நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே உடன் ஒரு விவாதம்

நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே நேர்மைக்குப் பெயர் பெற்றவர். பெருகிவரும் லஞ்ச ஊழலை எதிர்த்து அன்னா ஹஸாரே உடன் நின்று போராடியவர். கர்நாடக மாநிலத்தில் லோக் ஆயுக்தாவக்கச் செயல்பட்டவர்.

அன்னாரை NCHRO வின் இருபதாம் ஆண்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தோம். சரியான நேரத்திற்கு வந்து எளிமையாக எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்த அவரை தொடங்கி வைக்கும் முகமாக முதலில் பேச அழைத்தபோது அவர் மறுத்து முதலில் வேறு யாராவது பேசட்டும் என்றார். நிகழ்ச்சியில் பொதுத்தலைப்பு “பயங்கரவாதச் சட்டங்கள்” (Prevention of Terrorists Act) பற்றியது.

h9

முதலில் உரையாற்றிய கர்நாடக மூத்த வழக்குரைஞர் பாலன் அவர்களின் உரை மிகச் சிறப்பாக அமைந்தது. இங்கு இயற்றப்பட்டுள்ள பல சட்டங்கள்தான் உண்மையிலேயே சட்ட விரோதமானவை. நிலப் பறிப்புச் சட்டம், வனச் சட்டம் முதலியன பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தங்களின் கொள்ளையை நியாயப்படுத்த அவர்களால் இயற்றப்பட்ட சட்டங்கள் அவை. சுதந்திர இந்திய அரசு அந்தச் சட்டங்களையும், அதில் அது தொடர்ந்து செய்த திருத்தங்களையும் பயன்படுத்திக் கார்பொரேட் கொள்ளைகளை நியாயப்படுத்தி வருகிறது. இதனால் வாழ்வை இழந்த அம் மக்கள் போராடினால் அவர்களை எந்த விசாரணையும் இன்றுத் தடுப்புக்காவலில் வைக்கவும் கடுமையாகத் தண்டிக்கவும் உருவாக்கப்பட்ட சட்டங்கள்தான் இந்தத் தடுபுக்காவல் சட்டங்கள். தமது நியாயமான உரிமைகளை வேண்டிப் போராடுவோர்தான் இவற்றால் பாதிக்கப்படுகின்றனர் என அவர் மிக விரிவாகப் பேசினார். அவருக்குப் பின் மூத்த வழக்குரைஞர் நூருதீன் பேசினார்.

மூன்றாவதாகப் பேசிய சந்தோஷ் ஹெக்டே மிக அழகான ஆங்கிலத்தில் பட படவெனப் பொரிந்து தள்ளினார். சாராம்சமாக அவர் சொன்னது இதுதான். பயங்கரவாதம் ஆபத்தானது. அந்த வகையில் பயங்கரவாதத் தடைச் சட்டங்களை நிராகரித்துவிட முடியாது . அரசு மற்றும் காவல்துறை அத்துமீறல்களைத் தான் விசாரித்த வழக்குகளில் எப்படி நீதியுடன் தண்டித்தார் என்பதையும் கூடவே ஆதாரங்களுடன் சொல்லி வைத்தார்.

அடுத்துப் பேசிய மூத்த வழக்குரைஞர் ப.ப.மோகன் நீதிபதிகள் நீதியாக இருந்தால் மட்டும் போதாது என்பதையும் இச்சட்டங்கள் இயல்பில் எத்தனை மோசமானவை என்பதையும் விளக்கிப் பேசினார். இறுதியில் நான் பேசினேன்.

சந்தோஷ் ஹெக்டே முன்வைத்த கருத்து மிகவும் சிக்கலான ஒன்று. பொதுப் புத்தியில் ஆமாம் அது நியாயந்தானே என்கிற கருத்தைப் பதிப்பது. இந்தச் சட்டங்களின் கொடூரத் தன்மைகளையும் அதனால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளையும் பற்றிச் சொன்னால் மட்டும் அதற்குப் பதிலாகி விடாது. சிக்கல்தான்.

நான் பேசியபோது சொன்னவற்றில் சில:

h6

“ஜனநாயக அரசுகள் எதுவும் ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் ‘நெருக்கடிநிலை அறிவிப்பு’ செய்யும் உரிமையைப் பயன்படுத்தாமல் இருந்ததில்லை. “அரசின் காரணங்களுக்காக” (raison de etat) எனச் சொல்லி – ‘On the supreme reasons of the state’ இப்போது நிலவும் சூழலில் வழக்கமான சட்டங்களையும், வழக்கமான நடைமுறைகளையும் (procedures) வைத்துக் கொண்டு ஆளமுடியாது – எனச் சொல்லி வழக்கமாக நடைமுறையில் உள்ள அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை ஜனநாயக அரசுகள் தொடர்ந்து ரத்து செய்து வந்துள்ளன. ரோம் நகர ஜனநாயகம் என வரலாற்று முன்னோடியாகச் சொல்கிறோமே அந்த ஆட்சியிலேயே  ‘இயூஷியம்’ எனும் பெயரில் இவ்வாறு நெருக்கடி நிலை அதிகாரங்களை எடுத்துக் கொள்ளும் வழமை அரசுக்கு இருந்தது என்கிறார் ஃப்ரெஞ்ச் தத்துவவியலாளர் ஜார்ஜியோ அகம்பன். நம் நாட்டில் 1950 ஜன 26 அன்று அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தது. இரண்டாம் உலக் யுத் அத்துமீறல்களுக்கும், தொடர்ந்து உருவான உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தின் அடிப்படையிலும்  மிக விளக்கமாக இதில் நமது அடிப்படை உரிமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் இது அமுலுக்கு வந்த அடுத்த ஒரு மாதத்தில் – 1950 பிப்ரவரி 25 அன்று -முதல் தடுப்புக் காவல் சட்டத்தை அன்றைய உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான  வல்லபாய் படேல் அறிவித்தார். விரைவில் அகற்றப்படும் என அவர் சொன்னபோதும் அது நிலைத்தது. அதன் பின் DIR (1950), AFPSA (1958), MISA (1971), PSA (1978), ESMA (1981), TADA (1985), POTA (2001) என பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டன. பொடா நீக்கப்பட்ட அன்றே அதன் கொடூரமான கூறுகள் உள்ளடக்கப்பட்டு UAPA சட்டம் திருத்தப்பட்டது. இதன் மூலம் அவசரச் சட்டங்களுக்கு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்தைக் கூட்டி ஒப்புதல் பெறும் நிலையும் ஒழிக்கப்பட்டது. இன்று இந்த அவசரச் சட்டக் கூறுகள் UAPA சட்டத்தின் மூலம் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன. இவை தவிர ஆங்காங்கு மாநிலங்கள் இயற்றியுள்ள ‘அமைப்பாக்கப்பட்ட குற்றங்கல் தடுப்புச் சட்டங்கள்’ (COCA) பல. தமிழ்நாட்டில் ‘குண்டர் சட்டம்’.

ஆக இப்போது நமது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. எந்த அளவிற்கு எனில் இந்திரா அறிவித்த நெருக்கடி நிலையின்போது அன்றைய அட்டர்னி ஜெனெரல் நிரேன் டே குடிமக்களுக்கு Habeas Corpus உரிமை இல்லை என வாதிட்டார். இதில் வேதனை என்னவெனில் உச்ச நீதிமன்ற அமர்வு 4/5 என்கிற வீதத்தில் அந்த வாதத்தை ஏற்றுக் கொண்டது. ஆம், குடிமக்களின் உயிர் வாழும் உரிமையை அரசு மறுத்தபோது அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. ஐந்தி நீதிபதிகளில் நால்வர் அதை ஏற்றுக் கொண்டனர். சொன்ன காரணம் தேசத்திற்கு ஆபத்து என்கிறபோது அடிப்படை உரிமைகளிலேயே மிகவும் அடிப்படையான உயிர்வாழும் உரிமையே குடிமக்களுக்கு இல்லை என்பது.

இங்குதான் நான் நாம் நீதியரசர்களுக்கும் நீதிமன்றத்துக்கும் ஒன்றை நினைவூட்ட வேண்டியுள்ளது. அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை அரசு (Executive) மீறும்போது நீதிமன்றத்தின் கடமை என்ன? நீதிமன்றம் தலையிட்டு குடிமக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கும் காப்புரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான. அந்த அடிப்படையில்தானே மாண்புமிகு நீதியரசர் சந்தோஷ் ஹெடே போன்றோர் நீதிமன்றம் இருக்க பயங்கரவாதச் சட்டம் பற்றி ஏன் கவலை என்கின்றனர்.

ஆனால் இந்திய வரலாற்றில் இதுவரை என்ன நடந்துள்ளது? இப்படியாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போது நீதிமன்றங்களின் எதிர்வினை  (judicial response) எப்படி இருந்து வந்துள்ளது?

நீதிமன்றம் இத்தகைய வழக்குகளில் இரண்டு பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். 1. உண்மையிலேயே குடிமக்களின் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தும் கொடூரச் சட்டங்களை இயற்றும் அளவிற்கு நிலைமைகள் மோசமாக உள்ளனவா என்பது ஒன்று. மற்றது, 2) இப்படியான சந்தர்ப்பங்களில் இப்படியான சட்டங்களை இயற்ற அரசுக்கு அதிகாரம் (legislative competence) உண்டா என்பது.

இதுவரை நமது மாண்புமிகு நீதிமன்றங்களும் நீதி அரசர்களும் இந்த முதல் கேள்வியை கவனத்தில் எடுத்துக் கொண்டதே இல்லை. அவர்கள் நேரடியாக இரண்டாவது கேள்விக்குச் சென்று நீண்ட விளக்கங்களையும் வசனங்களையும் உதிர்த்து இறுதியாக அரசுக்கு இந்தச் சட்டத்தை இயற்ற அதிகாரம் உண்டு என முடித்து அந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பர். இதுதான் இந்திய நீதிமன்றங்களின் வருந்தத்தக்க வரலாறாக இருந்து வந்துள்ளது. POTA வை எதிர்த்து PUCL தொடர்ந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டு.

இந்த வகையில் நம் மாண்புமிகு நீதிபதிகள் இதுவரை அரசின் அதிகாரம் குடிமக்களுக்கு எதிராக எல்லையற்று விரிவதற்குக் காரணமாகியுள்ளனர். குடிமக்களுக்கு எதிரான எல்லாவகையான தவறுகளையும் நியாயமாக்கியுள்ளனர். அவற்றிற்கு சட்ட ஏற்புகள் வழங்கியுள்ளனர். TADA, POTA, Parliamentary attack case எல்லாவற்றிலும் இதுதானே நடந்தது. இந்த வகையில் அரசின் எல்லா வகையான நடவடிக்கைகளையும் – சட்டவிரோத நடவடிக்கைகள் உட்பட – எல்லாவிதமான நடவடிக்கைகளையும் ஏற்று ஆசி வழங்கியுள்ளன. அவற்றுக்குச் சட்ட ஏற்பு அளித்துள்ளன.

h4

நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்படியான சட்டங்களை இயற்றும் அரசை மட்டுமல்ல, அவற்றுக்கு ஏற்பு வழங்கும் நீதிமன்றங்களையும் கண்டிக்க வேண்டும். மனித உரிமைகளுக்காக நிற்கும் நாம் இவற்றுக்கு எதிராகவும் நின்றாக வேண்டும். நீதியரசர்களின் தாராளத் தன்மையற்ற கண்ணோட்டங்களையும் (illiberal attitudes of the judges) நாம் அம்பலப்படுத்தியாக  வேண்டும்.

சற்று முன் மாண்புமிகு நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே அவர்கள் சொன்னதுபோல குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது என்பது அரசின் மிக அடிப்படையான கடமைகளில் ஒன்று என்பதில் நமக்குக் கருத்து மாறுபாடு இல்லை. நீதியரசர் இன்னொரு கேள்வியையும் நம் முன் வைத்தார். அவசரச் சட்டங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகள் பற்றிப் பேசினால் போதுமா? பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவது என்பதும் அரசின் கடமையில்லையா என்பதுதான் அந்தக் கேள்வி. உண்மைதான் இந்த முரண் தர்க்கத்திற்குச் சமூகம் விடை கண்டுதான் ஆக வேண்டும். பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நாம் நீதி வழங்கித்தான் ஆக வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது.. அந்தப் பொறுப்பு அரசுக்கும் நீதிமன்றங்களுக்கும் உண்டு.

அடில் சர்கோவி vs கனடா அரசு எனும் வழக்கில் நீதி வழங்க அமர்ந்த ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்குத் தலைமைதாங்கிய தலைமை நீதிபதி மெக் லாச்லின் (Mc Lachlin) மிகத் தெளிவாக ஒன்றைக் குறிப்பிட்டார்.

‘ஒரு அரசியல் சட்டஅடிப்படையிலான ஜனநாயகத்தில் (constitutional democracy) அரசு என்பது அரசியல் சட்டத்திற்கும் அது குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளுக்கும், உத்தரவாதமளித்துள்ள சுதந்திரங்களுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்’ – என்பதுதான் அது.

பாதுகாப்பைக் காரணம் காட்டி அடிப்படை நீதிக்குப் (fundamental justice) புறம்பான நடைமுறைகளுக்கு மன்னிப்பு அளித்துவிட இயலாது. ஒருவேளை வழக்கமான நடைமுறைகள் குறிப்பான ஒரு சூழலுக்குப் பொருந்தாது என்றால் பொருத்தமான மாற்றுகள் கண்டாக வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அவ்வாறு கீழிறங்கும் எல்லை (bottom line) என்னவெனில் நமது அரசியல் சட்டத்தின் 21ம் பிரிவுதான். அதாவது அடிப்படை உரிமைகளை மறுதலித்து விட இயலாது என்பதுதான். எந்த மாற்றுகளும் ஒரே அடியாக அடிப்படை உரிமைகளை மறுதலித்துவிட இயலாது.”

-என்னுடைய பேச்சின் சுருக்கம் இதுதான்.

சந்தோஷ் ஹெக்டே மிக்க பெருந்தன்மையோடு இந்த விமர்சனத்தை எதிர் கொண்டார். பேசி முடித்து அருகில் வந்து அமர்ந்த என்னிடம் மிக்க நட்புணர்வுடன் நெருக்கடிநிலை காலத்திய நிரேன் டேயின் அந்த வாசகங்கள் எத்தனை மோசமானவை என்பதைப் பகிர்ந்து கொண்டார். கனடா நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பின் விவரத்தையும் கேட்டுக் கொண்டார்.

கருத்தரங்கம் முடிந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்த வேளையில் சுமார் 20 நிமிடங்கள் தொடர்ந்து அவர் பேசிக் கொண்டிருந்தார். இந்த நாட்டின் சீரழிவிற்கே லஞ்ச ஊழல்தான் காரணம் என்பதுதான் அந்த நீண்ட உரையின் சாராம்சம். முந்திரா ஊழல் தொடங்கி 2G ஊழல்வரை ஊழலின் அளவு எவ்வாறு பெருகி வருகிறது என்று வியந்தார். விருந்தினர், பெரும் பொறுப்புகளில் இருந்தவர் என்கிற அடிப்படையில் அனைவரும் எந்த மறுப்புகளும் இன்றிப் புன்ன்கைத்துக் கேட்டுக் கொண்டிருந்தனர். சற்றே பொறுமை இழந்து நான் கேட்டேன்,

“Sir, லஞ்ச ஊழல் மட்டுந்தான் இந்த நாட்டின் ஒரே பிரச்சினையா? வேறு இந்த நாட்டில் பிரச்சினைகளே இல்லையா?”

“Yes, It is the main problem. All others are consequential..”

“மன்னிக்க வேண்டும் சார் நான் அதை ஏற்கவில்லை. லஞ்ச ஊழல் ஒரு முக்கியமான பிரச்சினை என்பதை ஏற்கிறேன். ஆனால் அதுதான் ஒரே பிரச்சினை, மற்றவையெல்லாம் அதிலிருந்து கிளைப்பவை என்பதை நான் ஏற்கவில்லை” – இது நான்.

“உங்கள் கருத்து அப்படியாக இருக்கலாம். அதை நான் மதிக்கிறேன். ஆனால் அதை நான் ஏற்கவில்லை. உங்கள் கருத்தை வைத்துக்கொள்ளவும் முன்வைக்கவும் உங்களுக்கு எல்லாவிதமான உரிமைகளும் உண்டு. பை.. போய் வருகிறேன்” – கைப் பையை எடுத்துக் கொண்டு நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே புறப்பட்டார்.

அவருடைய கருத்துக்கள் நமக்கு உவப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் பண்பாளர். பெரிய மனிதர்.

 

 

 

 

பேரரசும் பவுத்த தம்மமும்

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 5   -‘தீராநதி’, மே 2017

(அசோகப் பேரரசின் உருவாக்கத்தில் பவுத்த தம்மத்தின் இடம் என்ன? இது ஒரு முக்கியமான கேள்வி. அரசுருவாக்கம் குறித்து ஆய்வோர் மட்டுமின்றி பவுத்தவியலில் ஆர்வமுடையோருக்கும் சவாலான ஒரு கேள்வி. அசோகரின் அணுகல்முறை உண்மையிலேயே பவுத்த வரையறைக்குள் அடங்குமா? அவரை ‘பவுத்த வகுப்புக்குள் அடங்கிய ஹிந்து’ என உ.வே.சாமிநாத அய்யர் போன்றோர் சொல்வதை எங்ஙனம் எடுத்துக கொள்வது?- அசோகர் குறித்த கட்டுரைத் தொடரின் இறுதி அத்தியாயம் )                             

அசோகர் பவுத்tதத்தை ஏற்றவர். பவுத்தம் பரப்புவதற்கெனத் தன் பிள்ளைகளை அர்ப்பணித்தவர். மூன்றாம் பவுத்தப் பேரவையைக் கூட்டி பவுத்தத்தை இறுக்கமான தேரவாத அடையாளத்துடன் வரையறுத்தவர். தனது சாசனங்களின் ஊடாக பவுத்த சங்கங்களில் உள்ள பிக்குகளுக்கு இன்னின்ன பௌத்த அடிப்படை நூல்களைக் கற்க வேண்டும் என அறிவுரைக்கும் தகுதியை வரித்துக் கொண்டவர், சங்கங்களில் பிளவுகளைச் செய்வோர் வெளியேற்றப்படுவர் என எச்சரித்தவர். பவுத்த புனிதத் தலங்களுக்குச் சென்று சேவித்து வந்தவர். அந்தத் தலங்களுக்கு வரிச் சலுகைகளை அளித்தவர் என்பதையெல்லாம் கண்டோம்.

Buddha2

இவை அனைத்தும் அசோகர் என்கிற மனிதரின் தம்மக் கடப்பாடுகளைப் புரிந்து கொள்ள நமக்குப் போதுமானவையாக இருக்கலாம். ஆனால் இவை எந்த வகையில் அவரது ஆளுகைக்கும், அவரது பேரரசு உருவாக்க முயற்சிகளுக்கும் அடிப்படையாகவும் துணையாகவும் இருந்தன என்பதைப் புரிந்து கொள்ள நாம் இன்னும் கொஞ்சம் ஆழமாகவும் நுணுக்கமாகவும் அவரது சாசனங்களைக் கற்கவும் ஆய்வு செய்யவும் வேண்டி உள்ளது. மேலோட்டமாகத் தெரியும் சில முரண்பாடுகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டி உள்ளது.

எடுத்துக்காட்டாகச் சில முரண்கள் அல்லது இயல்பாக நமக்கு உருவாகும் அய்யங்களைக் காண்போம். மரணதண்டனைக் கைதிகள் பால் அசோக ஆளுகை காட்டிய கருணைப் பார்வை வரலாற்றில் ஓர் அதிசயம் எனப் பார்த்தோம். மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மேல் முறையீடு செய்யும் வாய்ப்பை அளித்தல், சாத்தியமில்லாதபோது அவர்கள் தம் இறுதிக் கடப்பாடுகளையும் அறக் கடமைகளையும் நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை அளித்தல் முதலியன அவர் நடைமுறைப்படுத்திய சீர்திருத்தங்கள். எனினும் நமக்கொரு கேள்வி எழுகிறது. ஏன் அவர் மரண தணடனையையே ரத்து செய்திருக்கக் கூடாது?

மரண தண்டனை ஒழிப்பு என்பதெல்லாம் மிக நவீனமான சிந்தனை. இதனை கிறித்து அப்தத்திற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னதாகக் கொண்டு சென்று இத்தகைய கேள்வியை எழுப்புவது எவ்வகையில் பொருத்தம் என்பது ஒரு நியாயமான கேள்வியாக இருக்கலாம். ஆனால் பவுத்த தம்மத்தில் அப்படியான ஒரு கருத்தாக்கமோ நடவடிக்கையோ அப்படி ஒன்றும் காலவழு எனப் புறக்கணிக்கக் கூடியதல்ல. பவுத்தம் என்றைக்கும் மரண தண்டனை முதலானவற்றை ஏற்றுக்கொண்டதல்ல. அதே போல புத்த பகவன் கரு உயிர்த்த திருத்தலத்திற்குப் புனித யாத்திரை சென்ற அசோகர் அந்தத் தலம் அமைந்திருந்த ஊருக்கு வரிச்சலுகை அளித்தார் எனப் பார்த்தோம். பலி எனும் தல வரியைக் குறைத்தார். பாகத்தை எட்டில் ஒரு பாகமாக ஆக்கினார். எனினும் முழுமையாக அதை ரத்து செய்யத் துணியவில்லை.

எல்ல மத நம்பிக்கைகளையும் கருத்து வேறுபாடுகளையும் மதிக்க வேண்டும் எனத் தன்  மக்களை நோக்கி வேண்டிக் கொண்ட அசோகர் அந்த உரிமையைத் தன் சங்கத்தவர்க்கு அளிக்கத் தயாராக இல்லை. மத அடிப்படைகளில் கருத்து வேறுபாடுகளை உருவாக்கிப் பிளவுறுத்த நினைப்பவர்களுக்குச் சங்கத்தில் இடமில்லை என்றது இன்னொரு முரண். இப்படி நாம் வேறு சிலவற்றையும் குறிப்பிட முடியும்.

அசோகச் சாசனங்களின் ஊடாக சம கால அரசியல் மற்றும் சமூகச் சூழல்களின் சில நுணுக்கங்களையும் நம்மால் ஊகிக்க இயலும். இந்தச் சாசனங்கள் மூன்று வகைப்பட்டவையாக உள்ளன. விரிவான பாறைச் சாசனங்கள் (Major Rock Edicts), சிறு பாறைச் சாசனங்கள் (Minor Rock Edicts), தூண் சாசனங்கள் (Pillar Edicts) என ஆய்வாளர்கள் இவற்றைப் பிரிகின்றனர். இச்சாசனங்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்குத் வட மேற்கில் அமைந்துள்ள தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகாரில் தொடங்கி கங்கைச் சமவெளியிலும் தீபகற்ப இந்தியாவெங்கிலும் விரவிக் கிடக்கின்றன. கந்தகாரில் வாழ்ந்தது ஹெல்லெனியக் குடியிருப்பினர். இப்பகுதியில் உள்ள சாசனங்கள் அராமிக் மற்றும் கிரேக்க மொழியில் அமைந்துள்ளன. இதைச் செதுக்கிய கற்தச்சர் கபாடா எனத் தன் பெயரை கரோஷ்தி எழுத்துருவில் (script) வடித்துள்ளார்.

தீபகற்ப இந்தியாவில் அமைந்துள்ள சிறு பாறைச் சாசனங்கள் பிராகிருத மொழியில் பிராமி எழுத்துருவில் வடிக்கப்பட்டுள்ளன. பின்னாளில் இவ்வாறு அறிமுகமான பிராமி எழுத்துரு தமிழ் பிராமி எனத் தென்னிந்தியக் கல்வெட்டுகள் உருவாக்கத்தில் இடம் பெற்ற வரலாற்றை நாம் அறிவோம்.

தீபகற்ப இந்தியாவில் (இந்தியத் துணைக் கண்டத்தின் தென்பாதி) இருந்த சாசனங்கள் பலவும் ‘பெரும்கற்கால மையங்களிலேயே’ (Megalithic Cites) அமைந்துள்ளன. பெரும்கற்காலம் என்பதை அரசுருவாக்கத்திற்கு முந்தைய அல்லது முழுமையான அரசுருவாக்கம் உருப்பெற்றிராத காலகட்டம் என்பர். இவை எதுவும் அச் சாசனங்கள் வடிக்கப்பட்ட காலத்தில் பவுத்தம் செழித்திருந்த பகுதிகளாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமராவதி போன்றவையும் கூட பிற்காலத்தில்தான் முக்கிய பவுத்த மையங்கள் ஆயினவே ஒழிய அசோகச் சாசனங்கள். வடிக்கப்பட்ட காலத்தில் அவை பவுத்த மையங்களாக உருப்பெறவில்லை. அப்படியான ஒரு மையமாக உருப்பெறும் சாத்தியமுள்ள பகுதிகளாக வேண்டுமானால் அவை அப்போது இருந்திருக்கலாம். இன்னொன்றும் இங்கே கருதத்தக்கது. தற்போதைய ஆந்திரம், தெலங்கானா, கர்நாடக  மாநிலங்களில் உள்ள இப்பகுதிகள் அன்றைய அசோகப் பேரரசின் கவனத்துக்குரிய பகுதிகளாக இருந்ததற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. ஒரு பேரரசுக்குரிய வளத்திற்கும், வருமானத்திற்கும் மிக அடிப்படையாக இருக்கும் நீர்வளம் மிக்க விவாசாய நிலங்களும், தங்கச் சுரங்கங்களும் நிறைந்த பகுதிகளாகவும் அவை இருந்தன. அரசுருவாக்கம் முழுமை அடைந்திராத இப்பகுதிகளில் அப்போது அதிகாரம் என்பது அவ்வப்பகுதி சார்ந்த குறுநிலத் தலைவர்களிடமே (chieftains) இருந்தது.Mahabodhitemple

அதே நேரத்தில் இன்னொரு பக்கம் அசோகப் பேரரசின் கங்கைச் சமவெளிப் பகுதிகள் வளர்ச்சியடைந்த அரசுருவாக்கத்துடன் சில நூற்றாண்டுகளாகவே நந்தர்கள், மவுரியர்கள் ஆகியோரின் ஆட்சியின் கீழ் இருந்தன. மிக முக்கியமான தத்துவ, இலக்கிய, இதிகாச உருவாக்கங்கள், நிலையான படைகள், படைஎடுப்புகள் எனப் பல்வேறு வகைகளில் வளர்ச்சியுற்ற பகுதிகளாகவும் இவை இருந்தன.

ஆக ஒன்றை நாம் மனங்கொள்ளல் வேண்டும். அசோகப் பேரரசு என்பது, பண்பாடு, அரசுருவாக்கம், சமூக அமைப்பு, மொழி ஆகியவற்றால் தமக்குள் பல்வேறு வகைகளில் வேறுபட்டிருந்த (diversity) பல புவிப் பகுதிகளின் தொகுப்பாக இருந்தது என்பது கவனத்துக்குரியது.

இந்தப் பின்னணியில் நாம் அசோகரின் சிறு பாறைச் சாசனங்களைச் சற்று உற்று நோக்குவோம். பெரும்பாறைச் சாசனகளிலிருந்து இவை ஓரம்சத்தில் வேறுபட்டுள்ளன. பெரும்பாறைச் சாசனங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான உள்ளடக்கத்துடன் அமைந்துள்ளன. ஆனால் சிறுபாறைச் சாசனங்கள் சற்றே வேறுபட்ட 17 வடிவங்களில் அமைந்துள்ளன. இன்னும் இதுபோல பல சாசனங்கள் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இவற்றில் சில சுருக்கமாக உள்ளன. சில அதிகாரிகளை நோக்கிச் சொல்பவையாக உள்ளன. சில சாசனங்கள் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. சிலவற்றில் மொழியும் வேறுபட்டுள்ளது.

முற்பாதி கிட்டத்தட்ட எல்லா சாசனங்களிலும் ஒரே மாதிரியாக உள்ளன. அடுத்த பகுதிகள் வேறுபட்டுள்ளன.. கர்னூல், பெல்லாரி, சித்திரதுர்கா போன்ற கர்நாடக மாநிலப் பகுதிகளில் உள்ள ஏழு சாசனங்களில் மட்டும் இரண்டாம் பகுதி கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதி சித்திரதுர்காவில் உள்ள சாசனத்தில் மட்டும் காணப்படுகிறது. இவை எதுவும் துங்கபத்திரா ஆற்றோரங்களில் காணப்படவில்லை. பிரம்மகிரியில் உள்ள ஒரே ஒரு சாசனத்தில் மட்டும் அதைச் செதுக்கிய கபாடா எனும் கற்தச்சர் கரோஷ்டி மொழியில் கையொப்பமிட்டுள்ளார்.

முதல் பகுதி அதிகாரிகளை நோக்கிச் சொல்லப்படுகிறது. அதிகாரிகள் அதில் காணப்படும் செய்திகளை மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இதில் அசோகர் தன்னை ஒரு (அவுத்த) உபாசகராக முன்நிறுத்திக் கொள்கிறார். சரியாகப் பொருள் கொள்ள முடியாத ஒரு சொற்றொடர் இதில் காணப்படுகிறது. “இதுநாள் வரை ஜம்புதீபத்தில் (இந்தியாவில்) உள்ள கடவுளர்கள் மக்களோடு இணைந்திருக்கவில்லை. இப்போது அவர்கள் மக்களோடு கலந்துள்ளனர். என்னுடைய முயற்சியில் விளைந்தது இது.”- இதற்கு இப்படித்தான் பொருள் கொள்ள இயலும். “எனது தம்மப் பணிகளின் ஊடாக தம்மக் கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரவி, அதனூடாக கடவுளர்கள் அவர்களை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளனர்” என்பதே. அதற்கடுத்த வரிகளில் தம்மத்துக்குரிய நன்னடத்தைகள் யாவை எனச் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது.

இரண்டாவது பகுதி கிராமப்புரத்தில் பணியாற்றும் ராஜுகர் எனும் அதிகாரிகளை நோக்கிச் சொல்லப்படுகிறது. முரசறைந்து மக்களைக் கூட்டி இவற்றை மக்களுக்கு கூறவேண்டும் என அவர்களுக்கு ஆணையிடப் படுகிறது. வேறொன்றுமில்லை. பெற்றோர்க்குப் பணிதல், உயிர்களிடத்தில் அன்பு செய்தல், உண்மை பேசுதல் முதலான பொதுவான அறிவுரைகள்தான் இவை. எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினரையும் நோக்கியதாக அல்லாமல் எல்லோருக்குமான பொது அறிவுரைகளாகவே இவை உள்ளன என்பது கவனத்துக்குரியது.

மூன்றாவது பகுதியும் கிட்டத்தட்ட இதே நற்பண்புகளை வற்புறுத்துபவைதான். ஆனால் இவை யானைப் பாகன்கள், வருங்காலம் உரைப்பவர்கள், எழுத்து வடிப்பவர்கள் (scribes) முதலான சில குறிப்பான தொழில் வல்லுனர்களை நோக்கிச் சொல்லப்படுகின்றன. இவர்கள் தம்மிடம் பயில்கிறவர்களுக்கு அவர்தம் தொழிலோடு வேறு எவற்றையெல்லாம் பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்கு இவற்றில் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. பெரியோர்க்கும், தன்னைப் பணியில் வைத்திருப்பவர்களுக்கும் பணிந்து நடத்தலை பயிற்சியாளர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும்; குடும்பங்களில் உறவினர்கள் ஒருவரை ஒருவர் மதிக்கச் சொல்லித்தர வேண்டும் முதலான கருத்துக்கள் இப்பகுதியில் வற்புறுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் தீபகற்ப இந்தியாவிலும், தீபகற்ப இந்தியாவை நோக்கிய பாதைகளிலும் காணப்படுகின்றன.

சில முக்கியமான நகர்ப்புற (metropolitans) உருவாக்கங்கள் நடந்துகொண்டிருந்த காலம் அது. அரசுருவாக்கம் முழுமை பெறாத சூழலில் தனது  ஆரியபுத்ரர்கள், குமாரார்கள், மகாமாத்திரார்கள், ராஜூகர்கள் முதலான அதிகாரிகள் மற்றும் உள்ளூர் ஆட்சியாளர்கள் ஆகியோரின் ஊடாக அசோகப் பேரரசுக்குள் அப்பகுதிகள் இணைக்கப்பட்டுக் கொண்டிடிருந்த காலம் அது. உள்ளூர்த் தலைவர்களையும் பேரரசையும் இணைக்கும் பாலமாக அசோகப் பேரரசின் இந்த அதிகாரிகள் அமைந்திருந்தனர்.

தொழில் செய்வோர்களைப் பற்றிச் சொல்ல வரும்போது எழுத்துரு வடிப்பவர்களும் முக்கியமாகக் குறிப்பிடப்படுவது கவனிக்கத் தக்கது. பிராமி எழுத்துக்களில் கல்வெட்டுக்கள் உருவாகிக் கொண்டிருந்த காலம் அது. கந்தகாரில் அராமிக் மற்றும் கிரேக்க மொழியில் இந்தச் சிறுபாறைச் சாசனம் வடிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டேன். அருகிலுள்ள மக்களுக்கும் இவை தெரிவிக்கப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் இரு மொழிகளிலும் இது வடிக்கப்பட்டதாக ஊகிக்கலாம். அராமிக்கில் வடிக்கப்பட்ட சாசனத்தில் தனது நல்லொழுக்க போதனைகளால் கடவுளர் மக்களை நெருங்கி வந்ததைச் சொல்லும்போது நல்லொழுக்கமும் இறையச்சமும் உடையோர்க்கு இறுதித்தீர்ப்பு கிடையாது என்றொரு வாசகம் வருகிறது. அராமிக் மொழி பேசுகிற ஸரோஷ்ட்ரிய நம்பிக்கையாளர்கள் இறுதித்தீர்ப்பு எனும் கருத்தாக்கத்தை நம்புகிறவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

சுருங்கச் சொல்வதானால் இப்படி முன்வைக்கலாம். தனது பவுத்த நம்பிக்கைகளைப் பவுத்த நம்பிக்கை இல்லாதவர்களிடம் கொண்டு செல்வதில் அசோகச் சாசனங்கள் முனைப்புக் காட்டவில்லை. போரும் வன்முறைகளும் இல்லாமல் தான் ஒருங்கிணைக்க விரும்பும் பேரரசுக்கு இப்படியான முயற்சிகள்  ஒவ்வாது என்பதை அசோகர் நன்றாகவே உணர்ந்திருந்தார். மூன்றாம் பாறைச் சாசனம், ஒன்பதாம் தூண்சாசனம் ஆகியவற்றில் இறுதி நோக்கம் பற்றிச் சொல்கையில் சொர்க்கம் அடைதல் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. ‘சொர்க்கம்’ எனக் குறிப்பிடத் தயங்காத அசோகச் சாசனங்கள், பவுத்தத்தின் இறுதிக் குறிக்கோளாகிய ‘நிர்வாணம்’ பற்றிக் குறிப்பிடச் சிரத்தை எடுத்துக் கொள்ளாதது கவனிக்கத் தக்கது.

மக்கள் மத்தியில் தம்ம உபதேசம் செய்வதற்கு அசோகர் ‘தம்ம மகாமாத்திரர்கள்’ எனப்படும் அரசு அதிகாரிகளைத்தான் பயன்படுத்தினாரே ஒழிய புத்த பிக்குகள் அப்பணிக்குப் பயன்படுத்தப்படவில்லை என்பதும் குரிப்பிடத்தக்கது.

இப்படி நிறையச் சொல்லலாம். பேரரசு உருவாக்கம் நிகழ்ந்து கொண்டிருந்த காலம் அது. இதுகாறும் முழுமையான அரசுருவாக்கங்கள் நிகழாதவையாகயும், மொழி, பண்பாடு, நம்பிக்கைகள் ஆகியவற்றால் பிரிந்தும் கிடந்த பிரும்மாண்டமான ஒரு புவிப் பகுதியை வன்முறையின்றி ஒரு குடையின் கீழ் ஒரு பேரராசாக உருவாக்குவது என்கிறபோது அது இரு பணிகளை ஒரு சேர நிகழ்த்த வேண்டியதாக இருந்தது. அரசு நிர்வாகத்தை விரிவாக்குவது என்பது ஒன்று. மற்றது மக்களிடம் நேரடியாகப் பேசி அவர்களை மனப்பூர்வமாக ஏற்க வைத்துப் பேரரசுக்குள் இணைக்க (persuasive assimilation)  வேண்டியது என்பது. தனது பவுத்தக் கருத்துக்களை அவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே மக்கள் மீது திணித்து ஒரே மாதிரியான ஒற்றைக் கலாச்சாரச் சமூகம் ஒன்றை நிர்மாணிப்பது என்பது அவரது நோக்கமாகவோ, திட்டமாகவோ இல்லை.

அசோகர் பவுத்தத்தை ஏற்றுக் கொண்ட தனி மனிதர் மட்டுமல்ல. ஒரு பேரரசை உருவாக்கியவரும் கூட. கலிங்கப் போர் என்பது அவரது எட்டாவது ஆட்சியாண்டில் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் இறுதிவரை அவர் இந்தப் பேரரசு இணைப்பிற்குப் போர் நடவடிக்கையை ஒரு கருவியாகப் பயன்படுத்தவில்லை. அவர் காலத்தில் ஓங்கியிருந்த மதங்களில் ஒன்றான பவுத்தத்தை அவர் ஏற்றுக் கொண்டார். பவுத்தத்தை ஏற்றுக் கொண்டதற்காக அவர் அகிம்சையைக் கடைபிடித்தாரா, இல்லை அகிம்சையைக் கடைபிடிப்பதற்காக அவர் பவுத்தத்தை ஏற்றுக் கொண்டாரா என்பதல்ல பிரச்சினை. ஏற்கனவே பவுத்தத்தில் பற்றிருந்த போதும் கலிக்கப் போருக்குப் பின் அவர் பவுத்தத்தில் தீவிர ஆர்வம் கொண்டவரானார். தனது அரசதிகாரத்தைக் கொண்டு அந்தக் கொள்கைகளைப் பரப்பவும் செய்தார். ஆனால் யார் மீதும் அதை அவர் திணிக்க வில்லை. அவரவர் நம்பிக்கைகள் அவரவர்க்கு எனும் கொள்கையுடனேயே அவரது விரிவாக்கம் அமைந்தது எனலாம்.

தனது நம்பிக்கைகளை மக்கள் மீது திணிப்பது அவர் நோக்கமாக இல்லை என்பது ஒரு பக்கம். பல்வேறு பண்பாடுகளும் உள்ள ஒரு பேரரசைக் கட்ட அதுவே அவருக்குத் தகுந்த நெறியாக மட்டுமின்றி உபாயமாகவும் அமைந்தது என்பது அவரது அணுகல்முறையின் இன்னொரு பக்கம். இதை நாம் மறக்கக் கூடாது. அசோகர் ஒரு உபாசகர் மட்டுமல்ல. அவர் ஒரு அரசர். ஒரு பேரரசர். இரண்டுக்கும் இடையில் ஒரு சமரசத்தை மேற்கொண்டவராகவே அவரைக் காண்கிறோம். அவர் தன்னை “தேவனாம்பிரியன்”, அதாவது இறைவனுக்குப் பிரியமானவன் என்றே அழைத்துக் கொண்டார். அரசை இறைமையுடன் இணைப்பது பவுத்த மரபு அல்ல. அது வைதீக மரபு. பவுத்த மரபில் அரசன் என்பவன் ‘மகா சம்மதன்’ – எல்லோருடைய சம்மதத்துடனும் தேர்ந்தெடுக்கப்பட்டவன். கலிங்கப் போரில் ஏற்பட்ட அழிவுகளைக் கண்ட குற்ற உணர்ச்சியாலேயே தான் மனம் மாறினேன் என்பதை வெளிப்படையாக அறிவித்த வகையில் ஒரு பவுத்த நெறியாளராக வெளிப்பட்டவர் அவர். எனினும் எந்தக் கலிங்க மண்ணில் அவர் நடத்திய போரழிவுகள் அவருக்கு இந்தப் பாடங்களைக் கற்பித்ததோ அந்த மண்ணில் அவரது இந்தக் கருத்துக்களைச் சாசனமாக்கி அம்மக்களிடம் மன்னிப்புக் கோர மனமில்லாத வகையில் அவர் ஒரு மன்னராகவும் இருந்தார்.

எனினும், உலக வரலாற்றில் காணக் கிடைக்காத ஒரு பேரரசராக அவர் வெளிப்படுகிறார் என்றால் அதற்கு அவரை இயக்கிய பவுத்த நெறியே அடிப்படையாக அமைந்தது என்பதை யாரும் மறுத்துவிட இயலாது.

“வரலாற்றின் பக்கங்களை நிறைக்கும் ஆயிரக் கணக்கான முடியரசர்கள், அவர்களின் கம்பீரம். கருணை, அரச பெருமிதங்கள். புனித பிம்பங்கள் ஆகியவற்றின் மத்தியில் அசோகன் என்னும் பெயர் ஒரு நட்சத்திரத்தைப் போல ஒளி வீசி நிற்கிறது” (H.G. Wells, The Outline of History). எச்.ஜி வெல்சின் இக்கூற்றை யாரும் மறுத்துவிட இயலாது.

(அடுத்த இதழில்: மணிமேகலையையும் வீர சோழியத்தையும் வாசிப்பது எப்படி?)

 

கார்ல் மார்க்ஸ் – 200 (1)

(இது ஒரு மூன்று பகுதிக் கட்டுரை. இது முதல் பகுதி)

தன்னை ஒரு “உலகக் குடிமகன்” என அறிவித்துக் கொண்ட (“I am a citizen of the world”- Marx to Paul Lafargue) கார்ல் மார்க்ஸ் (1818 – 2018) பிறந்த இருநூறாம் ஆண்டை இன்று உலகமே கொண்டாடத் தொட்ங்கியிருக்கிறது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பின்போது கடந்த ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த சிந்தனையாளன் என மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் பேரறிஞர் கார்ல் மார்க்ஸ். அவரைப் பற்றி லஃபார்க் சொல்ல வருகையில், “புத்தகங்கள் அவரைப் பொருத்தமட்டில் சொகுசுப் பொருட்கள் அல்ல. மாறாக அவை அவரது மூளையின் கருவிகள். ‘அவை என் அடிமைகள். என் விருப்பப்படி அவை எனக்குச் சேவை செய்ய வேண்டும்’ என அவர் கூறுவார்” – என்பார். அவர் கற்காத நூல்கள் இல்லை என நான் சொன்னால் அது வெறும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல. அவரது கல்வியின் விரிவு அளவிடற்கரியது. அவருடைய எழுத்துக்களில் மேற்கோள்களாகக் காட்டியும் காட்டாமலும் அவர் எடுத்தாண்டுள்ள கருத்துக்களினூடாக உலக இலக்கியங்கள் குறித்த அவரது அறிவின் வீச்சை ஆராய்ந்துள்ள பேராசிரியர் எஸ். எஸ். ப்ராவர் (S.S.Prawer, ‘Karl Marx and World Literature’, OUP,1978) அது குறித்து 446 பக்கங்களில் நூலொன்றை எழுதியுள்ளார்..

M1

“ஹோமர் முதல் தாந்தே வரை, ஷேக்ஸ்பியர், கொதே என எல்லாக் காலங்களிலும், உலகின் எல்லாப் பகுதிகளிலும் உருவாகியிருந்த மாபெரும் எழுத்தாளர்கள் எல்லோரது எழுத்துக்களிலும் பொதிந்து கிடந்த, இன்றும் பயன்படக் கூடிய உண்மைகளை நுனித்தறிய, இலக்கியங்கள் குறித்த வர்க்கப் பார்வை கார்ல் மார்க்சிற்குத் தடையாக இருந்ததில்லை…….. இறுதி ஆய்வில் மகத்தான இலக்கியங்கள் உண்மை மற்றும் அற மதிப்பீடுகள் பற்றிய மானுட நுன்னுணர்வைக் கொண்டிருக்கும் என அவர் நம்பினார்” என்பார் ப்ராவர். அதாவது இலக்கியங்கள் வர்க்க நலன்களைச் சுமந்திருக்கும் என்று அவர் கருத்துக் கொண்டிருந்தாலும் அந்த அடிப்படையில் அவர் உலக இலக்கியங்களைப் புறக்கணித்ததில்லை. உன்னத இலக்கியங்கள், அவற்றின் வர்க்க நலன்களுக்கு அப்பால் எப்போதுமே மானுட கரிசனம் கொண்டிருக்கும். நமக்குத் தேவையான உண்மைகள் அவற்றில் பொதிந்திருக்கும் என அவர் ஏற்றுக் கொண்டார். மார்க்சின் சிந்தனைகளை “மார்க்சீயர்கள்” எனத் தம்மைக் கருதிக் கொண்ட பலர் வரட்டுத்தனமாகப் பயன்படுத்தியதைப் போல மார்க்ஸ் இயல்பில் அப்படி இருக்கவில்லை என்பது இதன் உட்பொருள்.

மார்க்சின் எழுத்துக்கள் வாசிப்பதற்கு அத்தனை எளிதாவை அல்ல என்பது உண்மைதான். காரணம் அவர் எடுத்துக் கொண்ட பிரச்சினைகள் அத்தனை சிக்கலானவை என்பதுதான். எக்காரணம் கொண்டும் எளிமைப்படுத்தப்பட்ட புரிதல்களுக்கு அவை இட்டுச் சென்றுவிடக் கூடாது என்று அவர் கொண்ட கரிசனத்தின் விளைவுதான் அவை சிக்கலாக வெளிப்படுவது. அப்படியும் அவர் கருத்துக்கள் பல எளிமைப்படுத்தப்பட்டே புரிந்து கொள்ளப்பட்டன. இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு “மதம் மக்களின் அபின்” என்கிற அவரது கூற்று. முன்னும் பின்னும் இது குறித்து அவர் செறிவாகச் சொல்லியுள்ள கருத்துக்களிலிருந்து பிரித்து நிறுத்தி மதம் பற்றிய மார்க்சின் கருத்து என எத்தனை மலிவான புரிதல்கள் இதுகாறும் இங்கே முன்வைக்கப்பட்டுள்ளன ! ஒரு கொடிய நோயின் தீராத வலியில் துடிப்பவனுக்கு ஆறுதலை அளிக்க போதை மருந்து பயன்படுவதுபோல, சமூக வாழ்வின் துயர்களைத் தாங்க இயலாத மனிதனுக்கு மதம் பயன்படுகிறது என்றுதான் மார்க்ஸ் கூற வருகிறார். அது ஆறுதல் அளிப்பது உண்மை. அதே நேரத்தில் அது அந்தத் துயருக்குத் தீர்வு அளிப்பதில்லை. அது தீர்வு அளிப்பதில்லை என்பதை மட்டும் பார்ப்பது போதாது. அது உண்மையில் ஆறுதல் அளிப்பதையும் நாம் புரிந்துகொண்டால்தான் மதத்தை ஏன் அவ்வளவு எளிதாக மனிதர்களிடமிருந்து பிரிக்க இயலவில்லை என்பதை நாம் உணர முடியும். M3

எல்லோருக்கும் தெரிந்த, மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட எடுத்துக்காட்டு என்பதற்காக இதை இங்கு கவனப் படுத்தினேன். மார்க்சின் ஒவ்வொரு சொல்லும் இப்படி ஆயிரமாயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியவை.

இன்றைப்போல தட்டினால் தகவல்களைக் கொட்டும் இன்டெர்னெட் வசதி மட்டுமல்ல, இன்றளவிற்கு வளர்ச்சி அடைந்த தகவல் தொடர்புகள் ஏதும் அற்ற காலத்திலேயே தனக்குக் கிடைத்த சொற்பத் தகவல்களிலிருந்து 1857 ல்  இந்தியத் துணைக் கண்டத்தில் ஏற்பட்ட எழுச்சியை “முதல் சுதந்திரப் போர்” எனச் சொன்ன முதல் மனிதர் கார்ல் மார்க்ஸ் என்பது ஒன்றே அவரது நுனித்தறியும் அறிவுக்குச் சான்று. மற்ற அனைவரும் அதைச் “சிப்பாய்க் கலகம்” என்பதாகச் சிறுமைப் படுத்தி விளக்கமளித்துக் கொண்டிருந்தபோது அந்த எழுச்சியின் பின்னணியில் மக்களின் சுதந்திர தாகம் இருந்ததை அடையாளம் கண்டவர் அவர். இல்லையா?

பேராசான் மார்க்ஸின் சிந்தனைகள் தோற்றுத் தகர்ந்து விட்டன என உலக முதலாளித்துவமும் கெட்டிதட்டிப் போன மதவாதிகளும் செருக்கு கொண்டுள்ள தருணத்தில் நாம் அவர் பிறந்த 200 ம் ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். மார்க்சீயத்திற்கு இப்படிக் கல்லறை வாசகம் எழுதிக் கொண்டிருப்போர் அதற்கு ஆதாரமாக எதைச் சொல்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். அவர்கள் மார்க்சீயம் முன்வைத்த அடிப்படைக் கோட்பாடுகள் எதுவும் பொய்த்துப் போவிட்டன என நிறுவவில்லை. நிறுவவும் முடியாது. அவர்கள் சொல்வதெல்லாம் ஒன்றுதான். சோஷலிசக் கட்டுமானங்கள் எனச் சொல்லப்பட்ட புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்கள் அனைத்தும் தகர்ந்து விட்டன என்பதுதான். இது மட்டுமே அவர்கள் காட்டும் ஒரே நிரூபணம்.

மார்க்ஸின் பங்களிப்பு என்பதில் புரட்சிக்குப் பிந்திய சமுதாயம் பற்றி ஏதும் இல்லை. ‘கோதா வேலைத் திட்டம்’ முதலானவற்றில் மெலிதாகச் சிலவற்றைக் கோடி காட்டியதற்கு அப்பால் அவர் அது குறித்து ஏதும் பேசவில்லை. அப்படியானால் மார்க்சின் பங்களிப்புகள்தான் எவை?

மார்க்ஸ் இறந்தபோது அவரது கல்லறையில் நின்று கொண்டு வாழ்நாள் முழுமையும் அவரோடு சிந்தனைத் தளத்தில் உழைத்தவரும் மார்க்சிலிருந்து பிரித்துப் பார்க்கவே இயலாதவருமான எங்கல்ஸ்  அவரது பங்களிப்பை இரத்தினச் சுருக்கமாக இப்படிப் பட்டியலிடுவார். அவை: M4

1.உயிர் இன வளர்ச்சி விதிகளை டார்வின் கண்டறிந்தது போல மானுட வளர்ச்சி விதிகளைக் கண்டறிந்தவர் கார்ல் மார்க்ஸ்.

2.மானுட இருப்பின் முதல் அடிப்படை உணவு, நீர், ஆடைகள், வீடு முதலான பொருளாதயத் தேவைகள்தான். இதிலிருந்துதான் நாம் பிற அனைத்தையும் பார்க்க வேண்டும். தலைகீழாக அல்ல.

3.இன்றைய உற்பத்தி முறையான ‘முதலாளித்துவ உற்பத்தி முறை’யின் விதிகளைக் கண்டறிந்ததோடு, இதன் விளைவான பூர்ஷ்வா சமூகம் குறித்த ஆய்வையும் செய்தவர் அவர். ‘உபரி உற்பத்தி’ குறித்த அவரது மகத்தான கண்டுபிடிப்பு முந்தைய பூர்ஷ்வா ஆய்வுகள் எந்த இடத்தில் தடுமாறி நின்றனவோ அந்த இடத்தில் ஒளி வீசச் செய்தது.

4.இப்படியான இரண்டு கண்டுபிடிப்புகளே ஒரு மனித வாழ்வில் மிகப்பெரிய சாதனைகள்தான். ஆனால் மார்க்ஸ் அத்தோடு நிற்கவில்லை. அவர் தொட்ட எதையும் மேலோட்டமாகக் கடந்ததில்லை. அவர் தொட்ட அனைத்திலும் அவர் தடம் பதித்தார். கணிதம் உட்பட.

5.எவை எல்லாம் வளர்ச்சியின் கூறுகளாக உள்ளனவோ அவை குறித்தெல்லாம் அவர் ஆழமாகக் கவனம் கொண்டிருந்தார். மின்சாரம் குறித்த ஆய்வுகளில் அவர் காட்டிய ஆர்வம் அப்படியான ஒரு எடுத்துக்காட்டு

6.அவர் இயல்பில் ஒரு புரட்சியாளர். முதலாளியச் சமூகம் மற்றும் அதன் நிறுவனங்கள் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வருவது அவரது இலட்சியம். போராட்டம் அவரது உயிர். அவர் ஒரு பத்திரிகையாளர். களப் போராளி. பன்னாட்டுத் தொழிலாளிகள் கழகங்களை அமைத்தவர்.

7.அவர் கடுமையாக வெறுக்கப்பட்டவர். மோசமான அவதூறுகளுக்கு ஆளானவர். அரசுகள் அவரை நாடுகடத்தின. பூர்ஷுவாக்கள் அவர் குறித்துப் பொய்களைப் பரப்பினார்கள். அவசியம் நேர்ந்தால் ஒழிய அவர் இவற்றிற்கெல்லாம் பதில் அளித்ததில்லை. எனினும் உலகெங்கிலும் உள்ள தோழிலாளர்கள் அவரை நேசித்தனர். அவரது பெயரும் பணிகளும் காலத்தை விஞ்சி ஒளிரும்.

கார்ல் மார்க்சின் பங்களிப்பை அவரது ஆகச் சிறந்த தோழரும், அவர் விட்டுச் சென்ற எழுத்துப் பணிகளை நிறைவு செய்தவருமான எங்கல்ஸ் இப்படி ரத்தினச் சுருக்கமாக முன்வைத்தார்.

ஆக மார்க்சின் பங்களிப்புகளில் சோஷலிசக் கட்டுமானம் குறித்த ஆய்வுக்கு இடமிருக்கவில்லை என்பதுதான் இதன் மூலம் நாம் அறிவது. அவை பின்னாளில் ருஷ்யா, சீனா.. என அந்தந்த அரசுகளால் அவரவர்க்குப் புரிந்தபடி முயற்சிக்கப்பட்டன. அவற்றில் ஏற்பட்ட தோல்விகள் ஆய்வுக்குரியவை என்பதில் கருத்து மாறுபாடில்லை. ஆனால் அவற்றை மார்க்சீயத்தின் தோல்வி எனச் சொல்ல இயலாது. சோவியத் ருஷ்யா, சீனா, வியட்நாம், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எதுவும் சோஷலிசச் சமுதாயங்கள் இல்லை. அவற்றை ஆய்வாளர்கள் புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்கள் என்றுதான் குறிப்பிடுகின்றனர். அதற்கு மேலாக எதையும் உரிமை கொண்டாடுவதில்லை.

M6

இன்னொன்றையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும். முதலாளியமும் இங்கு வெற்றி பெறவில்லை என்பதுதான் அது. மார்க்ஸ் சொன்னது போலவே அது தொடர்ந்து நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்று பட்டினிச் சாவுகளையும் கடும் ஊழல்களையும், பெரும் சுற்றுச் சூழல் கேடுகளையும், சாதி, மத, இன வெறுப்புகளையும் வெளிப்படுத்தும் நாடுகள், சமூகங்கள் அனைத்தும் பூர்ஷுவாச் சமூகங்கள்தான். முதலாளித்துவ நாடுகள்தான். தொடர்ந்து பொருளாதார நெருக்கடிகளால் திணறுபவையும் அவைதான். ஆயிரக் கணக்கில் பட்டினிச் சாவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் காணா, எதியோப்பியா முதலான அரசுகள் எல்லாம் சோஷலிசக் கட்டுமானங்களா? முழுக்க முழுக்கச் சந்தைப் பொருளாதாரத்தைச் செயல்படுத்தும் முதலாளித்துவ நாடுகள்தானே.

சோஷலிசம் தோற்றுவிட்டது எனச் சொல்பவர்கள் உரிய ஆய்வு நெறிகளுடன் அதை நிறுவியதும் இல்லை. சந்தைப் பொருளாதாரத்தை ஒழித்து மையப்படுத்தப்பட்ட திட்டமிடுதலை நடைமுறைப்படுத்துவது தோல்வியிலேயே முடியும் என இதுவரை கோட்பாட்டு ரீதியாக யாரேனும் நிறுவியுள்ளனரா?

சோஷலிசமும் ஜனநாயகமும் இணைந்திருப்பது சாத்தியமில்லை என இதுவரை நிறுவப்பட்டுள்ளதா?

தனிச் சொத்தும் சந்தைப் பொருளாதாரமும் மட்டுமே ஜனநாயகம் செழித்திருப்பதற்கான நிபந்தனைகள் என எந்த முதலாளித்துவ நிபுணர்களாவது கோட்பாட்டு ரீதியாக நிறுவியிருக்கிறார்களா?

இல்லை. இல்லை. இல்லை.

மறுபடியும் சொல்கிறேன் புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்களின் விழ்ழ்ச்சி நிச்சயமாக ஆய்வுக்குரிய ஒன்றுதான். மார்க்சீயர்களின் முக்கிய பணி இது என்பதில் எல்லாம் நமக்குக் கருத்து வேறுபாடு இல்லை.

ஆனால் மார்க்சின் சிந்தனைகள் பொய்த்துவிட்டன என “நிறுவுவதற்கு” புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்களின் வீழ்ச்சி மட்டுமே போதுமானவை அல்ல. கடந்த ஆயிரம் ஆண்டுகளின் மகத்தான சிந்தனையாளராக மார்க்ஸ் ஒளி வீசி நிற்பதை யாரும் மறுத்துவிட இயலாது.

முஸ்லிம்கள் மற்றவர்களை ஒதுக்குகிறார்கள் என்பது உண்மையா?

இன்று காலை நண்பர் சுகுமாரன் முகநூலில் உள்ள ஒரு பதிவை எனக்கு அனுப்பி இருந்தார். முஸ்லிம் நண்பர் ஒருவர் ஒரு இலக்கிய இதழில் வெளி வந்திருந்த ஒரு கருத்தை முன்வைத்து இது சரிதானா எனக் கேட்டிருந்த ஒரு பதிவு அது. அந்தக் கருத்தின் அடிப்படையில் அந்த முகநூல் பதிவாளர் எழுப்பியிருந்த கேள்விகள் இரண்டு. அவை:

“1.இஸ்லாமியர்கள் செறிவாக வாழும் பகுதிகளில் பிற மதத்தவர்களுக்கு இடம் தருவதில்லை. 2. .மேலும் குமரி மாவட்டபகுதிகளில் வாழும் இஸ்லாமியர்கள் தங்களது வணிக நிறுவனங்களில் கூட…பிற மத சிறுவர்களை அனுமதிப்பதில்லை. இது உண்மைதானா.?”

இதுதான் அந்த இதழில் சொல்லப்பட்ட கருத்துக்களின் மீது அந்தப் பதிவாளர் எழுப்பியிருந்த கேள்வி. இனி இது தொடர்பாக நான் முன்வைத்த கருத்துக்கள்:

அந்த இலக்கிய இதழில் சொல்லப்பட்டுள்ளது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் இது எதற்காகச் சொல்லப்படுகிறது என்பது முக்கியம். இந்த அடிப்படையில் இங்கு இன்று நாடெங்கும் உருவாக்கப்படும் முஸ்லிம் வெறுப்பு அரசியலை நியாயப்படுத்துவதற்காக இது சொல்லப்படுகிறது என்பதுதான் இதில் மிக மிக ஆபத்தான அம்சம்.

ஒரு உண்மை மட்டுமே இன்னொரு உண்மைக்குச் சான்றாகிவிடாது.

இதில் பல்வேறு அம்சங்கள் கவனத்துக்குரியது. முதலில் இப்படியான கூற்றுகள் முழுமையாகச் சரிதானா என்பதைப் பார்க்கலாம். முஸ்லிம்கள் இயல்பிலேயே இப்படித் தங்களைக் கூட்டுக்குள் சுருக்கிக் கொள்பவர்களாக உள்ளனர். ஆனால் இது உலகளாவிய முஸ்லிம்களின் இயற்கைப் பண்பு எனச் சொல்ல இயலாது. இது இந்தியா போன்ற நாடுகளில் உருவாகியுள்ள ஒரு வகை சிறுபான்மை உளவியல். ஒருமுறை குடந்தையில் எனக்குப் பழக்கமான ஒரு முஸ்லிம் ஸ்டேஷனரி கடை முதலாளியைச் சந்தித்துப் பேசிக் ஒண்டிருந்தேன். ஒர் வசதியான படித்த முஸ்லிம் இளைஞருக்கு திருமணத்திற்கு ஒரு நல்ல பெண் வேண்டும் என்றேன். உடனே அவர் மிகவும் சீரியசாகிவிட்டார். “சார் இதெல்லாம் இங்கே பேசாதிங்க. நாங்க பாபநாசம், பண்டாரவடை, அய்யம்பேட்டைக்குள்தான் திருமண உறவுகளை வைச்சுக்குவோம்” எனச் சொல்லி பேச்சை முறித்துக் கொண்டார். நான் பெண் வேண்டும் எனக் கேட்ட முஸ்லிம் இளைஞர் புத்தாநத்தம் (திருச்சி மாவட்டம்) பகுதியைச் சேர்ந்தவர். இந்தச் சம்பவத்தை நான் என்  புத்தகம் ஒன்றிலும் குறிப்பிட்டுள்ளேன். மேலப்பாளையம் முஸ்லிம்கள் பற்றி ஒரு ethnic study வந்துள்ளது. சாந்தி என்பவர் எழுதியுள்ளார். அதில் அவர் அங்கு திருமணங்கள் மேலப்பாளையத்திற்குள்தான் நடக்கிறது என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் நான் நாகூர் கந்தூரித் திருவிழாவுக்குச் சென்றிருந்தேன். என் இளம் நண்பர் அஹமது ரிஸ்வான் ஒரு விடயத்தைச் சொன்னார். நாகூரில் 90 சதம் திருமணங்கள் நாகூருக்குள்ளேயேதான் நடக்கின்றன என்றார். இவற்றின் பொருள் முஸ்லிம்கள் பிற ஊர் முஸ்லிம்களை வெறுக்கிறார்கள் என்பதா? தம்மைப் புவியியல் ரீதியில் ஒரு ‘;சாதியாக’ உணர்கிறார்கள், மற்ற முஸ்லிம்களை ஒதுக்கு்கிறார்கள் என்பதா? இது மிகவும் சிக்கலான விஷயம்.

ஒரு முறை நான் முத்துப்பேட்டையில் உள்ள மிகப் பெரிய முஸ்லிம் பள்ளி ஒன்றின் உரிமையாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன். தனது பள்ளியில் வேலையில் உள்ள ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் எல்லோரும் முஸ்லிம் அல்லாதோர் என அவர் குறிப்பிட்டார். இளையான்குடி, மேடவாக்கம் முதலான முஸ்லிம் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் இந்துக்கள், குறிப்பாக தலித்களே அதிகம். நான் முன்பு சொன்ன ஸ்டேஷனரிக் கடையில் கூட அங்கு வேலை செய்யும் பெண்கள் அவ்வளவு பேரும் இந்துக்கள்தான். முஸ்லிம் கடைகளில் முஸ்லிம்கள்தான் வேலைக்கு வைத்துக் கொள்ளப்படுகின்றனர் என்பதில் பொருள் இல்லை.

நான் குடியாத்தம் கல்லூரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு என்னுடன் பணியாற்றிய பொருளாதாரத் துறையைச் சேர்ந்த சக ஆசிரியர் ஒருவர் அப்பகுதியில் (ஆம்பூர், வாணியம்பாடி) உள்ள தோல் தொழிற்சாலைகளில் முஸ்லிம் நிறுவனங்களில் கூட அக்கவுன்டன்ட், மேனேஜர் போன்ற பதவிகளில் பார்ப்பனர், முதலியார் போன்ற உயர் சாதியினரே உள்ளதாகவும் தோலைச் சுத்தம் செய்தல் முதலான வேலைகளிலேயே முஸ்லிம்கள் உல்லதாகவும் தன் ஆய்வில் சுட்டிக் காட்டியிருந்தார். இது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு. இப்போதும் அந்த நிலையே தொடர்கிறதா எனத் தெரியவில்லை. இப்போதும் கூட வளைகுடா நாடுகளில் நம் முஸ்லிம்கள் நடத்தக் கூடிய நிறுவனகளில் நிறைய நம் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் நிறையப் பணி செய்வதாக்கச் சொல்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும்போது வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். முஸ்லிம் கடைகளில் அதிக அளவில் முஸ்லிம்கள் வேலையில் உள்ளனர் என்பதுதான் அது. அதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன. உறவினர்கள், மற்றும் நெருக்கமானவர்களுக்கு வேலைக் கொடுப்பது என்பது ஒன்று, பெரிய அளவில் இன்று அரசியல் ரீதியாக ஒரு புறக்கணிப்பு செய்யப்படும்போது தாம் ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவியில் இருப்பது அவசியம் என்கிற உணர்வையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய ‘பதுங்கு குழி’ மனப்பான்மைக்கு அடிப்படைக் காரணம் இன்றைய வெறுப்பு அரசியல் என்பதை மறந்து விடக் கூடாது. அதை விட்டுவிட்டு இது குறித்துப் பேசுவது அறமல்ல.

நாகர்கோவிலைப் பொருத்தமட்டில் அங்கு தமிழகமெங்கும் சிறுபான்மையோர் பெரும்பான்மையாக இருக்கும் மாவட்டம் அது. கல்வி நிறுவனங்கள் அங்கு பெரும்பாலும்  கிறிஸ்தவர்கள் வசம் உள்ளன. அங்கு அவர்கள் மத்தியில் தலை எடுக்கும் பெரும்பான்மை வாதத்தை வைத்து இந்தியா முழுவதும் சிறுபான்மை மக்கள் இப்படித்தான் உள்ளனர் எனச் சொல்ல இயலாது.

நான் சென்ற ஆண்டு சென்னையில் வசித்த வாடகை வீடு ஒரு முஸ்லிமுக்குச் சொந்தமானது. அந்த அபார்ட்மென்டில் ஆறு வீடுகள் உள்ளன. ஒருவரைத் தவிர மற்ற அனை வரும் non muslims தான். சென்னையில் நான் இதுவரை குடியிருந்துள்ள ஆறு வீடுகளில் மூன்று முஸ்லிம்களுடையது. அவற்றில் இரண்டு என்னை யாரென்று தெரியாமலேயே எனக்கு வாடகைக்கு விடப்பட்ட வீடுகள்தான். முஸ்லிம்கள் பிறருக்கு வீடு கொடுப்பதில்லை என்றெல்லாம் பொதுமைப்படுத்திப் பேச முடியாது.

கோவையில் இப்போது ஒரு மாஃபியா கும்பல் இந்துக்கள் பகுதியில் உள்ள முஸ்லிம் கடைகளை வெளியேற்றுவதற்குச் செயல்படுவதை எனது சமீபத்திய பயணத்தில் அறிந்தேன். அப்படி வெளியேற்றுவதன் மூலம் இந்த மாஃபியா கும்பல் நிறைய பனம் சம்பாதிக்கிரது. இதை எனக்குச் சுட்டிக் காட்டியவர் மூத்த வழக்குரைஞர் சுப்பிரமணியம். பாதுகாப்பு கருதி முஸ்லிம்கள் தங்கள் பகுதிகளுக்குள் ஒதுங்கக் கூடிய நிலை இன்று அங்கு ஏற்பட்டுள்ளது.  வேண்டுமானால் நாம் இது குறித்து அங்கு ஒரு ஆய்வு செய்வோம். நீங்களும் வாருங்கள். அந்தக் கருத்தைச் சொன்னவரும் வரட்டும். வெறுப்பு அரசியலின் விளைவையே வெறுப்பு அரசியலை நியாயப்படுத்தப் பயன்படுத்துவது நீதியும் ஆகாது, அறமும் ஆகாது.

முஸ்லிம்கள் தமக்குள் ஒடுங்கிக் கொள்கின்றனர் என்கிற உண்மை அவர்கள் மீது சுமத்தப்படும் வெறுப்பு அரசியலை நியாயப்படுத்திவிடாது..