மேல்மங்கலம்,உத்தபுரம் சாதி வன்முறைகள்

உண்மை அறியும் குழு அறிக்கை

மதுரை,

மே 19, 2014.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் ஆண்டிப்பட்டி சாலையில் வடுகப்பட்டியை ஒட்டி உள்ள ஊர் மேல்மங்கலம். அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கவிஞர் வைரமுத்து ஆகியோரின் ஊர்களை ஒட்டி அமைந்துள்ள ஊர் இது. ஏப்ரல் 6 அன்று இரவு அவ்வூரைச் சேர்ந்த, ஆனால் தற்போது வெளியூரில் வசிக்கும் நண்பர் ஒருவரிடமிருந்து பதட்டத்துடன் எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. மேல்மங்கலம் கிராமத்தில் உள்ள அருந்ததிய மக்களின் வீடுகளை அவ்வூர் ஆதிக்க சாதியினர் எரித்துள்ளதாகவும், மக்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நண்பர் கூறினார்.

அடுத்த நாள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்திலுள்ள உத்தபுரம் கிராமத் திருவிழாவில். நீதிமன்ற ஆணையை மீறி அவ்வூர் ஆதிக்க சாதியினர் அதே ஊரைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பது தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடத்தச் சென்ற காவல்துறை மற்Ruம் வருவாய்த் துறை அதிகாரிகளை அவ்வூர் ஆதிக்க சாதியினர் கல்லெறிந்து தாக்கிய செய்தியையும் அறிந்தோம்

அடுத்தடுத்த நாட்கள் நாளிதழ்களிலும் இவை தொடர்பான செய்திகளைக் கண்ட எங்கள் குழுவினர் சென்ற ஏப்ரல் இறுதியில் மேல்மங்கலம் சென்று இது தொடர்பாக விசாரிக்க முனைந்தபோது காவல்துறையினர் எங்களை அனுமதிக்க மறுத்தனர். காவல்துறைக் கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு பேசியும் எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

சென்ற சில மாதங்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் நடுப்பட்டி கிராமத்தில் அருந்ததிய மக்கள் தாக்கப்பட்டது குறித்த உண்மைகளை அறிய நாங்கள் சென்றபோதும், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு புதுப்பட்டியில் இரு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு இடையே உள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்யச் சென்றபோதும் இவ்வாறே காவல்துறையினர் எங்கள் முயற்சிகளைத் தடை செய்துள்ளனர்.

மிக்க நடுநிலையுடன் பிரச்சினைகளை ஆய்வு செய்து வெளியிடப்படும் எங்கள் அறிக்கைகள் நீதிமன்றங்களாலேலேயே முக்கிய ஆவணங்களாக பலநேரங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் இப்படியான உண்மை அறியும் குழுக்களை அமைத்து செயல்படுவதற்கு முன்னோடியாக விளங்குபவர் மகாத்மா காந்தி அடிகள்தான். ஜாலியன்வாலா பாக் படுகொலையின் போது மோதிலால் நேரு அவர்கள் காந்தி தலைமையில் அப்படி ஒரு குழுவை நியமித்தார். மிக நடுநிலையான அற்புதமான அந்த அறிக்கை அக்காலத்திலேயே தமிழ் உட்படப் பல்வேறு மொழிகளிலும் மொழியாக்கி வெளியிடப்பட்டது.

பரமக்குடி துப்பாக்கிசூடு குறித்த இது போன்ற ஒரு ஆய்வைத் தடை செய்ய தமிழகக் காவல்துறை நீதிமன்றத்தை அணுகியபோது நீதியரசர் இராமசுப்பிரமணியம் அவர்கள் அம்மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, மனித உரிமை அமைப்புகளின் இத்தகைய செயல்பாடுகள் ஒரு மூன்றாவது புலனாய்வு முயற்சி எனவும் உண்மைகளை அறிய இவை உதவி புரிகின்றன எனவும் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்தப் பின்னணியில் நாங்கள் இம்முறை நீதிமன்றத்தை அணுக முடிவு செய்தோம். எங்கள் மனு [W.P. (MD) NO. 6750 of 2014] நீதியரசர் இராம சுப்பிரமணியம் அவர்கள் முன் விசாரணைக்கு வந்தபோது ஏற்கனவே அங்கு அமைதி நிலைநாட்டப்பட்டதாகவும் நாங்கள் இவ்வூர்களுக்குச் செல்வது அந்த அமைதியைக் குலைக்கும் எனவும் அரசு வழக்குரைஞர் வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்க மறுத்த நீதியரசர் அரசியல்சட்டத்தின் 19 (1) (e) பிரிவின்படிஅங்கு செல்வது எங்களின் அடிப்படை உரிமை என்பதைச் சுட்டிக்காட்டினார். இன்று அங்கு நிலவும் அமைதி குலையக் கூடாது என அரசு தரப்பில் சொல்வது புரிந்து கொள்ளக் கூடியதுதான் என்றபோதிலும் இந்த அமைதி இயற்கையாக உருவானதா இல்லை மேலிருந்து திணிக்கப்பட்டதா என உறுதி செய்யும் பொறுப்பு எல்லோருக்கும் உண்டு. ஒரு மூன்றாவது தரப்பு இதை உறுதி செய்வது உண்மையில் காவல்துறையின் பணிக்கு ஒரு நற் சான்றாகவே அமையும். எனவே இது போன்ற சந்தர்ப்பங்களில் காவல் மற்றும் வருவாய்த்துறையினரே இது போன்ற மூன்றாம் தரப்பினரை அப்பகுதிகளுக்குச் சென்று வர அழைப்பு விடுத்து உண்மைகளை அறியச் செய்வது நல்லது எனக் கூறி மேற்குறித்த இரு கிராமங்களுக்கும் எங்கள் குழு சென்று வர அனுமதிக்குமாறு ஆணையிட்டார் (ஏப்ரல் 29, 2014).

இதன்படி சென்ற மே 14 அன்று மேல்மங்கலம் கிராமத்திற்கு நேரிற் சென்று இரு தரப்பு மக்களையும், ஜெயமங்லம் காவல் நிலைய ஆய்வாளர் தெய்வம் என்பவரையும் சந்தித்தோம். தேனி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் மகேஷ் ஐ.பி.எஸ் அவர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்ததால் தொலை பேசியில் தொடர்பு கொண்டு விரிவாகப் பேசினோம்.

மாலையில் உத்தபுரம் கிராமத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தோம். காவல்துறை அதிகாரிகள் மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்புப் பணியில் இருந்ததால் சந்திக்க இயலவில்லை. விவரங்கள் வருமாறு:

எங்கள் குழுவினர் :

மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தை (People’s Union for Human Rights) சேர்ந்த பேரா. அ.மார்க்ஸ், வழக்குரைஞர் ரஜினி மற்றும் கு.பழனிச்சாமி, தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பைச் (National Confederation of Human Rights Organisations) சேர்ந்த வழக்குரைஞர் ஏ.சையத் அப்துல் காதர், ஆதித் தமிழர் பேரவையின் மாநிலத் துணைச் செயலாளர் விடுதலை வீரன் ஆகியோர்.

மேல்மங்கலம்

அருந்ததிய மக்கள் வாழும் பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட காமாட்சி மகன் முத்துவேலு (39), பழனிச்சாமி மகள் காவியா (7), பழனி மனைவி பாண்டியம்மாள் (35), முத்தையா மனைவி காளியம்மாள் (80), கருப்பன் மனைவி நாகம்மாள் (70), முருகன் மனைவி முத்துப்பழனி (28), அழகுமணி மனைவி ஈஸ்வரி (39) உள்ளிட்ட பலரையும் சந்தித்தோம். அருந்ததிய மக்களின் உறவு முறைத் தலைவர் எஸ்.எம்.முருகன் மற்றும் ஆதித் தமிழர் பேரவையின் மாவட்டத் தலைவர் வீர பாண்டியன் ஆகியோர் விரிவாகத் தம் மக்கள்மீது நடைபெற்ற தாக்குதல் பற்றிக் கூறினர், எரிக்கப்பட்ட வீடுகள், கொளுத்தப்பட்ட அவர்களின் கோவில்கள் எல்லாவற்றையும் பார்வையிட்டுப் புகைப் படங்களும் எடுத்துக் கொண்டோம்.

மேல்மங்கலம் கிராமத்தில் அம்பலக்காரர், கள்ளர், மறவர், ஆசாரி, பிள்ளமார், செட்டியார் ஆகிய ஆதிக்க சாதியினர் மத்தியில் சுமார் 100 அருந்ததியக் குடும்பங்கள் வசிக்கின்றன. ஆதிக்க சாதியினர் மொத்தத்தில் 1000 தலைக்கட்டு எனக் கூறப்படுகிறது. நிலமனைத்தும் கள்ளர், தேவர், அம்பலக்காரர் முதலான ஆதிக்க சாதியினருக்கே சொந்தம். அருந்ததிய மக்கள் இவர்களிடம் கூலி வேலை செய்து வாழ்கின்றனர். சுமார் 7 பேர் துப்புரவுப் பணி செய்கின்றனர். படித்தவர்கள் யாருமில்லை.

22 ஆண்டுகளுக்கு முன் பாண்டி என்கிற அருந்ததிய இளஞர் ஒருவர் அகம்படியர் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து ஒண்டு ஊரை விட்டு ஓடியுள்ளார். அதன் பிறகு இன்றுவரை அவர் ஊர் திரும்பவில்லை.

அதற்குப் பின் இன்று மேல்மங்கலம் கிராமத்து அருந்ததிய சாதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் பாலுச்சாமியின் மகன் சுரேஷ் (32) என்பவர் அதே ஊரை சேர்ந்த நாட்டார் கள்ளர் சாதியச் சேர்ந்த முத்துலட்சுமியைக் காதலித்து வந்துள்ளார். ஏப்ரல் முதல் வாரத்தில் இருவரும் ஊரை விட்டுச் சென்று எங்கோ வாழ்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

ஏப்ரல் 3 அன்று நாட்டார் கள்ளர் சாதியச் சேர்ந்த மலைச்சாமி, பால்கார மணி, செல்லப்பாண்டி, சுப்பையர அம்பலகாரர் மகன் முருகன் முதலானோர் அருந்ததிய உறவு முறைத் தலைவர் ஜி.எம்.முருகனைச் சந்தித்து உடனடியாகத் தம் பெண்ணைக் கொண்டு வந்து ஓப்படைக்குகுமாறு எச்சரித்துள்ளனர். முருகன் ஒப்புக் கொண்டு ஒருவார கால அவகாசம் கேட்டு வந்துள்ளார்.

உறவுமுறைக் கூட்டத்தைக் கூட்டி அவர் பேசியபோது சுரேஷின் பெற்றோர், தம் மகன் சுரேஷும் முத்துலெட்சுமியும் இருக்குமிடம் தமக்குத் தெரியாது எனவும், எனவே தாங்கள் எதுவும் செய்ய இயலாது எனவும் கூறி விட்டனர். ஒரு கட்டத்தில் விவாதம் முற்றி சுரேஷின் சகோதரன், முருகனுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையில் ஆதிக்க சாதியினரின் மிரட்டலால் அருந்ததியர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அருகிலுள்ள அல்லிநகரம் கிராமத்தில் சுரேஷும் முத்துலட்சுமியும் இருப்பதாகக் கேள்விப்பட்டு 6 ந்தேதி காலை முருகன் அங்கு சென்று விசாரித்துள்ளார். தமிழ்ப் புலிகள் என்கிற அமைப்பைச் சேர்ந்தவர்களிடமும் கேட்டுள்ளார். எதுவும் பயனின்றி ஊர் திரும்பியுள்ளார்.

அன்று மதியம் புரோட்டா வாங்கக் கடைக்குச் சென்ற கருப்பசாமி என்கிற அருந்ததியச் சிறுவன் (17) ஒருவனை ஆதிக்க சாதி இளைஞர்கள் அடித்து அனுப்பியுள்ளனர். இது குறித்து முருகன் ஆதிக்க சாதித் தலைவர்களிடம் போனில் பேசிய போது சின்னப் பையன்கள் செய்து விட்டதாகவும், கண்டிப்பதாகவும் சமாதானம் சொல்லியுள்ளனர்.

அன்று மாலை 6 மணி அளவில் அருந்ததியச் சாதியச் சேர்ந்த முருகுபாண்டி (35) என்பவர் குடித்துவிட்டு வந்து கள்ளர் சாதிப் பெண்ணைத் தம் சாதிப் பையன் அழைத்துச் சென்றதைப் பற்றி ஏதோ பெருமையாகப் பேசியுள்ளார். முருகுபாண்டி இவ்வாறு குடித்துவிட்டு வந்து மனைவியை அடிக்கக் கூடியவர் எனவும் யாருக்கும் கட்டுப்படாதவர் எனவும் முருகன் குறிப்பிட்டார்.

முருகுபாண்டியின் பேச்சில் ஆத்திரமுற்ற கள்ளர், தேவர் முதலான ஆதிக்க சாதியினர் சுமார் 6.30 மணி வாக்கில் அருந்ததியர் வசிக்கும் சத்திய நகர் பகுதிக்குச் சென்று வீடுகளைத் தாக்கியுள்ளனர். முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரும் தற்போதைய சொசைடி தலைவரும் நாட்டார் கள்ளர் சாதியில் முக்கியமானவருமான மலைச்சாமிடம் முருகன் இது குறித்து முறையிட்டபோது, “நான் போய் அவர்களை அமட்டி வைக்கிறேன்” எனச் சொல்லிச் சென்றுள்ளார்.

ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான ஆதிக்க சாதியினர் ஆண்களும் பெண்களுமாய்த் திரண்டு வந்து மேல்மங்கலம் அருந்ததியர் பகுதியைத் தாக்கியுள்ளனர். ஆறு வீடுகள் எரிக்கப்பட்டுள்ளதை நாங்கள் நேரில் கண்டோம். தாக்கியவர்கள் அருந்ததியர்களின் கடவுளரையும் விட்டுவைக்கவில்லை. கூரை வேய்ந்த இரு ‘வீர் சின்னம்மாள்’ கோவில்களும் எரிக்கப்பட்டுள்ளன.

முத்துவேல் என்பவர் ஏழு குழந்தைகளை அழைத்துச் சென்று ஒரு வீட்டுக்குள் பாதுகாப்பாக வைத்துள்ளார். பின் அந்த வீடும் எரிக்கப்பட்டுள்ளது நல்ல வேளையாக அவர்கள் அனைவரும் தப்பியுள்ளனர். எனினும் முத்துவேலுவிற்குத் கையில் தீக்காயம்பட்டுள்ளது. ஈஸ்வரி என்பவரின் காது அறுக்கப்பட்டு அதிலிருந்த கம்மலும் பறிபோயுள்ளது. பல வீடுகளின் ஓடுகள் உடைக்கப்பட்டுள்ளன. தங்கள் வீட்டிலிருந்த பணமும் எரிக்கப்பட்டுவிட்டதாகவும், பறி போய்விட்டதாகவும் முத்துப்பழனி என்னும் பெண்ணும் முத்துவேலுவும் கூறினர். கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் வந்த காவல்துறையினர் தீயை அணைத்துள்ளனர்.

இது குறித்து ஆதிக்க சாதியினரில் முக்கியமானவரான முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் மலைச்சாமியிடம் நாங்கள் பேசியபோது தாங்கள் தாக்குதல் நடத்தியதை அவர் மறுக்கவில்லை. முருகுபாண்டியின் பேசில் ஆத்திரமுற்று அப்படி நடந்துவிட்டது என்றார், தங்கள் சாதிப் பென்ணை அழைத்துச் சென்ற சுரேஷின் குடும்பமே அப்படிப்பட்டதுதான் என்றார். சுரேஷின் அப்பா வேறொரு ஊரில் தான் தேவர் எனச் சொல்லி அச் சாதிப் பெண்ணைத் திருமணம் செய்ய முயன்றதாகவும் கடைசி நேரத்தில் தாங்கள் சென்று அவர் ஒரு மாதாரி என்பதைச் சொல்லித் திருமணத்தை நிறுத்தியதாகவுக் குறிப்பிட்டார். சுரேஷ் – முத்துலட்சுமி காதலைப் பொறுத்த மட்டில் முத்துலட்சுமியை ஒப்படைத்து விட்டு சுரேஷ் கேரளா பக்கம் போய்விடுவதுதான் சரியாக இருக்கும். அல்லது முத்துலெட்சுமியை விட்டுவிட்டு அவன் வேறு பெண்ணைக் கட்டிக் கொண்டு ஊருக்கு வரலாம் என்றார்.

ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த 20 பேர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது (குற்ற எண்: 60 / 2014). வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 3(1) (10), 3 (2) (5) முதலான பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களைப் பிணையில் விடுதலை செய்ய இயலாது. ஆனால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பொருந்தாது என உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்து அந்த அடிப்படையில் வன்கொடுமையாளர்கள் பிணையில் விடுதலை கோருவதும் அதை நீதிமன்றங்களும் ஏற்றுக் கொள்வதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.. இங்கும் கைது செய்யப்பட 20 பேர்களும் ஒரே வாரத்தில் பிணையில் விடுதலை ஆகியுள்ளனர்.

அருந்ததியர் சாதியைச் சேர்ந்த முருகு பாண்டியின் மீது இ.த.ச 307 வது பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டு (குற்ற எண் 59) இன்னும் அவர் சிறையில் உள்ளார்.

எரிக்கப்பட்ட 5 வீடுகளுக்கு 2500 முதல் 5000 வரை இழப்பீடும் துணி மணிகளும் பாத்திர பண்டங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. காயமடைந்த ஐவருக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி 60,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவாகியுள்ளது. பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 2 வீடுகள் கட்டித் தர உள்ளதாகவும் காவல்துறைத் தரப்பில் சொல்லப்பட்டது.

இந்த இழப்பீடு முதலியவை எல்லாம் கூட எங்களைப் போன்றவர்கள் நீதிமன்றத்தை அணுகிய பின்னரே மேற்கொள்ளப்பட்டது என்பதும், அரசுத் தரப்பில் அதுவரை எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அருந்ததியர்களைத் தாக்கிய ஆதிக்க சாதியினர் தமிழக அமைச்சரவையில் மிகவும் செல்வாக்குள்ள அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சாதியைச் சேர்ந்தவர்கள். சிலர் உறவினர்களும் கூட. அதனால்தான் அரசு நடவடிக்கைகளில் இந்த மெத்தனம் காணப்பட்டது எனவும் தாக்கியவர்கள் எளிதில் பிணையில் விடுதலை பெற முடிந்துள்ளது எனவும் ஒரு கருத்தும் அந்த அடிப்படையில் அருந்ததியர்கள் மத்தியில் ஒரு அச்சமும் நிலவுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அருந்ததியர்களைப் பொருத்த மட்டில் அவர்கள் தங்கள் பிழைப்பிற்கு ஆதிக்க சாதியினரையே நம்பியுள்ளனர். தற்போது அவர்களுக்கு யாரும் வேலை கொடுப்பதில்லை. நியாய விலைக் கடையில் வேலை செய்த ஒருவரையும் கூட வேலையை விட்டு நிறுத்தி விட்டனர். துப்புரவுப் பணியாளர்கள் ஏழு பேர் மட்டும் அந்தப் பணி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாடுகளுக்குப் புல் பிடுங்கவும் கூடத் தங்களை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்றார் சக்திவேல் என்பவர்.

எல்லாவற்றிற்கும் மேலாகக் கடும் அச்சம் அருந்ததியர்கள் மத்தியில் நிலவுகிறது. அஞ்சி ஓடிபோன பலர் இன்னும் வீடு திரும்பவில்லை.

நிவாரணப் பணிகள் நடைபெறுவதை கண்காணிப்பாளர் குறிப்பிட்டார். வன்முறையாளர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டதைப் பற்றிக் கேட்டபோது, நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது என்றார். வேலை கொடுக்காமல் சமூகப் புறக்கணிப்பு செய்யப்படுவதைப் பற்றிக் கேட்டபோது சுமார் 50 பேருக்குத் தான் அருகிலுள்ள கோவில் ஒன்றில் தற்காலிக வேலை வாங்கித் தந்துள்ளதைக் குறிப்பிட்டார். தினம் 200 ரூபாய்க் கூலியில் ஒரு வார காலத்திற்கு அந்த வேலை தரப்பட்டுள்ளது. அதற்குப் பின் அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

உத்தபுரம்

இங்கு கட்டப்பட்டிருந்த தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டதை ஒட்டி இந்திய அளவில் கவனம் பெற்ற ஊர் இது. இவ் ஊருக்கு நாங்கள் செல்வது இது நான்காவது முறை.

சுவர் இடிக்கப்பட்டதாக உலக அளவில் செய்தி பரப்பப் பட்டுள்ள போதிலும் இன்றளவும் அவ்வழியே வண்டிகள், ஆட்டோக்கள், லாரிகள் எதுவும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. எனவே சுவர் இடிக்கப்படும் முன் இப்பகுதியில் வாழும் பட்டியல் சாதியினர் எததகைய கஷ்டங்களையும் அவமானங்களையும் அனுபவித்தார்களோ அவை இன்னும் தொடர்கின்றன.

பேருந்து நிறுத்தம் கட்டப்படுவது தொடர்பான கோரிக்கை மட்டுமே நிறைவேற்றப் பட்டுள்ளது.

இன்னொரு முக்கிய கோரிக்கையான முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் வழிபடும் உரிமை என்பது பட்டியல் சாதியினருக்கு இன்னும் மறுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான தெளிவான ஆணையை மதுரை உயர் நீதிமன்றக் கிளை இட்டிருந்தும் பிள்ளைமார் சாதியினர் அதை அனுமதிக்கவில்லை.

இந்த ஆண்டு திருவிழாவின் போது பொங்கல் வைத்து சாமி கும்பிட ஆவன செய்ய வெண்டும் எனப் பட்டியல் சாதியினர் (தேவேந்திர குல வேளாளர்கள்) சென்ற மாதத் தொடக்கத்தில் அதிகாரிகளிடம் கோரியுள்ளனர். பொங்கல் வைக்க வேண்டாம், சாமி கும்பிட ஆவன செய்கிறோம் என அதிகாரிகள் கூறியதை இவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக சென்ற ஏப்ரல் 7 ந்தேதியன்று ஆர்.டி.ஓ, தாசில்தார், டி.எஸ்.பி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உத்தபுரம் வந்துள்ளனர். முதலில் தேவேந்திரர்கள் சார்பாக சங்கரலிங்கம் பேசி விட்டுச் சென்றுள்ளார். அடுத்து கோவில் நிர்வாகத்தைக் கையில் வைத்துள்ள பிள்ளைமார்களிடம் பேச இருந்தபோது அதிகாரிகள் அமர்ந்திருந்த கட்டிடத்தின் மீது பிள்ளைமார்கள் கற்களை வீசித் தாக்கியுள்ளனர். அதிகாரிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதே பிரச்சினையாகி பேச்சுவார்த்தை நின்றுள்ளது. கோவில் பூட்டப்பட்டுள்ளது. திருவிழா நடக்கவில்லை. கல்வீசியவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணிய பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என தேவேந்திரர்கள் சமாதானப் படுத்தப்பட்டுள்ளனர். இரு தரப்பினர் மத்தியிலும் சுமுக உறவில்லாமல் கனிந்த பகையுடன் நிலைமை தொடர்கிறது.

எமது பார்வைகளும் பரிந்துரைகளும்

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உள்ள ஒரு முக்கிய அம்சம். அதை வரவேற்கிறோம். ஆனால் பிரச்சினை அத்தோடு முடிவதில்லை. பாதிக்கப்படும் பட்டியல் சாதியினர் மத்தியில் உள்ள அச்சத்தைப் போக்குவது அரசின் கடமை. மேல்மங்கலத்தைப் பொருத்த மட்டில் இந்த அச்சம் இன்னும் போக்கப்படவில்லை. இன்று அங்கு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் அமைதி போலித்தனமான ஒன்று. இதை அரசும் காவல்துறையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தாக்கியவர்கள் அனைவரும் இன்று பிணையில் வெளி வந்து தைரியமாக நடமாடுகின்றனர். அருந்ததியர் வீதி வழியே தான் ஆதிக்க சாதி இளைஞர்கள் திறந்த வெளியை நோக்கி விளையாடச் செல்கின்றனர். நாங்கள் அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் கிண்டலும் கேலியுமாக அச்சுறுத்தும் வகையில் அவ்வழியே சென்று வந்ததைக் கண்டோம்.

1.அருந்ததியர் பகுதியை ஒட்டி நிரந்தரமாக அங்கு காவல்துறை அவுட் போஸ்ட் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

2. வன்கொடுமைக்குக் காரணமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை ரத்து செய்யக் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டு வழக்கைக் கவனமாக நடத்தி குற்றவாளிகளுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திலுள்ள அதிகபட்சத் தணடனையைப் பெற்றுத் தர காவல்துறை உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

3. அருந்ததிய மக்களுக்கு வேலை மறுக்கப்படுவது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி சமூகப் புறக்கணிப்புக் குற்றம். இது தொடருமானால் இச்சட்டப் பிரிவுகள் பயன்படுத்தப்படும் எனவும் இப்பகுதி வன்கொடுமைப் பகுதியாக அறிவிக்கப்படும் எனவும் விளம்பரப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. ஆதிக்க சாதியினரின் பகுதியில் உள்ள இரண்டு கடைகளில் மதுபானங்கள் விற்கப்படுவதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்துக் காவல்துறை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. தாக்குதலின்போது அருந்ததியர் வீடுகளிலிருந்த பணம் முதலியன பறிபோயுள்ளதாகச் சிலர் கூறினர். இது உண்மையா என விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. அருந்ததியர்களுக்கு நிரந்தர வருவாய் வரும் வகையில் சுய வேலை வாய்ப்புத் திட்டங்கள், நூறு நாள் வேலைத் திட்டம் முதலிய சாத்தியமான வேலை வாய்ப்பு வழி முறைகளை அரசு கண்டறிந்து நடைமுறைப் படுத்த வேண்டும்.

உத்தபுரத்தைப் பொறுத்த மட்டில் ஆண்டுகள் பலவாகியும் பிரச்சினைகள் தொடங்கிய இடத்தில் அப்படியே தேங்கி நிற்கின்றன. அரசைப் பொறுத்த மட்டில் பிரச்சினைகளைத் தீர்க்க அரசியல் விருப்புறுதி கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை.. இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

1. சுவர் இடிக்கப்பட்ட இடத்தை அகலப்படுத்தி அங்குள்ள எதற்கும் பயனற்ற கிணற்றை மூடி வண்டி, லாரிகள், டிராக்டர்கள் செல்ல வழி வகுக்க வேண்டும். பாதையில் போக்கு வரத்திற்கு இடைஞ்சலாக வேண்டுமென்றே அமைக்கப்பட்டுள்ள வீட்டுப் படிகள் முதலியன அகற்றப்பட்டு உறுதியான சிமின்ட் சாலை அமைக்க வேண்டும்.

2. முத்தாலம்மன் கோவில் அற நிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். இதை நாங்கள் தொடர்ந்து எம் அறிக்கைகளில் வற்புறுத்தி வருவது குறிப்பிடத் தக்கது.

3. ஏப்ரல் 7 அன்று பேச்சு வார்த்தைக்கு வந்த அதிகாரிகளைத் தாக்கியதோடு பேச்சுவார்த்தைகள் நடைபெற விடாமல் தடுத்தது கடுமையான குற்றம். இதற்குக் காரணமானவர்கள் மீது வழக்குத் தொடராதது கண்டிக்கத் தக்கது. குற்றவாளிகள் கண்டறியப்பட்டு உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *