பல்கலைக் கழகம் என்பது…..     

(சென்ற ஆண்டு டெல்லி  JNU பல்கலைக் கழகத்தில் போராட்டம் நடை பெற்றுக் கொண்டிருந்த போது எழுதப்பட்டு ‘விகடன் தடம்’  இதழில் வெளிவந்தது)

இந்தியாவிலேயே சிறந்த ஐந்து பல்கலைக் கழகங்களில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும், ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகமும் இடம் பெற்றுள்ளன என்று மனித வளத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. ஆனால் இந்த இரண்டு பல்கலைக் கழகங்களையும் மூட வேண்டும் என இன்னொரு பக்கம் அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார் இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்குபெற்ற ஷெஹ்லா ரஷீத். இவர் இன்று சர்ச்சைக்குள்ளாகியுள்ள டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் அமைப்பின் துணைத் தலைவர்.

இது மிகப் பெரிய முரண்தான். ஆனால் யோசித்துப் பார்த்தால் எந்தக் காரணங்களால் இப்பல்கலைக் கழகங்கள் முதன்மையாக விளங்குகின்றனவோ அதற்கு அடிப்படையாக இருப்பவைதான் இவற்றை மூட வேண்டும் எனச் சொல்கிறவர்களின் கண்ணை உறுத்துபவையாகவும் உள்ளன.

ஏராளமான ஆய்வுகள் வெளி வருவது, இப்பல்கலைக் கழகங்களிலிருந்து படிப்பை முடித்துச் சென்றவர்கள் உலகெங்கிலும் முக்கிய பொறுப்புகளில் விளங்குவது ஆகியவற்றின் அடிப்படையில்தான் இவை முதன்மையான பல்கலைக் கழகங்கள் என மதிப்பிடப்படுகின்றன.

எப்போதும் அரசியலும், மோதல்களும், கருத்து மாறுபாடுகளும் உரத்த குரலில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தப் பல்கலைக் கழகங்கள் எப்படி கல்வியிலும் ஆளுமை உருவாக்கங்களிலும் முன்னிலை வகிக்கின்றன?

கருத்து மாறுபாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும், முன்னோர்கள் எத்தனை மேதைகள் ஆயினும் அவர்களின் முடிவுகளைக் கேள்வி கேட்கும் மனநிலையும்தான் அறிவு வளர்ச்சியின் ஆதாரம்; கண்டுபிடிப்புகளின் தாய். மரத்திலிருந்து விழுந்த ஆப்பிளைப் பார்த்துவிட்டு அது அப்படித்தான் விழும் என நினைத்துக் கொண்டு போயிருந்தால் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டு பிடித்திருக்க இயலாது. ஏனெனில் அவருக்கு முந்திய “சுதந்திர வீழ்ச்சிக் கொள்கை” (Free Fall Theory) அப்படித்தான் சொல்லி யிருந்தது. ஆனால் நியூட்டன் அதை ஏற்கவில்லை. “எல்லாப் புதிய கோட்பாடுகளும் ஏற்கனவே உள்ள கோட்பாடுகளுடன் பொருந்திவர வேண்டும்” (consistency condition) என்கிற விதியை அவர் மீறினார். புதிய தத்துவம் நமக்குக் கிடைத்தது.

சென்ற நூற்றாண்டின் மிகப் பெரிய இயற்பியல் கண்டுபிடிப்புகளான ஈன்ஸ்டினின் சார்பியல் கொள்கை, டீ ப்ராக்லியின் பொருட்களின் இருமைப் பண்புக் கொள்கை, ஹெய்சன்பர்கின் உறுதியின்மைக் கொள்கை என அனைத்தும் இப்படியான ஒரு ‘அராஜகச் சிந்தனை முறை’யின் (anarchist method) விளை பொருட்கள்தான் என்பார் Against the Method எனும் முக்கிய நூலாசிரியர்  பால் ஃபெய்ராபென்ட்.

ஆம், கண்டுபிடிப்புகளுக்குச் சுதந்திரச் சிந்தனைகளும், கருத்து மோதல்களும் மிக மிக அடிப்படையாக உள்ளன. நமக்கு மேலை நாடுகளின் அரசியலில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அங்குள்ள பலகலைக் கழகங்களின் செயல்பாடுகள் நிச்சயமாக நாம் பின்பற்றத் தக்கவையாக உள்ளன என்பதில் யாருக்கும் கருத்து மாறுபாடுகள் இருக்க இயலாது. அவற்றிடமிருந்து நாம் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பண்பு என்னவெனில் அங்கு பல்கலைக்கழகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முழுமையான சுதந்திரம்தான். பல்கலைக்கழகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரம் மட்டுமல்ல, அவற்றுக்குள் நிலவும் சுதந்திரமும்தான்.

அதனால்தான் அனைத்துக் கண்டுபிடிப்புகளும் அங்கிருந்துதான் வருகின்றன. நவீன சிந்தனையாளர்களாக அறியப்படும் மிஷேல் பூக்கோ, ரோலான் பார்த்ஸ், ஹேபர்மாஸ் என யாரை எடுத்துக் கொண்டீர்களானாலும் இந்தப் பல்களைக் கழகங்களிலிருந்து வெளிப் போந்தவர்கள்தான். நோபல் பரிசுகளை அள்ளிக் குவிப்பவர்களும் இங்கிருந்து முளைத்தவர்கள்தான்.

எத்தனையோ செல்வ வளம் இருந்தும் சவூதி அரேபியாவிலிருந்தோ இல்லை ஒற்றைச் சிந்தனையை வலியுறுத்தும் ஏனைய நாடுகளிலிருந்தோ இப்படியான சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், கண்டுபிடிப்புகள் உருவாகாதது ஏன்? ஏனெனில் இங்கெல்லாம் பல்கலைக் கழகங்களுக்கும், பல்கலைக் கழகங்களுக்குள்ளும் சுதந்திரம் இல்லை என்பதுதான்.

பல்கலைக் கழகங்கள் என்பன மடங்களோ, மதரசாக்களோ, ‘செமினரி’களோ அல்ல. அவை ஒற்றைச் சிந்தனைகளைப் பயிற்றுவிக்கும் மையங்கள் அல்ல. அவை பல்வேறு கருத்துக்களும் மோதும் களம். அங்கே மாணவர்கள் சரியாக மட்டுமல்ல தவறாகச் சிந்திக்கவும் உரிமை உடையவர்கள்.

1807 -10 காலகாட்டத்தில் உருவாக்கப்பட்ட பெர்லின் பல்கலைக் கழகம்தான் உலகின் நவீன பல்கலைக் கழகங்கள் அனைத்திற்கும் முன்மாதிரி. இதற்கான முன்வரைவை உருவாக்கும் பணி கல்வி அரசதிகாரிகளிடமோ மத பீடங்களிடமோ கொடுக்கப்படவில்லை. அந்தப் பொறுப்பை ஃபிச்டே, ஷ்லெர்மேயர் என்கிற இரண்டு தத்துவவியலாளர்களிடம்தான் அன்றைய பிரஷ்ய அரசு அளித்தது. அவர்கள் தனித் தனியே இரு வரைவுகளைத் தந்தனர். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு இன்னொரு தத்துவ ஞானியான வில்லியம் வான் ஹம்போல்டிடம் அளிக்கப்பட்டது. அதிகத் தாராளவாதப் போக்குடன் அமைந்த ஷ்லெர்மேயரின் வரைவை அவர் தேர்வு செய்தார்.

அவை வழங்கிய பட்டங்கள் ‘இளங்கலை அறிவர்’ (Bachelor of Arts). முதுகலை அறிவர் (Master of Arts), தத்துவ முனைவர் (Doctor of Philosophy – Ph.D) என்கிற பெயர்களில்தான் அளிக்கப்பட்டன. இன்றளவும் இயற்பியல் அல்லது வேதியலில் முனைவர் பட்டம் பெறுபவர்களும் கூட ‘தத்துவ முனைவர்’ (Ph.D) என்றுதான் பட்டம் வழங்கப்படுகிறார்கள்.

இதன் பொருள் என்ன? பல்கலைக்கழகங்கள் என்பன தொழில் திறன்களை உருவாக்கும் பட்டறைகள் (skill factories) அல்ல. அவை முழுமையான மனிதனை உருவாக்குபவை. அதனால்தான் அறிவியல் படிக்கும் ஒருத்தி தொல்காப்பியத்தையும், ஷேக்ஸ்பியரையும், நவீன இலக்கியங்களையும் படிக்க வேண்டி இருக்கிறது. இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் கூட 1960கள் வரை விஞ்ஞானம் படிப்பவர்களும் கூடபொருளாதாரம் அல்லது அரசியல் என்பதுபோல ஏதேனும் ஒரு கலைப்பாடத்தையும் (humanities) கட்டாயமாகப் படிக்க வேண்டி இருந்தது.

ஆனால் இன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தையும். ஹைதராபாத் பல்கலைக் கழகத்தையும் மூடச் சொல்கிறவர்கள் என்ன சொல்கிறார்கள்? இவற்றை வெறுமனே திறன் பயிற்றுவிக்கும் பயிற்சிப் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்கிறார்கள். சென்ற ஆண்டு சென்னை ஐஐடி யில் செயல்பட்ட ‘அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்’ தடை செய்யப்பட்டபோது இவர்கள் என்ன சொன்னார்கள்? “இப்படியாகச் சிந்திக்கிற எல்லோரும் ‘ஒருங்கிணைக்கப்பட்ட  கலைத்துறைப்  பாடங்களுக்கான ஐந்தாண்டு பட்டப் படிப்பை’ப்  படிப்பவர்கள்தான். அங்கே சமூகவியல், சமூக மானுடவியல் மற்றும் ‘பன்மை ஒழுங்கு அணுகல் முறை’ (inter-disciplinary approaches) சார்ந்த பாடங்கள் பயிற்றுவிக்கப் படுவதுதான் எல்லா ஒழுங்கீனங்களுக்கும் காரணம். ஏனெனில் இது போன்ற பாடங்கள்தான் இங்கே சாதிமுறையின் தோற்றம் பற்றியும் சமஸ்கிருத மொழிக் குடும்பத்திற்கும் திராவிட மொழிக் குடும்பத்திற்கும் உள்ள வேறுபாடு பற்றியும், திராவிட மொழிகளின் தனித்துவம் பற்றியும் பாடத் திட்டத்தில் புகுத்தி மாணவர்கள் மத்தியில் ஒழுங்கீனத்தை ஏற்படுத்திவிட்டன” என்று கூறியதை மறந்துவிட இயலுமா? (பார்க்க: India Facts எனும் இணையத் தளம்).

ஆம், இவர்களின் நோக்கம் முழுமையான மனிதர்களை உருவாக்குவதல்ல. மாறாக இன்றைய Make in India வுக்குத் தேவையான சுய சிந்தனையற்ற வெறும் ‘ரோபோ’ க்களை உருவாக்குவதுதான்.

பல்கலைக்கழகங்களில் அரசியல் கூடாது என்றும் வரிகட்டுவோரின் பணம் இத்தகைய பல்கலைக்கழகங்களில் வீணடிக்கப்படுகிறது என்றும் இன்று இவற்றை ஒழித்துக்கட்ட முனைவோர் கூறுகின்றனர். இந்த உயராய்வுப் பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் தகுதி பெற்றவர்கள். அவர்களை அரசியல் பேசாதே எனச் சொல்வதமெப்படிச் சரியாக இருக்கும்?.

எல்லா அரசு நலத் திட்டங்களுக்கும் வரி கட்டுவோரின் பணத்திலிருந்துதான்  செலவிடப்படுகிறது. அதற்காக அதிக வரி கட்டுவோர் என்கிற அடிப்படையில் கார்பொரேட்களிடமா கல்விக் கொள்கை உருவாக்கும் பொறுப்பை விட்டுவிட முடியும்? அப்படியும் செய்தவர்கள்தான் இன்று இந்தப் பல்கலைக் கழகங்களை மூடச் சொல்கிறவர்கள். 2000த்தில் வாஜ்பேயி அமைச்சரவை உயர்கல்விச் சீர்திருத்தங்களுக்காக முகேஷ் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா ஆகிய இருவர் குழுவிடம் அந்தப் பொறுப்பை அளிக்கவில்லையா?

ஒருபக்கம் இப்படியான பிரச்சாரங்கள் இன்னொரு பக்கம் இந்த மாணவர்களின் மீது தேசத் துரோக வழக்குகள், இன்னொரு பக்கம் வெளியார்கள் மூலம் மாணவர்களின் மீதான வன்முறைத் தாக்குதல்கள்… இவற்றை ‘பாசிசம்’ எனச் சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?

கல்வி வளர்ச்சியில் அக்கறையுள்ள யாரும் இந்தச் சூழலைக் கண்டு கவலை கொள்ளாமல் இருக்க இயலாது.

 

 

அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்பதன் பொருள்

comparative religion

comparative religious studies என்பது ஒரு மிக முக்கியமான கல்வித்துறை. மதம் என்பது ‘நல்லதா, கெட்டதா’ என்பதற்கு அப்பால் அது மனித சமூக வாழ்வில் பிரிக்க இயலாத ஒரு அங்கம் என்பது யாரும் மறுக்க இயலாத ஒரு அடிப்படை உண்மை. மதம் தொடர்பான எந்த ஒரு அடிப்படைக் கருத்தாக்கம் மற்றும் நம்பிக்கை குறித்தும் மதங்களுக்கிடையே வேறுபட்ட பார்வைகள் உண்டு. இதை அடிப்படையில் அங்கீகரிப்பதும் ஒப்பீட்டு உணர்வதும் மதங்கள் பற்றிய புரிதலுக்கு அவசியம்.

இந்தப் புரிதலை அடைவதற்கு ஒரு அவசிய நிபந்தனை (necessary condition) உண்டு. அது: “ஒரு மதத்தை இன்னொரு மதத்தால் அளக்க முடியாது” என்பதே. ஒப்பிட்டுப் புரிந்து கொள்வது என்பது மதிப்பிடுவது அல்ல. “அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு” என முகமது நபிகள் சொன்னதன் பொருள் இதுவே. என் நம்பிக்கை மட்டுமே சரியானது. என் மதமே உயர்வானது என்பது நபிகளின் இந்தக் கூற்றுக்கு நூறு சதம் எதிரானது. பலதரப்பட்ட நம்பிக்கையாளர்களும் கூடி வாழ வேண்டிய ஒரு புவியியல் மற்றும் காலச் சூழலில் வாழ நேர்ந்த நாம் இதைப் புரிந்து கொள்வது அவசியம்.

தவிரவும், இந்தப் புரிதலை நாம் வரித்துக் கொண்டோமானால் மதங்களுக்கிடையே உள்ள சில நுணுக்கமான ஏற்பு நிலை வேறுபாடுகளையும் புரிந்து கொள்ள இயலும்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் (பிப் 10,2017) எனது இளம் முஸ்லிம் நண்பர் ஒருவர் ஒரு ஐயத்தை எழுப்பி இருந்தார். “ஏசு புத்தர் காந்தி” என்றெல்லாம் பொது வெளியில் ஏசுவுக்கும் புத்தருக்கும் கிடைத்த ஏற்பு ஏன் நபிகளுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் அந்த ஐயம். அதற்கு அப்போதைக்கு உடனடியாக நான் அளித்த மறுவினை இங்கே. இப்படியான அடிப்படையான வேறுபாடுகள் தவிர்க்க இயலாதவை. அவை அப்படித்தான் இருக்கும். இந்த வேறுபாடுகளை நிறையாகவோ, குறையாகவோ கருத வேண்டியதில்லை. இது அந்தந்த மதங்களின் இயற்பண்பு சார்ந்தது என்பதே நான் சொல்ல முயல்வது.

இனி அந்த விவாதம்:

Ahmed Riswan : ஏசுவையும் புத்தரையும் கடவுளாகவோ மதத்தலைவராகவோ ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட, அவர்களை ஒரு சமூக சீர்திருத்தவாதிகளாக ஏற்றுக்கொள்கிறார்கள். புத்தர், ஏசு, காந்தி என மூன்று பெயர்களும் சேர்த்தே சொல்லப்படுவதை நாம் பார்த்திருப்போம். இதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் பொதுச் சமூகத்தில் இப்படி ஓர் அங்கீகாரம் நபிகளாருக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரியது. இந்தக் குறையைப் போக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?

Marx Anthonisamy 1. பொதுச் சமூகத்தில் அங்கீகாரம் இல்லை என்பதாக நாம் அதைப் பார்க்க வேண்டுமா? தெரியவில்லை.

இந்தப் பட்டியலில் காந்தியை விடுங்கள். அவர் நம் கண்முன் வாழ்ந்து மறைந்தவர். குற்றம் குறைகளுடன். புத்தரும் தன்னை எந்நாளுமே கடவுள் என்றோ அவதாரம் என்றோ அழைத்துக் கொண்டதில்லை. அவர் தன்னை அதிகபட்சமாகச் சொல்லிக் கொண்டது ‘விழிப்படைந்தவர்’ என்றுதான். மற்றபடி அவரும் சாதாரணமாக வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு இறந்தவர்தான். ஏசுவைப் பொருத்த மட்டில் அவர் தன்னை இறைமகன் என அழைத்துக் கொண்டாலும், மக்கள் மத்தியில் அற்புதங்கள் செய்தவரானாலும் ஒரு சாதாரண மனிதனைப்போல, இன்னும் சொல்லப்போனால் சாதாரண மனிதரைவிடவும் சாதரணமானவராக, அதிகாரத்தால் குற்றம் சாட்டப்பட்டு, சித்திரவதைக்கு ஆளாகி, உலகின் முன், “என் கடவுளே, என் கடவுளே என்னை ஏன் கைவிட்டீர்” எனக் கதறி மாண்டவர்.

நபிகள் நாயகத்தைப் பொருத்த மட்டில் இவர்கள் எல்லோரையும் விடச் சாதாரண மனிதராக வாழ்ந்து மறைந்தவராயினும் அவரைத் தம்மில் ஒருவராகக் கற்பித்துக் கொள்வதற்குத் தடையாக இருப்பது, அவரை தம்மில் ஒருவராக உணர முஸ்லிம் அல்லாதவர்களுக்குத் தடையாக இருப்பது அவரைக் கற்பித்துக் கொள்ள ஒரு உருவமில்லாதது ஒரு காரணமோ? அதை ஒரு குறையாகச் சொல்லவில்லை. அது இஸ்லாத்தின் மிக அடிப்படையான ஒரு நம்பிக்கை. அது மதிப்பீடுகளுக்கும் விமர்சனகளுக்கும் அப்பாற்பட்டது. நான் நீங்கள் எழுப்பியுள்ள பிரச்சினைக்கு இதுவும் ஒரு காரணமோ என்கிற ஒரு பிரச்சினைப்பாட்டை மட்டுமே முன்வைக்கிறேன். அப்படியே உருவமாய்ப் பார்த்துப் பழக்கப்பட்ட மனங்களை மனதில் கொண்டு சொல்கிறேன்.

எப்போதாவது கிறிஸ்தவ ஆலயங்களுக்குப் போகும்போது ஒன்றைக் கவனித்துள்ளேன். திரு உருவங்களை அவர்கள் தொட்டு முத்தமிடுவதை. இந்துக் கோவில்களில் கர்ப்பக் கிரகங்களுக்குச் சென்று அய்தைச் செய்வது சாதாரண மக்களுக்குச் சாத்தியமில்லாதபோதும் அதை அவர்கள் திரு உருவப் படங்களாக வீடுகளிலும் கற்பிதங்களாகவும் கதைகளாகவும் நெஞ்சிலும் சுமக்க ஒரு சாத்தியம் ஏற்பட்டு விடுகிறது. இதெல்லாம் ஒரு காரணமாக இருக்குமோ?

Marx Anthonisamy 2 : இறை மற்றும் இறையடியாருக்கும் மானிடர்க்கும் உள்ள உறவு பற்றிப் பேச வரும்போது “ஆள் நிலைப்பட்ட உறவு” என்றொரு கருத்தாக்கத்தை முன்வைப்பார் பேரா. சிவத்தம்பி. இறையடியரை மட்டுமல்ல இறையையே தம்மைப் போன்ற ஒரு மனிதராகக் கருதி உறவு கொள்ளல் என்பது இதன் பொருள். இதை விளக்க ஒரு எடுத்துக்காட்டை இப்படிச் சொல்லலாம். ‘பட்டினத்தார்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. பட்டினத்தாருக்கும் அவர் மனைவிக்கும் குழந்தை இராது. அவர்கள் தம் வேதனையை வெளிப்படுத்தும் ஒரு காட்சி திரைப்படத்தில் உண்டு. அந்தத் திரைப்படப் பாடலையும் காட்சியையும் யூ டியுபில் காணலாம். (“நிலவே நீ இந்தச் சேதி சொல்லாயோ..”) . ஒரு நாள் அந்தத் தம்பதி உப்பரிகையில் அமர்ந்து நிலவை நோக்கி இறைவனிடமும் உமாதேவியிடமும் தூது சென்று தம் சோகத்தைச் சொல்ல முடியுமா எனக் கேட்பர். அருமையான பாடல். அதில் ஒருவரி. இறைவன் பகைவர் மீதும் பாதகர் மீதும் சினந்திருக்கும் போது போய் எங்கள் சோகத்தைச் சொல்லாமல் பெற்ற குழந்தைகளுடனும் உமா தேவிடனும் மகிழ்ந்து கொஞ்சிக் கொண்டிருக்கும் போது போய் எங்கள் சோகத்தைச் சொல்வாயா என்பார்கள். ஆக இறைவனையே நம்மைப் போன்ற உணர்வுகள், குற்றம் குறைகள், பாசங்கள், உறவுகள் உள்ளவனாக மானுடத் தன்மையுடன் கற்பிக்கும் ஒரு மானுட பலவீனத்தைச் சில மதங்கள் அனுமதித்து விடுகின்றன. இத்தகைய ஆள்நிலைப்பட்ட உறவு சாதாரண மக்களுக்கு நபிகளிடம் ஏற்பட இயலாமற் போனது எனக் கொள்ளலாமா?

என்னுடைய ‘நான் புரிந்து கொண்ட நபிகள்’ நூலில் நபிகள் நாயகத்தின் இந்த ஆள் நிலைப்பட்ட பண்புகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்திருப்பேன். இறைவனே சொல்லவில்லையா, நபிகளே ! உம்மை நான் குற்றம் குறைகள் உள்ள மனிதராகப் படைக்க வில்லையா? என. அவர் வெறும் எச்சரிக்கை செய்ய வந்தவர்தான் என்றும் கூறவில்லையா. அவர் உம்மி நபிகள்தானே. பெற்ற மகனின் மண்ணறையை விட்டு அகல இயலாமல் குமுறி அழுது கலங்கி அமர்ந்திருந்தவர்தானே. மாற்றுமதத்தாரின் ஜனாசா ஊர்வலமானாலும் ஒதுங்கி நின்று மரியாதை செய்தவரல்லவா. இந்த ஆள்நிலைப்பட்ட உறவை நாம் முன்னிலைப்படுத்தத் தவறியதும் ஒரு காரணமோ?

 

 

சிறைக்கோட்டமும் அறக்கோட்டமும் : பவுத்தம் சொல்வதென்ன?

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் – 2,

தீராநதி, பிப்ரவரி 2017

சென்ற வாரம் கடலூரில் மனித உரிமை அமைப்புகள் சார்பாக ஒரு கண்டனக் கூட்டம் நடைபெற்றது. கடலூர் மத்திய சிறையில் கடந்த எட்டு மாதங்களில் நான்கு கைதிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இன்னும் மூவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் உயிர் பிழைத்துள்ளனர். இது குறித்த விசாரணை வேண்டும். மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் சிறைக்குச் சென்று கைதிகளிடம் பேசி உண்மை நிலையைக் கண்டறிய அனுமதி வேண்டும் என்பன முக்கிய கோரிக்கைளாக அந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

இந்தியச் சிறைகளில் தற்கொலைகள், கொலைகள், உரிய சிகிச்சை இல்லாமல் நிகழும் மரணங்கள் ஏராளம். 2001 – 2010 காலகட்டத்தில் மட்டும் போலீஸ் மற்றும் சிறைக் காவல்களில் 14,231 பேர் செத்துள்ளனர் என்கின்றன தேசிய மனித உரிமை ஆணையம்  (NHRC) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள். அதாவது தினம் நான்கு சாவுகள். தேசிய குற்ற ஆவண நிறுவனம் (National Crime Records Bureau) வெளியிட்டுள்ள அறிக்கை 2011 ல் மட்டும் 1,332 கைதிகள் இந்தியச் சிறைகளில் செத்துள்ளனர் எனவும் இதில் 93.4 சத மரணங்கள் “இயற்கையானவை” எனவும் கூறுகின்றது. 68 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எட்டு பேர் பிற கைதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர். மொத்ததில் 12 மரணங்கள் இயற்கை மரணங்கள் இல்லாதவையாம். இயற்கை மரணங்கள் என அரசு சொல்பவையே ஆய்வுக்குரியவை. தமிழகச் சிறைகளில் உரிய வைத்திய வசதி இல்லாமல் பல ஆண்டுகள் இருந்து இறந்த கைதிகளை அறிவேன். தவிரவும் இந்தப் புள்ளி விவரங்கள் பலவும் பிரச்சினைக்குரியவை. ஒரே ஆண்டு குறித்த மனித உரிமை ஆணையத்தின் புள்ளி விவரமும் தேசிய குற்ற ஆவண நிறுவனப் புள்ளிவிவரமும் வேறுபடுவது இதை உறுதியாக்கும். தவிரவும் இந்த மரணங்களில் பலவும் சிறையில் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளின் விளைவு என்கிறது ஆசிய மனித உரிமை மையம் (Asian Centre for Human Rights) அதே 2011 ல் வெளியிட்டுள்ள அறிக்கை.

இந்த மரணங்களுக்கு இன்னும் பலவிதக் காரணங்கள் உள்ளன. டெல்லி திகார் சிறையில் நிர்பயா கொலை வழக்கில் கைதாகியிருந்த ராம்சிங் (33) சில ஆண்டுகள் முன் தற்கொலை செய்துகொண்ட போது அவரது பெற்றோர்கள் இது கொலை எனக் குற்றம் சாட்டினர். ஓரினப் புணர்ச்சி தொல்லையும் அவருக்கு இருந்ததாகக் கூறினர். பெங்களூரு பரப்பன அக்ரகாரச் சிறையில் பெண் கைதிகள் அங்குள்ள பணக்கார ஆண்கைதிகளுக்கு கட்டாயமாக விபச்சாரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்கிற குற்றச்சாட்டு சில ஆண்டுகள் முன் விசாரணைக்கு வந்தது. மும்பை சிறைச்சாலை ஒன்றில் பெண் கைதிகளைக் கண்காணிக்க வைக்கப்பட்டுள்ள CCTV க்களை நீக்க வேண்டும் என அவர்கள் போராடினர். அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் சிறைக் காவலர்களால் பாலியல் வக்கிரத்துடன் கண்காணிக்கப்படுகின்றன என்பது குற்றச்சாட்டு. சட்டிஸ்கரில் மாஓயிஸ்ட் ஆதரவாளர் எனக் கைது செய்யப்பட்ட ஹிட்மே கவாசி எனும் பழங்குடிப் பெண் சிறையில் செய்யப்பட்ட சித்திரவதைக் கொடுமைகளை இன்று சக கைதியாக இருந்த சோனி சோரி வெளிப்படுத்தியுள்ளார். கர்ப்பமாக இருந்தபோது கைது செய்யப்பட்ட அவர் பிரசவ நேரத்திலும் கூட விலங்கிடப்பட்டிருந்தாராம்.

இப்படி நிறையச் சொல்லலாம். ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தமிழகச் சிறைகள் இந்தப் பிரச்சினையில் ரொம்ப  மோசம். 2000 -2015 க்குள் மட்டும் 1155 பேர் இறந்துள்ளனர். அதாவது நான்கு நாட்களுக்கு ஒருவர் தமிழகச் சிறைகளில் செத்துப் போகிறார்.

நிறையச் சொல்லலால். சுருக்கம் கருதி இரண்டு விடயங்களோடு நிறுத்திக் கொள்கிறேன். நமது சிறையின் கொள்ளளவைவிட இரு மடங்கு மக்கள் உள்ளே அடைக்கப்படுகின்றனர். இதில் கிட்டத்தட்ட பாதிப்பேர் குற்றம் உறுதி செய்யப்படாத விசாரணைக் கைதிகள். பல நேரங்களில் இவர்களின் எண்ணிக்கை தண்டனைக் கைதிகளை விடவும் அதிகம். சிறைக் கைதிகளின் ‘இயற்கை மரணங்களில்’ இப்படியாக அதிக அளவில் கைதிகள் அடைக்கப்படுவதால் ஏற்படும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் கூட ஒரு காரணம்.

அதேபோல சிறைக்குள் கடைபிடிக்கப்படும் ஏற்றத் தாழ்வுகளும் கொடுமையானவை. சிறை மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் தலித்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்தான். இவர்களுக்கு சிறை விதிகளின்படி அளிக்கப்படும் ‘பரோல்’ முதலிய உரிமைகளுக் கூட முழுமையாக அளிக்கப்படுவதில்லை. சுருக்கம் கருதி விவரங்களைத் தவிர்க்கிறேன்.

#   #    #

ஐரோப்பாவை மையமாக வைத்து 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தண்டனை நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் நவீன சிறைச்சாலை உருவாக்கங்கள் குறித்து மிஷேல் ஃபூக்கோ முன்வைத்த ஆய்வுகள் நவீன சிந்தனை உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பவை. மத்திய காலத்திலும் அதற்கு முற்பட்ட காலங்களிலும் ‘நவீன சிறைச்சாலைகள்’ கிடையாது. அப்போதெல்லாம் பெருங் கூட்டமாகத் திரட்டப்பட்ட மக்கள் முன் கடுஞ்சித்திரவதைகளினூடாக குற்றவாளிகள் கொல்லப்படுவது ஒரு சடங்கு நிகழ்வாக அரங்கேற்றப்பட்டது. நிற்க மட்டுமே முடிந்த கூண்டுகளில் அடைத்து வைத்துக் கொல்லப்படுதல், உயிருடன் தோலை உரித்துத் தொங்கவிடப்படுதல், உறுப்புகள் துண்டிக்கப்படுதல் இப்படி எல்லாம் தண்டனைகள் அரங்க நிகழ்ச்சிகள் போலக் காட்சிப்படுத்தப்பட்ட நிலை 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மாற்றம் அடைந்தது. நவீன சிறைச்சாலைகள் உருவாயின.

இதனூடாக தண்டனை வடிவில் மாற்றங்கள் நடந்தனவே ஒழிய தண்டனைகளின் ஊடாக சமூகம் ஒழுங்கமைக்கப்படுதல் என்பது இன்னும் நுணுக்கமாகத் தொடர்ந்தது. தண்டிக்கப்பட்டவர்களின் உடல் மீதான வன்முறைகள் காட்சிப்படுத்தப்படுவது நின்றாலும் ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்தின் நடுவே அதன் ஒரு பகுதியாக நிறுவப்பட்ட சிறைச்சாலைகளின் ஊடாக சமூகம் ஒழுங்கமைக்கப்படுவது நிற்பதில்லை. சிறைப்பட்டவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுவதன் மூலம் அவன் புழங்கு வெளியும், அவன் புழங்கு காலமும் மிகத் துல்லியமாக ஒழுங்கமைக்கப்படுகின்றன. சமகால நவீன நிறுவனங்களான தொழிற்சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், இராணுவ தளங்கள் அனைத்தும் இவ்வாறே அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய ஒழுங்கமைப்பு நிறுவனங்களின் மூலம் இன்னும் இறுக்கமாக சமூகம் கண்காணிக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்படுகிறது. சிறைச்சாலைகளின் நோக்கம் குற்றங்களைக் குறைப்பதோ, குற்றவாளிகளைத் திருத்துவதோ, குற்றச் சமூகம் ஒன்று உருவாவதைத் தடுப்பதோ அல்ல. மாறாக குற்றச் சமூகம் ஒன்று இருப்பது அரசுக்குத் தேவையாக இருக்கிறது. குற்றச் சமூகம் ஒன்று இருப்பதே அரசின் இந்தக் கண்காணிப்புகளையும், இராணுவம் மற்றும் போலீஸ் மூலம் சமூகம் கட்டுக்குள் வைக்கப்படுவதையும் நியாயப்படுத்துகிறது என்பவற்றையெல்லாம் ஃபூக்கோ நிறுவியது சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் ‘குற்றவியல்’ மற்றும் ‘கண்காணிக்கப்படும் சமூகம்’ தொடர்பான புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ‘ஆதார் அட்டை’ நம் உடல் மற்றும் வாழ்வின் பிரிக்க இயலாத ஒரு அங்கம் ஆக்கப்படும் இன்றைய சூழலில் இந்தக் கண்காணிப்பு அதன் உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதை நாம் சரியாகப் புரிந்து கொண்டோமானால் சிறைச்சாலைகள் தொடர்பாக இப்போது எழுகின்ற இரு கேள்விகள் பொருளற்றதாகி விடுவதை உணரலாம். அவை: 1. தண்டனை வழங்குதல் மூலம் குற்றங்கள் குறையும் என்பது ஏன் நிகழவில்லை? 2. தண்டனை வழங்குதல் மூலம் குற்றவாளிகள் திருந்துவார்கள் என்பதும் ஏன் உண்மையாகவில்லை? இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில்தான். தண்டனை வழங்குதல் மற்றும் சிறைச்சாலைகளின் நோக்கம் குற்றங்களைக் குறைப்பதோ இல்லை குற்றவாளிகளைத் திருத்துவதோ அல்ல என்பதுதான். ஒரு வகையில் அரசுகள் மற்றும் அதிகாரத்தின் இருப்பிற்குக் குற்றங்களும் தேவைப்படுகின்றன. குற்றவாளிகளும் தேவைப்படுகின்றனர். எனவேதான் சிறைச்சாலைச் சீர்திருத்தங்கள் குறித்த மனிதாபிமானிகள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் இன்று அரசுகளால் மூர்க்கமாக மறுக்கப்படுகின்றன. அப்படி அரசுகள் மறுப்பதற்கு மக்களின் முழு ஆதரவு இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நிர்பயாவின் கொலையில் கைதான ராம்சிங்கிற்குச் சிறையில் கொடுமைகள் நிகழ்ந்தன என நாம் சொல்லத் துணிவோமானால் பெரும்பான்மை மக்களின் கடும் எதிர்ப்பைத்தான் நாம் எதிர்கொள்ள நேரிடும். எத்தனை கொடூரமான கொலையைச் செய்தவன் அவன்? அவனுக்கா மனித உரிமை வேண்டும் என்கிறாய்?

#   #   #

எனினும் மனிதன் என்கிற வகையில் அவனுக்கும் உரிமைகள் வேண்டும் என்கின்றவர்கள் சிறைச்சாலைகளில் உடனடியாகச் செய்ய வேண்டியன எனச் சில சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிக் கொண்டுதான் உள்ளனர். இவர்களில் சில இரக்கமுள்ள அதிகாரிகளும் உண்டு.

சர் கோட்ஃப்ரே லூஷிங்டன் 1885 -1895 காலகட்டத்தில் இங்கிலாந்தின் நிரந்தர உள்துறைச் செயலராக இருந்தவர். தண்டனை அமைப்பு குறித்த அரசு குழு ஒன்றின் முன் சாட்சியமளித்தபோது அவர் சொன்னது:

“ஒரு கைதி திருந்துவதற்குச் சிறைச்சாலைகளில் உள்ள கீழ்க்கண்ட நிலைகள் பொருத்தமாக இல்லை என நான் கருதுகிறேன். அவன் சிறையில் கழிக்கும் காலம் முழுவதும் அவனது சுயமரியாதை நசுக்கி அழிக்கப்படுகிறது; அவனிடம் எஞ்சியுள்ள அற உள்ளுணர்வுகள் வாடிச் சோர்கின்றன; இரக்கத்தை வெளிப்படுத்தவோ, அனுபவிக்கவோ உள்ள எல்லா வாய்ப்புகளும் அடைக்கப்படுகின்றன; குற்றவாளிகள் தவிர வேறு யாருடனும் அவன் தொடர்பு கொள்ள வாய்ப்புகள் அறவே மறுக்கப்படுகின்றன…….. ஒரு மனிதனைத் திருத்துவது அல்லது சமூகத்திற்கு அவனை திருப்பிக் கையளிப்பது என்பது நான் இப்போது சொன்ன அனைத்திற்கும் எதிர்த் திசையில் அமைகின்றது என்றே நான் நம்புகிறேன்; ஆனால் உண்மையில், இவை வெறும் கருத்துக்கள்தான். ஒரு சிறைச்சாலையில் இதெல்லாம் சாத்தியமில்லை. திருந்துவதற்குச் சாத்தியமில்லாதவை என நான் மேலே குறிப்பிட்ட அனைத்து அம்சங்களும் சிறை வாழ்விலிருந்து பிரிக்க இயலாத எதார்த்தங்களாக உள்ளன…”

லூஷிங்டன் என்ன இருந்தாலும் ஒரு அதிகாரி. அவரது அறத் தன்னிலைக்கும் அதிகார இருப்பிற்கும் உள்ள முரணை அவரே உணர்ந்து கொள்வதுதான் அவரது மேன்மை எனலாம். சிறைக் கைதிகள் இன்றைய சிறைச்சாலைகளின் ஊடாகக் கழிக்கும் தண்டனை வாழ்வின் மூலம் திருந்துவதற்கான வாய்ப்பே இல்லை என்பதைச் சரியாகவே அடையாளம் காணும் அவர் இந்தச் சிறை அமைப்பில் அது சாத்தியம் இல்லை எனப் பெருமூச்சு விடுகிறார். அதிகாரி. அவரால் வேறென்ன செய்ய முடியும்?

ஆனால் நம் தமிழிலக்கியத்தில் வேறெங்கும் காணக் கிடைக்காத ஒரு அற்புதம் நிகழ்கிறது. முற்றிலும் நாயகனே இல்லாத, ஒரு நாயகியை மட்டுமே தலைவியாய்க் கொண்டு இயங்கும் மகா காவியமான மணிமேகலையில் காவிய நாயகியான அன்னை மணிமேகலை முற்றிலும் புதுமையாய் ஒரு தீர்வைச் சொல்லுகிறாள். அவள் அதிகாரி அல்லள். குடும்பச் சிறையில் அகப்பட்ட ஒரு சாதாரண மானுடப் பெண்ணும் அல்லள். அவள் புத்த நெறியை ஏற்ற ஒரு துறவி. எனவே அவளால் அதைச் சொல்ல முடிகிறது.

அவளுக்கு புத்தபிரான் அருளால் யாருக்கும் வாய்க்காத ஒரு பெரும்பெறு வாய்க்கிறது. அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி ஒன்று அவளுக்கு அளிக்கப்படுகிறது. அதன் மூலம் மானுடரின் மிகப் பெரிய பிணியாகிய பசிப்பிணையை அகற்றும் பெரும்பேறுக்கு உரியவளாகிறாள் அந்த இளம் பிராயத்தில் அன்னை மணிமேகலை. சிங்கள மொழியில் ‘பசி’க்கு இணையான சொல் ‘படகினி’. அதன் பொருள் “வயிற்றிலே தீ”. அந்தத் தீயை அணைப்பதைத் தவிர பெரும்பேறு வேறு என்னவாக இருக்க இயலும்?

அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியின் ஊடாக வீதிதோறும் அலைந்து பசித்தோர்க்கு அவள் உணவளித்து வரும் அந்தச் செய்தி சோழ மன்னருக்குத்ன் தெரிவிக்கப்படுகிறது. அழைத்து வரச் சொல்கிறார். மன்னனுக்கும் மாதவி மகளுக்கும் இப்படி அமைகிறது உரையாடல்:

“மிக்க தவமுடையாய் ! நீ யார்? கையிலேந்திய பாத்திரம் எங்கே கிடைத்தது?”

“அரசே ! நெடுங்காலம் வாழ்வாயாக; யான் விஞ்சை மகள். இந்நகரில் வேற்று வடிவங் கொண்டு திரிந்தேன்; இது பிச்சைப் பாத்திரம்; இதனை அம்பலத்தேயுள்ள தெய்வமொன்று எனக்கு அருளியது; இது தெய்வத் தனமையோடு கூடியது. யானைப் பசியென்னும் தீராப்பசியைத் தீர்த்தொழித்தது; பசியால் மெலிந்தவர்களுக்கு  மிருதசஞ்சீவினியாக உள்ளது.”

“மிக்க தவமுடையாய் ! நான் செய்ய வேண்டியது என்ன?”

‘சிறைச்சாலையை அறச்சாலையாகச் செய்ய வேண்டும்”

அன்னையின் வாக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. சிறைச்சாலை அழிக்கப்பட்டது. அது அறவோர்கள் தங்கும், அறச் செயல்களுக்கான இல்லமாக ஆக்கப்பட்டது.

(தொடரும்)

 

 

 

.