார். நாகூரில் 90 சதம் திருமணங்கள் நாகூருக்குள்ளேயேதான் நடக்கின்றன என்றார். இவற்றின் பொருள் முஸ்லிம்கள் பிற ஊர் முஸ்லிம்களை வெறுக்கிறார்கள் என்பதா? தம்மைப் புவியியல் ரீதியில் ஒரு ‘;சாதியாக’ உணர்கிறார்கள், மற்ற முஸ்லிம்களை ஒதுக்கு்கிறார்கள் என்பதா? இது மிகவும் சிக்கலான விஷயம்.

ஒரு முறை நான் முத்துப்பேட்டையில் உள்ள மிகப் பெரிய முஸ்லிம் பள்ளி ஒன்றின் உரிமையாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன். தனது பள்ளியில் வேலையில் உள்ள ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் எல்லோரும் முஸ்லிம் அல்லாதோர் என அவர் குறிப்பிட்டார். இளையான்குடி, மேடவாக்கம் முதலான முஸ்லிம் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் இந்துக்கள், குறிப்பாக தலித்களே அதிகம். நான் முன்பு சொன்ன ஸ்டேஷனரிக் கடையில் கூட அங்கு வேலை செய்யும் பெண்கள் அவ்வளவு பேரும் இந்துக்கள்தான். முஸ்லிம் கடைகளில் முஸ்லிம்கள்தான் வேலைக்கு வைத்துக் கொள்ளப்படுகின்றனர் என்பதில் பொருள் இல்லை.

நான் குடியாத்தம் கல்லூரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு என்னுடன் பணியாற்றிய பொருளாதாரத் துறையைச் சேர்ந்த சக ஆசிரியர் ஒருவர் அப்பகுதியில் (ஆம்பூர், வாணியம்பாடி) உள்ள தோல் தொழிற்சாலைகளில் முஸ்லிம் நிறுவனங்களில் கூட அக்கவுன்டன்ட், மேனேஜர் போன்ற பதவிகளில் பார்ப்பனர், முதலியார் போன்ற உயர் சாதியினரே உள்ளதாகவும் தோலைச் சுத்தம் செய்தல் முதலான வேலைகளிலேயே முஸ்லிம்கள் உல்லதாகவும் தன் ஆய்வில் சுட்டிக் காட்டியிருந்தார். இது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு. இப்போதும் அந்த நிலையே தொடர்கிறதா எனத் தெரியவில்லை. இப்போதும் கூட வளைகுடா நாடுகளில் நம் முஸ்லிம்கள் நடத்தக் கூடிய நிறுவனகளில் நிறைய நம் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் நிறையப் பணி செய்வதாக்கச் சொல்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும்போது வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். முஸ்லிம் கடைகளில் அதிக அளவில் முஸ்லிம்கள் வேலையில் உள்ளனர் என்பதுதான் அது. அதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன. உறவினர்கள், மற்றும் நெருக்கமானவர்களுக்கு வேலைக் கொடுப்பது என்பது ஒன்று, பெரிய அளவில் இன்று அரசியல் ரீதியாக ஒரு புறக்கணிப்பு செய்யப்படும்போது தாம் ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவியில் இருப்பது அவசியம் என்கிற உணர்வையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய ‘பதுங்கு குழி’ மனப்பான்மைக்கு அடிப்படைக் காரணம் இன்றைய வெறுப்பு அரசியல் என்பதை மறந்து விடக் கூடாது. அதை விட்டுவிட்டு இது குறித்துப் பேசுவது அறமல்ல.

நாகர்கோவிலைப் பொருத்தமட்டில் அங்கு தமிழகமெங்கும் சிறுபான்மையோர் பெரும்பான்மையாக இருக்கும் மாவட்டம் அது. கல்வி நிறுவனங்கள் அங்கு பெரும்பாலும்  கிறிஸ்தவர்கள் வசம் உள்ளன. அங்கு அவர்கள் மத்தியில் தலை எடுக்கும் பெரும்பான்மை வாதத்தை வைத்து இந்தியா முழுவதும் சிறுபான்மை மக்கள் இப்படித்தான் உள்ளனர் எனச் சொல்ல இயலாது.

நான் சென்ற ஆண்டு சென்னையில் வசித்த வாடகை வீடு ஒரு முஸ்லிமுக்குச் சொந்தமானது. அந்த அபார்ட்மென்டில் ஆறு வீடுகள் உள்ளன. ஒருவரைத் தவிர மற்ற அனை வரும் non muslims தான். சென்னையில் நான் இதுவரை குடியிருந்துள்ள ஆறு வீடுகளில் மூன்று முஸ்லிம்களுடையது. அவற்றில் இரண்டு என்னை யாரென்று தெரியாமலேயே எனக்கு வாடகைக்கு விடப்பட்ட வீடுகள்தான். முஸ்லிம்கள் பிறருக்கு வீடு கொடுப்பதில்லை என்றெல்லாம் பொதுமைப்படுத்திப் பேச முடியாது.

கோவையில் இப்போது ஒரு மாஃபியா கும்பல் இந்துக்கள் பகுதியில் உள்ள முஸ்லிம் கடைகளை வெளியேற்றுவதற்குச் செயல்படுவதை எனது சமீபத்திய பயணத்தில் அறிந்தேன். அப்படி வெளியேற்றுவதன் மூலம் இந்த மாஃபியா கும்பல் நிறைய பனம் சம்பாதிக்கிரது. இதை எனக்குச் சுட்டிக் காட்டியவர் மூத்த வழக்குரைஞர் சுப்பிரமணியம். பாதுகாப்பு கருதி முஸ்லிம்கள் தங்கள் பகுதிகளுக்குள் ஒதுங்கக் கூடிய நிலை இன்று அங்கு ஏற்பட்டுள்ளது.  வேண்டுமானால் நாம் இது குறித்து அங்கு ஒரு ஆய்வு செய்வோம். நீங்களும் வாருங்கள். அந்தக் கருத்தைச் சொன்னவரும் வரட்டும். வெறுப்பு அரசியலின் விளைவையே வெறுப்பு அரசியலை நியாயப்படுத்தப் பயன்படுத்துவது நீதியும் ஆகாது, அறமும் ஆகாது.

முஸ்லிம்கள் தமக்குள் ஒடுங்கிக் கொள்கின்றனர் என்கிற உண்மை அவர்கள் மீது சுமத்தப்படும் வெறுப்பு அரசியலை நியாயப்படுத்திவிடாது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *