இடதுசாரிகள் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் காழ்ப்பைக் கக்கியுள்ள ஜெயமோகன்..

“முற்போக்கு என்ற பெயரில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை ஆதரிக்கும் நிலை வரை சென்ற இடதுசாரிகள், இனிமேலாவது தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இங்கு இடதுசாரி அரசியலே இல்லாமல் ஆகிவிடும். அது இந்தியாவுக்கு மிகப் பெரிய இழப்பாகும்.”

– இது இன்றைய (மே 28, 2014) தமிழ் இந்துவில் ஜெயமோகன் கக்கியுள்ள விஷம்.

வழக்கம் போல எந்த ஆதாரமும் இன்றி அப்பட்டமான அவதூறு ஒன்றை இந்த நபர் இடதுசாரிகள் மீது உமிழ்ந்துள்ளார்.

தீவிரவாதிகள், அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் அவர்களுக்காகப் பரிந்து பேசிய வரலாறு இடதுசாரிக் கட்சிகளுக்குக் கிடையாது. தீவிரவாதத்தை நடைமுறையிலும் கொள்கை அடிப்படையிலும் அவர்கள் கடுமையாக எதிர்ப்பவர்கள். தீவிரவாதிகள் எனச் சந்தேகப்பட்டு முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர்கள் எந்தப் பெரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டதும் இல்லை.

சென்ற ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தோழர் பிரகாஷ் காரட்டும் மூத்த சி.பி.எம் தலைவர்களும் குடியரசுத் தலைவரைச் சந்தித்து 26 முஸ்லிம் இளைஞர்களின் பட்டியல் ஒன்றைத் தந்தனர். அவர்கள் அவ்வளவு பேரும் தீவிரவாதிகள் எனக் கைது செய்யப்பட்டுக் கடும் சித்திரவதைகளுக்கு ஆளாகி, இறுதியில் பல ஆண்டுச் சிறை வாசங்களின் ஊடாகத் தம் இளமையையும் எதிர்காலத்தையும் இழந்த பின் குற்றமற்றவர்கள் என நீதி மன்றங்களால் விடுதலை செய்யப்பட்டவர்கள், காராட் தலைமையில் சென்ற குழு வைத்த கோரிக்கை முற்றிலும் 100 சதம் சரியானது. 1. இது போன்ற அப்பாவி இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். 2. இவ்வாறு தீவிரவாதிகள் எனச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் விரைவு நீதி மன்றங்களில் விசாரிக்கப்பட்டுக், குற்றவாளிகளாக இருந்தால் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையேல் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

இதே கோரிக்கையை நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு போன்றோரும் முன்வைப்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேகத்தின் பேரில் யாரும் கைது செய்யப்படுவதையோ, விசாரிக்கப்படுவதையோ எந்நாளும் இடதுசாரிகள் எதிர்த்ததில்லை. சொல்லப்போனால் சில நியாயமான பிரச்சினைகளிலும் கூட இந்த மாதிரி விடயங்களில் முஸ்லிம்களுக்கு உரிய ஆதரவு அளித்ததில்லை என்கிற விமர்சனகள்தான் அவர்கள் மீது உண்டு. ஒரு எடுத்துக்காட்டு. சுமார் இரண்ன்டாண்டுகளுக்கு முன் திருச்சி விமான நிலையத்தில் தமிம் அன்சாரி என்கிற இளைஞனப் பாகிஸ்தானுக்கு உளவு கடத்தியதாகப் பொய் கூறிக் கைது செய்தனர். ஒரு உண்மை அறியும் குழு அமைத்து நாங்கள் விசாரித்த போது அது முழுப் பொய் எனத் தெரிந்தது. பின்னால் நீதிமன்றமும் அவர் மீது போடப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டங்களை எல்லாம் ரத்து செய்துப் பிணையில் விடுதலை செய்தது, இன்றளவும் அது பொய் என்பதால் மேற்கொண்டு யாரும் கைது செய்யப்படாமல் அவ் வழக்கு தேங்கியுள்ளது. இந்த தமீம் அன்சாரி சி.பி.எம் கட்சியிலும் வெகு ஜன அமைப்புகளிலும் பல மட்டங்களில் நீண்ட காலம் பணியாற்றியவர். இது பொய் வழக்கு எனத் தெரிந்த பின்னும் கூட சி.பி.எம் கட்சி வெளிப்படையாக அவரது கைதைக் கண்டிக்கவோ, அவருக்குச் சட்டபூர்வமான் உதவிகள் எதையும் செய்யவோ முன்வரவில்லை என்பதை நடு நிநிலையாளர்கள் கண்டித்துள்ளனர்.

ஆக முற்றிலும் குற்றமற்றவர்கள் என நிரூபித்து நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட முஸ்லிம்கள் பிரச்சினையில்தான் இடதுசாரிக் கட்சிகள் தலையிட்டுள்ளன. ஆனால், தீவிரவாத முஸ்லிம்களை ஆதரித்ததாலேயே, முஸ்லிம் அல்லாதவர்களின் ஆதரவை இழந்து, இடதுசாரிகள் இன்று தேர்தலில் தோற்றுள்ளனர் என அப்பட்டமான பொய் ஒன்றை வீசுகிறார் இந்த நபர் ஜெயமோகன்.

உண்மை இதற்கு நேர் எதிரானது. 2004 தேர்தலில் 40க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த இடதுசாரிக் கட்சிகள் இன்று வெறும் பத்தாகச் சிறுத்துள்ளதற்கு அடிப்படைக் காரணம் அவர்களின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் இன்று அவர்கள் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெறக்கூடிய நிலை ஏற்பட்டதுதான் காரணம்.

இந்நிலை ஏன் ஏற்பட்டது? ஜெயமோகன் சொல்வது சரி எனில் இடதுசாரிகள் முஸ்லிம்களை ஆதரித்ததால் மற்றவர்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்றாகிறது. ஆனால் இடதுசாரிகள் இன்று மே.வங்கத்தில் பெருந் தோல்வி அடைந்ததற்கான முக்கிய காரணம் அங்கு அவர்கள் முஸ்லிம்களின் ஆதரவை இழந்ததுதான்.

மே.வங்கம் இந்தியாவிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் (25%) மாநிலம். 30 ஆண்டுகள் இடது முன்னணி ஆண்டும் அங்கு முஸ்லிம்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. இந்தியாவிலேயே முஸ்லிம்களின் நிலை மிக மோசமாக உள்ள மாநிலம் அது என்பதை சச்சார் குழு தன் அறிக்கையில் நிறுவியது. இடதுசாரிகள் தோற்றதற்கு இத்வும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ஒரு இடதுசாரித் தலைவர், “அந்தக் குள்ள நீதிபதிதான் (சச்சார்) எல்லாத்துக்கும் காரணம்” என வெளிப்படையாகவே தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தியது இதழ்களில் வந்தது.

உண்மை இப்படி இருக்க ஜெயமோகனின் மேற்கண்ட கூற்று எதைக் காட்டுகிறது?

ஜெயமோகனின் மூன்று அடிப்படைப் பண்புகள், அடையாளங்கள் இதன் மூலம் வெளிப்படுகின்றன. அவை:

1.முஸ்லிம் வெறுப்பு

2.இடதுசாரி எதிர்ப்பு.

‘இடதுசாரிகளின் தேய்வு இந்தியாவுக்கு இழப்பு’ என ஜெயமோகன் நீலிக்கண்னீர் வடிப்பது இவரின் மூன்றாவது முக்கிய அடையாளத்தை வெளிப்படுத்துகிறது. அது:

3.இந்த நபரின் நரித்தனம்.

ஒவ்வொரு ரத்த அணுவிலும் இடதுசாரி எதிர்ப்பை ஏந்தியுள்ள இந்த நபர் இப்படித் தந்திரமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கு என்னால் இன்னொரு எடுத்துக்காட்டைச் சொல்ல இயலும். அவரது ‘பின் தொடரும் நிழலில்’ எனும் அப்பட்டமான கம்யூனிச எதிர்ப்பு நாவலை மூத்த தொழிற்சங்கவாதியும் இடதுசாரிக் கட்சி ஒன்றின் உறுப்பினருமான மறைந்த தோழர் ஜெகனை வைத்து வெளியிட்டவர் இந்த ஜெயமோகன்.

எனினும் யாருக்கும் ஒரு அய்யம் வர இடமுண்டு. இடதுசாரிகள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை ஆயின் பின் ஏன் ஜெயமோகனுக்கு இடதுசாரிகள் மீது இத்தனை ஆத்திரம்?

தீவிரவாதத்தை எதிர்ப்பதோ கண்டிப்பதோ அல்ல ஜெயமோகனின் நோக்கம். அவரே ஒரு ஆர்.எஸ்.எஸ் கருத்தியலாளன். அவருடைய பிரச்சினை முஸ்லிம்களின் நியாயங்களை ஆதரிப்பதுதான். முஸ்லிம்களின் இருப்பை ஏற்றுக் கொள்வதுதான். இந்தச் சமூகத்தின் பன்மைத் தன்மையை அங்கீகரிப்பதுதான். இந்த விடயங்களைப் பொருத்தமட்டில் முஸ்லிம்களின் உரிமைகளை எந்நாளும் இடதுசாரிகள் விட்டுக் கொடுத்ததில்லை. இந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைகளிலும் கூட மத வன்முறைத் தடுப்புச் சட்டம் ஒன்றை இயற்றுதல், முஸ்லிம் இட ஒதுக்கீடு, ரங்கநாத் மிஸ்ரா ஆணைய அறிக்கை நிறைவேற்றம் ஆகியவற்றிற்கு இடதுசாரிக் கட்சிகள் இரண்டும் முக்கியத்துவம் அளித்துள்ளன. இராமர் கோவில் கட்டுதல், அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவைத் தொடர்தல் ஆகியவற்றிலும் இடதுசாரிகள் எப்போதும் முஸ்லிம்களின் நிலைபாட்டை ஆதரித்தே வந்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக காங்கிரஸ் தவிர்த்த பிற இந்தியக் கட்சிகளில் அவர்கள் மட்டுமே எக்காரணம் கொண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்வதில்லை?

இடதுசாரிகள் மீது காழ்ப்பை உமிழ்வதற்கு இவை போதாதா ஜெயமோகன் போன்ற ஒரு பாசிஸ்டுக்கு?

தனது அரசியல் வாழ்வை இந்துத்துவ அமைப்புகளில் தொடங்கிய ஜெயமோகன் இந்துத்துவத்தின் இரு முக்கிய எதிரிகளின் மீது காழ்ப்பைக் கொட்டியுள்ளதன் பின்னணி இவையே.

ஒன்று உறுதி. இந்த அரசில் ஜெயமோகனுக்கு நல்லதொரு பரிசு காத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *